privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்நான்தான் பாலா – நமத்துப் போன காயத்ரி மந்திரம்

நான்தான் பாலா – நமத்துப் போன காயத்ரி மந்திரம்

-

ந்தானம் வகைப்பட்ட ‘சவுண்டு’ காமடி படையெடுப்பில் காணாமல் போன விவேக், நாயகனாய் விசுவரூபமெடுத்திருக்கும் திரைப்படம் “நான்தான் பாலா”.

நான்தான் பாலா - வினவு 2டைட்டில் காட்சியில், “பத்மஸ்ரீ விவேக்” வந்ததுமே “சின்னக் கலைவாணர்” பட்டம் விலக்கப்பட்டது குறித்த கேள்வி எழுந்தது. அநேகமாக இந்த பட்ட மாற்றம் முன்னாடியே கூட நடந்திருக்கலாம், நமக்கு தெரியவில்லை.

சின்னக் கலைவாணர் பட்டத்தை பெருமையாக பார்த்த நாட்களில் கூட விவேக்கின் நகைச்சுவை பாதுகாப்பாகவே இருக்கும். அல்லது பாதுகாப்பை நோக்கிய பரிமாணத்தில் இருந்தது. சாதி, மத இன்னபிற சமூக பிரச்சினைகளில், நகைச்சுவைக்கு முடிவில்லா கற்பனை வாய்ப்பிருந்தாலும், குறிப்பிட்ட பிரிவினரை எந்த எல்லை வரை கிண்டல் செய்யலாம் என்பது அந்த கற்பனையை, புத்தாக்கத்தை கட்டுப்படுத்துகிறது. அந்த கட்டுப்பாட்டை மீற வேண்டும், ஏற்றத்தாழ்வுகளிலிருந்து மக்களை மீட்க வேண்டும், அறுவை சிகிச்சைக்கு பயம் எதற்கு என்ற தைரியமெல்லாம் நகைச்சுவையின் சமூக பொறுப்போடு தொடர்புடையது.

அது இல்லாமல் வெறுமனே கிச்சு கிச்சு மூட்டும் ஏட்டிக்கு போட்டியான முரண்பாடு போல பார்த்தால் அதில் சப்தம் இருக்கலாமே ஒழிய சரக்கு இருக்காது. சந்தானம் வரவில்லை என்றாலும், சொல்வதற்கு புதிதாக ஒன்றுமில்லை என்ற நிலையை விவேக் என்றோ அடைந்து விட்டார்.

“சாமி” போன்ற படங்களில் முற்போக்கு பார்ப்பனராக நடித்த விவேக் இங்கே அதையே சிவாஜி வகை சீரியஸ் பாத்திரமாக, நாயகனாக நடித்திருக்கிறார். ஏழைகளின் அவலத்தை விட பண்ணையார்களின் கருணையை காட்டினால் அடிமைத்தனத்தில் ஊறியிருக்கும் மக்களால் வரவேற்கப்படும் என்பதே “பா’ வரிசைப் படங்களின் வரலாற்றுக் காலம் உருவாக்கியிருக்கும் சித்திரம்.

எனினும் இன்றைக்கு பண்ணையார்களின் இடம் பொருளாதார அளவில் குலையவில்லை என்றாலும், கருத்தளவில் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அந்த யதார்த்தத்தை படத்தின் இயக்குநரோ இல்லை நாயகனோ அறிந்து வைத்திருக்கவில்லை.

சமூக மாற்றம் குறித்த பகத்சிங்கின் புரட்சிப் பார்வைக்கும், காந்தியின் சீர்திருத்த பார்வைக்கும் உள்ள வேறுபாடுகளை மேலோட்டமாக புரிந்து வைத்திருக்கும் அறிஞர் பெருமக்கள் கூட இதில் எந்த பார்வைக்கு வாய்ப்பும், வளர்ச்சியும், எதிர்காலமும் உண்டு என்று ஆய்ந்து தெளிவதில்லை. ஆகவே மேன்மக்களால் பயிற்றுவிக்கப்படும் சமூக மாற்றம் ஒரு தேங்கிய பிற்போக்காகத் தெரியாமல், ஜோடனையான வளர்ச்சியாக மட்டும் தெரிவது ஆச்சரியமல்ல.

கும்பகோணம் பெருமாள் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றுகிறார் விவேக். தட்டில் காணிக்கையை போடுமாறு அடம்பிடிக்கும் தஞ்சை கோவில்களின் அர்ச்சகர் போலன்றி தட்டில் போடக்கூடாது, உண்டியலில் போடுங்கள் என்று விளக்கம் சொல்பவர். இப்படி ஆரம்பத்திலேயே விவேக் அநியாயத்திற்கு நல்லவரான ஒரு பார்ப்பன பூசாரி என்பது பதிய வைக்கப்படுகிறது. இதனாலேயே இந்த நல்லவர் அடுத்தடுத்த காட்சிகளில் என்ன பேசுவார், செய்வார் என்பது ஒரு சில குறியீடுகளைப் பார்த்த உடனேயே புரிந்து விடுகிறது. மேலே குறிப்பிட்ட பண்ணையார் வகை கருணையை நோக்கி கவனம் குவிக்கும் படமிது என்பதும் உரக்க அறிவிக்கப்படுகிறது.

நான்தான் பாலா - வினவு 3இதை, ஏதோ படத்தை விறுவிறுப்பு இல்லாமல் எடுத்ததன் விளைவு என்று குமுதம் – விகடன் விமரிசனங்களை படித்து சினிமா ஆய்வை செய்து வரும் மொக்கைகள் வேறுபாடின்றி எழுதலாம். அப்படி இல்லை. ஒரு நல்லவனின் போராட்டத்தில், நல்லதை அடைவதற்கு தன்னிடமுள்ள கெட்டவைகளை அவன் எப்படி சிரமப்பட்டு இழந்தான் என்பதை ஆழமாக உணரும் பட்சத்தில் அங்கே கிளிஷே காட்சிகளுக்கும், கிளி ஜோசியத்திற்கும் இடமில்லை. ஆனால் சமூக இயக்கத்தை இப்படி ஃபார்முலாவாக பார்க்கும் நமது இயக்குநர்களில் பெரும்பாலானோர் சுட்டுப் போட்டாலும் அதன் உயிர்ப்பை உணர்ந்தவர்கள் அல்லர்.

அதனால்தான் இந்த படம் செயற்கையாக நகர்கிறது. தலித் வக்கீல் ஒருவரது வீட்டிற்கு விவேக் செல்கிறார். வெளியே அம்பேத்கர் படம். வழக்கமாக சினிமா போலிஸ் ஸ்டேசன்களில் இருக்கும் அம்பேத்கர் படம் இங்கே இருப்பதே, குறியீடாய் அந்த வக்கீல் என்ன சாதி என்பதை சொல்லி விடுகிறது. அதனால் அடுத்து மனதை உருக்கும் காட்சி ஒன்று வரப்போகிறது என்றும் தெரிந்து விடுகிறது.

வீட்டிற்கு வெளியே நின்று பேசும் விவேக், வக்கீல் அம்மாவிடம் குடிநீர் வாங்கி குடிக்கிறார். ஐயர் பிள்ளை நம்ம வீட்டில் குடிக்கும் ஆச்சரியம் குறித்து அம்மாவும், மகனும் குற்ற உணர்வில் இருக்க, “இதிலென்ன வேறுபாடு, எல்லாரும் பகவானது குழந்தைகள் (அரிஜன்)” என்று நெகிழாமல் சாதாரண லா பாயிண்டாக சொல்கிறார் விவேக். அவ்வளவு ஊறிப்போன விசயமாம் அது.

சேரிப் பிரிவினை, தீண்டாமை கொடுமைகள் காரணமாக வாழும் தலித் மக்கள், ஒரு பார்ப்பனரின் பெருந்தன்மை பார்த்து பரவசப்படுகிறார்கள். குற்ற உணர்வு அடைய வேண்டிய பார்ப்பனர்களோ பெருமித உணர்வு அடைகிறார்கள். பாதிப்பு அடைந்த பிரிவினர் கூட பாதிப்பு உருவாக்கிய பிரிவினரின் ‘கருணையை’ சிலேகிக்கும் இந்த காட்சிகள் உண்மையில் பெரும் வன்முறையை நியாயப்படுத்துகிறது.

எளிமையாக சொல்வதென்றால் சேரி, ஊர், அக்ரகாரம் பிரிவினை மூலம் தீண்டாமை தொடங்கி தெய்வம் வரை பிரிவினைகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் உருவாக்கி காத்து வரும் பார்ப்பனியம் தனது ஆன்மாவை மறைத்து இவையெல்லாம் பார்ப்பனியம் அல்ல, நல்ல பார்ப்பனியம் வேறு என்று சொன்னால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இந்த படமும். இதையே நல்ல இந்துமதம் என்று ஆர்.எஸ்.எஸ் சிலாகிக்கிறது. இந்த அணுகுமுறையில் இருப்பது அந்த கொடுங்கரத்தை கொடுத்துச் சிவந்த கரம் என்று மாற்றும் தந்திரமே அன்றி வேறல்ல.

நான்தான் பாலா - வினவு 5திருட்டு பட்டம் சுமத்தப்பட்டு பின்னர் தற்கொலை செய்து கொண்ட விவேக்கின் பெற்றோர், அதனால் அவர்களை வெளியேறச் சொல்லும் அக்ரஹாரம் என்று படம் முழுவதுமே இந்த முற்போக்கு பார்ப்பனர், தான் யார் என்பதை உரக்கச் சொல்கிறார். சோவின் எங்கே பிராமணன் இந்த இடத்தில் நினைவு கூர்வதற்கு பொருத்தமானது. நாம் விமரிசிக்கும் எவையும் உண்மையான பிரமாணர்களின் அழகல்ல, அவர்கள் வேறு என்று சோவோ இல்லை இந்த படமோ திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறது. அதைக் கொஞ்சம் செண்டிமென்டாகவும், மாடி வீட்டு மனிதர்களின் வள்ளல்தனமாக காட்டும் போது ஒடுக்கப்படும் பிரிவினர்கள் கூட ஒடுக்கப்படுதலின் கருணை முகம் கண்டு ஏமாறலாம்.

காஞ்சிபுரத்தில் இருக்கும் காட்டூரான் எனும் தாதாவின் அடியாளான பூச்சி, கும்பகோணம் சென்று ஒரு கொலை செய்து விட்டு தற்செயலாய் விவேக்கை சந்திக்கிறான். கோர்ட்டில் அபராதம் கட்டி தந்தையை மீட்பதற்கு வழியில்லாமல் பெருமாளிடம் புலம்பும் விவேக் நிலையை பார்த்து பூச்சி பண உதவி செய்கிறான். பிறகு பெற்றோர் இறந்ததும், அந்த ரவுடியின் பணத்தை ஒப்படைக்க கும்பகோணத்தில் இருந்து காஞ்சிபுரம் பயணிக்கிறார் விவேக்.

வரதராஜ பெருமாள் கோபுரத்தின் அருகே மாடி வீட்டு அறையில் இருக்கும் பூச்சி, அங்கேயே விவேக்கை தங்கச் சொல்லி நட்பாகிறான். பிறகு போளி விற்கும் பெண்ணுடன் விவேக் காதல், பூச்சி செய்த கொலை குறித்து விசாரிக்கும் போலீஸ் விவேக்கிடம் பேரம் பேசி, பூச்சியை அப்ரூவர் ஆகச் சொல்கிறது. இல்லையென்றால் என்கவுண்டர் என்று சொல்லும் டிஎஸ்பியிடம் வாக்கு கொடுத்து அப்ரூவராக்கும் வேலையை விவேக் செய்கிறார்.

இது தெரிந்து  காட்டூரான், பூச்சியை கொல்ல, விவேக் காட்டூரானை கொன்று ஏழு வருடம் தண்டனை பெற்று பின்னர் காதலியை மணப்பதாக சொல்கிறார். படம் முடிகிறது.

இடையிடையே துரியோதனன், கர்ணன், தர்மம், நட்பு என்று ஏதோதோ பேசி ஏராளமாய் வதைத்து துன்புறுத்துகிறார்கள். ஒரு ஐயங்கார் பூசாரி, ஒரு கொலைகார ரவுடியை திருத்தும் கதை என்று ஒன்லைனை தீர்மானித்து விட்டு கூட இயக்குநர் இதை விரித்திருக்கலாம். நல்லவன் கெட்டவன் நட்பு, போராட்டம் என ஃபார்முலாக்களை வைத்திருக்கும் கோடம்பாக்கத்தின் ஒன்பது கதைகளில் ஒன்றனவும் இதைச் சொல்லலாம்.

கதையின் ஒருவரி செய்தி இதுவென்றாலும் இதை விரிக்கும் போது இயக்குநரின் சமூக கண்ணோட்டமே அதை திரைக்கதையாக கட்டுகிறது. பார்ப்பனியம் மற்றும் ரவுடியிசம், மேல் தோற்றத்தில் வேண்டுமானாலும் சைவம்-அசைவம், சாது-வில்லன், மென்மை-வன்மை என வேறுபடலாம். இதை தனிநபர்களது பிரச்சினை என பார்க்காமல் சமூக இயக்கத்தில் வைத்து பார்த்தால் இந்த பாத்திரங்களின் மேற்கண்ட சித்தரிப்பு எதிர்மறையாகவோ இல்லை ஒற்றுமையாகவோ கூட மாறலாம்.

தமிழகத்தில் சுற்றுலா மற்றும் ஆன்மீகத் தலமாக இருக்கும் ஊர்களில் கோவிலை நம்பி வாழும் பார்ப்பனர்கள், இதர சாதி வணிகர்கள் அனைவரும் ஒரு ரியல் எஸ்டேட் தரகனது அனைத்து மோசடிப் பண்புகளையும் ஒருங்கே கொண்டிருப்பார்கள். அதிலும் கோவிலின் மையமான பூஜை புனஸ்காரத்தை கையில் வைத்திருக்கும் பூசாரிகள், கோவிலுக்கு வரும் முதலாளிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் தொடர்பில் இருப்பதால் அவர்களது பார்வை, அணுகுமுறை அனைத்தும் ஒரு அதிகாரத் திமிர் கொண்ட போலிஸ்காரனது போலவும் இருக்கும்.

