privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்ஆதிக்க சாதிவெறியால் கொல்லப்பட்ட உபி தலித் சகோதரிகள் !

ஆதிக்க சாதிவெறியால் கொல்லப்பட்ட உபி தலித் சகோதரிகள் !

-

டந்த செவ்வாய்க்கிழமை 27.05.2014 இரவு, உத்திர பிரதேச மாநிலம் பதூன் மாவட்டம் உஷைத் பகுதியை சேர்ந்த கத்ரா கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இரு பதின்ம வயது சிறுமிகள் இரு காவலர்கள் உள்ளிட்ட ஏழு ஆதிக்க சாதி வெறியர்களால் கும்பலாக பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு, பிறகு கிராமத்தில் பொது இடத்தில் உள்ள மாமரத்தில் தூக்கிலேற்றப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட சிறுமிகளின் உறவினர்கள்
கொல்லப்பட்ட சிறுமிகளின் உறவினர்கள்

15, 14 வயதுடைய அந்த இருவரும் சகோதரிகள். வீட்டில் கழிவறை வசதியில்லாத காரணத்தால் அருகிலுள்ள மறைவான பகுதிக்கு செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிக்கு போகின்றனர். நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாத காரணத்தால் பெற்றோர்கள், உசைத் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க சென்றனர். ஆனால் அங்கிருந்த சர்வேஷ் யாதவ் உள்ளிட்ட நான்கு காவலர்கள் புகாரை பெற்றுக்கொள்ளாமல் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதில் சந்தேகமடைந்த கிராம மக்கள் சகோதரிகளை பல இடங்களில் தேடிப் பார்த்தார்கள்

மறுநாள் அதிகாலை வீட்டில் இருந்து 250 மீட்டர் தொலைவில் உள்ள மாமரத்தில் அவர்கள் இருவரும் தூக்கில் தொங்குவதை கண்ட பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தருகிறார்கள். ஆயினும் அவர்கள் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு உடனடியாக வராமல் இழுத்தடிக்கின்றனர். கோபமடைந்த பொதுமக்கள் இச்செயலில் ஈடுபட்ட ஆதிக்க சாதியை சேர்ந்த குற்றவாளிகளை கைது செய்யக் கோரி மறியல் போராட்டத்தில் இறங்கினர். அதன் பிறகுதான் போலீசார் சம்பவ இடத்திற்கு வருகின்றனர். தூக்கில் தொங்கிய பிணங்களை போலீசார் கைப்பற்றுவதற்கு போராடியவர்கள் முதலில் அனுமதிக்கவில்லை. பின்னர் பகுஜன் சமாஜவாதி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நீரஜ் மவுரியா, காங்கிரசு கட்சியின் பிரிஜபால் சாக்கியா போன்றோர் தலையிட்டு மக்களை அமைதிப்படுத்திய பிறகுதான் போலீசாரால் பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முடிந்தது.

புகாரை பெற்றுக்கொள்ள மறுத்த காவலர்கள் சர்வேஷ் யாதவ், ரக்ஷ்பால் யாதவ், ராம் விலாஸ், சத்ரபால் யாதவ் என  நான்கு காவலர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக டி.ஐ.ஜி. ரத்தோர் கூறியுள்ளார். அவர்களில் சர்வேஷ் யாதவ் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டவர் என்பதால் அவர் மாத்திரம் கைதும் செய்யப்பட்டுள்ளார். அதே கிராமத்தை சேர்ந்த பப்பு யாதவ் மற்றும் அவரது சகோதரர்கள் பிரிஜேஷ், அவதேஷ் ஆகியோர் உள்ளிட்ட ஏழு பேர் இக்கும்பல் வல்லுறவில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. குற்றவாளிகள் அனைவருமே ஆதிக்க சாதியான யாதவர் சாதியை சேர்ந்தவர்கள்தான். இவர்களில் பப்பு யாதவும், பிரிஜேஷூம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாதவ குலத்திலகமான கண்ணனை முன்னிறுத்தி சாதிப்பெருமை பேசும் இந்த சாதிவெறியர்கள் உண்மையிலேயே கிருஷ்ணனது வாரிசுகள்தான். வருணக்கலப்பினால் தர்மம் குலையும் என்று கீதையில் ஊளையிட்ட பகவானது பார்ப்பனிய ஆதிக்கம் இங்கே தலித் மக்களின் மீதான இரக்கமற்ற வன்முறையாக கொலையாக நடந்தேறியிருக்கிறது.

