privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஅந்நிய முதலீட்டில் இந்திய வல்லரசு !

அந்நிய முதலீட்டில் இந்திய வல்லரசு !

-

பாதுகாப்புத் துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டுக்கு, மத்திய அரசு கடந்த வாரம் ஒப்புதல் அளித்துள்ளது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சார்பாக இதே அந்நிய முதலீட்டை 26% லிருந்து 100% ஆக உயர்த்த வர்த்த அமைச்சர் ஆனந்த் சர்மா முயன்ற போது, எதிர்க்கட்சியாக இருந்த பாஜக தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தது. இதனால் அன்று இவர்கள் எதிர்ப்பினால்தான் காங்கிரஸ் இதை நிறைவேற்றவில்லை என்பதல்ல. அதற்கு வேறு சில காரணங்கள் இருந்தன. மற்றபடி மன்மோகன் சிங்கும் இதே நடவடிக்கையை அன்றே செய்ய நிறையவே முயற்சி செய்தார்.

ரசிய உதவியுடன் தயாரிக்கப்படும் டி 72 டாங்கி - இனி ரசியாவே இங்கு தயாரித்தால் அது உள்நாட்டு தயாரிப்பாம்!
ரசிய உதவியுடன் தயாரிக்கப்படும் டி 72 டாங்கி – இனி ரசியாவே இங்கு தயாரித்தால் அது உள்நாட்டு தயாரிப்பாம்!

மோடி அரசு பொறுப்பேற்ற இரண்டு நாட்களிலேயே வணிக மற்றும் தொழில்துறை இணையமைச்சர் நிர்மலா சீத்தாராமன், இதற்கான முயற்சியில் இறங்கி விட்டார். 100% அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்தால் பாதுகாப்புத் துறை சார்ந்த சாதனங்களின் இறக்குமதி குறைந்து, உள்நாட்டு தயாரிப்புகளுக்கு வர்த்தக வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் பா.ஜ.க அரசு கூறுகிறது. இறக்குமதியை குறைப்பதால் நமக்கு அந்நிய செலவாணி கையிருப்பும் கணிசமாக அதிகரிக்கும் என்றும் சொல்கிறார்கள். அந்நிய முதலீடு இங்கே வந்து, அதை வைத்து தயாரிப்பது உள்நாட்டு தயாரிப்பாம்; அன்னிய முதலீடு இங்கிருந்து எடுத்துச் செல்லும் இலாபத்தால் அந்நிய செலவாணி இருப்பு அதிகரிக்குமாம்!

நேரு காலம் தொட்டே இந்திய இராணுவத்தில் துப்பாக்கி தொட்டு விமானம் வரை அனைத்தும் இறக்குமதி செய்யப்பட்டே வந்தன. புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டு இந்த இறக்குமதி பிரம்மாண்டமாக வளர்ந்து, இன்று இங்கேயே ராணுவ தளவாடங்களைத் தயாரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதன் கிளைமாக்ஸ் காட்சியைத்தான் தற்போது பா.ஜ.க அரசு செய்து வருகிறது.

தற்போதைய பாதுகாப்புத் துறையில் அந்நிய முதலீட்டுக்கான அனுமதியில், நேரடியாக வரும் நிறுவனங்களின் அந்நிய முதலீட்டின் அளவை 49 சதவீதமும் அதிகரித்துள்ளார்கள். மேலும் இதில் வெளிநாடு வாழ் இந்தியர்களும் முதலீடு செய்யலாம். உள்நாட்டு நிறுவனங்களுடன் இணைந்து தொழில்நுட்ப பரிமாற்றம் மாத்திரம் செய்து சம்பாதிக்கவும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அரசின் அனுமதி தரப்பட்டுள்ளது.

அந்நிய செலவாணி கையிருப்பை அதிகரிப்பது மாத்திரமின்றி வேலை வாய்ப்புகளும் பெருகும் என்று சொல்கிறது அமைச்சக குறிப்பு. உலகின் மிக அதிகமாக ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்யும் முதல் பத்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆண்டுக்கு 8 பில்லியன் டாலர்கள்  வரையிலான ராணுவ தளவாடங்களை இந்தியா இறக்குமதி செய்கிறது. மார்ச் மாதம் நமது அன்னிய செலவாணி கையிருப்பே 11 பில்லியன் டாலர்கள்தான். கடந்த 2006-07 ஆம் நிதியாண்டில் இருந்து பாதுகாப்பு அமைச்சகத்துக்கான பட்ஜெட் ஆண்டுதோறும் 13.4% அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. ஏறக்குறைய தனது தேவையில் 65% தளவாடங்களை இந்தியா இறக்குமதி செய்வதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இந்த இலட்சணத்தில் தான் அப்துல் கலாம் வகையறாக்கள் 2020-ல் இந்தியா வல்லரசு ஆகப்போவதாக கனவு காணச் சொல்கின்றனர். இரவல் ஆயுதத்தில் சொந்த வல்லரசுக் கனவு!