நான்தான் பாலா - வினவு 1கோவில்கள் நகரமான கும்பகோணத்தில் இருக்கும் பார்ப்பனர்கள் மேற்கண்ட இலக்கணத்தைவிட இன்னும் தீவிரமானவர்கள். நஞ்சை வளம், கலை இலக்கிய பண்பாட்டு வளம் இன்ன பிற வாழ்க்கை வசதிகளால்  மற்ற பார்ப்பனர்களை விட எங்கேயும் தமது இடம் என்று முடிவு செய்யும் ஒன்றை விடாமல் பறித்துக் கொள்வார்கள். மதம், அரசு மற்றும் சுற்றுலா வருமானம் அனைத்தும் உருவாக்கிய அதிகாரத்தில் திளைத்தவர்களது பண்பை ஓரிரு வார்த்தைகளில் சுருக்கிவிட முடியாது.

அப்பேற்பட்ட கும்பகோணத்தில் ஒரு ஒதுக்கப்பட்ட மடமாக இருந்து காஞ்சிபுரத்திற்கு மாறியதுதான் காஞ்சி சங்கரமடம். இந்த மடம் ஆதிசங்கரரால் உருவாக்கப்பட்ட ஒன்றல்ல, திருட்டு மடம் என்று மற்ற சங்கரமடங்கள் கூறிவருகின்றன. என்றாலும் இந்திய ஆளும் வர்க்கத்தின் ஆஸ்தான குரு போன்ற இடத்தை இந்த மடம் சில பல ஆண்டுகளுக்கு முன்னர் பிடித்தது. இன்றைக்கும் செத்துப்போன சீனியர் சங்கராச்சாரியின் படத்தையும், வார்த்தைகளையும் பிதுக்கித்தான் பக்தி இதழ்கள் பிழைக்கின்றன. அதே நேரம் அவரது பிரச்சினைக்குரிய சூத்திர – தமிழ் – பெண்கள் சம்பந்தமான அருள்வாக்குகளை அவர்கள் வெளியிடுவதில்லை.

இப்பேற்பட்ட எவர்கிரீன் சீனியர் கண்டுபிடித்த ஜெயேந்திரன் எனும் ச.சாரிதான் சங்கரராமன் எனும் கேள்வி கேட்ட பார்ப்பனரை இல்லாதொழிக்கிறார். அந்த வழக்கையும் இல்லாத ஒன்றாக்கி விட்டார். பூச்சி எனும் ரவுடியை திருத்தும் பாலா எனும் ஐயங்காரின் கதையை இங்கே பொருத்தி பாருங்கள். பூச்சி குடியிருக்கும் மாடிக்கு அருகில் இருக்கும் வரதராஜபெருமாள் கோவிலின் வளாகத்தில்தான் சங்கரராமன் கொடூரமாக கொல்லப்பட்டார். அப்பேற்பட்ட பெருமாளை சாட்சியாக வைத்தும், ஆசீர்வாதத்தோடும்தான் ஒரு ரவுடி திருத்தப்படுகிறார் என்றால் என்ன சொல்ல?

இங்கே லோக குரு என்று போற்றப்பட்ட ஒரு ச.சாரி கூலிக்கு கொலை செய்யும் கும்பலை அமர்த்தி, மடத்திற்கு வரவழைத்து ஆசிர்வாதம் மற்றும் காணிக்கை கொடுத்து கோவிலில் வைத்து கொன்றிருக்கிறார் என்றால் இதை எப்படி புரிந்து கொள்வது?

தயிர்சாதம் மற்றும் நெய் பொங்கல் சாப்பிட்டு சாத்வீக குணம் கொண்டிருக்கும் ஒரு பார்ப்பனர் அசுர குணத்திற்குரிய கொலையை செய்வது சாத்தியமா என்று கேட்கலாம். இந்த கேள்விக்கு விடை வேண்டுவோர் பார்ப்பனியம் என்றால் என்ன என்பதைப் புரிந்திருப்பது நல்லது.

இசுலாமியரை விமரிசிக்க வேண்டுமென்றால் அவர்களை பொதுவாக விமரிசக்காமல், டிஎன்டிஜே போன்று  பேர் குறிப்பிட்டு விமரிசிக்கும் போது பார்ப்பனியத்தை மட்டும் நபர்கள் வாரியாக பிரித்து விமரிசிக்காமல் பொதுவாக விமரிசிப்பது சரியா என்று கேட்டிருந்தார் ஒரு நண்பர். மதங்களை விமரிசக்கும் வினவு பாரபட்சமாக இருக்கிறது என்பதாக இந்த விமரிசனத்தில் அவர் சொல்கிறார்.

முதலில் இந்த நண்பர் கூறியிருப்பது போன்றுதான் வினவு எழுதுகிறது என்பதை ஒத்துக் கொள்கிறோம். ஏன்?

பார்ப்பனியம், இஸ்லாம் இரண்டையும் பிரிப்பது எது என்பதிலிருந்து அதை பார்க்கலாம். ஓரிறைக் கொள்கை, உருவ வழிபாடு கிடையாது போன்ற இறைவன் குறித்த மதக் கொள்கை தவிர்த்து வாழ்க்கை குறித்த சட்டங்களில் இசுலாத்திற்கு என்று ஒரே மாதிரியான கொள்கை கிடையாது. புர்கா போடுவது, போடக்கூடாது, இசை கேட்கலாம், கூடாது, திருப்பதி லட்டு சாப்பிடலாம், கூடாது, இனம்-சாதி-பிரிவினைக்கேற்ப மணமுடிக்கலாம், கூடாது என்று நாட்டுக்கு நாடு இது வேறுபடுகிறது. வகாபியிஸ்டுகளும், டிஎன்டிஜேக்களும் இதற்காக கரடியாக கத்தினாலும் அப்படி ஒரு வாழ்வியல் ஒற்றுமையை யாரும் கொண்டுவர முடியாது.

இசுலாமிய நாடான வங்கதேசத்தின் பெண் சபாநாயகர், மோடியுடன் கைகுலுக்குகிறார், பாக் அணி கிரிக்கெட் ஆடும் போது பாக்கிஸ்தான் மாநகர முசுலீம் பெண்கள் ஜீன்ஸ் போட்டுக் கொண்டு கைதட்டுகிறார்கள், துனிசியா நாட்டை சார்ந்த வாலிபால் பெண்கள் அணி மேற்கத்திய அணிகளின் உடை பாணிகளோடு ஆடுகிறார்கள் என்று இதற்கு ஏராளம் ஆதாரங்களைச் சொல்லலாம்.

ஆனால் பார்ப்பனியத்தைப் பொறுத்த வரை இறை குறித்த கொள்கைகளில் – ஓரிறை, பல கடவுள்கள், உருவ வழிபாடு, உருவ வழிபாட்டை மறுக்கும் இறை நம்பிக்கை, வேதத்தை ஏற்று கடவுளை மறுக்கும் நாஸ்திகம் – என்று பல வேறுபாடுகள் இருந்தாலும், ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், வாழ்வியல் குறித்த கொள்கைகளில் பிரிவினையோ, அனுமதியோ கிடையாது. அதாவது ஏற்றத் தாழ்வான சாதிகளாய் பிரித்து வைத்து ஒரு சமூகத்தை சுரண்டும் அடிப்படை அம்சமே பார்ப்பனியத்தின் உயிர்நாடி. இதை ஏற்றுக் கொள்பவர்கள் நாத்திகர்களாக இருந்தாலும் அவர்களுக்கு பிரச்சினை இல்லை.

மறுத்தால் பார்ப்பனியத்தை ஆளும் வர்க்க சித்தாந்தமாக கொண்டிருக்கும் அரசுகள், சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்கும். அதனால்தான் பார்ப்பன இந்துமதத்தில், மதம் சம்பந்தமான அம்சங்கள் இல்லை என்றும், கிரிமினல் சட்ட விதிமுறைகள் மட்டுமே இருப்பதாக அம்பேத்கர் விளக்கினார்.

இறை வழிபாடு, உடை, உணவு குறித்த அம்சங்களில் ‘இந்துக்கள்’ வேறுபட்டாலும், வருணாசிரம தர்மம், சாதி எனும் சமூகக் கட்டமைப்பை ஏற்பதில் ஒன்றுபடுகின்றனர். இறை வழிபாடு தவிர்த்த மற்ற அம்சங்களில் இசுலாமியர்கள் வேறுபடுகின்றனர். ஆகவே இரண்டிலும் எது பிரதானமானது என்பதை வைத்தே ஒன்றில் தனிநபர்கள், இயக்கமாகவும், மற்றதில் ஒட்டு மொத்த அமைப்பையே விமரிசித்தும் எழுத வேண்டியிருக்கிறது.

இந்த வேறுபாட்டிற்கும் படத்திற்கும் என்ன தொடர்பு?

சாதி ஏற்றத் தாழ்வுதான் ஒரு மதத்தின் அடிப்படை எனும் போது அந்த அடிப்படையை சித்தாந்தரீதியாக ஷத்ரியர்கள் உள்ளிட்ட ஆளும் வர்க்கத்திற்காக உருவாக்கியும், காப்பாற்றியும் வருவதில் அறிவுத் துறை வேலை செய்து வருகின்ற மேல் பிரிவினரான பார்ப்பனர்களின் நல்ல பண்பு என்றால் என்ன என்பதே நமது கேள்வி!

சாதி பிரிவினையை வர்க்கமாக பார்த்தால் ஏழைகள், ஏழைகளாக இருந்தே ஆகவேண்டும் என்ற விதியை மதம், அரசு இதர தடிக்கம்புகளால் அமல்படுத்துகிற ஒரு பார்ப்பனரிடம் மனித நேயம் எப்படி என்னவாக இருக்கும் என்பதே நமது கேள்வி! பணக்காரர்களின் நலனுக்காக இயங்குவதையே தனது இருத்தலின் நியாயம் என்று கருதுகிற பார்ப்பன இந்துமதத்தில் ஏழைகளின் நியாயத்தை ஒரு பார்ப்பனர் எப்படி ஏற்பார்?

ஒருக்கால் ஏற்கிறார் என்றால் அது விவேக் போல இருக்குமா? நிச்சயம் இருக்காது. இப்படத்தில் விவேக் சித்தரிக்கும் பாத்திரம் இதுதான் உண்மையான பார்ப்பனியம் என்பதாகவும், கேடுகளுக்கு காரணம் அதை புரிந்து கொள்ளாத தனிநபர்களின் பிரச்சினை என்றும் திரிப்பதை ஏற்கனவே பார்த்து விட்டோம்.

பார்ப்பனிய இந்து மதத்தினை புரிந்து கொண்டு மாற நினைக்கும் ஒருவரது முதல் உணர்ச்சியே தனது சமூக அந்தஸ்தால்  தான் அடைந்த சலுகை குறித்த குற்ற உணர்ச்சிதான். இந்த சலுகைகள் மற்ற மக்களின் உரிமைகளை பறித்துத்தான் கிடைத்தது என்பதை அவர் உணர ஆரம்பிக்கிறார். இப்படித்தான் இன்னபிற நம்பிக்கைகள், சடங்குகள், சம்பிரதாயங்களில் இருந்து அவர் மாறுகிறார். ஒடுக்கப்படும் மக்களின் போராட்டங்களோடு இணைந்து கொள்கிறார். இதை பார்ப்பனர்களுக்கு மட்டுமல்ல ஏனைய சாதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் பொருந்தும் என்பதை விளக்கத் தேவையில்லை. எனினும் சாதிகளின் படிவரிசைக்கேற்ப இந்த மாற்றத்தின் அளவு மாறுபடும். ஆதலாம் மாற நினைக்கும் ஒரு பார்ப்பனர் இந்த அறுவை சிகிச்சையை செய்யாமல் மனிதனாக மாற முடியாது.

இருப்பினும் பார்ப்பனியத்தை விமரிசிக்கும் போதெல்லாம் சில வாசகர்கள் அப்பாவி பார்ப்பனர்களையும் சேர்த்து விமரிசிக்கிறீர்களே என்று கேட்கிறார்கள். பார்ப்பனியத்தின் ஏற்றத் தாழ்வான அநீதியான இந்த சமூக அமைப்பை ஏற்கவில்லை என்று ஒருவர் மனமுவந்து வரும் போது பார்ப்பனியம் எனும் அடையாளத்தில் தன்னை வைத்து பார்க்க மாட்டார். மாறாக அப்படி பேசுபவர்களை திருத்தவே முற்படுவார். மறுத்தால் அவர் தனது அடையாளங்களின் ஆதாயங்களை இன்னும் இழக்கத் தயாராக இல்லை என்றே பொருள். அதை உணர எந்த மக்களை பார்ப்பனியம் வதைத்து சிதைத்திருக்கிறதோ அந்த மக்களோடு வாழ்ந்து போராடுவதைத் தவிர வேறு வழியோ மருந்தோ இல்லை.

தனது பிற்போக்கான அடையாளம் சுட்டிக்காட்டப்படும் போது அதை இழப்பதின் அருமையை உணர்ந்தவர்கள் அதை இழப்பாகவோ தியாகமாகவோ உணரமாட்டார்கள். கேன்சர் கட்டிகளை வெட்டாமல் வைத்து அழகு பார்த்து ஆராதிக்க முடியுமா என்ன?

ஆகவேதான் ஜெயேந்திரன் – சங்கரராமன் கதைதான் பார்ப்பனியத்தின் ஆகச்சிறந்த சான்று என்பதால் அதை மறைப்பதற்கு இத்தகைய படங்களோ, இல்லை கதைகளோ, இல்லை ஊடகங்களின் உபதேசங்களோ தேவைப்படுகின்றது.

ஆரம்ப கால படங்களில் சமூக அமைப்பின் ஒரு சில மையங்களை விமரிசித்த விவேக் பின்னர் ஒரு அப்துல் கலாம் வகைப்பட்ட மொக்கையாக மாறியதின் கவித்துவமான நீதி இந்த படம். சிவாஜியின் மிகை உணர்ச்சியை கிண்டல் செய்தவர் பின்பு தானே அப்படி நடிக்க வேண்டியிருக்கும் என்று நினைத்திருக்கமாட்டார்.