உஷைத்-லிலாவன் சாலையில் மறியலில் ஈடுபட்ட மக்களோ உஷைத் காவல்நிலையத்தில் பணியாற்றும் அனைவரையும் இடைநீக்கம் செய்ய வேண்டுமென்று கோரினர். இதனை ஏற்க மறுத்த காவல்துறையினர் அவர்களை உள்ளூர் அரசியல்வாதிகளை வைத்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையின்படி இரண்டு சகோதரிகளும் பாலியல் வல்லுறவினால் மாத்திரம் இறக்கவில்லை, தூக்கிலிடப்பட்ட பிறகுதான் இறந்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது. இதுவரை முதல் தகவல் அறிக்கையை காவல்துறையினர் பதிவு செய்யவில்லை என்கிறார்கள் போராடும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள்.

கிராம மக்களும் போலீசும்பதூன் மக்களவை உறுப்பினர் தர்மேந்திர யாதவ் (முலாயம் சிங்கின் மச்சான்) சமாஜ்வாதி கட்சியை சேர்ந்தவர். இப்பகுதியில் ஆதிக்க சாதியாக இருக்கும் அவரது சாதியினர்தான் இப்பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது மாநிலத்திலும் அவர்களது ஆட்சிதான் நடைபெறுகிறது. சம்பவ இடத்திற்கு அவரோ அல்லது அவரது கட்சியினரோ நேரில் வரவில்லை. அகிலேஷ் யாதவ் நான்கு போலீசாரை இடைநீக்கம் செய்திருப்பதை மாபெரும் நடவடிக்கையாக முன்னிறுத்துகிறார். இவர் அறிவித்த கருணைத் தொகையை அந்த சகோதரிகளின் பெற்றோர்கள் தூக்கி வீசியிருக்கின்றனர். கொலைகாரர்களை கைது செய்து தண்டனை கொடுக்காமல், கொலைகாரர்களின் சார்பில் நட்ட ஈடு கொடுப்பது போன்ற இந்த தந்திரத்தை மக்கள் புரிந்தே வைத்திருக்கின்றனர். சமூகநீதிக் காவலராக தன்னை அகில இந்திய அளவில் முலாயம்சிங் யாதவ் போன்றவர்கள் காட்டிக் கொண்டாலும் தாழ்த்தப்பட்டவர்களை ஒடுக்குவதை பொறுத்த வரை இன்னபிற ஆதிக்கசாதிகளுடன் இணைந்துதான் அவரது கட்சியினர் செயல்படுகின்றனர் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆகவே குற்றச் செயலில் ஈடுபட்ட யாதவர் சாதியினர் மீது நடவடிக்கை எடுப்பதில் அவர்கள் முனைப்பு காட்டுவதில்லைதான். ஆதிக்க சாதியின் அரசியல்தான் சமூகநீதிக் கட்சிகளின் அரசியலாக வெளிப்படுகிறது.

இதற்கிடையில் நடந்த சம்பவத்திற்கு ஒரு நீதி விசாரணை தேவை என்று அகில இந்திய பெண்கள் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநில அரசிடமிருந்து அறிக்கை கோரியிருக்கிறார். முசாஃபர் நகர் கலவரத்திற்கு பிறகு இந்துக்கள் என்ற முறையில் ஒன்றுதிரண்டுள்ள ஆதிக்க சாதியினர் பெருவாரியாக நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவை உ.பி.யில் வெற்றிபெறச் செய்துள்ளனர் என்பதை நன்கு தெரிந்து கொண்ட பிறகும் கூட பா.ஜ.க ஒரு வெற்று மிரட்டலுக்காக அகிலேஷ் சிங் யாதவை மிரட்டிப் பார்க்கிறது. மற்றபடி சாதிவெறியை பொறுத்தவரையில் பாஜகவின் இளைய பங்காளியாகத்தான் சமாஜ்வாதி கட்சியும் செயல்பட்டு வருகிறது என்பது எல்லோருக்குமே தெரியும்.

