சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 100 சதவீத கட்டண உயர்வை ஏற்க முடியாது என “மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்க”த்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் உயர்த்தபட்ட கட்டணத்தை செலுத்த மறுத்தனர். இதனால் பள்ளி நிர்வாகம் 600-க்கும் மேற்பட்ட மாணவர்களை கடந்த ஆண்டு இறுதி தேர்வு எழுதவிடாமல் தடுத்தது. பெற்றோர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
மாவட்டத்தில் உள்ள காவல் துறை, கல்வித் துறை, தாசில்தார் என அனைவரும் பேசிய பிறகும், துணை ஆட்சியர் கதைத்த பிறகும் பள்ளி தாளாளர் லட்சுமி காந்தன், “சிங்காரவேல் எனக்கு கூட அதிக பீஸ் வாங்க சொல்லி ஆர்டர் குடுத்துட்டார்”, என திட்டவட்டமாக மறுத்து விட்டார். அன்றைக்கு நடந்த தேர்வை ரத்து செய்து மீண்டும் 17-4-14 அன்று இறுதி நாள் அனைவருக்கும் மீண்டும் நடத்த வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி துறை அதிகாரி உத்திரவிட்டார். 24 மணி நேரத்தில் மெட்ரிக் பள்ளி இயக்குநருக்கு இதற்கான காரணத்தை தெரிவித்தாக வேண்டும் எனவும் கூறினார்.
ஆனால் குறிப்பிட்ட இறுதி நாளில் தேர்வை மீண்டும் நடத்தாமல் தாளாளர் பள்ளிக்கு விடுமுறை அறிவித்து கேட்டை இழுத்து பூட்டி விட்டார். மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் ஏமாற்றம் அடைந்து திரும்பினர். பெற்றோர்களும் செய்வதறியாது திகைத்தனர். கல்வித் துறை, “நாங்கள் விசாரிக்கிறோம். இயக்குநருக்கு தெரிவிக்கிறோம். எங்களிடம் எந்த அதிகாரமும் இல்லை” என கைவிரித்தனர்.
அதே சமயத்தில் உயர்த்தபட்ட கட்ட்ணம் செலுத்த வில்லை என்பதற்காக எந்த மாணவர்களையும் தேர்வு எழுத அனுமதி மறுக்க கூடாது, துன்புறுத்த கூடாது என நாங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டோம். நீதிபதிகள், அரசு வழக்கறிஞரை பார்த்து “கல்வி துறை செயலாளருக்கு அறிவுறுத்துங்கள் .காமராஜ் பள்ளி தொடர்பாக சிங்காரவேல் உத்திரவு நகலை வைத்து மீண்டும் வழக்கு தாக்கல் செய்யுங்கள்” என சொல்லி வழக்கு முடிக்கப்பட்டது.
நீதியரசர் சிங்காரவேல் அவர்கள் உயர்த்தபட்ட கட்டணத்தை அரசு இணையதளத்தில் ஏற்றவில்லை. இது குறித்து காமராஜ் பள்ளி நிர்வாகமும் அறிவிப்பு பலகையில் ஒட்டவில்லை. உத்தரவு காப்பி கொடுங்கள் என சிங்காரவேல் கமிட்டியிடம் நாங்கள் கேட்ட போது “உங்களுக்கு தரமுடியாது” என மறுத்து விட்டனர். தகவல் அறியும் சட்டத்தில் கொடுங்கள் என கேட்டோம், அதுவும் வரவில்லை. இந்நிலையில் நமது வழக்கறிஞர்கள் நீண்ட விளக்கம் எழுதி உத்திரவு காப்பி கொடுக்க வேண்டும்.இல்லை என்றால் உங்கள் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு போடுவோம் என வாதிட்ட பிறகு உயர்த்தப் பட்ட கட்டண உத்திரவு கிடைத்தது.
விடுமுறை கால நீதிமன்றத்தில், “காமராஜ்பள்ளி சட்ட விரோத நடவடிக்கையை எதிர்த்து நமது போராட்ட விவரங்கள்; அந்த பள்ளி 100 சாவீதம் எப்படி கட்டணத்தை உயர்த்த முடியும்? பெற்றோர்களை கருத்து கேட்க வேண்டும். பள்ளிகளை நேரில் சென்று, எந்த ஆய்வும் கமிட்டி செய்ய வில்லை. இதில் முறை கேடு நடந்திருக்கிறது. உயர்த்தப்பட்ட கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். அது வரை புதிய கட்டண உத்திரவுக்கு தடை விதிக்க வேண்டும்” என வாதிட்டோம்.
8-5-2014 அன்று நீதியரசர்கள் சுதாகரன் -சசிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு தடை உத்திரவு வழங்கியது. தமிழகத்தில் எந்த பத்திரிக்கையும் இச்செய்தியை வெளியிடவில்லை.
