privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விதனியார் பள்ளிகள்: A - FOR - அயோக்கியர்கள் !

தனியார் பள்ளிகள்: A – FOR – அயோக்கியர்கள் !

-

க்கள் போராடும் பல சந்தர்ப்பங்களில், “சட்டத்தை யாரும் கையிலெடுக்க அனுமதிக்க மாட்டோம்” என்று ஆளும் வர்க்கம் எச்சரிப்பதுண்டு. ஆனால் “உங்கள் சட்டம் எங்கள் கால் செருப்புக்கு சமம்” என தனியார் பள்ளி முதலாளிகள் அரசின் “கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம்  – 25 சதவீதம் நலிந்த, ஏழை பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை” காலில் போட்டு மிதித்து திமிரை காண்பித்து விட்டனர்.

கல்வி உரிமை போராட்டம்
கல்வி உரிமைக்காக போராடும் மாணவர்கள்

அரசாங்கம் கூறியவாறு, கடந்த இரண்டு கல்வியாண்டுகளில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட மாணவர்களுக்கான கட்டணத்தை தராததால், இந்த 2014 – 2015 கல்வியாண்டில் 25 சதவித ஒதுக்கீட்டை ஏற்க முடியாது, அனுமதிக்க முடியாது என அரசுக்கு சவால் விட்டனர் கல்வி முதலாளிகள். அரசு கடன் பாக்கிக்காக பால் உற்பத்தியாளரோ, கரும்பு விவசாயிகளோ போராடினால் போலீசை விட்டு அடிப்பது இதே அரசுதான்.

அதே போல தனக்கு எதிராக போக்குவரத்து தொழிலாளிகளோ, விமான நிலைய ஊழியர்களோ வேலை நிறுத்தம் செய்தால் வேலையை விட்டு தூக்கி விடுவோம் என மிரட்டும் இந்த அரசு, கல்வி வியாபாரிகளின் கண் சிவந்தவுடன் ஓடோடி வந்து பழைய பாக்கியை தந்து விடுகிறோம், வந்து கடையைப் போடுங்கள் என பேரம் பேசி உடனே அவர்களின் உண்டியலுக்கு உத்திரவாதம் தந்துள்ளது.

எந்த அளவுக்கு கல்விக் கடையில் தள்ளுமுள்ளு நடக்கிறதோ அந்த அளவு தனியார்மயத்தின் தில்லுமுல்லுகளை அரங்கேற்றும் இந்த பிள்ளைக்கறி பேய்கள், பேச்சுவார்த்தைக்கு வந்த இடத்தில், நர்சரி, பிரைமரி பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிலும் 5 பிரிவுகளுக்கு மேல் தொடங்கக் கூடாது, மாணவர்களின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்தக் கூடாது எனும் அரசு விதிகளை விலக்க வேண்டும், பள்ளி வாகனங்களுக்கான கட்டுப்பாடு, பர்மிட் விதிகளை தளர்த்த வேண்டும், தனியார் பள்ளிகளுக்கான சலுகைகளை வழங்கவேண்டும், என எரிகிற வீட்டில் புடுங்குகிறவரை ஆதாயம் பார்த்திருக்கிறது.

ஆட்டோ தொழிலாளர்கள் மீட்டர் கட்டணத்தை முறைப்படுத்தக் கோரி முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு போனபோது, மிரட்டி உட்கார வைத்து, சாலையில் திருடர்களைப் போல துரத்தி, துரத்தி வேட்டையாடிய இந்த அதிகார வர்க்கம்தான், சமுதாயத்தின் அடிப்படை உரிமையான கல்வி விசயத்தில் தனியார் பள்ளி முதலாளிகளின் திமிரடிக்கு, காலைக் கழுவி குடிக்கிறது.

