privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்வாரணாசியில் மோடி – தினமலரின் இந்து ராஷ்ட்ர பாசிச பரவசம் !

வாரணாசியில் மோடி – தினமலரின் இந்து ராஷ்ட்ர பாசிச பரவசம் !

-

விகடன் பத்திரிகை தன்னை நட்டநடு சென்டராக காட்டிக் கொண்டு பாஜகவிற்கு பல்லக்கு தூக்குவது போன்ற ‘சிரமம்’ தினமலருக்கு இல்லை. பாஜக-வின் சின்னமான தாமரை மலரையே, ராமசுப்பையர் ஆரம்பித்த தினமலரும் கொண்டிருப்பது தற்செயலான ஒற்றுமை மட்டுமல்ல, அவசியமான உள்ளச் சேர்க்கையும் கூட.

மோடிக்கும், பாஜகவிற்கும் ஆதரவாக செய்தி போன்ற கருத்துக்கள், கருத்து போன்ற பொய்கள், கட்டுரை போன்ற அபாண்டங்கள், கேலிச் சித்திரத்தின் பெயரில் விளம்பரங்கள், நேர்காணல் வழியாக நியாயப்படுத்தல்கள், அனைத்தையும் வாசகர் வாயில், கடப்பாறை கொண்டு திணிக்கிறது தினமலர். பாபர் மசூதியை இடித்த கடப்பாறையும், பத்திரிகை வாசகர்களை வாட்டும் இந்த கடப்பாறையும் ஒரே குருகுலத்தில் வார்க்கப்பட்டவையே!

வாரணாசியில் காவி மயம் என்று பரவசப்படும் தினமலர்
வாரணாசியில் காவி மயம் என்று பரவசப்படும் தினமலர்

இந்த புனைவு புருடாக்களை தினமலரின் வாசகர் வட்டமே பின்னூட்டத்தில் காறித் துப்பினாலும் கூட அவாளுக்கு வெட்கமோ மானமோ இருப்பதில்லை. ராஷ்ட்ர தர்மத்தை நிலை நாட்டும் போது ராஜ குருக்கள் சூடு சொரணையை பிடிவாதமாக தூக்கி ஏறிந்து விடுவார்கள். தற்போது தினமலரின் காவி வெறி பாசிச ஊளையாக பரிணமித்திருக்கிறது. இது ஏதோ தினமலர் மட்டும் விசேடமாக மாறிவிட்டது என்றல்ல, ஆர்னாப் கோஸ்வாமி உள்ளிட்டு சோ ராமசாமி வரை அநேக ஊடகங்களும் அப்படித்தான் முழு அம்மணமாக குத்தாட்டம் போட்டு வருகின்றன. இந்த பாசிச ஊளையின் சவுண்ட் மற்றும் அமவுண்ட் சர்வீஸ் சப்ளை சாட்சாத் மோடி&கோ தான்.

ஒரு கட்சியை ஒரு பத்திரிகை ஆதரிக்கிறது என்று இதை குறுக்கி புரிந்து கொள்வது தவறு. முதலாளிகளுக்கும், பார்ப்பனியத்திற்கும் ஒரு சேர பணியாற்றத் துடிக்கும் ஒரு கயவனையும், கட்சியையும் இவர்கள் எந்த நிலை சென்றும் ஆளாக்கத் துடிக்கிறார்கள் என்பதே முக்கியமான விசயம்.

வாரணாசியில் மோடி மனுத் தாக்கல் செய்திருக்கும் நிகழ்வை இன்றைய தினமலர் 25-04-2014 வருணித்திருக்கும் ‘அழகை’ பாருங்கள்! நூற்றாண்டு கடந்தும் பார்ப்பனியத்தின் கொலைவெறி நாக்குகளை தரிசியுங்கள்!

தினமலரின் காவி கவரேஜிலிருந்து சில பகுதிகளை மட்டும் இங்கே வெளியிடுகிறோம்.

பிரதமர் வேட்பாளராக, கடந்த ஆண்டு ஜூலை மாதம், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். அந்த நாளில் இருந்து இன்று வரை, ஒரு நாள் கூட ஓய்வில்லாமல் தேர்தல் பிரசாரம் செய்து வரும் மோடி, நேற்று, வாரணாசியில் உணர்ச்சி பெருக்காக காட்சியளித்தார்.

குஜராத்திலிருந்து விமானத்தில், வாரணாசி வந்த மோடி, இந்துக்களின் புனித நகரமான வாரணாசியின் முக்கிய தெருக்கள் வழியாக ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

 ‘வாழ்நாளில் ஒரு நாளாவது காசி சென்று, அங்கிருக்கும் காசி விஸ்வநாதரை வழிபட வேண்டும்; கங்கையில் மூழ்கி பாவங்களை களைய வேண்டும்’ என்பது, இந்துக்களின் எதிர்பார்ப்பு. அத்தகைய புனித காசி நகருக்கு, நாட்டின் பல மாநிலங்களில் இருந்து வந்திருந்த பா.ஜ.,வினருடன், உள்ளூர் மக்களும் உற்சாகமாக கலந்து கொண்டதால், குறுகிய வாரணாசி நகர வீதிகள் காவி நிறத்தில் காட்சியளித்தன. ஆன்மிக மாநாடு நடைபெறும் இடத்தில் காணப்படும், இறை வணக்கம், கோஷ்டி கானம், வேத மந்திரங்கள் ஓதுதல் போன்றவற்றுடன், அணி அணியாக, கலைஞர்களும் வந்து, தங்கள் திறனை காண்பித்தவாறு மோடியின் ஊர்வலத்தில் வந்தனர்.