உத்திர பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா போன்ற மாநிலங்களில் ஜாட் சாதிவெறியும், இந்துமத வெறியும் கைகோர்த்துதான் அரசியல் தளத்திலும், சமூக தளத்திலும் செயல்படுகின்றன. அதனை உறுதி செய்து ஓட்டுக்களாக மாற்றத்தான் அமித் ஷாவை உத்திர பிரதேசத்துக்கு முன்னரே அனுப்பி வைத்தார் மோடி. அதுதான் முசாஃபர் நகரில் கலவரமாக வெடிக்கும் போது பயன்படுத்தப் பட்டது. ஏற்கெனவே வாஜ்பேயி ஆட்சி காலத்தில் தான், ஹரியானாவில் செத்த மாட்டை தோலுரித்த காரணத்துக்காக ஐந்து தலித்துகளை தோலை உரித்துக் கொன்று தொங்க விட்டார்கள் இந்துமதவெறி அமைப்புகளைச் சேர்ந்த ஆதிக்க சாதிவெறியர்கள். இப்போது மோடி ஆட்சி வந்திருப்பதால் தைரியமாக தலித் பெண்களை வல்லுறவுக்குள்ளாக்குவதுடன் நில்லாது, பொது இடத்தில் தூக்கிலும் ஏற்றி விடுகின்றனர். ஜாட் சாதிவெறியின் அபிமானத்தை பெற்றிருக்கும் பாஜக இனி யாதவ சாதிவெறியர்களின் அபிமானத்தை பெற்றால்தான் வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற முடியும். இது ஒன்றே இவர்கள் யார் பக்கம் என்பதை அறியத்தரும்.

போலீஸ் படை குவிப்புஇந்த குற்றச்செயலில் காவல்துறையினரும், ஆதிக்க சாதியினரும் திட்டமிட்டே ஈடுபட்டுள்ளனர். பெண்கள் மீதான பாலியல் வல்லுறவில் ஈடுபடும் காவலர்கள் பெரும்பாலும் துறைசார்ந்த விசாரணையை தாண்டி கைது போன்ற நடவடிக்கைக்கெல்லாம் உள்ளாவதில்லை. இந்த அதிகாரவர்க்க தைரியமும், ஆதிக்க சாதித் திமிரும்தான் தலித் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவாக அவர்களிடம் வெளிப்படுகிறது. மேலும் எல்லாக் கட்சிகளின் அரசாங்கங்களும் தமது ஆட்சிக்கு  காவல்துறையை நம்பியே இருக்கின்றன. இதனால் இயல்பாகவே காவல்துறையின் அதிகாரத்திமிர் அதிகரித்து வருகிறது.

போலீசையும், ராணுவத்தையும் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்பதுதான் பாசிஸ்டுகளின் கொள்கை. நீதிவிசாரணையை விட ஒரு போலி என்கவுண்டர் மூலமாக தீர்ப்பையே எழுதி விடலாம் என்பதுதான் அவர்களது ‘ஜனநாயக’ வழிமுறை. சுதந்திரம் என்பதற்கு இவர்களைப் பொறுத்த வரையில் குடிமக்கள் மீதான வன்முறையை கட்டவிழ்த்து விடல் என்றுதான் பொருள். அரசுக்கெதிரான போராட்டங்களை போலீசு நசுக்கி எறிவதற்கு உபகாரமாக அவர்கள் செய்யும் இதுபோன்ற குற்றங்களை கண்டும் காணாமல் இருந்து விடுகிறார்கள் ஆளும் வர்க்கத்தினர். தில்லி மருத்துவ மாணவி மீதான வன்புணர்ச்சி மற்றும் கொலையில்  குற்றவாளிகளை தூக்கிலிடவேண்டும் என்று கூவியவர்கள் இங்கே யாதவ மற்றும் போலிஸ் குற்றவாளிகளை அப்படி தண்டிக்க வேண்டும் என்று மறந்தும் பேசுவதில்லை.

சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவினர்களை தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டுமென்கிறார்கள் ஆட்சியாளர்கள். ஆகவே அம்மக்கள் தனக்கு அடங்கி நடக்க வேண்டும் என காவல்துறை நினைக்கிறது. அடக்குவது என்ற பெயரில் அத்துமீறலாம், அயோக்கியத்தனம் என்பதை தமக்கு வழங்கிய உரிமையாகவே போலீசு கருதுகிறது. ஆதிக்க சாதி மற்றும் நிலவுடமையாளர்களுக்கு இது கிராமத்தில் அவர்களது அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கான உரிமையாகவே கருதப்படுகிறது.

