privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஒரு வரிச் செய்திகள் – 27/05/2014

ஒரு வரிச் செய்திகள் – 27/05/2014

-

செய்தி: “நவாஸ் ஷெரிப்ஜி இசுலாமாபாத்தில் தங்கியிருந்தாலும் வாரம் ஒரு முறை அவரது தாயாரை சந்திக்க செல்வார் என்பதை என்னிடம் தெரிவித்தார். இம்முறை அவரது தாயாருடன் உணவருந்திக் கொண்டிருக்கும் போது, தொலைக்காட்சியில் எனது தாயார் எனக்கு இனிப்பை ஊட்டிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த ஷெரிப்ஜியும், அவரது தாயாரும் உணர்ச்சிவசப்பட்டார்களாம்.” – டிவிட்டரில் மோடி.

நீதி: தன்னை அன்புடன் கவனித்துக் கொண்டிருந்த இஷ்ரத் ஜஹான் கொல்லப்பட்டது குறித்து அந்த இளம் பெண்ணின் தாயார் எப்படி உணர்ச்சிவசப்பட்டிருப்பார் என்று விவரிப்பாரா இந்த கல்லுளி மங்கன்!
_____________

செய்தி: ஆப்கானிஸ்தான் ஹராத்தில் இருக்கும் இந்திய தூதரகத்தை தாக்கியது, தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா இயக்கம் என்று ஆப்கான் அதிபர் ஹமீது கர்சாய் தெரிவித்தார்.

நீதி: ஹமீது பாய் இப்படி பட்டவர்த்தனமாக தெரிவித்தும், பாக்கிற்கு சவால் விட வேண்டிய மோடி, ஹைதராபாத் ஹவுசில் சிக்கன் பிரியாணி போட்டு நவாஸ் பாயுடன் அளவளாவிக் கொண்டிருக்கிறாரே, ஏன்?
___________

செய்தி: எங்களுக்குத் தேவைப்படும் ஆயுதங்களின் பட்டியலை இந்திய அரசிடம் கொடுத்திருக்கிறோம். அவற்றில் சில ஏற்கப்பட்டு எங்களுக்கு வினியோகிக்கவும் செய்யப்பட்டு விட்டது. மீதியை பிரதமர் மோடி பரிசீலித்து தருவாரென நிச்சயம் நம்புகிறோம்.ஆப்கான் அதிபர் ஹமீது கர்சாய்.

நீதி: ஆப்கன் இந்திய தூதரகத்தை தாக்கியது பாக் ஆதரவு பெற்ற பயங்கரவாதக் குழு என்று ஹமீது பாய் சொன்னது செய்தியா, லஞ்சமா என்று இப்போது புரிகிறதா?
____________

செய்தி: பிரதமர் அலுவலகத்திற்கு பொறுப்பேற்கச் சென்ற மோடி, அங்கே இருந்த காந்தி படத்திற்கு பூக்களால் அஞ்சலி செலுத்தினார்.

நீதி: இதை மேலே பார்த்துக் கொண்டிருக்கும் கோட்சே, இது பங்காளியின் நடிப்பா, இல்லை துரோகமா என்று புரியாமல் அழுகிறாராம்.
___________

செய்தி:  மோடி பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டு அறிவித்த முதல் நடவடிக்கைகளில் ஒன்றாக, கோரக்தாம் விரைவுவண்டி விபத்தில் இறந்தவர்களுக்கு 2 இலட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் இழப்பீடாக வழங்குமாறு உத்திரவிட்டார்.

நீதி: மக்களிடம் நிலவிய காங்கிரசு வெறுப்பினால் விபத்து போல வெற்றிபெற்றவர், ஒரு ரயில் விபத்திற்கு நிவாரணம் வழங்கியது தற்செயலானதுதான். ஆனாலும் முதலிலேயே இப்படி ஒரு துக்க அறிவிப்பு வருவது இந்து மத தருமத்தின்படி ஏதோ ஒன்றின் கெட்ட சகுன அறிகுறியில்லையா?
_______________

செய்தி: பிரதமராக பொறுப்பேற்றுள்ள மோடியின் அலுவலகத்தின் தலைவராக, பிரதமர் அலுவலக முதன்மை செயலராக, உ.பி.,யை சேர்ந்த நிர்பேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

நீதி: ஹார்வர்டில் படித்துள்ளதால் அமெரிக்க விசுவாசமும், டிராய் ஆணையத்தில் தலைவராக பணியாற்றியுள்ளதால் முதலாளித்துவ அடிமைத்தனமும் கொண்ட மிஸ்ரா, தெரிவு செய்யப்படவில்லை என்றால்தான் அது செய்தி.
______________

செய்தி: மோடி தலைமையிலான அரசு பத்திரிகை சுதந்திரத்திற்கு உறுதி அளிப்பதாக இருக்கும், அரசை விமர்சிக்க சுதந்திரம் அளிப்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்காது, என்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளிக்கையில் மத்தியமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

நீதி: மோடியை இணையத்தில் விமரிசத்தார்கள் என்று கோவாவிலும், பெங்களூருவிலும் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருப்பது மேற்கண்ட அறிவிப்புக்கு முன் நடந்தது என்று யாராவது நிம்மதியடைய முடியுமா?
__________________

செய்தி: “மோடி பிரதமராக பதவியேற்றதும் பாகிஸ்தான் பிரதமருடன் பேச்சு நடத்துவதாக அறிவித்திருந்தாலும், பாகிஸ்தானை நம்ப முடியாது. ஆனாலும், மோடி மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. பாகிஸ்தான் வழிக்கு வராவிட்டால் அணு குண்டு பட்டனை மோடி அழுத்துவார்.” – சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே.