இயக்குநர் பாலாவின் சீடரான ஆர்.கண்ணன்தான் இந்தப் படத்தின் இயக்குநராம். உண்மையில் குருவின் கீர்த்திக்கு குறைவில்லாமல்தான் படம் எடுத்திருக்கிறார். ஆனாலும் விவேக் ஐந்து நிமிடம் கழித்து அழுவார் என்று ஐந்து நிமிடத்திற்கு முன்பேயே திரைக்கதையும், இசையும் முன்னுரைக்க, பின்னர் அவர் அழ, ஐந்து நிமிடம் கழித்து ஐயர் அழுதார் என சில பாத்திரங்கள் பேசிக் கொள்ள, இசையும் அதை மீட்ட, வெல்டன் பாலா!

பாஜக ஆட்சியில் “பத்மஸ்ரீ விவேக்”கின் நான்தான் பாலா பொருத்தமாத்தான் வந்துள்ளது. காஞ்சிபுரம் ரவுடியை திருத்திய இந்த கும்பகோணம் ஐயங்காருக்கு அடுத்த தேசிய விருது கிடைக்காதா என்ன?

  1. //இசுலாமியரை விமரிசிக்க வேண்டுமென்றால் அவர்களை பொதுவாக விமரிசக்காமல், டிஎன்டிஜே போன்று பேர் குறிப்பிட்டு விமரிசிக்கும் போது//

    இன்னொரு திருத்தம். இஸ்லாமியர்களை விமரிசிக்கும் போது அவர்கள் அப்படி இருக்க வைக்கும், மதம் சொல்லியது அதனால் எதிர்க்கிறோம் என்று சொன்னாலும் அவன் மதத்தை தொடுவதே கிடையாது. ஆனால், ஒரு இந்து தவறு செய்தாலும் அவன் குலம், கோத்திரம் எல்லாம் லைன் கட்டி வரும்.

    //இறை வழிபாடு, உடை, உணவு குறித்த அம்சங்களில் ‘இந்துக்கள்’ வேறுபட்டாலும், வருணாசிரம தர்மம், சாதி எனும் சமூகக் கட்டமைப்பை ஏற்பதில் ஒன்றுபடுகின்றனர். இறை வழிபாடு தவிர்த்த மற்ற அம்சங்களில் இசுலாமியர்கள் வேறுபடுகின்றனர். ஆகவே இரண்டிலும் எது பிரதானமானது என்பதை வைத்தே ஒன்றில் தனிநபர்கள், இயக்கமாகவும், மற்றதில் ஒட்டு மொத்த அமைப்பையே விமரிசித்தும் எழுத வேண்டியிருக்கிறது.//

    சூப்பரப்பு.

    இறைவழிபாடு தவிர்த்து மற்ற அம்சங்களில் இஸ்லாமியர்கள் வேறுபடுகிறார்கள் என்பதை ‘சரி போகட்டும்’ என்று இஸ்லாமியர்கள் ஒத்துக் கொள்கிறார்களா? கொஞ்சம் கேட்டு சொல்லுங்கள். முக்கியமாக வஹாபிய(!) இஸ்லாமை வழிபடும் இஸ்லாமியர்களிடம். தர்கா வழிபாடு நடத்தும் முஸ்லீம் பிரிவினரை இஸ்லாமியராக ஏற்றுக்கொள்கிறார்களா? ஷியா, சன்னி பிரிவினர் ஏன் ஒருத்தரை ஒருத்தர் குண்டு வைத்து கொள்கிறார்கள்? கேட்டு சொல்லுங்கள்.

    • சீனு,

      “ஓரிறைக் கொள்கை, உருவ வழிபாடு கிடையாது போன்ற இறைவன் குறித்த மதக் கொள்கை தவிர்த்து வாழ்க்கை குறித்த சட்டங்களில் இசுலாத்திற்கு என்று ஒரே மாதிரியான கொள்கை கிடையாது.”

      என்ற வினவின் “இசுலாத்தில் பல்வேறு வேறுபாடுகள் உள்ளது” கருத்துக்கு விளக்கம், எடுத்துக்காட்டு தந்த சீனுவுக்கு நன்றி

      சீனு://இறைவழிபாடு தவிர்த்து மற்ற அம்சங்களில் இஸ்லாமியர்கள் வேறுபடுகிறார்கள் என்பதை ‘சரி போகட்டும்’ என்று இஸ்லாமியர்கள் ஒத்துக் கொள்கிறார்களா? கொஞ்சம் கேட்டு சொல்லுங்கள். முக்கியமாக வஹாபிய(!) இஸ்லாமை வழிபடும் இஸ்லாமியர்களிடம். தர்கா வழிபாடு நடத்தும் முஸ்லீம் பிரிவினரை இஸ்லாமியராக ஏற்றுக்கொள்கிறார்களா? ஷியா, சன்னி பிரிவினர் ஏன் ஒருத்தரை ஒருத்தர் குண்டு வைத்து கொள்கிறார்கள்? கேட்டு சொல்லுங்கள்.//

    • சீனு,
      //ஆனால், ஒரு இந்து தவறு செய்தாலும் அவன் குலம், கோத்திரம் எல்லாம் லைன் கட்டி வரும்.//
      What is the problem here? Do you dictate others to write as per view only?

      //இறைவழிபாடு தவிர்த்து மற்ற அம்சங்களில் இஸ்லாமியர்கள் வேறுபடுகிறார்கள் என்பதை ‘சரி போகட்டும்’ என்று இஸ்லாமியர்கள் ஒத்துக் கொள்கிறார்களா?//
      Iyankars and Iyers are equal? Can you ask them and tell the truth?

      • //What is the problem here? Do you dictate others to write as per view only?//

        I cannot dictate others to write according to me. But, I think I have the right the question when you JUST support one side and blame the other side when you have the identical issues.

        //Iyankars and Iyers are equal? Can you ask them and tell the truth?//

        Do Iyers and Iyengars both bomb/shoot and kill each others? Can you tell why do they do so?

        • சீனு,

          [1]ஓம் நமோ நாராயனா ,ஓம் நமச்சிவாயா சமைய சண்டைகள் பற்றி தெளிவு பெற தசாவதாரத்தின் முதல் 15 நிமிடங்கள் பார்க்கவும் பார்க்கவும்

          [2]ஹிந்து மத பிரிவுகளான சைவமும் ,வைணவமும் ஒன்றோடு ஒன்று காதல் கொண்ட ,கலந்த மதங்கள் இல்லையே !

          [3]துப்பாக்கி,வெடிகுண்டு இல்லாத அக்காலத்தில், குலோத்துங்கச் சோழனும் அவர் சார்ந்த சைவர்களும் , ஒரு வைணவரை[ரங்கராஜ நம்பி] முதுகில் கொக்கி மாட்டி தொங்கவிட்டு சிலையுடன் கடலில் மூழ்கடிக்க்கும் காட்சியை மறக்க முடியுமா ?

          //Do Iyers and Iyengars both bomb/shoot and kill each others? Can you tell why do they do so?//

        • //Do Iyers and Iyengars both bomb/shoot and kill each others? Can you tell why do they do so?//

          Mr. Saravanan gave you nice answers to you.

          In one of the previous vinavu articles related to gujarat, you said that “முஸ்லிம்கள் வாயை விசாரணைக்கு திறக்கவில்லை என்றால் அவர்களை கொன்றுவிடு”. I asked question about it, you escaped without answering it. Now I could not find out that article.

          Now let me recall your statements “But, I think I have the right the question when you JUST support one side and blame the other side when you have the identical issues.” You don’t need to worry about one side or two side or etc… your originality is well known to vinavu readers….

          I know the tamil proverb “ஆடு நனையுதுனு ஓநாய் வருத்தப்பட்டதாம் “. So you don’t need to bother muslims kill each other or etc…

  2. முதலில் சீனு போன்றோர் இஸ்லாமியர்களை வைத்து இஸ்லாத்தை புரிந்துக்கொள்ளும் தன்மையை நிறுத்திக்கொண்டு, உண்மையில் இஸ்லாம் சொல்வது என்ன எனபதை இறைவேதம் மற்றும் நபிமொழி மூலம் அறிந்துக்கொள்ள முயற்ச்சி செய்யவும். தர்கா வழிபாடு என்ற ஒன்று இஸ்லாத்தில் இல்லை, அப்படி இறைவனுக்கு நிகராக இறந்தவரையோ உயிருடன் இருப்பவரையோ நினைக்கக்கூடியவர் இஸ்லாமியர் அல்ல. தர்காக்களில் அடங்கி இருப்பூரை மரியாதை நிமித்தமாக பார்க்க செல்வதையே ஒரு கூட்டம் தர்கா வழிபாடு என்று பிதற்றிக்கொண்டு தெரிகிறது. வணக்கத்திட்க்கும் , மரியாதைக்கும் வேறுபாடு தெரியாதவர்களே இவாரெல்லாம் பிதற்றுவார்கள் . அந்த லிஸ்டில் சீனுவும் சேர்ந்துள்ளது சற்று ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பிரச்சினையையே தீர்வாக காட்றது இங்க தான் நடக்கும்…

      மேலே நான் கேட்டதுக்கு இங்க நீங்க விடை தந்து நிரூபிக்கறீங்க… 😀

        • Alisena is nothing. His knowledge about islam is zero. His questions were already asked by jews and christian brothers and there questions has been already answered but he is not ready to accept his failure. u can find through browsing.

      • தீர்வையே பிரச்சனையாக பார்க்க உங்களை போன்றோர்களால் தான் முடியும். உங்கள் மனநிலை அப்படி .

  3. தர்கா வழிபாடு என்பது இஸ்லாத்தில் இல்லை என்று கூறும் திரு. ஜாஹிர் அவர்களே! தர்கா வழிபாடு செய்பவர்கள் யாவரும் தாங்கள் இஸ்லாமியர் இல்லை என ஒப்புக் கொள்கின்றார்களா. நீங்கள் சொல்வது மட்டுமே சரி எனக் கூறுவதற்குப் பெயர் என்ன. தர்கா வழிபாடு செய்து கொண்டு தாங்களும் இஸ்லாமியர் என்று கூறுபவர்கள் யாவரையும் கொன்று விடுவதுதான் ஒரே தீர்வா. அருள் கூர்ந்து பதில் கூறுங்கள்.

    • Please read my command again and again until u get clearified . because i have clearly mentioned that , no muslim will worship otherthen allah and the person who goes for the darga, is not going there to wership that person or that dead man but just for respect. i hope the difference b/w respect and worship. thanks.

  4. ஷியா மற்றும் சன்னி பிரிவினர் ஏன் ஒருவரை ஒருவர் கொன்று சண்டைப் போடுகின்றார்கள் என்னும் கேள்விக்கு நேர் பதில் தாருங்கள் திரு. ஜாஹிர் அவர்களே

    • They have not said to me, why they were fighting with eachothers. and whatever it may be case, killing innosent peoples is far from humanity.I hope that their ignorance make them to do all these things.

  5. // இசுலாமியரை விமரிசிக்க வேண்டுமென்றால் அவர்களை பொதுவாக விமரிசக்காமல், டிஎன்டிஜே போன்று பேர் குறிப்பிட்டு விமரிசிக்கும் போது பார்ப்பனியத்தை மட்டும் நபர்கள் வாரியாக பிரித்து விமரிசிக்காமல் பொதுவாக விமரிசிப்பது சரியா //

    // பார்ப்பனியம், இஸ்லாம் இரண்டையும் பிரிப்பது எது என்பதிலிருந்து அதை பார்க்கலாம். //

    // ஓரிறைக் கொள்கை, உருவ வழிபாடு கிடையாது போன்ற இறைவன் குறித்த மதக் கொள்கை தவிர்த்து வாழ்க்கை குறித்த சட்டங்களில் இசுலாத்திற்கு என்று ஒரே மாதிரியான கொள்கை கிடையாது //

    // ஆனால் பார்ப்பனியத்தைப் பொறுத்த வரை இறை குறித்த கொள்கைகளில் – ஓரிறை, பல கடவுள்கள், உருவ வழிபாடு, உருவ வழிபாட்டை மறுக்கும் இறை நம்பிக்கை, வேதத்தை ஏற்று கடவுளை மறுக்கும் நாஸ்திகம் – என்று பல வேறுபாடுகள் இருந்தாலும், ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், வாழ்வியல் குறித்த கொள்கைகளில் பிரிவினையோ, அனுமதியோ கிடையாது. அதாவது ஏற்றத் தாழ்வான சாதிகளாய் பிரித்து வைத்து ஒரு சமூகத்தை சுரண்டும் அடிப்படை அம்சமே பார்ப்பனியத்தின் உயிர்நாடி. //

    இந்த விளக்கம் நிச்சயம் ஒப்புக் கொள்ளும் படியாகத்தான் இருக்கிறது.

    ஆனால், ஒரு கேள்வி வருகிறது. இந்தப் படத்தில் வரும் கதாநாயகன் பாத்திரத்தை எடுத்துக்கொள்வோம். உருவ-அருவ வழிபாடு போன்ற இறை வழிபாட்டு கொள்கைகளில் உருவ வழிபாட்டை ஏற்று, கோவில் பூசாரியாக இருக்கிறார். பெருமாள் கோவில் என்பதால் நெற்றியில் நாமம். பூணூல் அணிந்தாலும், நீங்கள் குறிப்பிடும் முக்கிய உயிர்நாடியான ஜாதி ஏற்றத்தாழ்வை ஏற்க்காதவராகவே காட்டப்படுகிறார்.

    இவ்வாறு, மத ரீதியான புறவய அடையாளங்கள் மட்டும் கொண்டு பார்ப்பனீயத்தின் உயிர்நாடியான ஜாதி ஏற்றத்தாழ்வை ஏற்காத இவரை, நீங்கள் “பார்ப்பனன்” என ஏன் அழைக்கிறீர்கள்?

    இந்த பட இயக்குனர் உட்பட மற்ற பலரும் புறவய அடையாளங்களை வைத்து பார்ப்பனரை அடையாளம் காணலாம். ஆனால், இஸ்லாம்-பார்ப்பனீயம் குறித்து சூட்சுமமாக கூறிய தாங்கள் இந்தக் கதாபாத்திரத்தை பூசாரி என்ற அளவில் மட்டுமே அல்லவா காண முடியும். அவ்வாறன்றி, இந்த புற அடையாளங்கள் பார்ப்பனீயத்தில் இருந்து பிறந்தவை. எனவே புற அடையாளங்களை ஏற்பவர், உயிர்நாடியான ஜாதியை ஏற்காவிட்டாலும், ஜாதியை ஏற்றவராகவே கருதி “பார்ப்பனர்” என அழைக்கபடுவர் என நீங்கள் கூற இயலும். எனில், இதையே இஸ்லாத்துக்கும் பொருத்த வேண்டி வருமல்லவா? இஸ்லாத்தின் உயிர்நாடியான சஹாதாவை ஏற்றபின் அதிலிருந்து பிறந்த வன்முறையை ஏற்காவிட்டாலும், ஏற்றதாகவே கருதமுடியுமல்லவா?