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், 2 கி.மீ., தூரம் திறந்த வேனில், பா.ஜ., மூத்த தலைவர்களுடன் மோடி, வேட்பு மனு தாக்கல் செய்ய ஊர்வலமாக சென்றார். செல்லும் வழியில் இருந்த, தேசத் தலைவர்கள் (இவர்கள் அனைவரும் ஜனசங்கம் எனும் பாஜகவின் முந்தைய அவதாரத் தலைவர்கள் மற்றும் சாமியார்கள் – வினவு) பலரின் சிலைகளுக்கு மாலையணிவித்து, உணர்ச்சிப் பிழம்பாகக் காட்சியளித்தார்.

வேட்பு மனு தாக்கலுக்கு முன், கூடியிருந்தவர்கள் மத்தியில் மோடி பேசியதாவது: வாரணாசி தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என, பா.ஜ., மேலிடம் தான் என்னை பணித்தது என, இது நாள் வரை நான் நினைத்திருந்தேன். ஆனால், என்னை இந்த தொகுதிக்கு, இந்த புனித நகருக்கு அழைத்து வந்தது, இங்கே பாயும் கங்கா மாதா தான். அவள் தான் என்னை இந்த புண்ணிய நகருக்கு அழைத்து வந்துள்ளாள். ஆண்டவன் புண்ணியத்தில், நான் இந்த நாட்டின் பிரதமர் ஆனால், இதற்கு நன்றிக் கடனாக, புனித கங்கை நதியையும், பாரம்பரிய வாரணாசி நகரையும் போற்றி பாதுகாப்பேன்; முன்னேற்ற என்னென்ன வேண்டுமோ அவற்றை மேற்கொள்வேன். எனக்கு இன்று ஒரு புது உணர்வு ஏற்படுகிறது. என் தாயின் மடியில் மீண்டும் வந்து சேர்ந்தது போல், ஓர் உணர்வு என்னை ஆழ்த்துகிறது. அதற்கு காரணம், கங்கை மாதாவும், இங்கு வீற்றிருக்கும் சிவபெருமானும் தான். குஜராத்தில் நான் பிறந்த வாத்நகருக்கும், வாரணாசிக்கும் நெருக்கிய தொடர்பு உள்ளது. அங்கும் சிவபெருமான் தான் வீற்றிருக்கிறார்; இங்கும் சிவபெருமான் தான் வீற்றிருக்கிறார். இரண்டுமே புகழ்வாய்ந்த சிவஸ்தலங்கள். ‘காசி’ என்ற இந்த பாரம்பரிய நகரை, இந்தியாவின் ஆன்மிகத் தலைநகராக ஆக்குவேன். அதற்கான பலத்தை ஆண்டவன் எனக்கு அளிக்க வேண்டும்.”

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று இங்கே யாராவது பைத்தியகாரத்தனமாக நினைத்துக் கொண்டிருந்தீர்களென்றால் அந்த நினைப்பை மண் மூடி சமாதியாக்கிவிடுங்கள். காங்கிரசு ஆண்டாலும், உச்சநீதிமன்றம் தில்லை கோவில் தீர்ப்பு வழங்கினாலும் கூட இது இந்து நாடாகவே இருந்து வந்திருக்கிறது. ஆனால் பாஜக மட்டும் அதை ஒளிவு மறைவின்றி பகிரங்கமாக பறைசாற்றுகிறது.

சுடுகாட்டை மறைக்கும் வளர்ச்சி காமராக்கள்
சுடுகாட்டை மறைக்கும் வளர்ச்சி காமராக்கள்