நீதி: பதிலுக்கு பாகிஸ்தான் என்ன தீபாவளி வாணமா விடும்? அவர்களிடமும் அணுகுண்டு இருக்கிறது, பட்டன் உண்டு என்பது கூட இந்த முட்டாளுக்கு தெரியவில்லை. பொதுஅறிவு இல்லை என்பதாலேயே மதவெறியின் மகத்துவம் ஒளிரும் போல.
__________________

செய்தி: மைத்துனருக்கு பதவி கிடைக்காத பட்சத்தில், மனைவிக்காவது பதவியை பெற்று, கட்சியை காப்பாற்றும் நோக்குடன் விஜயகாந்த் டில்லி சென்றுள்ளார்.

நீதி: மட்டன் கடையைச் சுற்றி வரும் எல்லா தெருவோர பைரவர்களுக்கும் ஃபிரீ கறி கிடைத்து விடாது கேப்டன்!
________________

செய்தி: சி.பி.ஐ வழக்கு நிலுவையில் இருப்பதால் பா.ம.க.,வின் அன்புமணிக்கு அமைச்சர் பதவி அளிக்க பா.ஜனதா முன்வரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நீதி: முசாஃபர் நகர் இந்து மதவெறியனும் விலங்கு கால்நடை மருத்துவருமான பல்யானுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் போது தருமபுரி வன்னிய சாதிவெறியனும் மனித கால்நடை மருத்துவருமான அன்புமணிக்கு கொடுத்தால் என்னடா குத்தம்.
________________

செய்தி: தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்படும்போது சீனியாரிட்டி பட்டியல் வெளியிடப்படும். அதன்படி முதல்வருக்கு முதலிடம். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் உள்ளனர். நான்காம் இடத்தில் இருந்த முனுசாமி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதால், ஐந்தாம் இடத்தில் இருந்த வைத்திலிங்கத்திற்கு, நான்காம் இடம் வழங்கப்பட்டுள்ளது. பழைய அமைச்சரவை பட்டியலில், 12-ம் இடத்தில் இருந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு, ஐந்தாம் இடம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்து வரிசையாக, மோகன், வளர்மதி, பழனியப்பன், ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

நீதி: சீனியாரிட்டி, செக்யூரிட்டி, செலிபிரிட்டி சமாச்சாரமெல்லாம் அடிமைகளுக்கு ஏதய்யா?
___________________

செய்தி:  முந்தைய ஐ.மு அரசு, 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மானியச் சுமையை, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ அரசுக்கு விட்டுச் சென்றுள்ளது. இது புதிய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீதி: மக்களுக்கு ஒரு இலட்சம் கோடியையும், முதலாளிகளுக்கு பல இலட்சம் கோடிகளையும் வழங்கிய காங்கிரசு அரசின் சாதனையை பாஜக எப்படி முறியடிக்கும் எனபதே இந்த கவலையின் மறைபொருள்.
_______________

செய்தி: இந்திய அரசியல் மாற்றங்கள் குறித்து 1400 ஆண்டுகளுக்கு முன்னரே பிரெஞ்சு அறிஞர் நாஸ்ட்ரடாமஸ் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: இந்திய அரசியலில் 21-ம் நூற்றாண்டில் பெரும் மாற்றம் நிகழும். நரேந்திர மோடி என்ற நபரின் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும்; காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய தோல்வியை சந்திக்கும். வாஜ்பாய், அத்வானி, நரேந்திர மோடி என்ற நபர்களால் பாரதிய ஜனதா கட்சி எழுச்சி பெறும். வாஜ்பாய் நீண்ட நாட்கள் ஆட்சியில் இருக்க மாட்டார். அத்வானி, கட்சியை வழிநடத்தும் பொறுப்பில் இருப்பார். நரேந்திர மோடி நீண்ட நாட்கள் பதவியில் இருப்பார். சிறந்த இரும்பு மனிதரான அவர், தன் சாதனைகளை எடுத்துக் கூறி மக்களின் மனதில் இடம் பிடிப்பார். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார் – தினமலர் செய்தி.

நீதி: ஆமாம், நாங்களும் அந்த புத்தகத்தை படித்திருக்கிறோம், அதில் அந்துமணியின் பாலியல் பொறுக்கித்தனங்களைக்கூட நாள்வாரியாக, நேரக்கணக்காக அட்சர சுத்தமாக குறிப்பிட்டிருக்கிறார், நாஸ்ட்ரடாமஸ். ஜெய் ஹிந்த்!
________________

செய்தி: கோரக்தான் விபத்தினை அடுத்து, பாதுகாப்புதான் எங்களது துறை நடவடிக்கைகளில் முக்கியமானதாக இருக்கும் என புதிதாக பொறுப்பேற்றுள்ள ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடா கூறியிருக்கிறார்.

நீதி: கர்நாடகாவில் தங்களது அரசியல் வாழ்வினை பாதுகாக்க எடியூரப்பாவுடன் போட்டி போட்டு அடிக்கடி யாகம் நடத்தும் சதானந்த கவுடா, ரயிலில் பயணிக்கும் மக்களை பாதுகாக்க என்ன யாகம் நடத்துவார்?
____________