    இந்த படத்தில் வரும் கதாபாத்திரம் வெறும் பூசாரியா, பார்ப்பனனா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

    மயிர் பிளக்கிறதைய்யா!

    ——————————————————————————

    // இப்படித்தான் இன்னபிற நம்பிக்கைகள், சடங்குகள், சம்பிரதாயங்களில் இருந்து அவர் மாறுகிறார்.

    ஜாதி ரீதியான ஏற்றத் தாழ்வுகளை நிராகரிப்பதனால், ஒருவர் மற்ற மத ரீதியான நம்பிக்கைகளை துறக்கவேண்டிய அவசியம் இருப்பதாக நான் கருதவில்லை. யாருக்கெல்லாம் திருப்பதியில் மொட்டை போட விருப்பம் உள்ளதோ வாருங்கள், ஒன்று கூடி மொட்டை போடுவோம். பார்ப்பன மொட்டை, பறையன் மொட்டை என்றெல்லாம் ஏதுமில்லை. எல்லாம் ஒரே மொட்டைதான்!

    • // இந்தப் படத்தில் வரும் கதாநாயகன் பாத்திரத்தை எடுத்துக்கொள்வோம். உருவ-அருவ வழிபாடு போன்ற இறை வழிபாட்டு கொள்கைகளில் உருவ வழிபாட்டை ஏற்று, கோவில் பூசாரியாக இருக்கிறார். பெருமாள் கோவில் என்பதால் நெற்றியில் நாமம். பூணூல் அணிந்தாலும், நீங்கள் குறிப்பிடும் முக்கிய உயிர்நாடியான ஜாதி ஏற்றத்தாழ்வை ஏற்க்காதவராகவே காட்டப்படுகிறார். இவ்வாறு, மத ரீதியான புறவய அடையாளங்கள் மட்டும் கொண்டு பார்ப்பனீயத்தின் உயிர்நாடியான ஜாதி ஏற்றத்தாழ்வை ஏற்காத இவரை, நீங்கள் “பார்ப்பனன்” என ஏன் அழைக்கிறீர்கள்? //

      வெங்கடேசன்,

      பார்ப்பனியம் என்றால் என்ன என்பதை இன்னமும் நீங்கள் ஒரு மேல்தோற்றத்தில் மதிப்பீடு செய்கிறீர்கள் அல்லது இன்னமும் உங்களுக்கு விடை தெரியாதா கேள்விகள் நிறைய இருக்கலாம் என்று புரிந்து கொள்கிறோம். அது குறித்து சில கேள்விகள்………

      1. பெருமாள் கோவில் பூசை செய்யும் அய்யங்கார் பாலா, சாதி ஏற்றத்தாழ்வை ஏற்காதவர் என்று எதை வைத்து முடிவு செய்கிறீர்கள்? பார்ப்பனியத்தை ஏற்காதவர் என ஒரு பார்ப்பனருக்கு சான்றிதழ் தருவதற்கு என்ன அளவுகோலை வைத்திருக்கிறீர்கள்?

      2. பாலா சாதி அடையாளங்களான பூணூல், நாமம் முதலியவற்றை மட்டும் வைத்து வாழ்கிறாரா?

      3. பார்ப்பனியத்தை அதாவது சாதியத்தை ஏற்காதவர் எனில் பெருமாள் கோவில் பூசாரியாக ஒரு பறையரை கொண்டு வர அவர் ஏன் போராடவில்லை? மறுபுறம் தனது குருக்கள் பதவியை துறந்து விட்டு உடலுழைப்பு சார்ந்த வேலைகளுக்கு அவர் ஏன் போகவில்லை?

      4. சாதிய ஏற்றத்தாழ்வை ஏற்காத ஒருவர் எப்படி அக்ரஹாரத்தில் குடியிருக்க முடியும்? புனிதம், தீட்டு, சுத்தம், என உயர்குடி இருப்பான அக்ரஹாரம் எதற்காக உருவாக்கப்பட்டது? சாதியத்தை ஏற்காதவர் அக்ரஹாரத்தை தலைமுழுகிவிட்டு சேரிக்கோ இல்லை ஊருக்கோ (பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகள் வாழும் பகுதி) ஏன் செல்லவில்லை?

      5. ஒருக்கால் தலித் வீட்டிற்கு வெளியே அண்ணாந்து தண்ணீர் குடித்த ஒன்றே அவர் சாதியை துறந்தவர் என்பதற்கு சான்றா? இந்த குடிநீர் பழக்கம் அக்ரஹாரம் எனும் உயர் தனிச்சிறப்பு குடியிருப்பின் பண்பினை எப்படி மாற்றும்?

      6. பாலாவின் அப்பா நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார் என்பதற்காகவே அந்த அக்ரஹாரப் பார்ப்பனர்கள் பாலா குடும்பத்தினரை வெளியேறுமாறு வற்புறுத்துகிறார்கள். அதனால்தான் பாலா காஞ்சிபுரம் சென்று பூச்சியுடன் தங்குகிறான். மாறாக அக்ரஹாரப் பார்ப்பனர்களின் பார்ப்பனிய மேலாதிக்கத்தை வேறுத்து அவன் வெளியேறவில்லை, ஏன்?

      • வினவு கூட நம்ம ஸ்டைலில் பாயிண்ட் பாயிண்ட்டா எழுத கத்துக்கொண்டது!. 🙂

      • //1. பெருமாள் கோவில் பூசை செய்யும் அய்யங்கார் பாலா, சாதி ஏற்றத்தாழ்வை ஏற்காதவர் என்று எதை வைத்து முடிவு செய்கிறீர்கள்? பார்ப்பனியத்தை ஏற்காதவர் என ஒரு பார்ப்பனருக்கு சான்றிதழ் தருவதற்கு என்ன அளவுகோலை வைத்திருக்கிறீர்கள்?//

        பார்ப்பனியத்தை ஏற்காதவர் என ஒரு பார்ப்பனருக்கு சான்றிதழ் தருவதற்கு நீங்கள் என்ன அளவு கோலை வைத்திருக்கிறீர்கள்..?! ஒரு பார்ப்பனர் பெரியாருக்கு மட்டும் மாலை போட்டு ஆறு கால பூசைகள் செய்து, சேரிக்குள் குடிபோய் செருப்பு தைத்தாலும் பெரியாரிய கட்சிகளில் அடிப்படை உறுப்பினர் கூட ஆகமுடியாது.. இப்படி பல்வேறு அளவுகோல்கள் புழக்கத்தில் இருக்கின்றன..

        //2. பாலா சாதி அடையாளங்களான பூணூல், நாமம் முதலியவற்றை மட்டும் வைத்து வாழ்கிறாரா?//

        ஏன் அப்படிக் கேட்கிறீர்கள் என்று விளக்கமாக கூறமுடியுமா.. பாக்கியராஜ் படத்தில், ஒரு லவுகீகப் பார்ப்பனர், பார்ப்பனரல்லாத பாக்கியராஜுக்கு பூணூல் போட்டு சுண்டல் விற்க அனுப்புவார்..

        //3. பார்ப்பனியத்தை அதாவது சாதியத்தை ஏற்காதவர் எனில் பெருமாள் கோவில் பூசாரியாக ஒரு பறையரை கொண்டு வர அவர் ஏன் போராடவில்லை? மறுபுறம் தனது குருக்கள் பதவியை துறந்து விட்டு உடலுழைப்பு சார்ந்த வேலைகளுக்கு அவர் ஏன் போகவில்லை?//

        அப்படி ஒரு படத்தை உங்களால்தான் எடுக்க இயலும்..

        //4. சாதிய ஏற்றத்தாழ்வை ஏற்காத ஒருவர் எப்படி அக்ரஹாரத்தில் குடியிருக்க முடியும்? புனிதம், தீட்டு, சுத்தம், என உயர்குடி இருப்பான அக்ரஹாரம் எதற்காக உருவாக்கப்பட்டது? சாதியத்தை ஏற்காதவர் அக்ரஹாரத்தை தலைமுழுகிவிட்டு சேரிக்கோ இல்லை ஊருக்கோ (பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகள் வாழும் பகுதி) ஏன் செல்லவில்லை?//

        சாதிய ஏற்றதாழ்வை ஏற்காதவர்கள் எல்லாம் சேரிக்குள் குடிபோக வேண்டும் என்ற நிபந்தனை வைத்தால் அவர்களுக்கு திடீரென்று சுயசாதிப்பற்று வந்துவிடும்.. மாறாக அக்கிரகாரத்தில் எல்லா சாதிப் பூசாரிகளும் குடிவருவதை பாலா ஏன் ஆதரிக்கவில்லை என்று கேட்கலாம்தான்.. ஆனால் அது போன்று காட்சி அமைப்பதும் அமைக்காததும் கதை-திரைக்கதை எழுதியவர்களின், இயக்குநரின் படைப்புரிமையின்பாற்பட்ட விசயம் என்று ஜனநாயகப் பூர்வமாக கூறிவிடலாம்..

        //5. ஒருக்கால் தலித் வீட்டிற்கு வெளியே அண்ணாந்து தண்ணீர் குடித்த ஒன்றே அவர் சாதியை துறந்தவர் என்பதற்கு சான்றா? இந்த குடிநீர் பழக்கம் அக்ரஹாரம் எனும் உயர் தனிச்சிறப்பு குடியிருப்பின் பண்பினை எப்படி மாற்றும்?//

        தன் வீட்டிற்குள் தாழ்த்தப்பட்ட வகுப்பு இளைஞரான கனகலிங்கத்திற்கு பூணூல் அணிவிக்கும் சடங்கை, பேராசிரியர் சுப்ரமணிய அய்யர், குவளை கிருஷ்ணாமாச்சாரி போன்றோர் முன்னிலை வகிக்க, கனகலிங்கத்தின் உறவினர், உற்றாருடன் 100 ஆண்டுகளுக்கு முன்பே நடத்திய பாரதியை திட்டாத நாளேல்லாம் வீணான நாள் என்று நம்புகிறவர்கள் உள்ளவரை அக்ரகாரம் தன் பண்பினை மாற்றிக் கொள்வது கடினம்தான்..!

        திரு.ஞான ராஜசேகரன் இயக்கம் மற்றும் இசைஞானியின் இசையில் பாரதி படத்தில் வரும் அந்த காட்சி..:

        http://www.youtube.com/watch?v=Nh2T8y-JFfw

        மேலும் ஒரு தொடர்புள்ள காட்சி..:

        http://www.youtube.com/watch?v=BMGae2xop68

        // 6. பாலாவின் அப்பா நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார் என்பதற்காகவே அந்த அக்ரஹாரப் பார்ப்பனர்கள் பாலா குடும்பத்தினரை வெளியேறுமாறு வற்புறுத்துகிறார்கள். அதனால்தான் பாலா காஞ்சிபுரம் சென்று பூச்சியுடன் தங்குகிறான். மாறாக அக்ரஹாரப் பார்ப்பனர்களின் பார்ப்பனிய மேலாதிக்கத்தை வேறுத்து அவன் வெளியேறவில்லை, ஏன்?//

        வரலாற்று பாரதியை விமர்சிப்பது போல் திரைப்பட பாலாவை விமர்சிக்கிறீர்களே.. கதை அப்படி.. நீங்கள் உங்கள் விருப்பத்திற்கேற்ப ஒரு கதை எழுதி படம் எடுங்கள், பார்க்கலாம்..!

    • // ஜாதி ரீதியான ஏற்றத் தாழ்வுகளை நிராகரிப்பதனால், ஒருவர் மற்ற மத ரீதியான நம்பிக்கைகளை துறக்கவேண்டிய அவசியம் இருப்பதாக நான் கருதவில்லை. யாருக்கெல்லாம் திருப்பதியில் மொட்டை போட விருப்பம் உள்ளதோ வாருங்கள், ஒன்று கூடி மொட்டை போடுவோம். பார்ப்பன மொட்டை, பறையன் மொட்டை என்றெல்லாம் ஏதுமில்லை. எல்லாம் ஒரே மொட்டைதான்! //

      வெங்கடேசன்,

      திரும்பவும் பார்ப்பனியத்தின் சடங்கு, சம்பிரதாயங்களை வெறுமனே மத நம்பிக்கை என்பதாக எழுப்புகிறீர்கள்.
      கட்டுரை குறிப்பிடுவதை போல இறை வழிபாடு அதை ஒட்டிய சடங்குகள் வேறு என்றாலும் அதுவும் பார்ப்பனியத்தின் ஆன்மாவோடுதான் அமலில் இருக்கின்றன.

      நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மொட்டை விவகாரத்தை பாருங்கள்! அய்யங்கார்கள் பெருமாளுக்கு பூசை செய்யும் உரிமையினை பிறப்பின் அடிப்படையில் பெற்றிருக்கிறார்கள். பக்தர்களுக்கு மொட்டை அடிக்கும் வேலையினை செய்யும் முடிவெட்டும் தொழிலாளிகளும் பிறப்பின் அடிப்படையில் செய்கிறார்கள். என்றாலும் இரண்டும் ஒன்றல்ல. இதில் எது சிறப்பு, ஆதாயம், சலுகை என்பதை விளக்கத் தேவையில்லை.

      எனில், பார்ப்பனர் அய்யங்கார்கள் பூஜையிலிருந்து அகற்றப்பட்டு மொட்டை போடும் போதும், முடிவெட்டும் தொழிலாளிகள் பெருமாளுக்கு பூஜை செய்யும் போது மட்டுமே நீங்கள் குறிப்பிடும் மொட்டை பேதம் இருக்காது. அதுவரை திருப்பதிக்கு மொட்டை போடுவது என்பது பார்ப்பனியம் நமக்கு மொட்டை போடுவதாகத்தான் பொருள்!