காசிக்கு சென்று, கங்கையில் குளித்து, பாவம் தொலைத்து, புண்ணியம் தேடும் இந்துக்களின் புண்ணிய பூமியில் மோடியின் உணர்ச்சி பெருக்கை அப்படியே உள்ளது உள்ளபடி எழுதியிருக்கிறது தினமலர். பாம்பின் கால் பாம்பறியும், பார்ப்பனியத்தின் பரவசத்தை தினமலர்தான் உணரும். இதிலிருந்தாவது மோடி காசியை ஏன் தேர்ந்தெடுத்தார் என்பதையம் அவர் இந்திய மக்களில் மற்றவர்களை ஒதுக்கிவிட்டு ‘இந்து’க்களை மட்டும் ரத்த பந்தமாக கருதுகிறார் என்பதும் வெளிப்படையானது. ஆனால் காசிக்கு, சூத்திர மற்றும் பஞ்சம இந்துக்களும், பழங்குடி மக்களும் போவதில்லை, கங்கை புனிதத்தை அறிந்ததில்லை என்பதால் காசி வாழ் புண்ணிய பூமியின் இந்துக்கள் யார் என்றால் பார்ப்பன-ஷத்திரிய-வைசிய வருண பிரிவுகள் மட்டும்தான். அந்த வகையில் மோடியும் அவரது கட்சியும் பார்ப்பன ‘மேல்’சாதிகளைத்தான் தமது கலாச்சாரம் மற்றும் வர்க்க அடிப்படைகளாக கொண்டிருக்கிறார்கள். அதனால் மோடி வெற்றி பெற்றால் அவர் சிறுபான்மை ‘இந்துக்களின்’ பிரதமர்தான். பெரும்பான்மை இந்திய மக்களுக்கு அல்ல.

அவர் பிறந்த ஊரிலும் சிவபெருமான், போட்டியிடும் ஊரிலும் சிவபெருமான் என்ற இந்து ஞான மரபின் ஆன்மீக உணர்ச்சி பரவசத்தில் திளைக்கும் மோடியின் மனது அல்லாவையும், கர்த்தரையும், புத்தரையும், குரு நானக்கையும் தொழும் இதர சிறுபான்மை மக்களை எப்படி கருதும்? ஆதாரம் வேண்டுவோர் குஜராத் 2002 முசுலீம் மக்கள் இனப்படுகொலை கதைகளை உற்று நோக்கலாம். அல்லது அசீமானந்தாவின் தொண்டு பணிகளில் மூலம் சிறுபான்மை மக்களை குண்டுகள் வைத்து அழிக்க முயன்ற காவி-ய கதைகளையும் வாசிக்கலாம்.

பாஜகவின் தெருப் பேச்சாளர்கள் போல மோடியை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானுக்கு போக வேண்டும் என்று மோடி பேசவில்லை. மாறாக ‘நேர்மறையில்’ காசி, புனித பூமி, சிவபெருமான், ஆன்மீகத் தலைநகர் என்று அடுக்குகிறார். இந்த நேர்மறைகளை ஒத்துக் கொள்ளவில்லை என்றால் மோடி அரசு கொண்டு வர இருக்கும் புதிய தடா,பொடா சட்டங்கள் கவனித்துக் கொள்ளும்.

இத்தகைய பார்ப்பனிய படிமங்களில் பரம்பொருளை தரிசித்த பரவசம் கொள்ளும் மோடி, மற்றொரு புறம் சிறுபான்மை மக்களின் அடையாளங்களையோ இல்லை கம்யூனிஸ்டுகளின் திட்டங்களையோ எவ்வளவு அறுவெறுப்புடனும், ஆத்திரத்துடனும் நோக்குவார் என்பது இயல்பான ஒன்று.

இந்த காவி மயம் மக்களுக்கு பய பயம்
இந்த காவி மயம் மக்களுக்கு பய பயம்

வாரணாசி முழுக்க காவி மயம் என்று புல்லரிக்கிறது தினமலர். இந்த காவி மயம் எத்தனை மக்களை கொன்று அழித்திருக்கிறது என்பதை அறிந்த மக்களும் கூட இந்த காவி மயத்தை பயங்கரவாத மயம் என்று அச்சத்தோடு பார்க்கிறார்கள். மோடியின் மனுத்தாக்கல் ஆன்மீக மயமாகவும் இருந்தது என்று தினமலர் ‘புனிதத்தை’ தோண்டிக் கொண்டு வருகிறது. இந்த பார்ப்பனிய ஆன்மீக மயம் எத்தனை சூத்திர-பஞ்சம மக்களின் தலையெழுத்தை அடிமைகளின் இலக்கணமாக மிரட்டுகிறது என்பதையும் வரலாறு பதிந்தே வந்திருக்கிறது.

மோடியின் அரசியல் வெற்றியை அமெரிக்க தலைமையிலான பன்னாட்டு முதலாளிகளும், அம்பானி-அதானி முதலான தரகு முதலாளிகளும், அதிகார வர்க்கமும், ஊடகங்களும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதோடு தங்களது அஜெண்டாவை நிறைவேற்ற ஆர்.எஸ்.எஸ்-ஸும் காத்திருக்கிறது.

இப்படி இரு எதிரிகளும் ஒன்றாக சேர்ந்து இந்திய மக்களை ஆட்டிப் படைக்க திட்டம் தீட்டியிருக்கிறார்கள்.

வாரணாசி தொகுதிக்கான வேட்புமனு தாக்கலின் போது மோடியிடமும், தினமலரிடமும் வெளிப்பட்டிருக்கும் இந்த ‘ஆன்மீக’ உணர்ச்சியை கட்டுடைத்துப் பார்த்தால் பார்ப்பனிய பயங்கரவாதத்தை பார்க்கலாம்.

பார்த்தவர்கள் பழிவாங்குவோம். பார்க்காதவர்களுக்கு புரிய வைப்போம்.