கல்வி உரிமை சட்டம்
இந்தக் கல்விக் கடைகளை கட்டாயம் 25 சதவீதம் பேருக்காவது கல்வி உரிமை வழங்க வேண்டும் என்று சட்டத்திற்கு கட்டுப்படுத்துவதற்குப் பதில், மீண்டும் மக்களது வரிப்பணத்திலிருந்தே உனக்கு காசு தருகிறேன் என்கிறது.

கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் என்று பெயர் வைத்துக் கொண்டு, எல்.கே.ஜி. முதல் ஆறாம் வகுப்பு வரை படிக்கும் பிள்ளைகளின் கல்விச் செலவுக்கு அரசே தனியாருக்கு காசு கொடுப்பதே அயோக்கியத்தனம். நகராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் ஒரு சாதாரண தொழிலாளிகள் பழக்கடையோ, ஐஸ் வண்டியோ போட்டால் கூட சுங்கம் வசூலிக்கும் அதிகார வர்க்கம், இந்தக் கல்விக் கடைகளை கட்டாயம் 25 சதவீதம் பேருக்காவது கல்வி உரிமை வழங்க வேண்டும் என்று சட்டத்திற்கு கட்டுபடுத்துவதற்குப் பதில், மீண்டும் மக்களது வரிப்பணத்திலிருந்தே உனக்கு காசு தருகிறேன் என்பதிலிருந்து இது முழுக்க முழுக்க தனியார்மயத்திற்கான, முதலாளிகளுக்கான ஏவல் அரசு என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது.

இந்த 25 சதவீத ஒதுக்கீட்டால், இந்த கல்வி வள்ளல்கள் இழந்தது தான் என்ன? தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய ஈரோடு பகுதியைச் சேர்ந்த தனியார்பள்ளி முதலாளி விஜயலெட்சுமி என்பவர் தன் பேச்சிலேயே “பள்ளியில் சேர்க்கும் பிள்ளைகளுக்கான கல்விக் கட்டணத்தை மட்டும்தான் நாங்கள் வாங்க மாட்டோம், மற்றபடி, யூனிபார்ம், டை, ஷூ, லஞ்ச், புத்தகங்கள், ட்ரான்ஸ்போர்ட், எல்லாம் அவர்களே பார்த்துக்கொள்ள வேண்டும், ஸ்கூல் பீசை கூட கட்ட முடியாதவர்கள் பெற்றோர்களா?” என சாபமும் விடுகிறார்.

ஒரு பிள்ளை, கல்வி பயில்வதற்கான அடிப்படை சாதனங்கள் எதையும் உரிமையாக வழங்காத இந்த பகல் கொள்ளைக்காரர்கள், வெறும் உட்கார இடம் கொடுப்பதையே, ( அந்த இடத்துல இன்னொரு பீசை பார்த்துருப்பேன்… எனும் வெறியோடு… ) பெரும் இழப்பாக சித்தரிக்கிறது. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனிய கொள்கையால் விளைநிலங்களை அழித்து, விவசாயிகளை போண்டியாக்கி அவர்களிடமிருந்து பிடுங்கிய இடத்தில் கல்லாவைத் திறந்து உட்கார்ந்திருக்கும் இந்த கொள்ளைக் கும்பல் ஏதோ மக்களுக்கு பிச்சை போடுவது போல பேசுவதும், பீசை வைத்து குழந்தைகளை கொல்லும் இந்த பயங்கரவாதிகளுக்கு அரசு பணிந்து போவதும் ஏதோ கொடுக்கல் வாங்கல் உறவினால் மட்டும் அல்ல.

கல்வி உரிமை
தனியார்மய, தாராளமயத்தை எதிர்ப்பது, ஒழிப்பது அனைத்து தனியார்பள்ளிகளையும் அரசுடமை ஆக்குவது என்ற போராட்டத்தின் தீவிரத்தில்தான் இந்த பள்ளிக் கொள்ளையர்களின் திமிர்தனத்திற்கு முடிவுகட்ட முடியும்.