      இந்த ஏற்றத்தாழ்வை வைத்துக் கொண்டே இதை மத சம்பிரதாயம், சடங்குகள், நம்பிக்கை என்று எளிமைப்படுத்தி புரிந்து கொள்வது நமக்கு நலனளிக்காது.

      • வினவுக்கு நான் இங்கே ஒரு கேள்வி எழுப்ப விரும்புகிறேன். சாதிய பிரிவை இந்துமதத்தில் இருந்து பிரிக்க முடியாது என்பது தங்கள் கருத்தா? ஒரு அயங்கார் தாங்கள் கூறியது போல மொட்டை போடும் காலம் வந்தாலும், அவர் அயங்கார் என்பதற்கு இருக்கும் அடையாளங்கள், அவர் அணியலாமா? இல்லை கூடாதா?

        ஒரு ஹிந்து தாங்கள் கூறியது போல சாதி மத பேதம் இல்லாத ஹிந்துவாக இருந்தால் அவருடைய நம்பிக்கைகள் என்னவாக இருக்கும், எதை பின்பற்றி இருக்கும் என்பது தங்கள் கருத்து? வேதங்களா? அல்லது புராணங்களா? அல்லது அதி சங்கரரின் அத்வைதமா?

  6. Dear Vinavu,

    //பார்ப்பனியம், இஸ்லாம் இரண்டையும் பிரிப்பது எது//

    இரு வேறு அமைப்புகளை ஒப்பிட்டிருக்கிறீர்கள். (Like comparing apples to oranges). எடுத்துக்காட்டாக 14 ஆண்டுகளாக வேகமாக பற்றிப்படர்ந்த புல்லையும் 40 ஆண்டுகளாக நிதானமாக வளர்ந்த மரத்தையும் ஒப்பிடுகிறீர்கள்.

    In the social organization of India (in short you are calling it as Paarpaniyam), the skin color plays the first role. The light skinned people from outside invaded and became rulers to dark skinned indigenous people. Initially there was some mixing resulting in 3 groups of people with different skin color. Slowly over milleniums, this number has become around 300.

    In the social organization of Oumma (in short you are calling it as Islam and i call it as Muhamadiyam) also the skin color plays the first role, but in two ways. Arab muhamadans invaded all lands around them; some lands with lighter skinned people (Turkey, Spain, etc), some with darker skinned people (Sudan, Somalia, etc). The societies they took over were Muhamadized at unimaginably short periods by two ways. I am giving them in very short text. One is capture, enslavement and concubinage of the women in large number. Another is forceful conversion. Within a century or two Arabs became lighter skinned due to concubinage with lighter skinned women from turkey and Europe. In African countries like Sudan, Somalia, etc, it is Arabs with lighter skin who are in power. In other muhamadan countries, they have achieved a fairly common skin color. How? It is not hard to imagine the reason. We can discuss it in subsequent days. In countries like India, the gradation exists based on the skin.

    //இறைவன் குறித்த மதக் கொள்கை தவிர்த்து வாழ்க்கை குறித்த சட்டங்களில் இசுலாத்திற்கு என்று ஒரே மாதிரியான கொள்கை கிடையாது.//

    மாபெரும் தவறு. முகமதியர்கள் இதைப்படித்து விட்டு எல்லா வாயிலும் சிரிப்பார்கள். பெண் சபாநாயகர் கைகுலுக்குவது, ஜீன்ஸ் அணிவது துனிசியா வாலிபால் பெண்கள் மேற்கத்திய உடைகளோடு ஆடுவது இவையெல்லாம் Exceptions. Exceptions prove the rule.

    //வகாபியிஸ்டுகளும், டிஎன்டிஜேக்களும் இதற்காக கரடியாக கத்தினாலும் அப்படி ஒரு வாழ்வியல் ஒற்றுமையை யாரும் கொண்டுவர முடியாது//

    மாபெரும் தவறு. அவர்களை மிகவும் குறைத்து மதிப்பிடுகிறீர்கள். இன்று உலகின் கிட்டத்தட்ட அணைத்து முகமதிய குடும்பங்களில் பிறந்த பெண்களும் ஒரே மாதிரியான கருப்பு சாக்கினுள் புகுத்தப்பட்டிருக்கிறார்கள். புகுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்

    • univerbutty , the man qho thinks himself as genious. but in real he is not like that. Even you don’t know how to talk in public chat… //மாபெரும் தவறு. முகமதியர்கள் இதைப்படித்து விட்டு எல்லா வாயிலும் சிரிப்பார்கள்// what do u meant to say by this useless command.
      //பெண் சபாநாயகர் கைகுலுக்குவது, ஜீன்ஸ் அணிவது துனிசியா வாலிபால் பெண்கள் மேற்கத்திய உடைகளோடு ஆடுவது இவையெல்லாம் Exceptions. Exceptions prove the rule.//

      Hello come on! culture differs place to place. If the person in america will kiss in main road and say this is a way of greetings like saying good morning or whatever it is.But in India what is the case. we don’t accept that culture.Same thing applies here.. actually the muslims who follows that have no objections then why you people have objections i don’t know.

    • இசுலாத்தை காக்க இன்னொறு நாயக் அல்லாத வெறும் ஜாகிர் உருவாகி விட்டார் வாழ்துக்கள் ஜாகிர் இன்ஷா அல்லா வரிக்கு வரி பதில் குடுங்கள் உங்களுக்கு சுவனம் உண்டு

  7. They have not said to me, why they were fighting with eachothers. and whatever it may be case, killing innosent peoples is far from humanity.I hope that their ignorance make them to do all these things. என்று பதில் கொடுத்துள்ள ஜாஹிர் அவர்களே!. ஷியா சன்னி பிரிவினர் ஒருவர் கருத்தை மற்றொருவர் ஏற்றுக் கொள்ளாமல் வன்முறையில் இறங்கி அடுத்தவரைக் கொல்கின்றார்கள் எனபது யாவரும் அறிந்தது. இது உங்களுக்கு தெரியாது எனபது உமண்மையான பதில் அல்ல. அறியாமை காரணமாக இப்படி செய்கின்றார்கள் என்று கூறியுள்ளீர்களே! 2000 ஆண்டுகளாக இஸ்லாம் பற்றிய அறியாமை இருளை இஸ்லாமியர்கள் சிலரிடம் நீக்காத இஸ்லாம் மதம் இனி மேலும் நீக்கும் என நம்புவது சரியா?. எந்த மதமும் அறியாமையை நீக்காது மட்டும் அல்ல அதை மறுப்போர் மீது கசப்புணர்வைக் கொடுக்கும்.

    • நீங்கள் சொன்ன கருத்துக்கள் தான் மீடியா சொல்பவை , மேலும் இஸ்லாத்தை விமர்சிப்பவர்களும் சொல்பவை அதே கருத்தையே. ஆனால் தங்களின் பகுத்தரிவிட்க்கு இது ஒரு காரணமாக தெரிகிறதா? ஒரு வாதத்திற்க்கு தங்களின் கருத்தை எடுத்து ஆராய்ந்தால் கூட அதில் எந்த விதத்திலும் பொருந்தி வர வில்லையே..ஏனன்றால் 10 பேர் கூடும் இடத்தில் ஒத்த கருத்து உடையவர்கள் பாதிக்கு பாதியோ அல்லது அதை விட அதிகமானவர்களோ இருக்கலாம். ஆனால் அனைவரும் ஒரே கருத்தை கொள்வது மிகவும் அபூர்வம் அதிலும் ஒரு மார்க்கம் சம்பன்ம்தப்பட்ட விஷயத்தில் அதன் கொள்கைகளில் அனைவரும் ஒத்த கருத்துடையவர்களாக எதிர்ப்பார்ப்பது நடவாத காரியம் . மேலும் அவரவரின் கருத்தானது அவர்கள் சார்ந்துள்ள பல சூழ்நிலைகளையும் சார்ந்தே அமைந்துள்ளது. இவர்களின் கருத்து வேற்றுமை இஸ்லாத்தின் அடிப்படை விஷயத்தில் அல்ல.
      //அறியாமை காரணமாக இப்படி செய்கின்றார்கள் என்று கூறியுள்ளீர்களே! 2000 ஆண்டுகளாக இஸ்லாம் பற்றிய அறியாமை இருளை இஸ்லாமியர்கள் சிலரிடம் நீக்காத இஸ்லாம் மதம் இனி மேலும் நீக்கும் என நம்புவது சரியா?. எந்த மதமும் அறியாமையை நீக்காது மட்டும் அல்ல அதை மறுப்போர் மீது கசப்புணர்வைக் கொடுக்கும்.\\
      தோழர் நிச்சயமாக கல்லூரி படிப்பை அல்லது பள்ளி படிப்பையாவது முடித்து தான் வந்திருப்பார் என்றே எண்ணுகிறேன். தாங்கள் படிக்கும் காலத்தில் உங்களுடன் சேர்ந்த சகமானவர்களுக்கும் ஒரே மாதிரியான பாடத்தை தான் ஆசிரியரோ , விரிவுரையாலரோ நடத்தி இருப்பார் .ஆனால் தேர்வின் முடிவானது அனைவருக்கும் ஒரே மாதிரியாகத்தான் வந்தாதா? தோழரே . வந்த முடிவிற்க்கு காரணம் உங்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியரை காரணம் சொல்வீர்களா? அல்லது அவரவர்கள்(மாணவர்கள்) எடுத்த முயற்சியை பொறுத்து முடிவு மாறி உள்ளது என்று சொல்வீர்களா? தோழரே.. ஆசிரியரின் மேல் குற்றம் என்றால் அனைத்து மாணவர்களுமே ஒரே நிலையை அடைந்திருத்தல் வேண்டும்.
      இஸ்லாம் என்ற ஆசான் நடத்திய பாடத்தை சரியாக கற்காதவர்கள் வழி பிரல்கிரார்கள் சரியாக் கற்றவர்கள் வெற்றிபெறுகிறார்கள்.

    • தோழர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள் . இராக் விஷயத்தில் தாங்கள் உண்மையான செய்தியை அடையவேண்டும் என்றால் , நீங்கள் இராக்கின் அதிபரை சதாம் உசேன் இரானை அடக்குவதற்காக அமெரிக்க கொம்பு சீவி விட்டதே அதிலிருந்து படித்தால் தான் இந்த பிரச்சனைகளின் பின்னணி மற்றும் எதற்க்காக இவ்வகைய பிளவு மற்றும் போர் , மேலும் இதனால் பயன்பெறுபவர்கள் யார் என்பதெல்லாம் புரியும். உசாமாவை உருவாக்கிய அதே அமெரிக்க தான் சதாமை உருவாக்கியது என்பதையும் கடைசியில் தனக்கு பாதகமான சூழ்நிலை ஏற்படுகையில் இருவரையும் அளித்ததும் அமெரிக்காதான்.

  8. Excellent!

    //குற்ற உணர்வு அடைய வேண்டிய பார்ப்பனர்களோ பெருமித உணர்வு அடைகிறார்கள். பாதிப்பு அடைந்த பிரிவினர் கூட பாதிப்பு உருவாக்கிய பிரிவினரின் ‘கருணையை’ சிலேகிக்கும் இந்த காட்சிகள் உண்மையில் பெரும் வன்முறையை நியாயப்படுத்துகிறது.//

  9. இவனுடைய பிறப்பே பிரமணியம் தான் ஆனால் நாம்தான் அடையாளம் காண மாட்டோமே, இவனுடைய படங்களில் நடித்த போது நகைச்சுவைகளில் பகுத்தறிவாக நடிக்கின்றான் என்று பாராட்டி சின்ன கலைவாணார் என்று பட்டம் கொடுத்தோம் ஆனால் அவன் சில படங்களில் பிரமாணர்களை எதிர்ப்பது போல் எதிர்த்து பின்பு புகழ் பெற்றபின் அவனுடைய ஈன பிறவி புத்தி வெளிப்படலாயிற்று , அவனை தொடர்ந்து இப்போது திரைத்துரையில் புகுந்துந்துள்ளார் சந்தானம் என்ற ஒரு பார்பனன் இவனுடைய நகைச்சுவை என்ற பெயரில் தமிழ் இன மக்களை இழிவு செய்வதே வேலையாக கொண்டு இருக்கின்றான் நாமும் அதை ஆரதிக்கின்றோம் என்ன செய்வது நம்மை எவனாவது திட்டினாலும் நாம் அதை ரசிப்பவர்களாக இருக்கின்றோம். முன்பு பாரதி என்ற பார்பன், அதை தொடர்ந்து சுப்பிரமணிசாமி என்ற பார்பன் , தற்போது இவன் இவனை தொடர்ந்து அந்த சந்ததி தொடரும். சந்தானத்தின் நகைச்சுவைகளை கூர்ந்து கவனியுங்கள் புரியும், மேலும் எடுத்தவுடனே சரக்கு அடிக்கலாம்டா என்று தான் ஆரம்பிபான் அந்த அயோக்கியன்.

    உலகில் உள்ள இனங்களில் பெருமைக்குரிய நாகரிக இனங்களை முதலில் இப்படி தான் இழிவு செய்து அவர்களை அழிக்க பட வேண்டியவர்கள் என்று நிருபிக்கபட்டு நாங்கள் காக்கவேண்டியவர்கள் என்று சொல்லுவார்கள் இது இங்கு மட்டும் அல்ல மேற்க்குலகிலும் இது தொடர்கிறது முன்பு பலநாகரிக மக்களும், அமெரிக்காவில் இது போலும் பல நாகரிகங்கள் அழிக்கபட்டுள்ளன என்பது உண்மை. காலம் காக்கும் நம்முடைய சிறந்த தமிழினத்தினை.

    • சந்தானம் ஒரு பார்ப்பனர் என்ற எண்ணத்தில் அவரை வெறுக்கிறீர்கள் என்பதால் கூறுகிறேன்.. சந்தானம் பார்ப்பனர் அல்ல..