நிர்மாலா சீதாராமனின் முதல் பணியே அமெரிக்காவை குளிர்வித்திருக்கும்!
நிர்மாலா சீதாராமனின் முதல் பணியே அமெரிக்காவை குளிர்வித்திருக்கும்!

பாதுகாப்பு துறையில் அந்நிய நேரடி முதலீடு சாத்தியம் என்றவுடன் அந்நிய செலவாணி கையிருப்பு அதிகரிக்கும் என்ற வாதமே மோசடியானது என்பதை யாரும் வெளிப்படையாக சொல்ல மறுக்கிறார்கள். உள்நாட்டில் வந்து தொழில் தொடங்கிய நோக்கியா போன்ற கம்பெனிகளை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விலைக்கு வாங்கிய பிறகு நாம் எதாவது செய்ய முடிந்ததா? அது இந்த நிறுவனங்களுக்கு பொருந்தாதா? இன்றைக்கு இந்தியாவுக்கு வரும் ராணுவ தளவாட தயாரிப்பு நிறுவனங்கள் கிடைக்கும் லாபத்தை டாலராகத்தானே வெளியே கொண்டு போவார்கள். இதனை தடுக்க முடியுமா? இதனால் அந்நிய செலவாணி கையிருப்பு குறையாதா? என்ற கேள்விகளை திட்டமிட்டே தவிர்க்கிறார்கள்.

கடந்த ஆண்டு மாத்திரம் இந்தியா 190 கோடி டாலர் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. கடந்த நாற்பது ஆண்டுகளாக ரஷ்யாதான் இந்தியாவுக்கு அதிக அளவில் ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்து வந்தது. இப்போது அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இங்கு ஏற்கெனவே சிக்கோர்ஸ்கி, லாக்கி மார்ட்டின் உள்ளிட்ட பல பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களுடன் இணைந்து ராணுவ தளவாட உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. தற்போது அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு 100% ஆக உயர்ந்துள்ளதால் பன்னாட்டு நிறுவனங்களும் அவற்றின் துணை நிறுவனங்களும் நேரடியாக இங்கு வந்து தொழில் தொடங்க முடியும். நூறு சதவீதம் இந்தியர்களை வேலைக்கு பயன்படுத்த வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் தொழில்நுட்பம் சார்ந்த விசயங்களில் அந்நியர்களை பணிக்கமர்த்த முடியும் என்ற விதிவிலக்கும் உள்ளது. சாதாரண ஒப்பந்த தொழிலாளிகளை மாத்திரம் இந்தியாவில் இருந்து எடுத்துக் கொண்டு பொறியாளர்கள் போன்ற அறிவியல் தொழில்நுட்ப வல்லுநர்களை தங்களது நாட்டில் இருந்தே கொண்டு வந்து விடுவார்கள், அல்லது எங்கே குறைவான கூலிக்கு தொழில்நுட்ப வல்லுநர்கள் கிடைக்கிறார்களோ அந்த நாட்டிலிருந்து  ஆட்களை தருவித்து விடுவார்கள்.

நிறுவனம் வெளியேறும் போது எதையும் எடுத்துக்கொண்டு போக அனுமதி கிடையாதாம். ஆனால் தொழில் நடக்கும் போது லாபத் தொகையை எடுத்துப் போன பிறகு கடைசியில் அரசு வங்கிகளின் கடன் மூலமாக பெற்ற கட்டிடங்களை அப்படியே விட்டுப் போவதில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எந்த நட்டமும் இருக்கப் போவதில்லை தான். பழைய என்ரான் மோசடி கதைதான் நடக்கும். அதாவது அவர்கள் வங்கியில் வாங்கிய கடனுக்கும் சேர்த்து மக்களின் வரிப் பணத்தில் வட்டி கட்டிக் கொண்டிருப்போம்.