உலகவர்த்தக கழகத்தின் ஆணைப்படி, கல்வி மட்டும் அல்ல, தண்ணீர், மருத்துவம், போக்குவரவு எந்த சேவையையும் இனி மக்களுக்கு காசுக்கு மட்டுந்தான் வழங்கவேண்டும், அரசு மானியம், இலவசம் என்பதையெல்லாம் ஒழித்துக்கட்ட வேண்டும். தனியார், வெளியார் முதலாளிக்கு தங்கு தடையின்றி அனைத்து சேவை, தொழில்களை திறந்துவிடவேண்டும் என்ற அரசு கொள்கையின் அடிப்படையில்தான் இத்தனை பயங்கரங்களும் அரங்கேறி வருகின்றன. தனியார்மய, தாராளமயத்தை எதிர்ப்பது, ஒழிப்பது அனைத்து தனியார்பள்ளிகளையும் அரசுடமை ஆக்குவது என்ற போராட்டத்தின் தீவிரத்தில்தான் இந்த பள்ளிக் கொள்ளையர்களின் திமிர்தனத்திற்கு முடிவுகட்ட முடியும்.

தொலைக்காட்சி விவாதத்தில் (சன் நியூஸ்) வெங்கடாஜலம் என்ற கல்வி முதலாளி மக்களுக்கு கல்வி இலவசம் என்ற விவாதமே கூடாது. பேச்சுக்கே இடமில்லை, போய் அரசு பள்ளியைத் திற, ஏன் எங்ககிட்ட வார என்று பகிரங்கமாகவே தனது வர்க்கத் திமிரை காட்டுகிறார். நாங்களும் அதைத்தான் கேட்கிறோம்! “இவ்வளவு சிரமப்பட்டுட்டு, நஷ்டப்பட்டுட்டு உன்னை எவன் பள்ளிக்கூடம் நடத்த சொன்னான்? போய் பேசாமல் மசாஜ் சென்டர் வச்சி மகராஜனா பெரிய இடத்து கால் கைய புடிச்சு பொழச்சுக்க! எல்லா பள்ளிக் கூடத்தையும் அரசே ஏற்று நடத்தட்டும்” என்கிறோம். இன்னொரு வெள்ளுடை கொள்ளையன் திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜன். அங்குதான் ஆபாச படம் ஓட்டுகிறார் என்றால், இந்த விசயத்திலும் ஆபாச பாடம் நடத்துகிறார். பெத்த பிள்ளைக்கு, படிக்க செலவு பண்ண முடியாதுங்குறான், போய் சாராயக் கடைல குடிக்கிறான், என மக்களை மிகவும் இழிவுபடுத்தி தங்கள் கொள்ளைக்கு நியாயம் பேசுகிறார்.

குவார்ட்டர், ஆஃப், ஃபுல், லுன்னு அது அதற்கு ஒரு ரேட் வச்சி ஓட்டுற மாதிரி எல்.கே.ஜி, யூ.கே.ஜி, ஃபஸ்ட்டு, என்று வகுப்புக்கு ஏற்ற ரேட்டு வச்சி கல்வியை சரக்காய் ஓட்டும் இந்த கும்பல் மக்களுக்கு புத்தி சொல்ல கிளம்பிவிட்டது. நீ சட்டப்படி ஸ்டெடியா நில்லுடான்னா, அவன குடிக்கிறத நிறுத்தச் சொல் என்பது என்ன யோக்கியதை? உண்மையில் டாஸ்மாக் போதையை விட ஆபத்தானது, இந்த தனியார்பள்ளி போதைதான், தண்ணியடிப்பவனுக்கு விடிந்த பிறகாவது தெளிந்து விடுகிறது, தனியார்பள்ளியில் விழுந்தவனுக்கு கடைசி வரை தெளிவதில்லை, காசை கடைசி வரை இழந்து கறிக்கோழி ஆவதுதான் மிச்சம், அரசு பள்ளி சரி இல்லை என்றால், அதை சரியாக்க போராட வேண்டுமே ஒழிய, தரமாக இருப்பது போன்று ஃபிலிம் காட்டும் எதிர்த்த வீட்டுக்காரனை அப்பா என்று அழைக்க முடியுமா?