இப்போது கைதான காவலர் மீது சதித் திட்டம் தீட்டியதாகவும் (பிரிவு 120B), மற்ற ஆதிக்க சாதியினர் மீது கொலை (302), பாலியல் வல்லுறவில் (376) ஈடுபட்டதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படி தனித்தனியாக வழக்குகளைப் பிரித்து பதிவு செய்வதே குற்றவாளிகளை தப்பிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் செய்யப்பட்டுள்ளது. மற்றபடி மக்களின் கோபத்திற்கு வடிகாலாக இடைநீக்கம், கைது போன்ற நடவடிக்கைகளை ஆளும் வர்க்கம் எடுக்கிறது. சாதியும், வர்க்கமும் இணைந்துதான் தலித் சகோதரிகள் மீதான வன்முறையாக வெளிப்பட்டிருக்கிறது.

ஒருவேளை அப்பெண்களின் வீடுகளில் கழிப்பறை இருந்திருந்தால் இந்த சம்பவமே நடந்திருக்காதில்லையா ? என்று சிலர் அறிவாளி போன்று கேட்கிறார்கள். கழிப்பறை தேவையில்லை என்பதல்ல நமது வாதம். ஆனால் கழிப்பறை இருந்துவிட்டால் இந்த வன்புணர்ச்சி கொலை நடக்காது என்ற முட்டாள்தனத்தை எப்படி புரியவைப்பது? மகாராஷ்டிர மாநிலம் கயர்லாஞ்சியில் பிள்ளைகளை படிக்க வைத்து வாழ்வில் முன்னேறலாம் என்று நம்பியிருந்தார் பையாலால் போட்மாங்கே என்ற தலித். 2006 செப்டம்பர் 29-ம் தேதி அவரது மனைவி, மகள், மகன்கள் என அனைவரும் அவர் கண்ணெதிலே கும்பல் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி கொல்லப்பட்ட போது அவர் உடைந்து தான் போனார். அவரது மகள் 17 வயது பிரியங்கா வல்லுறவில் இறந்த பிறகும் தொடர்ந்து மொத்த ஊரும் சேர்ந்து அந்த கொடூரத்தை மீண்டும் இழைத்தது. இதுதான் ஆதிக்க சாதிவெறியின் ஆணாதிக்க மனோபாவம். இதுதான் இன்று உத்திர பிரதே மாநில் கத்ரா கிராமத்திலும் வெளிப்பட்டுள்ளது. ஆகவே கழிப்பறை கட்டியிருந்தால் ஆதிக்க சாதிவெறியர்கள் இன்னும் கொடூரமாக நடப்பார்கள் என்பதுதான் எதார்த்தம்.

பீகார், ஜார்கண்டில் ஆதிக்கசாதிவெறியர்களுக்கும் அவர்களின் குண்டர் படைகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கும் நக்சல்பாரி புரட்சியாளர்கள் மட்டுமே இந்த கொடுங்கோன்மைக்கு முடிவு கட்டுவார்கள்.

  1. //யாதவ குலத்திலகமான கண்ணனை முன்னிறுத்தி சாதிப்பெருமை பேசும் இந்த சாதிவெறியர்கள் உண்மையிலேயே கிருஷ்ணனது வாரிசுகள்தான். வருணக்கலப்பினால் தர்மம் குலையும் என்று கீதையில் ஊளையிட்ட பகவானது பார்ப்பனிய ஆதிக்கம் இங்கே தலித் மக்களின் மீதான இரக்கமற்ற வன்முறையாக கொலையாக நடந்தேறியிருக்கிறது.//

    மற்ற மதத்தினர் இப்படியே செய்யும் போது அவர்கள் சாதி/மத கடவுள்களைஉம் சாடுவீர்கள் என்றே நம்பித் தொலைவோம்…

    • Sariyaaka soneerkal Seenu – Vinavu pondra oru thalai patchamaana oru sila oodagangalaal ippadi patta koduramaana seyalkal kooda thisai maari pokirathu!!

      Ellam therintha poi uraikkum Vinavu avarkale itho ungalathu keezthanamaana sila karuthakalukku sila thiruthangal:

      1) Karpazhikapattu kolai seyyapatta irandu kuzhanthaikalum Dalit alla. Avarkal iruvaraum BC vakuppinai sernthvarkal. Ungalai pondru ariyamayai payanpaduthi pirivinayai thoondum oodagangalin sathi thaan avarkalai Dalit endru ithu varai thavaraaka adayalam kaattuvatharkaana kaaranam!

      2) Intha seyalai seitha mirukankal anaivarum neengal paaraattum miga pirpaduthapatta vaguppai (MBC) sernthavarkal.