இந்த நிறுவனங்களுக்கு தடையற்ற இலவச மின்சாரம், தண்ணீர், இடம் எல்லாம் மக்களிடமிருந்து பறித்து கையளிக்கப்படும். பதிலுக்கு மண்ணைப் பறிகொடுத்த மக்கள் அங்கு போய் செக்யூரிட்டி கார்டுகளாக – ஒப்பந்த தொழிலாளர்களாகத்தான் பணிபுரிய வேண்டியிருக்கும். அன்று நாட்டின் பாதுகாப்பே பறிபோய் விடும் என்று காங்கிரசை பலமாக எதிர்த்து நின்ற பா.ஜ.க, இன்று தான் ஆட்சிக்கு வந்தவுடன் நாட்டின் பாதுகாப்பை நல்ல விலைக்கு விற்பதில் அவசரம் காட்டுகிறது.

பாதுகாப்புத் துறை மற்றும் நிதித் துறைக்கு அருண் ஜேட்லியே பொறுப்பாக இருப்பதிலிருந்தே இந்த அந்நிய முதலீட்டின் பாகாசுரப் படையெடுப்பை புரிந்து கொள்ள முடியும். 49 சதவீதம் வரை அந்நிய முதலீட்டை அனுமதித்தால் தொழில்நுட்ப விசயங்களை பகிரத் தேவையில்லை, 75%, 100% எனில் பகிர வேண்டும் என்ற மூன்று விதமான பரிந்துரைகளை தொழில் கொள்கை மற்றும் விரிவுபடுத்தல் துறை முன்வைத்த போது, மத்திய அரசு 100% சதவீதம் நேரடி அந்நிய முதலீடு என்பதில் உறுதியாக இருந்தது.

2008-ல் அசோசெம் என்ற முதலாளிகள் சங்கம், அந்நிய நேரடி முதலீடு 49 சதவீதம் வரை இருப்பதற்கு ஆதரவு தந்தது. இந்தியாவில் தொழில் தொடங்கும் பாதுகாப்புத் துறை தளவாட தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தொழில்நுட்பத்தை பகிர்வதை விதிகளின்படி கட்டாயம் எல்லாம் ஆக்கவில்லை, ஒரு ஆலோசனையாக மட்டுமே அரசு சொல்லி உள்ளது. எனவே 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி தந்தால் தொழில்நுட்பம் இந்தியாவுக்கு வந்து விடும் என்பதற்கு எந்த உத்திவாதமும் இல்லை. எப்படி கடைசி வரையும் இந்திய விவசாயி மாண்சான்டோ நிறுவன விதைகளுக்காக காத்திருக்க வேண்டியதிருக்குமோ அதே போலத்தான் இந்திய ராணுவமும் இத்தகைய பன்னாட்டு நிறுவனங்களை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டியதிருக்கும். இதுதான் இந்துத்துவா சக்திகள் காப்பாற்றும் இந்திய இறையாண்மையின் பாதுகாப்பு இலட்சணம்.

ஆயுத இறக்குமதியின் இந்தியாவே முதலிடம்! இனி ஆயத நிறுவனங்களின் இறக்குமதியில் இந்தியாவே முதலிடம்!
ஆயுத இறக்குமதியின் இந்தியாவே முதலிடம்! இனி ஆயத நிறுவனங்களின் இறக்குமதியில் இந்தியாவே முதலிடம்!

இதனால் வேலை வாய்ப்பு பெருகுகிறதோ இல்லையோ ஆயுத தளவாட உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவன பங்குகளின் மதிப்பு பங்குச் சந்தையில் இப்போதே இருமடங்கு அதிகரித்துள்ளது. பிபவவ் டிபன்ஸ் நிறுவனத்தின் பங்கு 30 ரூபாயிலிருந்து 66 ரூபாயாக உயர்ந்துள்ளது. அந்நிறுவனத்தின் தலைவர் நிகில் காந்தி கூறுகையில் ”100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்காமல் எப்படி தொழில்நுட்பத்தை பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து நாம் பெற முடியும்” என்று தர்மாவேசத்துடன் கேட்கிறார்.  ”இந்தியாவில் அவர்களும் சம்பாதிப்பதற்கு சம வாய்ப்பை வழங்க வேண்டுமல்லவா” என்றும் கோருகிறார்.