சிதம்பரத்தில் சுவரொட்டியாக அடித்து ஒட்டினோம். கல்வி துறை அதிகாரிகள் வாயடைத்து போனார்கள். காவல் துறை அதிகாரிகள் இனி பிரச்சினை வராது என மகிழ்ச்சியடைந்தார்கள். பெற்றோர்களால் நம்பமுடியவில்லை. ஆனால் காமராஜ் பள்ளி நிர்வாகம், “தடை உத்திரவு எனக்கு வரவில்லை.ஆகையால் டி.சி. வாங்கினால் கூட உயர்த்தப்பட்ட கட்டணத்தை கட்டினால் தான் தருவேன்” என மறுத்தார். இந்த ஆண்டு மாணவர்களுக்கு புத்தகம்,நோட்டு தரவேண்டுமானால் புதிய கட்டணத்தைதான் கட்ட வேண்டும் என பெற்றோர்களை திருப்பி அனுப்பினார்.
பெற்றோர் சங்கம் கூடியது. டி.சி. தரவில்லை என்றால் துணை ஆட்சியரை முற்றுகையிடுவோம். தடை உத்திரவை அமல் படுத்த அனைத்து அதிகாரிகளுக்கும் மனு அனுப்புவோம் என முடிவு செய்தனர். நிர்வாகிகள், “காமராஜ்பள்ளி தடை உத்திரவை ஏற்க மறுக்கிறது நாங்கள் அனைவரும் பழைய கல்வி கட்ட்ணத்தை சுமார் 70 பேர் டி.டியாக எடுத்து வைத்திருக்கிறோம். பள்ளி நிர்வாகம் வாங்க மறுக்கறது”, என மாவட்ட துணை ஆட்சியரிடம் முறையிட்டார்கள். “எனக்கு அதிகாரம் இல்லை. போனால் போகட்டும் என உங்களுக்கு உதவி செய்தேன், என்னை மிகவும் தொந்திரவு செய்கிறீர்கள் என எரிச்சல் அடைந்தார் கல்வித் துறை அதிகாரி. டி.எஸ்பியிடம் சென்று உயர் நீதிமன்ற உத்திரவு நீங்கள் அமல்படுத்தி கொடுங்கள் என முறையிட்டோம். அவர் கல்வி துறை புகார் கொடுக்காமல் நான் என்ன செய்ய் முடியும்?மாவட்ட ஆட்சியர்தான் ஏதாவது செய்ய் வேண்டும் என கழட்டி கொண்டார்.
பெற்றோர் சங்கம் மீண்டும் கூடியது. இரண்டு நாள் கெடு கொடுப்போம். பள்ளி நிர்வாகம் பணிய வில்லை என்றால் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து உண்ணாநிலைப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்து சுவரொட்டிகள் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டது. காவல்துறை எங்கு போராட்டம் என கேட்டனர். போரட்டம் உண்டு, இடம் முடிவு செய்ய் வில்லை என பதிலளித்தோம்.
2-6-14 அன்று பள்ளி நிர்வாகம் நமது பெற்றோர் சங்க நிர்வாகிகளை அழைத்து சங்க உறுப்பினர்களிடம் மட்டும் டி.டியை வாங்கி கொள்கிறோம் என முன்வந்த பிரித்தாளும் சதி நடவடிக்கை சூழ்ச்சியை நிர்வாகிகள் ஏற்க வில்லை. உத்திரவு அனைத்து பெற்றோர்களுக்கும்தான், யார் கொடுத்தாலும் வாங்கி கொள்ள வேண்டும், இல்லை என்றால் போராட்டம் நடத்துவொம் என எச்சரித்தோம். இறுதியில் நமது சங்க உறுப்பினர்கள் கொடுத்த அனைத்து டி.டியும் ஏற்கப்பட்டு புத்தகம் மற்றும் ரசீது வழங்கப்பட்டது. காரணம் இந்த பிரச்சினையை, நாளை போராட்டத்தால் தமிழக செய்தியாக மாற்றி விடுவார்கள். ஆனால் எத்த்னை முறை அத்து மீறினாலும் அதிகாரிகளை அவமான படுத்தினாலும் தனியார் பள்ளி முதலாளிகள் மீது சிறு நடவடிக்க்கை எடுக்கக்கூட அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
கட்டணக் கொள்ளைக்காக வருடா வருடம் தனியார் பள்ளிகளால் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் பிரச்சினை அதிகரிக்குமே தவிர குறையப் போவதில்லை. நிரந்தர தீர்வு காண வேண்டுமானால் அரசு பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்த்து அதன் தரம் உயர்த் போராடுவதுதான் சரியானது என பெற்றோர்களுக்கு சங்கத்தின் சார்பில் அறிவுறுத்தபட்டது.
சில பெற்றோர்கள் சரியென ஏற்றக் கொண்டனர். சில பெற்றோர்கள் அதன் குறைபாடுகளை பட்டியலிட்டனர். சில பெற்றோர்கள் மவுனமாக கலைந்து சென்றனர். சில பெற்றொர்கள் இந்த சங்கத்திற்கு வந்திருக்க கூடாது என முனகலுடன் சென்றனர். யாரும் தனியார் பள்ளிகளை சரியென வாதிடவில்லை. சகித்துக் கொள்ளும் நிலைதான் உள்ளது.
________________________________________________________________
தகவல்: மனித உரிமை பாதுகாப்பு மையம், சிதம்பரம்