  10. //இருப்பினும் பார்ப்பனியத்தை விமரிசிக்கும் போதெல்லாம் சில வாசகர்கள் அப்பாவி பார்ப்பனர்களையும் சேர்த்து விமரிசிக்கிறீர்களே என்று கேட்கிறார்கள். பார்ப்பனியத்தின் ஏற்றத் தாழ்வான அநீதியான இந்த சமூக அமைப்பை ஏற்கவில்லை என்று ஒருவர் மனமுவந்து வரும் போது பார்ப்பனியம் எனும் அடையாளத்தில் தன்னை வைத்து பார்க்க மாட்டார். மாறாக அப்படி பேசுபவர்களை திருத்தவே முற்படுவார். மறுத்தால் அவர் தனது அடையாளங்களின் ஆதாயங்களை இன்னும் இழக்கத் தயாராக இல்லை என்றே பொருள். அதை உணர எந்த மக்களை பார்ப்பனியம் வதைத்து சிதைத்திருக்கிறதோ அந்த மக்களோடு வாழ்ந்து போராடுவதைத் தவிர வேறு வழியோ மருந்தோ இல்லை.

    தனது பிற்போக்கான அடையாளம் சுட்டிக்காட்டப்படும் போது அதை இழப்பதின் அருமையை உணர்ந்தவர்கள் அதை இழப்பாகவோ தியாகமாகவோ உணரமாட்டார்கள். கேன்சர் கட்டிகளை வெட்டாமல் வைத்து அழகு பார்த்து ஆராதிக்க முடியுமா என்ன?///

  11. அன்புள்ள வினவு,
    நான் இந்தப் படத்தை பார்க்கவில்லை. வினவு தளம், மற்ற தளங்களில் வந்த விமர்சனங்களை படித்ததில் அவன் தன்னளவில் ஜாதி வேறுபாடு பார்க்கவில்லை என்பது என் புரிதல். அந்த அடிப்படையில் சொன்ன கருத்து அது. படம் பார்க்காததால், அது குறித்து நுணுக்கமாக பேசாமல், நீங்கள் கேட்ட கேள்விகள் குறித்து பொதுவில் பேசுவோம். நீங்கள் கேட்ட கேள்விகள் ஆழ்ந்த சிந்தனைக்கு வழி தந்தன. நன்றி.

    ஜாதி என்ற கருத்து, ஜாதி ஏற்றத்தாழ்வு போன்றவற்றை சுருக்கமாக “ஜாதி” என அழைப்போம். ஜாதியை நிராகரித்தல் என்பது பல படிகளில் நிகழ்கிறது என்பது என் புரிதல்.

    முதல் படி தன்னளவில் ஜாதியை நிராகரித்தல். அஃதாவது, நாம் மற்றொருவரிடம் பழகுதல், நடந்து கொள்ளுதல் போன்றவற்றில் ஜாதி ஒரு காரணியாக இல்லாமல் போவது. உதாரணமாக, ஒருவன் நண்பனாக ஆவதிலோ, ஒருத்தி மனைவி ஆவதிலோ ஜாதி காரணியாக இல்லாமல் போவது. மொட்டை அடிப்பதை உதாரணமாக எடுத்துக் கொண்டால், நாவிதர் குறிப்பிட்ட சாதியினராக இருக்க வேண்டும் என எண்ணாமல் இருப்பது. அவரது ஜாதி என்ன என்பது பற்றிய அக்கறையின்மை.

    இரண்டாவது படிநிலையில், ஜாதி உள்ள இடங்களை புறக்கணித்தல். மொட்டை அடிப்பதை உதாரணமாக எடுத்துக் கொண்டால், குறிப்பிட்ட ஜாதியினர் மட்டுமே அர்ச்சகராகவும், வேறு குறிப்பிட்ட ஜாதியினர் மட்டுமே நாவிதராகவும் உள்ள சூழலில் மொட்டை அடிப்பதை புறக்கணிப்பது.

    இங்கே ஒரு விஷயத்தில் உங்களிடம் இருந்து நான் வேறுபடுகிறேன். மொட்டை அடித்தல் என்பது நிச்சயம் மத நம்பிக்கை சார்ந்த விஷயம் மட்டுமே. இதை செய்வதும், செய்யாததும் அவரவர் விருப்பம். ஒருவர் மத நம்பிக்கையின் பால் மொட்டை அடிப்பதில், இதில் நம்பிக்கை அற்றவருக்கு அக்கறை ஏதும் இருக்க தேவையில்லை. எனவே, மொட்டை என்ற கோட்பாட்டையே புறக்கணிக்க வேண்டும் என்பதை நான் ஏற்கவில்லை. இது முட்டாள் தனமான நம்பிக்கை என்றாலும் கூட, முட்டாளாய் இருப்பதில் எனக்கு முழு உரிமை உண்டு. என்னை பழிக்கும் எல்லாரும் அப்பாடக்கர் அதிபுத்திசாலி இல்லை! இங்கே புறக்கணிக்க வேண்டியது ஜாதி நிலவும் சூழலில் மொட்டை அடிப்பதை! உதாரணமாக, திருப்பதி கோவிலில் அடிக்காமல், அதற்கு பதிலாக, பெருமாள் பேர் சொல்லி சலூனில் மொட்டை அடித்துக்கொள்ளலாம் (சலூனில் ஜாதி இல்லை என வாதத்துக்காக வைத்துக்கொள்வோம்). கோவிலில் ஜாதி உள்ள சூழலில், கோவிலை புறக்கணித்து வீட்டிலேயே சாமி கும்பிடலாம். இத்தகு புறக்கணிப்புகள் இரண்டாம் படிநிலையில் வரும்.

    நீங்கள் கேட்ட பல கேள்விகளும் மேற்சொன்ன இரண்டாம் படிநிலை பற்றியவை. பாலா எதற்காக அக்ரகாரத்தில் குடியிருந்தான் என படத்தில் காட்டினார்களா என தெரியவில்லை. அது பார்ப்பனக் குடியிருப்பு என்ற காரணத்தால் குடியிருந்தான் என்றால், அது ஜாதி வெறி. மாறாக, அவன் தங்கியிருப்பது கோவில் வீடாகி, அது ஊதியத்தின் ஒரு பகுதியாக வாடைகையின்றி அவனுக்கு கிடைத்திருக்கும் பட்சத்தில், அங்கு தங்குவதில் முதல் படிநிலை கோணத்தில் தவறில்லை. அதை புறக்கணித்து வெளியேறுவது இரண்டாம் படிநிலையில் அடங்கும். அதே போல, கோவில் அர்ச்சகராக இருப்பது அவனுக்கு மனதுக்குப் பிடித்த வேலை என்ற வகையில் தவறில்லை. எனினும், இரண்டாம் படிநிலையில், குறிப்பிட்ட ஜாதியினர் மட்டுமே அர்ச்சகராக இருக்க முடியும் என்ற சூழலில் அதை புறக்கணித்து இருக்க வேண்டும்.

    எனவே, நீங்கள் கேட்ட கேள்விகள் எந்த படிநிலையில் ஒருவர் இருக்கிறார் என்பதை பொறுத்து அமையும். இதையே, சற்று விதண்டாவாதமாக, வேறொரு சூழலில் பொருத்திப் பார்ப்போம். பன்னாட்டு நிறுவன எதிர்ப்பு என வரும்போது, இந்த எதிர்ப்புக் கொள்கையை ஏற்பது முதல்நிலை. அத்தகு நிறுவனங்களில் வேலை செய்யாமல் இருப்பது, அவர்கள் விற்கும் பொருள்களை புறக்கணித்தல் என்பது அடுத்த படிநிலை. நாட்டு வளத்தை சுரண்டும் அம்பானியின் ரிலையன்ஸ் செல்போன் பயன்படுத்தாமல் இருப்பது இரண்டாம் படிநிலை. வர்க்கச் சுரண்டல் என்பதன் ஒரு உதாரணமாக ஓட்டல்களை எடுத்துக் கொள்வோம் ஓட்டல்களில், முதலாளி கல்லாவில் பணம் எண்ணிக் கொண்டிருக்க, உள்ளே அடுப்பில் வேலை செய்யும் சமையல்காரர் குறைந்த கூலி பெறும் சூழலில், ஓட்டல்களை புறக்கணித்தல் என்பது இரண்டாம் படிநிலை. கிலோ ஐம்பது ரூபாய் விற்கும் அரிசியில், இருபதோ, முப்பதோ விவசாயிக்கு செல்ல, மற்றவை இடைத் தரகர்களுக்கும், அண்ணாச்சிகளுக்கும் செல்லும் சூழலில், விவசாயி இடமிருந்து நேரடியாக அரிசி வாங்குவது இரண்டாம் படிநிலை. ஆம்-ஆத்மி பேசும் கீழ்நிலை ஊழல் எதிர்ப்பு என்ற கொள்கையின் முதல்படிநிலை தான் லஞ்சம் வாங்குவதோ, கொடுப்பதோ இல்லை என்றும், இரண்டாம் படிநிலை அத்தகு ஆசாமிகளை விலக்கி வைத்தல் என்றும் சொல்லலாம்.

    இங்கே உள்ள விதண்டாவாத நிலையை நான் உணர்கிறேன். கோவில்-மொட்டை போன்றவற்றை புறக்கணிப்பதும், அன்றாட வாழ்வுக்கு தேவையான விஷயங்களை புறக்கணிப்பது ஒன்றல்ல. எனினும், எதுவெல்லாம் முக்கியம் என்பது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு வேறுபடும்.

    மூன்றாம் படிநிலையில், நீங்கள் கேட்ட கேள்வி வருகிறது: “பாலா ஏன் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்பதற்காக போராடவில்லை?” தன்னளில் கொள்கையை வரித்தல், அக்கொள்கையில்லா சூழல்களை புறக்கணித்தல் என்ற இரண்டு படிநிலைகளுக்கு அடுத்து சூழலை மாற்ற செயலில் இறங்குவது என்ற மூன்றாவது படிநிலை. இதுவே கூட பல படிநிலைகளாக பிரியும். முதலில், “letters to the editor”, வினவு தளத்தில் “வாழ்க”, “ஒழிக” கோஷம் போடுவது, என்பதில் தொடங்கும். அடுத்து, தெரு ஓரத்தில் கொடி பிடிக்கலாம். கோஷம் போட்டு சோடா குடிக்கலாம். அதற்கடுத்து, கோவில் கற்பகிரகதுக்குள் புகுந்து போராட்டம் செய்யலாம். உருப்படியான செயல் என்றால், சுப்ரீம் கோர்ட்டில் வினவு போல வழக்காடுவது. திமுக, திக எல்லாம் எந்த படியில் நின்றனர் என நமக்குத் தெரியும்.

    எனவே, ஜாதி ஏற்பு, எதிர்ப்பு என்பது இரண்டு கோடு கிழிக்கப்பட்ட துருவங்கள் அல்ல. கருப்பு, வெளுப்பாக எதுவும் இல்லை. எல்லாம் இடைப்பட்டது தான். “சர்வம் கல்விதம் பிரம்ம” என்பது போல “சர்வம் கல்விதம் கிரே (gray)”! ஜாதி விஷயத்தில் முதல் படிநிலையில் இருப்பதனால், ஒருவரை கோழை என்றோ, பிழைப்புவாதி என்றோ, தன்னலவாதி என்றோ அழைக்கலாமே தவிர ஜாதீயவாதி என கூற முடியாது.

    அழுக்குப் படிந்த, கொசு சூழ்ந்த அசுத்த சூழலில் கரும்பு சாறு விற்கிறார்கள் என கொள்வோம். நமக்கு தேவை கரும்பு ஜூஸ் என, அசுத்த சூழலை கண்டு கொள்ளாமல் ஒரு டம்பளர் குடிக்கலாம். அல்லது, இதை குடிக்க மாட்டேன் என புறக்கணிக்கலாம். அல்லது, இந்தக் கடையை மூட வேண்டும் என போராடலாம்! முதல் படிநிலையில் இருந்து கொண்டு மொட்டை அடிப்பவரின் நோக்கம் மொட்டைதானே தவிர ஜாதி அல்ல. “பார்ப்பனர் அர்ச்சகர், நாவிதர் வேறு கீழ் ஜாதி, சூப்பர்!” என மகிழ்ச்சியோடு மொட்டை அடிப்பதில்லை.

    இதுவரை சொன்னவை தர்க்க ரீதியானவை. அடுத்த பதிவில் என் சொந்த புராணம் சிறிது பாட திட்டம். கும்மாங்குத்து குத்த நினைப்போர் சிறிது பொறுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    (தொடரும்)

  12. “சர்வம் கல்விதம் பழுப்பு” எனும்போது ஜாதி ஏற்பு அல்லது எதிர்ப்பு என்பது ஒரு ஸ்பெக்ட்ரம் போல விரிகிறது. ஒருவர் எந்தப் படிநிலையில் இருக்கிறார் என்றுதான் பேச முடியும். கருப்பு-வெளுப்பு கோடு கிழித்துத்தான் தீருவது என முடிவெடுத்தால், எங்கே கோடு கிழிப்பது என்ற கேள்வி வரும். நான் முதல்படிநிலை என்ற இடத்தில் கோடு கிழித்து பாலாவை ஜாதி எதிர்ப்பாளனாக சொன்னேன். நீங்கள் மூன்றாம் படிநிலையில் கோடு கிழித்து “அவன் ஏன் அனைத்து ஜாதி அர்ச்சகர் நிலைக்காக போராடவில்லை” என கேட்கிறீர்கள். இதையே இன்னும் தள்ளி கோடு கிழித்தால், சுப்ரீம் கோர்ட் வழக்கில் அக்கறை இன்றி வெறும் கோஷம் போட்டு கோலி சோடா குடித்த திக, திமுகவினரையும், கலைஞரையும், வீரமணி அவர்களையும, பாலாவை நீங்கள் கோட்டின் எந்தப் பக்கம் வைக்கிறீர்களோ அதே பக்கம் வைக்க வேண்டி இருக்கும்.

    ———————————————————————————————————–

    என்னளவில் முதல்படிநிலையில் இருப்பதாய் நினைத்துக் கொண்டு இருக்கிறேன். நெருக்கிப் பிடித்து ஆராய்ந்தால், பித்தளை பல் இளிக்கக் கூடும். மூன்றாம் படிநிலை என்றால், வினவில் “அனைவரும் அர்ச்சகர் ஆக வேண்டும்” என ‘ஓ’ போடலாம். அடுத்து, சிதம்பரம், திருவரங்கம் என இறங்க வேண்டுமென்றால் காக்கி சட்டை மீதான பயம் போக வேண்டும். மற்ற வழிகளில் உதவ முயலலாம். வேறென்ன செய்வது எனத் தெரியவில்லை.