கப்பல் கட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனம் சமீப காலம் வரை கொஞ்சம் குறைவான இலாபத்தில் தான் ஓடிக் கொண்டிருந்தது. இதன் உற்பத்தியில் 60 சதவீதம் ராணுவ தளவாட பொருட்களுக்கானது. இந்த ஆண்டு இதன் மதிப்பு 6600 கோடி ரூபாய். 2016-17-ல் 12,000 கோடி ரூபாயாக உயரும் என்கிறார்கள். இந்நிறுவனத்தின் அசையா சொத்தின் மதிப்பு 6072 கோடி ரூபாய்கள் மட்டுமே. இந்த ஆண்டு ரூ.2.72 கோடி மட்டுமே இலாபமாக ஈட்டவுள்ள இந்நிறுவனம் அடுத்த இரண்டாண்டுகளில் ஆண்டுக்கு ரூ.280-290 கோடி வரை இலாபமாக ஈட்டும் என்கிறார்கள் சந்தை வல்லுநர்கள்.

ஏறக்குறைய நிறுவனத்தின் பங்கு மதிப்பு 17 மடங்கு அதிகரிக்குமாம். இந்தப் பங்குகளின் பரிவர்த்தனையை யார் கண்காணிக்கப் போகிறார்கள். பிபவவ் டிபன்சும் அதன் உரிமையாளரும் பாதுகாப்புத் துறையில் நேரடி அந்நிய முதலீட்டால் பலனடையப் போகும் பலருக்கும் ஒரு வகை மாதிரி. பன்னாட்டு கம்பெனியும், இந்திய அரசும் இந்த அனுமதி மூலம் வெற்றி-வெற்றி (win-win) பாலிசியை அமல்படுத்தப் போவதாக அந்நிறுவன முதலாளி புளங்காகிதம் அடைகிறார். ஒரே போட்டியில் ஒருவர் தோற்காமலேயே இரு தரப்பும் வெற்றி பெற முடியும் என்கிறது, முதலாளித்துவ அறிவுத்துறையின் மோசடியான வாதம். ஆனால் அரிசியும் உமியும் கொண்டு வந்து ஊதிஊதித் தின்னும் இந்த விளையாட்டில் ஆதாயம் என்னவோ அரசுக்கல்ல என்று மட்டும் உறுதியாக நாம் சொல்ல முடியும்.

அடுத்து ரயில்வே, அடிப்படை கட்டுமானத் துறை போன்றவற்றிலும் 100% அந்நிய நேரடி முதலீட்டுக்கான திட்டங்களை வகுத்திருக்கிறார்கள். இதன் சாரத்தை மோடியின் முதல் நூறு நாட்கள் திட்டத்தின் 10 முக்கிய அம்சங்களிலேயே கோடிட்டு காட்டியுமிருக்கிறார்கள். அதாவது உலகளாவிய முதலீட்டாளர்களை கவர்வதுதான் அவர்களது திட்டம். இதுதான் 15 பக்க கொள்கை விளக்க அறிக்கையாக மத்திய அரசின் தொழில் கொள்கை மற்றும் விரிவுபடுத்தல் துறையின் சார்பில் பிற மத்திய அரசின் துறைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை மூலம் மொத்த தேசிய வருமானத்தை 4.5 சதவீதங்களில் இருந்து உயர்த்த முடியும் என்கிறார்கள் முதலாளித்துவ பொருளாதார வல்லுநர்கள். பன்னாட்டு நிறுவனங்களின் வரவு காரணமாக இது இன்னும் இரண்டு சதவீதம் உயரும் என்கிறார்கள்.

2014 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டின் உற்பத்தி துறையில் 0.2% சரிவு ஏற்பட்டிருக்கிறதாம். நாட்டின் இறக்குமதியை சார்ந்து உற்பத்தி துறை இருக்க கூடாது என்பதற்காகவே இந்நடவடிக்கை என்கிறார்கள். ஆனாலும் இதற்கு பிறகும் இறக்குமதியை சார்ந்துதான் இந்திய ராணுவம் பெரும்பாலும் இயங்க வேண்டியிருக்கும் என்கிறார்கள் சந்தை வல்லுநர்கள்.

ஐரோப்பியத் துப்பாக்கிகளை இனி கப்பல்செலவின்றி இந்தியாவிலேயே தயாரிக்கலாம்! இலாபத்தை அப்படியே எடுத்தும் செல்லலாம்!
ஐரோப்பியத் துப்பாக்கிகளை இனி கப்பல்செலவின்றி இந்தியாவிலேயே தயாரிக்கலாம்! இலாபத்தை அப்படியே எடுத்தும் செல்லலாம்!