தனியார் மோகம்
தனியார் மோகம் உண்மையில் கல்வித்தரத்தை சார்ந்து உருவாவதல்ல, வர்க்கத்தரத்தை சார்ந்து உருவாகும் கண்ணோட்டம்தான்.

தனியார் மோகம் உண்மையில் கல்வித்தரத்தை சார்ந்து உருவாவதல்ல, வர்க்கத்தரத்தை சார்ந்து உருவாகும் கண்ணோட்டம்தான். சென்ற ஆண்டு நெல்லையில் ஒரு அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த மாணவி, மாநிலத்திலேயே முதலாவதாக வந்தார். அவரது அப்பா ஒரு பாய் வியாபாரி, தினமும் அவர் படிக்கும் பள்ளியைச் சுற்றி தன் தந்தை பாய், பாய் என கூவி விற்கும் குரல், என் குடும்பத்தின் நிலையை மாற்ற எனக்குள் வைராக்கியமாய் வளர்ந்து, எனது சோர்வை, பசியை மறந்து இந்த அளவுக்கு படித்து தேர்ச்சியாகி முதலாவதாக வர வைத்தது என்று சொன்னார். இங்கும் கூட வர்க்க உணர்வுதான் கல்வி உணர்வை விழிப்படைய வைத்திருக்கிறது.

இந்த உழைக்கும் வர்க்க உணர்விலிருந்து கல்வி அனைவருக்கும் பொது உரிமை என போராடினால் நம்மாலும் சாதிக்க முடியும். இரண்டு ஆண்டு குறிப்பிட்ட சதவித லாபத்தை இழப்பதற்கே முதலாளிகளுக்கு இவ்வளவு வெறி வருகிறதென்றால், சாகும் வரை தனியார் முதலாளிகளுக்கு சகல வளங்களையும், உரிமைகளையும் இழக்கும் நமக்கு எவ்வளவு கோபம் வர வேண்டும்?

அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தேவையான பள்ளிகளை அரசே ஏற்று நடத்தவும், பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளை அரசுடமையாக்கவும் போராட்டத்தை துவக்க வேண்டும். கல்விக்கு எதுக்குடா காசு? குடிக்க கடை திறக்கும் அரசே படிக்க பள்ளியை திற என வீதியில் இறங்கவேண்டும். எதுக்கு 25 சதவீத பிச்சை, பித்தலாட்டம்! 100 சதவீதம் உயர்கல்வி வரை இந்த நாட்டு குடிமக்கள் அனைவருக்கும் முழு உரிமையாக இருக்க வேண்டும், சமுதாயத்தின் சகல சொத்துக்கள், வளங்களை தனியாரும், பன்னாட்டு மூலதனம் கைப்பற்றும் போது, மக்களுக்கு கல்வி உட்பட அனைத்து சேவைகளையும் முழு உரிமையாக்க மக்களுக்கான அதிகார அமைப்புகளை உருவாக்கினால்தான் இனி எஃபார் ஆப்பிள் என ஏங்குவதற்கு பதில் அ ஃபார் அனைத்தும் மக்களுக்கே என்று இந்த அரசுக்கும் சேர்த்து பாடம் கற்பிக்க முடியும்.

எல்.கே.ஜி.க்கு ஒரு லட்சமா? என பீதியில் உறைவதை விட, எல்லா பள்ளிகளையும் அரசுடைமையாக்கு என வீதியில் இறங்கினால்தான்… பிள்ளைகளுக்கு ஒரு நல்ல வழியை காட்ட முடியும்! கொள்ளையடிப்பவனுக்கு டொனேசன் கொடுக்க கியூவில் நிற்பதை விட, உரிமைக்காக போராட ரோட்டில் நிற்பது ஒன்றும் கேவலமானதல்ல!

–  துரை.சண்முகம்