    இந்த விவாதம் தொடர்பாக சிந்தித்த போது முதல் முறையாக, இரண்டாம் படிநிலை கவனத்துக்கு வருகிறது. கோவில், நாலாயிரம், தேவாரம், மொட்டை இவற்றை எல்லாம் நான் மத விஷயமாகத்தான் பார்க்கிறேன். இவை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை, மனநிறைவைத் தருவதே எனக்கு போதுமானாக இருக்கிறது. இவை முட்டாள்தனம் என்றால், “ஆமாம், அதுக்கு இப்போ இன்னாங்குற” என்பதே நேரடி பதில். நான் முட்டாளாய் இருப்பதில், மற்ற அதிமேதாவி ஆசாமிகளுக்கு எவ்வித அக்கறையும் இருக்கத் தேவையில்லை.

    எனினும், வினவு சொல்வது போல, இவை வெறும் மத விஷயங்களாக இல்லாமல், நடைமுறையில் ஜாதி சார்ந்து அமைந்துள்ளன. அதற்கு எதிவினையாக, இவற்றை எல்லாம் மொத்தமாக போகி நெருப்பில் சுட்டு பொசுக்க வேண்டும் என்பதை நான் ஏற்கவில்லை. இவை சீர்திருத்தப்பட வேண்டும் என்றே கருதுகிறேன்.

    அத்தகு சீர்திருத்தம் வரும்வரை, இரண்டாம் படிநிலை கோணப்படி இவற்றை புறக்கணிப்பதே சரியான வழி என தோன்றுகிறது. கோவிலுக்கு பதிலாக வீட்டில் திருமால். கோவிலில் தேவாரம் என்பதற்கு பதிலாக, வீட்டில் தேவாரம் என்றவாறு. பொங்கு நீர் செங்கயல் திளைக்கும் திருவேங்கட மலைக்கு பதிலாக, சலூனில் அவன் படத்தின் முன்பு மொட்டை.

    இவ்வாறு செய்வது சரியெனத் தோன்றினாலும், என்னளவில் செய்து முடிப்பது எளிதல்ல. சொல்லுதல் யார்க்கும் எளியவாம் அரியவாம் சொல்லிய வண்ணம் செயல். சிகரெட் பிடிப்பதையே, அத்தனை அதிபயங்கர கான்சர் படங்களை பார்த்த பின்பும், விடமுடியவில்லை. அவ்வாறிருக்க, கோவில், நாலாயிரம் போன்ற தொல்லையற்ற மனதிற்குகந்த விஷயங்களை, கொள்கை காரணமாக துறப்பது எங்கனம்?

    அனைத்து ஜாதியினரும் அர்ச்சர்கர் ஆகும் நிலை வந்த பின்பே கோவிலுக்கு செல்வது என்றால், என் வாழ்நாளில் கோவில் படி ஏற முடியாது என்று தோன்றுகிறது. இப்போதுதான், சுப்ரீம் கோர்ட் வழக்கு நடக்கிறது. தோற்குமோ, ஜெயிக்குமோ. ஜெயித்தாலும், நடைமுறையில் எவ்வாறு அமலாகுமோ? 108 திருப்பதிகளில் இன்னும் பாதிக்கு மேல் தரிசனம் செய்யவில்லை. தேவாரத் தலங்களில் கால் வாசி தான் முடிந்திருக்கிறது. இவற்றை எல்லாம் தரிசிக்காமலே செத்துப் போக வேண்டுமா?

    எனக்கு மிகவும் பிடித்த நாலாயிரப் பாடல்களில் ஒன்றான கீழே உள்ள பாசுரம் பேசும் திருத்தேவனார்தொகை தலத்தை பார்க்காமலே பரலோகம் போவதா?

    போதலர்ந்த பொழில் சோலை புறமெங்கும் பொருதிரைகள்
    தாதுதிர வந்தலைக்கும் தடமண்ணித் தென்கரைமேல்
    மாதவன்தான் உறையுமிடம் வயல் நாங்கை வரிவண்டு
    தேதெனவென்று இசைபாடும் திருத்தேவனார்தொகையே.

    By the way, இப்பாடலில் தமிழைத் தவிர வேறென்ன கண்டீர்? ஊரும், வயலும், வண்டும், மண்ணியாறும், திருமாலும் தானே உள்ளன! எங்கே பார்ப்பனீயம் உள்ளது? அழகான சந்தங்கள், இனிய ஓசை நயம்! பாடிய திருமங்கைமன்னன் என்ன குலம்?

    திருமங்கை மன்னனை எல்லாம் துறக்க முடியாது. பெட்டைப் புலம்பல் மட்டுமே சாத்தியம். அதுவும், விடிந்தால் தெளிந்து விடும்.

    • வெங்கடேசன், உங்கள் சுயபரிச்சீலனைக்கு வாழ்த்துக்கள்.

      /108 திருப்பதிகளில் இன்னும் பாதிக்கு மேல் தரிசனம் செய்யவில்லை. தேவாரத் தலங்களில் கால் வாசி தான் முடிந்திருக்கிறது. இவற்றை எல்லாம் தரிசிக்காமலே செத்துப் போக வேண்டுமா? ///

      ஆனால், கட்டுரையின் இப்பகுதி உங்களுடைய தர்க்கத்திற்கு பதிலளிப்பதாக கருதுகிறேன்: //இருப்பினும் பார்ப்பனியத்தை விமரிசிக்கும் போதெல்லாம் சில வாசகர்கள் ……..
      …… கேன்சர் கட்டிகளை வெட்டாமல் வைத்து அழகு பார்த்து ஆராதிக்க முடியுமா என்ன?///

      இப்பகுதியையும் கருத்தில் கொண்டு பரிசீலிக்கலாமே?

      • இங்கே எது கான்சர் கட்டி என்பது பற்றி ‘வினவு’க்கும் எனக்கும் கருத்து வேறுபாடு இருக்கிறது! நீங்களும் இதை புரிந்திருப்பீர்கள். எனவே வினவு சொல்லும் பரிந்துரையை தற்சமயம் தொங்கலில்தான் வைக்க முடியும்!

    • // 108 திருப்பதிகளில் இன்னும் பாதிக்கு மேல் தரிசனம் செய்யவில்லை. தேவாரத் தலங்களில் கால் வாசி தான் முடிந்திருக்கிறது. இவற்றை எல்லாம் தரிசிக்காமலே செத்துப் போக வேண்டுமா?//

      நீங்கள் பிறக்கும் முன்னரே உங்கள் லட்சியம் எதுவாக இருக்க வேண்டும் என்பதை மதம் அல்லது சமூகம் தீர்மானிக்கிறது . நீங்கள் எது செய்தால் மகழ்ச்சி தரும் என்று வரையறுத்து விட்டது .

      இதில் இருந்து வெளியே வருவது சுலபம் அல்ல . நீங்கள் உலகம் முழுவது சுற்றி பார்க்க வேண்டும் என்று கூறி இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்து இருக்கும் . மனித பிறவியை இறைவனுக்கு சேவை செய்யும் வாழ்க்கையாக மாற்றுவதால் அவனை சமூக பிரச்சினைகளில் இருந்து அன்னியபடுதுகின்றன. ஏழை குழந்தைகள் தங்கி படிக்கும் விடுதிக்கு கழிப்பறை இல்லை என்று கவலை படுத்தல் ஒரு ரகம். புண்ணிய தளங்களை தர்சிக்க இயலவில்லையே என்று வருந்துதல் ஒரு ரகம் . உங்கள் உலகத்திற்கும் வினவு உலகத்திற்கும் இடையே உள்ள தூரம் மில்கி வேக்கும் ஆண்டர்மடாவிற்கும் இடையே உள்ள தூரத்திற்கு இணையானது

      மேலை நாடுகளில் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தால் அமெரிக்கன் ட்ரீம் என்று கடன் வாங்கி வீடு கார் வாங்கி வாழ்க்கை முழுவதும் கடன் கட்டி சாக சொல்கிறாகள் .

      • ராமன்,
        ஒருவனுக்கு ஒரு லட்சியம், கவலை, ஆர்வம், மகிழ்ச்சி மட்டும்தான் இருக்க வேண்டும் என அவசியமில்லை. என்னளவிலும், நீங்கள் மெச்சக் கூடிய இலட்சியங்கள் இருந்ததுண்டு, அவற்றை மிகுந்த கஷ்டங்களுக்கு இடையே அடைந்தும் இருக்கிறேன்.

        “ஏழை குழந்தைகள் தங்கி படிக்கும் விடுதிக்கு கழிப்பறை இல்லை”, “புண்ணிய தலங்களை தரிசிக்க இயலவில்லையே” என்ற இரண்டு கவலைகளும் ஒன்றுக்கொன்று முரணானது என நான் கருதவில்லை. தோண்டித் துருவி ஆழமாக இறங்கினால், முரண் காட்ட முடியும் என நீங்களும் வினவும் கூறக் கூடும். இந்தக் கருத்தை நான் ஏற்கவில்லை.

        108 திருப்பதிகளை தரிசிப்பதை வாழ்க்கை லட்சியம் என சொல்லுமளவு, அது ஒன்றும் கடினமானதில்லை. சாவகாசமாக செய்வதனால், நேரம் கிடைக்கும்போது இங்கே பக்கத்தில் இருக்கும் கும்பகோணம், மயிலாடுதுறை என சுற்றினால் போதும். அதிரடியாக செய்வதானால், ஒரு பதினைந்தாயிரம் பணம் கொடுத்தால் தமிழக-கேரள 95 திருப்பதிகளை இரண்டு வாரத்தில் மொத்தமாக காட்டிவிடும் நிறைய சுற்றுலா முகவர்கள் இருக்கிறார்கள்! வடநாட்டில் உள்ள எஞ்சிய திருப்பதிகளை காண்பதற்கு, இன்னும் சற்று அதிகமாக நேரமும், பணமும் தேவை. தேவாரத் தலங்களையும் இவ்வாறே தரிசிக்க முடியும். திருநொடித்தான்மலை என்னுமாம் கயிலைமலையை தரிசப்பது மட்டும் சற்று கடினம். உடல் ஒத்துழைக்க வேண்டும், ஒரு லட்ச ருபாய் செலவு ஆகும். அம்புட்டுதான். இந்த தல யாத்திரைகள் மற்ற செயல்களை பாதிப்பதில்லை.

        // உங்கள் உலகத்திற்கும் வினவு உலகத்திற்கும் இடையே உள்ள தூரம் மில்கி வேக்கும் ஆண்டர்மடாவிற்கும் இடையே உள்ள தூரத்திற்கு இணையானது //

        உண்மைதான் என நினைக்கிறேன். ஆனால், நீங்கள் சொன்ன விளக்கத்தின் அடிப்படையில் அல்ல. என்ன சார், ஒரு வாழ்நாளில் கடக்க முடியாத அளவு தூரத்தை சொல்லிவிட்டீர்களே! நியாயமா?

        // உலகம் முழுவது சுற்றி பார்க்க வேண்டும்

        உலகத்தை சுற்றிப் பார்ப்பதென்றால், யுவான் சுவாங் ரேஞ்சுக்கு வேறொரு நாட்டில் தங்கி, வாழ்ந்து ஏதாவது புரிந்து கொண்டு பதிவு செய்தால் நலம். மற்றபடி, சும்மா சுற்றுலா இடங்களை பார்ப்பது, படேல் பாயிண்டுகளில் படம் எடுப்பது போன்றவற்றில் என்ன பெருமை இருக்கிறது? “சட்டைல என்ன? பூனை சார். அதிலென்ன பெருமை?”. மேலும், இதெல்லாம் நெறைய செஞ்சாச்சு சார். ஒர்த் இல்லை. லியனார்ட் ஆய்லர் சமாதியில் சாஷ்டாங்கமாக வணங்கியது போன்ற ஒரு சில தருணங்கள் தவிர வேறெதுவும் மனதில் பதியவில்லை.

        • //லியனார்ட் ஆய்லர் //

          Mathematics and the Physical World

          http://www.amazon.com/Mathematics-Physical-World-Dover-Books/dp/0486241041

          என்னும் நூலை தற்போது படித்து வருகிறேன்

          கணிதத்தின் கதை என்னும் நூலை தமிழிலே வாங்கினேன் . ஆனால் அதில்
          http://www.amazon.com/gp/product/9381908567

          sinX, tanX எதற்காக கண்டுபிடிக்கபட்டது , அதை கொண்டு எப்படி பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரத்தை கனகிட்டர்கள் என்கின்ற விவரங்கள் இல்லை .

          கணிதம் பற்றிய முழுமையான தமிழ் நூல் தெரிந்தால் அது பற்றிய விவரம் தந்து உதவ முடியுமா

          • ராமன்,
            நீங்கள் குறிப்பிட்ட sin, cos, tan பற்றியும், அவற்றை கொண்டு வானியல் தூரங்கள் அளப்பது பற்றியும் ஆங்கில நூல்களில் விளக்கங்கள் உண்டு. நீங்களும் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். தமிழில் கணிதக் கோட்பாடுகளை விளக்கும் நூல் எதையும் நான் பார்த்ததில்லை. கணித வரலாறு என்ற அளவிலும், முன்பெப்போதோ ரகமி எழுதிய ராமானுஜன் வாழ்க்கை வரலாறு படித்தது மட்டுமே நினைவுக்கு வருகிறது. sin, cos, tan பற்றி விளக்கம் என்னிடம் கேட்டீர்களா என எனக்குப் புரியவில்லை. உங்களுக்கு ஏற்கனவே இவை பற்றி தெரிந்திருக்கும் என நினைத்தாலும், கணிதம் பற்றி தமிழில் எழுதிப் பார்ப்போம் என்ற ஆசையில் சும்மா ஓரிரு வார்த்தைகள் சொல்லி வைக்கிறேன்.

            ஒரு முக்கோணத்தின் sin, cos, tan போன்ற அளவுகளை, அதன் மூன்று நீளங்களை கொண்டு வரையறை செய்தாலும், உண்மையில் அதன் மூன்று கோணங்களே (angles) இக்குறியீடுகளை நிர்ணயிக்கின்றன. அதாவது, ஒரே கோணங்கள் கொண்ட இரண்டு முக்கோணங்கள் வெவ்வேறு நீள அளவுகள் கொண்டிருந்தாலும், அவற்றின் sin, cos, tan போன்றவை ஒன்றாகத்தான் இருக்கும் (இத்தகு முக்கோணங்களை similar triangles என அழைப்பர்). எனவே, இரண்டு similar முக்கோணங்களில், சிறியதை பற்றி ஆராய்ந்தால், பெரியதை பற்றியும் தெரிந்துவிடும். sin, cos, tan and other trigonometric quantities are defined so as to capture the common properties of similar triangles.