நாட்டின் ராணுவ தளவாட ஏற்றுமதியை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளார்கள். 2010-12 ஆம் ஆண்டுகளில் 183 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான தளவாடங்கள் மட்டுமே ஏற்றுமதியாகின. 2019-ல் இதன் மதிப்பு 750 பில்லியனாக உயர வேண்டும் என்று இந்திய ஏற்றுமதியாளர் சங்க கூட்டமைப்பு, இலக்கு நிர்ணயித்துள்ளது. அரசு இதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. உள்நாட்டு உற்பத்தி இந்த இலக்கை எட்ட முடியாமல் போனாலோ, வெளிநாடுகளில் தேவை குறைவாக இருந்தாலோ இது சாத்தியமில்லை என்கிறது அரசு.

இந்திய ராணுவ தளவாட சந்தையானது சிலி, ஈகுவேடர், கொலம்பியா, பொலிவியா போன்ற தென்னமெரிக்க நாடுகளையும், சில ஆப்ரிக்க, ஆசிய நாடுகளையும் மையமாக கொண்டே இயங்குகிறது. இந்த ஏற்றுமதியாளர்கள் பல வரி விலக்குகளையும் மானியங்களையும் அரசிடமிருந்து கோரியுள்ளனர். தீவிரவாத எதிர்ப்புப் போர்க்கருவிகள், போதைப் பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க உதவும் கருவிகள் என இந்த உற்பத்தி, பெரும்பாலும் வளரும் ஏழை நாடுகளை குறிவைத்தே இயங்குகிறது. அரசு தனியாக மானியம் தர முடியாது என்ற போதிலும், குறைந்தபட்ச மாற்று வரிவிதிப்பையும், இலாப பங்கீட்டு வரியையும் விலக்கிக் கொள்வதன் மூலம் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் பாதுகாப்புத்துறைக்கான தளவாட உற்பத்திக்கு அரசு ஊக்கமளிக்கும் என்றுதான் தெரிகிறது. இதில் உள்நாட்டு முதலாளிகளுக்கு நிகராக பன்னாட்டு முதலாளிகளும் இனி பங்குபெறுவார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.

பன்னாட்டு ராணுவ தளவாட தயாரிப்பு நிறுவனங்களை நேரடியாக வரவழைத்த பிறகு அவர்களை வைத்து அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்களைத் தயாரிக்கும் வேலையுடன், இரவில் கூட துல்லியமாக குண்டு போடுவதற்கான உபகரணங்கள், விமான எதிர்ப்பு ரேடார்கள், ஹெலிகாப்டர்களை தயாரிக்கவும் திட்டமிட்டிருக்கிறது அரசு. அதற்கு தடையாக இருக்கும் அரசியல் அதிகார சோம்பேறித்தனத்தை உடைக்கவிருப்பதாக பா.ஜ.க ஏற்கெனவே கூறியிருந்தது. அடுத்து துறைமுகங்களையும், கனிம சுரங்கங்களையும் இணைக்கும் அதிவேக சாலைகளையும், ரயில்வே பாதைகளையும் போடுவது என்ற திட்டத்தையும் சொல்லியிருந்தனர்.

மொத்த தேசிய வருமானத்தில் 1.7 அல்லது 1.9% என இதுவரை இருந்தது போல ராணுவத்துக்கு ஒதுக்கீடு செய்வதற்கு பதிலாக 2.5% ஒதுக்கப் போவதாக சொல்லி இருந்தனர். சீன எல்லைக்கருகில் பாதுகாப்பை பலப்படுத்தப் போவதாகவும் அறிவித்திருந்தனர். இதற்கெல்லாம் அரசு பொதுத் துறை நிறுவனங்கள் மூலமோ ராணுவ பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி நிறுவனம் மூலமோ ஆயுதங்களை தயாரிப்பது சாத்தியமில்லை என்றும் பா.ஜ.க அரசு முடிவு செய்து விட்டது. ஆனாலும் சீனாவை பகை நாடாக காட்டி உள்நாட்டு பாதுகாப்பை அதிகரிப்பதாகவும், அதற்கு பாதுகாப்பு துறையில் தனியார்மயம் வந்தால் மட்டும்தான் சாத்தியம் என்றும் அவர்கள் தனியார்மயத்தை நியாயப்படுத்துகிறார்கள்.