      3) Ivarkal seitha kutrathirku ‘Kannapiraan’ kaaranam endru sokku adikkapatharku mun nee ippadi arivindri ezhuthuvatharku kaaranam unnai seriyaaka valarkaatha petrorkalum unnai sithaikkum karuppu communist thonthikalume kaaranam!

  2. பீகார், ஜார்கண்டில் ஆதிக்கசாதிவெறியர்களுக்கும் அவர்களின் குண்டர் படைகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கும் நக்சல்பாரி புரட்சியாளர்கள் மட்டுமே இந்த கொடுங்கோன்மைக்கு முடிவு கட்டுவார்கள்.

  3. ஏண்_______சீனு நீ எல்லாம் ஒரு மனுஷனா ? இரண்டு குழந்தைகள் கொடுரமாக கொல்லப்பட்டுள்ளனர். ஒரு வார்த்தை கூட கண்டிக்கவில்லை. வினவில், முஸ்லிம், கிறித்துவ உள்ளிட்ட எல்லா மதவெறியர்களின் அத்துமீறல்களும் கண்டிக்க பட்டுள்ளன. வேண்டுமென்றால் மதவெறி என்று தேடிப் பார்.

    • @ஆதவன், இரண்டு குழந்தைகள் கொடூரமாக கொல்லப்பட்ட விடயத்தில் கூட “யாதவ” சாதியையும் இந்து மத கடவுளையும் இழுத்தது யார்? ஏன் இந்த சாதி/மத வெறி?

    • ஆதவன்,

      //வினவில், முஸ்லிம், கிறித்துவ உள்ளிட்ட எல்லா மதவெறியர்களின் அத்துமீறல்களும் கண்டிக்க பட்டுள்ளன. வேண்டுமென்றால் மதவெறி என்று தேடிப் பார்.//

      படிக்கும் போது கொஞ்சம் மூளையையும் உபயோகித்து படிச்சு பார். நான் சொல்ல வந்தது புரியும்…

  4. Communistukal மீது மிகுந்த மரியாதையை எனக்கு உண்டு. ஆனால் வினவு தளத்தை பார்த்தவுடன், கம்முநிச்டுகளை அடியோடு வெறுக்க ஆரம்பித்து விட்டேன்.

    பொய் உரைக்கும் பேனா, நல்லவன் போன்ற கபட நாடகம், சூழிசிகளை கட்டவழ்து விடுதல், வெள்ளையனை போன்ற பிரித்தாளும் தன்மை, சிறிய முன்னேற்றத்தை கூட தடுக்கும் தீய புத்தி, ஜாதி மதத்தை வெய்து கெட்டவனை நல்லவனாகவும் நல்லவனி கேட்டவானாகவும் சித்தரிப்பது, கொடிய செயல்களை தூக்கி வெய்து பேசுதல், நடுநிலையான தன்மி கொண்டவன் போல் வேஷமிடுதல்.

    இவனது தலத்தில் பிடித்த ஒரே விஷயம்: கிசுகிசு மற்றும் கவர்ச்சி காட்டி பிழைக்கும் மற்ற ஊடகங்கள் போல இல்லாமை

    • ஜாதியயும் மதத்தயும் பற்றி சொல்லும்போது உங்களுக்கு கோவம் வருவது உங்களின் ஜாதி மற்றும் மதத்தின் மீது வைத் து இருக்கும் அபிமானத்தின் வெளிப்பாடு யாதவ ஜாதியை சேர்ந்தவர்கள் கற்பளித்துவிட்டார்கள் ஏழை பெண்களை என்றால் கோபம் அவர்களின் மேல் ஏன் வரவில்லை அனால் யாதவ ஜாதிவெறியன் இப்படி செய்து விட்டான் என்று சொல்லும் வினவின் மீது கோபம் வருவது உங்கள் ஜாதிய அபிமானத்தின் வெளிப்பாடுதானே ஜாதி அபிமானம் ஜாதி வெறியை விட அபாயகரமானது ஏனென்றால் இதை செய்த சாதியினரை கண்டிக்காமல் மவுனம் சாதிப்பதிலோ அல்லது அதை கண்டிப்பதை எதிற்ப்பதிலோ போய் முடிகிறது சுய சாதி அபிமானத்தை கைவிடுவது கஸ்டம்தான் அனாலும் அதை கைவிட முயற்சி செய்யுங்கள் நண்பர் இளங்கோ

      • // இதை செய்த சாதியினரை கண்டிக்காமல் மவுனம் சாதிப்பதிலோ அல்லது அதை கண்டிப்பதை எதிற்ப்பதிலோ போய் முடிகிறது //
        @p.joseph: அந்த காவாலி பயலுவ கற்பழிச்சது அவனுக யாதவ சாதிநாலயா இல்ல காம வெறிலையா? சம்மந்தமில்லாம இங்க சாதிய நுழைப்பானேன்?