            பூமி, நிலா, சூரியன் என்ற மூன்று புள்ளிகளை வைத்து ஒரு மாபெரும் முக்கோணம் வரைவோம். இதன் மூன்று நீளங்களை அளப்பது கடினம். ஆனால், கோணங்களை அளப்பது ஒப்பீட்டளவில் எளிது. வானத்தில் நிலா எங்கு உள்ளது, அதிலிருந்து எவ்வளவு கோணம் தள்ளி சூரியன் உள்ளது என கணக்கிட்டால் போதும்! இப்போது அதோ கோண அளவுகளோடு துண்டு சீட்டில் ஒரு சிறிய முக்கோணம் வரைந்து, sin, cos, tan கண்டுபிடித்தால், அதேதான் அந்த பெரிய முக்கோணத்தின் sin, cos, tan! சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கிற விளையாட்டு!

            மாறாக, “மூன்று பக்கங்களில் சிறியதாய் இருப்பதை விட்டு விட்டு, மற்ற இரண்டு பக்க நீளங்களின் கூட்டுத்தொகை” என ஒரு வரையறையை நாமே உருவாக்கிக் கொள்ள முடியும். இதற்கு “tos” என ஒரு பெயர் சூட்டிக் கொள்வோம். பிரச்சனை என்னவென்றால், இந்தக் குறியீடு மற்ற வகைகளில் பயன்படக் கூடும். ஆனால், similar triangles பற்றி ஆராய உதவாது! இரண்டு முக்கோணங்கள் similar ஆக இருந்தாலும், அவற்றின் இக்குறியீடு வெவ்வேறாக இருக்கும். சிறிய முக்கோணத்தின் tos சிறியதாகவும், பெரிய முக்கோணத்தின் tos பெரியதாகவும் இருக்கும்.

    • வெங்கடேசன், உங்கள் நீண்ட விளக்கத்திற்கு நன்றி. இதற்கு உடன் பதில் எழுத ஆசைப்பட்டாலும் நேரம் கிடைக்கவில்லை. என்றாலும் பதிலை யோசித்த போது அதுவே ஒரு தனிக்கட்டுரையாக வரும் அளவுக்கு இருப்பதாலும், அதை தனியாக வெளியடலாம் என்றும் ஒரு யோசனை இருக்கிறது. இதனால் பின்னூட்டங்களில் விவாதிக்க கூடாது என்பதல்ல. சில தருணங்களில் சில முக்கியமான பிரச்சினைகள் சில காத்திரமான விவாதங்களுக்கு இட்டுச் செல்லும் போது அது மேலும் பலரையும் விவாதிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே இதை தனியாக எழுத வேண்டும் என்று தோன்றுகிறது.

    • Hi Venkatesan,

      I am little late and you seem to be busy. Anyway…

      நீங்கள் கூறும் 3 படிநிலைகளை ஏற்றுக் கொண்டு ஒரு கருத்தை முன் வைக்கிறேன்.

      ஒருவர் ஒரே படியில் எத்தனை காலம் இருக்கலாம்? தொடர்ந்து அதே படியில் காலத்தை ஒட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியுமா? 3 ஆண்டு கல்லூரிப் படிப்பை எடுத்துக் கொள்ளுங்கள். வருடம் முழுவதும் கற்க வேண்டியதைக் கற்று தேர்வை சந்தித்து அடுத்த ஆண்டுக்கு நகரவேண்டும். அரியர்ஸ் வைத்தாலும் அதையும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் அப்பொழுதுதான் பட்டதாரி.

      By the by,

      //நாவிதர் வேறு கீழ் ஜாதி// என்றும் // என்னளவில் முதல்படிநிலையில் இருப்பதாய் நினைத்துக் கொண்டு இருக்கிறேன்.// எழுதுகிறீர்கள். எந்த படிநிலையில் இந்த மேல் கீழ் போன்ற அடைமொழிகளை ஜாதி என்ற வார்த்தையுடன் சேர்க்காமல் இருப்பீர்கள்?

      //நெருக்கிப் பிடித்து ஆராய்ந்தால், பித்தளை பல் இளிக்கக் கூடும்//
      //கோவில், நாலாயிரம் போன்ற தொல்லையற்ற மனதிற்குகந்த விஷயங்களை, கொள்கை காரணமாக துறப்பது எங்கனம்?//
      என்றெல்லாம் எழுதுகிறீர்கள். இதைத்தான் வினவு பார்ப்பணீயம் என்கிறது. என்னைப் பொறுத்த வரையில் இவ்வார்த்தையில் உள்ள ‘பார்ப்’பை எடுத்துவிட்டு வேறு பொதுவான வார்த்தையைக் கண்டுபிடிக்க வேண்டும்.

      //பெட்டைப் புலம்பல்//
      இதை ஆணீயம் எனலாம்.

      • // ஒருவர் ஒரே படியில் எத்தனை காலம் இருக்கலாம்?

        பள்ளி அளவில் படிப்பை நிறுத்துவோர் உண்டு. கல்லூரி, முதுகலை, எம் ஃபில் என செல்வோர் உண்டு. முதல் படிநிலையை அடைவது முக்கியம். எல்லாரும் இப்படிநிலையை அடைந்து விட்டால், அடுத்த படிநிலைகளுக்கு தேவை இல்லாமல் போய் விடும்.

        • Venkatesan,

          //எல்லாரும் இப்படிநிலையை அடைந்து விட்டால், அடுத்த படிநிலைகளுக்கு தேவை இல்லாமல் போய் விடும்.//

          எப்படி? விளக்கவும்.

          • எழுதப் படிக்கத் தெரியாதவர் அதிகமுள்ள சமூகத்தில், தன்னளவில் எழுதப் படிக்க கற்றுக் கொள்வது முதல் படிநிலை. பின்பு, அடுத்தவர்க்கு சொல்லிக் கொடுப்பது அடுத்த படிநிலை. இவ்வாறு செய்வதற்கு இடையூறு செய்வோரை, மொத்தியெடுப்பது அடுத்த படிநிலை. எல்லாரும் எழுதப் படிக்க கற்றுக்கொண்டு முதல்படிநிலையை அடைந்தபின், அடுத்த படிநிலைக்கான தேவையற்றுப் போய்விடும்.

            • Venkatesan,

              //எல்லாரும் *** முதல்படிநிலையை அடைந்தபின், அடுத்த படிநிலைக்கான தேவையற்றுப் போய்விடும்.//

              3 படிநிலைகள் இருப்பதாக கூறியது நீங்கள்தான்.

              ஒரே படிநிலையிலேயே நின்று விட முடியுமா என்று கேட்டவுடன், எல்லோரும் முதல் படிக்கு வந்தால் மற்றபடிகளுக்கு அவசியமே இருக்காது என்று சமாளிக்கிறீர்கள். (கூடவே தற்போது முதல்படிக்கே பல படிநிலைகளையும் அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்)

              அப்படியென்றால் மற்ற இரண்டு படிகளில் நடப்பதாக நீங்களே கூறிய செயல்களும் மாற்றங்களும் எப்படி நடக்கும்?

              குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் படிகளை அடையாமல் மற்றவர்கள் முதல் படிக்கு எப்படி வருவார்கள்?

              • முதல் படிநிலை முக்கியம். அடுத்த கட்ட நகர்வுக்கு கால நிர்ணயம் குறித்தோ, கழுத்தில் கத்தி வைத்தோ செய்ய முடியாது. அடுத்த கட்டத்துக்கு நகர்பவன் உயர்ந்தவன். அதற்காக, முதல் படிநிலையில் நிற்பவன் தாழ்ந்தவன் ஆகிவிட மாட்டான். நான் முதல் படிநிலையை அடைந்தால், அடுத்த படிநிலைக்கு சென்றவனுக்கு, என்னை தூக்கி விடும் வேலையாவது மிச்சம் இல்லையா?

              • // அப்படியென்றால் மற்ற இரண்டு படிகளில் நடப்பதாக நீங்களே கூறிய செயல்களும் மாற்றங்களும் எப்படி நடக்கும்? குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் படிகளை அடையாமல் மற்றவர்கள் முதல் படிக்கு எப்படி வருவார்கள்? //

                நிச்சயமாக, அதிலென்ன சந்தேகம்? இந்தப் பிரச்சனை மட்டுமல்ல, எந்தப் பிரச்சனையிலுமே, இப்படிப்பட்டர்வர்கள் தேவை. இவர்கள் உயர்ந்தவர்கள். ஆனால், எதிலுமே, அடுத்த படிநிலைகளுக்கு முன்னேறுவது கடினம். எனவே, அப்படிச் செய்தாவர்களை இகழ்வதும் தவறு. மற்ற பல பிரச்சனைகளை முன்வைத்து பல உதாரணங்கள் தோன்றுகின்றன. கிளைக்கதைகளாக பிரிந்து விவாதம் நீண்டு விடுமென்று அச்சம். ஒரு வார்த்தையில் முடித்துக் கொள்கிறேன். முத்துக்குமார், அவர் முனைந்த பிரச்சனையில், உயிர் தியாகம் செய்தார். அவர் உயர்ந்தவர். இப்பிரச்சனையில் ஈடுபாடு கொண்ட மற்றவர்கள் அவ்வாறு செய்யவில்லை என்பதால், அவரை அளவுகோலாக வைத்து இந்த மற்றவரை இகழ முடியாது.

                என் சிந்தனைக்கு முதல் படிநிலை முக்கியம் எனத் தோன்றுகிறது.

      • Venkatesan,

        //‘பார்ப்’பை எடுத்துவிட்டு வேறு பொதுவான வார்த்தை//

        இதைப்பற்றி மேலும் சிறிது யோசித்துப் பார்த்தேன். குறிப்பாக இந்திய சூழ்நிலையில்.

        இந்த ஈயத்தை வளர்ப்பவர்கள், பராமரிப்பவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்களாகவே இருக்கிறார்கள். அதனால் பயனடைவதில் முதலில் இருப்பவரும் அவர்களே. எ.கா. 108 தலங்களின் பட்டியலை தயாரித்தது பார்ப்பனர்களாகத்தான் இருக்கவேண்டும். அப்படி ஒரு பட்டியல் உண்டு என்று நான் அறிந்ததே ஒரு பார்ப்பனரின் பின்னூட்டத்தைப் படித்துத்தான். அதைப்பற்றி கேள்விபட்டவர்கள் தாங்களும் அவை எல்லாவற்றையும் பார்த்து விடவேண்டும் என்று கிளம்பினால் அதனால் அதிகம் பயனடைவதும் பார்ப்பனர்களே. அதனால் இந்த ஈயத்தை இந்திய சூழ்நிலையில் பார்ப்பணீயம் என்று அழைப்பதில் சொற்குற்றமோ அல்லது பொருள் குற்றமோ இல்லை.

        • இந்தக் கோவில்கள் எல்லாம் பணக்கார கோவில்கள் இல்லை. பலவும் கிராமப்புறங்களில் அதிக வருமானமற்று உள்ளன. இவை பெரும்பாலும் நல்ல வேளையாக அரசு நிர்வாகத்திடம் உள்ளன. அங்குள்ள பார்ப்பன பூசாரிகள் பக்தர்களை அடித்துப் பிடுங்கினால், அரசு தலையிட்டு சரி செய்ய முடியும். மேலும், சாமி கும்பிட்டுவிட்டு, நாலாயிரம் பாடிவிட்டு திரும்பி விடலாம். அப்பூசாரிகளுக்கு பணம் தந்து பூஜை புனஸ்காரம் செய்ய வேண்டுமென்ற நிர்பந்தம் ஏதுமில்லை. பக்தர்கள் அங்கு செல்வது சாமி கும்பிடத்தானே தவிர, பார்ப்பனர் ஒருவர் பூசாரியாய் இருக்கிறார் என்ற காரணத்தினால் அல்ல. அனைவரும் அர்ச்சகர் நிலை வரும்போது இப்பிரச்சனை முழுதும் விலகும். இந்த நோக்கத்தோடு நான் முழுதும் உடன்படுகிறேன்.

          • Venkatesan,

            //அனைவரும் அர்ச்சகர் நிலை வரும்போது இப்பிரச்சனை முழுதும் விலகும். இந்த நோக்கத்தோடு நான் முழுதும் உடன்படுகிறேன்.//

            According to your stages, I think this is first stage.

            If at all you develop to next stage, (You said you are afraid of Khakis), will you at least donate to Vinavu so that it can do better its legal and other battle?

            • முதலில் தயங்கினாலும், சிறிது நேரம் யோசித்த பின், உங்கள் கேள்விக்கு நேரடி பதில் சொல்வது இங்கே பொருத்தமாய் இருக்கும் என்று தோன்றுகிறது.

              செய்திருக்கிறேன். இப்பிரச்சனையில் மட்டுமல்ல, தொடர்பான வேறொன்றிலும். ஆனால், டொனேஷன் கொடுப்பது என்பது பிரச்சனையற்ற எளிய விஷயம். “சட்டையில என்ன, பூனை சார்” என்ற ரீதியில்தான் பார்க்க முடியும். அதிகபட்சம் போனால், இதை செயல் எனப்படும் இரண்டாம் படிநிலையின் தொடக்கத்தில்தான் வைக்க முடியும் என்பது என் எண்ணம்.

              • Venkatesan,

                //செய்திருக்கிறேன்//

                நன்று.

                //சட்டையில என்ன, பூனை சார்//

                புரியவில்லை. விளக்க முடியுமா?

                • ஓ! பெருசா ஒண்ணும் இல்லை. தில்லு முல்லு படத்தில் வரும் வசனம் அது. தேங்காய் சீனிவாசன் இண்டர்வியூ நடத்தும் காட்சியில் வரும். நினைவில்லையா? சப்பை மேட்டரில் சொல்லிக்கொள்ள ஏதுமில்லை என்பது உட்பொருள்!வடிவேலு பட வசனங்கள் அளவுக்கு, இந்தப் பயன்பாடு பிரபலமாகவில்லை!

Leave a Reply to Venkatesan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க