சீன எல்லையை சாலைகள், பாதுகாப்பு எந்திரங்கள் மூலமாக பாதுகாக்க முற்படும்போதே உள்நாட்டு கனிம வளத்தை கடல் வழியாக முதலாளிகள் கடத்திப் போக சுரங்கம் அமைந்துள்ள பகுதியிலிருந்து துறைமுகம் வரை தடையேயில்லாத பறக்கும் சாலைகளை அமைக்கின்றனர். இதனை எதிர்த்துக் கேட்பவர்களை தீவிரவாதிகள் என முத்திரை குத்தி கொல்வதற்கான ஆயுதங்களை கொள்வனவு செய்ய தேசிய வருமானத்தில் பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீடு கணிசமாக அதிகரிக்கப்படுகிறது.

சீன எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்கருகில் 73 தந்திரோபாய சாலைகள், 14 ரயில்வே லைன்கள், ஹெலிபேடுகள், முன்னேறிய தொழில்நுட்பத்துடன் கூடிய இறங்குமிடங்கள் என பாதுகாப்பை அதிகரிக்கப் போகிறார்கள். அந்தமான் தீவிலும் கூட பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தப் போகிறார்கள். இது போக விண்வெளி, இணையம் மற்றும் சிறப்பு நடவடிக்கைகளுக்கெல்லாம் இணைந்து செயல்படும் மையமான அமைப்பு ஒன்றை நிறுவி தங்களது பாசிச கண்காணிப்பு ஆட்சியை நடத்த திட்டமிட்டுள்ளார்கள். அதற்கு தனியாரிடமிருந்துதான் ஆயுதங்களை கொள்வனவு செய்ய வேண்டும் என்ற அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு விட்டார்கள். மீசையில் மண் ஒட்டவில்லை என்பதைக் காட்டுவதற்காக அந்நிய செலவாணி கையிருப்பை அதிகரித்தல், உறுதியான ராணுவக் கட்டமைப்பு என்று பீலா விடுகிறார்கள்.

மத்திய அரசின் டி.ஆர்.டி.ஓ என்ற பாதுகாப்பு துறை ஆராய்ச்சி நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 50 ஆய்வகங்களும், 5 பாதுகாப்பு துறைக்கான பொதுத்துறை நிறுவனங்களும், நான்கு கப்பல் கட்டும் தளங்களும், 39 தளவாட தயாரிப்பு நிறுவனங்களும் உள்ளன. இவற்றின் ஆய்வுகளை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது என்றாலும் இனி இத்துறை ஊற்றி மூடப்படும். அல்லது அன்னிய முதலீட்டு தயாரிப்புகளுக்கு சான்றிதழ் தரும் நிறுவனமாக மாற்றப்படும்.

பன்னாட்டு கம்பெனிகள் வழங்கும் தளவாடங்கள் தரமானவை என்ற மூட நம்பிக்கை பரவலாக பொதுபுத்தியில் உறைந்திருப்பதால் மக்களும் பாதுகாப்பு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை முழுமையாக திறந்து விடுவதற்கு சம்மதம் தெரிவிக்கின்ற நிலையில்தான் இருக்கின்றனர். ஆனால் மும்பை தீவிரவாதிகள் தாக்குதலின் போது மகாராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்பு காவல்துறைத் தலைவராக இருந்த ஹேமந்த் கார்கரே அணிந்திருந்த புல்லட் ஃபுரூப் ஜாக்கெட் அவரது உயிரை காப்பாற்றவில்லை. அது தனியார் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனியாரின் தரம் என்பது அவர்களுக்கு கிடைக்க இருக்கும் இலாபத்தை பொறுத்தது.

ஃபோர்பர்ஸ் நிறுவன பீரங்கியை இந்தியாவில் வந்து உற்பத்தி செய்தால் இடைத் தரகர்கள் இல்லாத நிலைமை ஏற்படும் என்கிறார்கள். லஞ்ச ஊழல் நடக்காது என்கிறது பா.ஜ.க. அதாவது ராஜீவ் மாட்டியது போல இனி யாரும் மாட்ட தேவையிருக்காது என்கிறார்கள். அதாவது சட்டவிரோதமாக இதுவரை கமிசன் பரிமாறப்பட்டதற்கு பதிலாக பங்குச்சந்தை மூலமாக சட்டப்படி நேரடியாக நாட்டைச் சூறையாடலாம் என முதலாளிகளுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கிறது பாஜக.

தேசபக்திக்காக அதிகம் கூச்சலிடுபவர்கள் தான் வேகமாக தேசவிரோதிகள் என்று அறியப்படுகிறார்கள்.

–    கௌதமன்.