        //சுய சாதி அபிமானத்தை கைவிடுவது கஸ்டம்தான் அனாலும் அதை கைவிட முயற்சி செய்யுங்கள்//
        இது எந்த சாதி பத்தி எழுதினாலும் இதுதான் நிலை.
        எவனோ ஒருவன் செய்யும் தவறுக்கு அவன் சாதியை திட்டி என்ன பயன்? ஆனா உங்களுக்கு பயன் உண்டு – அது எல்லாருக்கும் நல்லா தெரியுது.

        • கப்பி இதனால எனக்கு என்ன பயன் உண்டு அப்பிடி யேதேனும் பயன் லாபம் கிடைச்சா கண்டிப்பா சேர் பண்னிக்கலாம் எப்பிடி பயன் கிடைக்கும் கொஞ்சம் விளக்குங்க நண்பா

  5. பாதிக்கப்பட்டவர்கள் தலித்தாகவும் பாதிப்பை ஏற்படுத்தியவன் ஆதிக்கசாதியாகவும்,அதிலும் இரு போலீஸ் பொறுக்கிகளும் இருக்கும் போது நீதி கிடைக்க வாய்ப்பே இல்லை.அதிகாரவர்க்கம் ,நீதிமன்றம் எல்லாம் ஆதிக்கசாதியினருக்காகவே செயல்படுகின்றன.இந்திய நீதி மன்றங்கள் காசு உள்ளவனுக்கு ஒருநீதியும்,காசில்லாதவனுக்கு அநீதியும்,பார்ப்பானுக்கு மனுநீதியும்,பறையனுக்கு அநீதியும்,இந்துக்கு ஒருநீதியும் ,இஸ்லாமியனுக்கு அநீதியும் என வகைபிரித்து தீர்ப்பு எழுதிவரும் போது இக்கட்டுரையாளர் ஆதிக்க சாதியினரையும் அவர்களின் சாதி,மத கடவுளர்களையும் குறிப்பிட்டு எழுதுவதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை.

  6. சாதி, மதம் இந்த விஷயமெல்லாம் ஒரு பிரச்சனையாக இல்லாமல் போகும் காலம் ரொம்ப தூரத்தில் இல்லை. ஆனா அது இந்தியாவில் பிரச்சனையில்லை. இங்கே பிரச்சனை குற்றத்துக்கான தண்டனைகள். இந்தியாவுல குற்றத்துக்கான தண்டனைகள் என்ன சட்டத்துல ஓட்டைஎன்னன்னு தெரிஞ்சிகிட்ட ஒரு பரம யோக்கியனுக்கு கூட நாமும் கொலை பண்ணினா என்னா கற்பழிச்சா என்னா திருடினா என்னாங்குற எண்ணம் வரும். அது தான் சட்டத்தோட லட்சணம். சட்டத்தை பத்தி தெரிஞ்சா பயம் வரணும். ஆனா இந்தியாவுல குற்றம் செய்ய ஆசைதான் வரும். அரபு நாட்டு சட்டத்தை படிச்சி பாருங்க ஒரு பயங்கர குற்றவாளி படிச்சான்னா பயத்துலேயே உச்.. போயிடுவான். அதுக்கப்புறம் குற்றத்தை செய்யணும்னு கற்பனையே செய்ய மாட்டான். பெண்ணை கற்பழிக்கவே வேண்டாம் மானபங்கம் அல்லது பலாத்கார முயற்சி செய்தாலே மரணதண்டனை கொடுக்கும் நாடுகளும் உள்ளன.

  7. சாதிதான்
    சமூகம்
    என்றால்
    வீசும்
    காற்றில்
    விஷம்
    பரவட்டும் ….
    டாக்டர்.பாபா சாகிப் அம்பேத்கர் ….

  8. இந்த கொடுங்கோன்மைக்கு நக்சல்பாரி புரட்சியாளர்கள் முடிவு கட்டுவார்கள்…

Leave a Reply to அசுரபாலகன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க