privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்நான்தான் பாலா – நமத்துப் போன காயத்ரி மந்திரம்

நான்தான் பாலா – நமத்துப் போன காயத்ரி மந்திரம்

-

ந்தானம் வகைப்பட்ட ‘சவுண்டு’ காமடி படையெடுப்பில் காணாமல் போன விவேக், நாயகனாய் விசுவரூபமெடுத்திருக்கும் திரைப்படம் “நான்தான் பாலா”.

நான்தான் பாலா - வினவு 2டைட்டில் காட்சியில், “பத்மஸ்ரீ விவேக்” வந்ததுமே “சின்னக் கலைவாணர்” பட்டம் விலக்கப்பட்டது குறித்த கேள்வி எழுந்தது. அநேகமாக இந்த பட்ட மாற்றம் முன்னாடியே கூட நடந்திருக்கலாம், நமக்கு தெரியவில்லை.

சின்னக் கலைவாணர் பட்டத்தை பெருமையாக பார்த்த நாட்களில் கூட விவேக்கின் நகைச்சுவை பாதுகாப்பாகவே இருக்கும். அல்லது பாதுகாப்பை நோக்கிய பரிமாணத்தில் இருந்தது. சாதி, மத இன்னபிற சமூக பிரச்சினைகளில், நகைச்சுவைக்கு முடிவில்லா கற்பனை வாய்ப்பிருந்தாலும், குறிப்பிட்ட பிரிவினரை எந்த எல்லை வரை கிண்டல் செய்யலாம் என்பது அந்த கற்பனையை, புத்தாக்கத்தை கட்டுப்படுத்துகிறது. அந்த கட்டுப்பாட்டை மீற வேண்டும், ஏற்றத்தாழ்வுகளிலிருந்து மக்களை மீட்க வேண்டும், அறுவை சிகிச்சைக்கு பயம் எதற்கு என்ற தைரியமெல்லாம் நகைச்சுவையின் சமூக பொறுப்போடு தொடர்புடையது.

அது இல்லாமல் வெறுமனே கிச்சு கிச்சு மூட்டும் ஏட்டிக்கு போட்டியான முரண்பாடு போல பார்த்தால் அதில் சப்தம் இருக்கலாமே ஒழிய சரக்கு இருக்காது. சந்தானம் வரவில்லை என்றாலும், சொல்வதற்கு புதிதாக ஒன்றுமில்லை என்ற நிலையை விவேக் என்றோ அடைந்து விட்டார்.

“சாமி” போன்ற படங்களில் முற்போக்கு பார்ப்பனராக நடித்த விவேக் இங்கே அதையே சிவாஜி வகை சீரியஸ் பாத்திரமாக, நாயகனாக நடித்திருக்கிறார். ஏழைகளின் அவலத்தை விட பண்ணையார்களின் கருணையை காட்டினால் அடிமைத்தனத்தில் ஊறியிருக்கும் மக்களால் வரவேற்கப்படும் என்பதே “பா’ வரிசைப் படங்களின் வரலாற்றுக் காலம் உருவாக்கியிருக்கும் சித்திரம்.

எனினும் இன்றைக்கு பண்ணையார்களின் இடம் பொருளாதார அளவில் குலையவில்லை என்றாலும், கருத்தளவில் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அந்த யதார்த்தத்தை படத்தின் இயக்குநரோ இல்லை நாயகனோ அறிந்து வைத்திருக்கவில்லை.

சமூக மாற்றம் குறித்த பகத்சிங்கின் புரட்சிப் பார்வைக்கும், காந்தியின் சீர்திருத்த பார்வைக்கும் உள்ள வேறுபாடுகளை மேலோட்டமாக புரிந்து வைத்திருக்கும் அறிஞர் பெருமக்கள் கூட இதில் எந்த பார்வைக்கு வாய்ப்பும், வளர்ச்சியும், எதிர்காலமும் உண்டு என்று ஆய்ந்து தெளிவதில்லை. ஆகவே மேன்மக்களால் பயிற்றுவிக்கப்படும் சமூக மாற்றம் ஒரு தேங்கிய பிற்போக்காகத் தெரியாமல், ஜோடனையான வளர்ச்சியாக மட்டும் தெரிவது ஆச்சரியமல்ல.

கும்பகோணம் பெருமாள் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றுகிறார் விவேக். தட்டில் காணிக்கையை போடுமாறு அடம்பிடிக்கும் தஞ்சை கோவில்களின் அர்ச்சகர் போலன்றி தட்டில் போடக்கூடாது, உண்டியலில் போடுங்கள் என்று விளக்கம் சொல்பவர். இப்படி ஆரம்பத்திலேயே விவேக் அநியாயத்திற்கு நல்லவரான ஒரு பார்ப்பன பூசாரி என்பது பதிய வைக்கப்படுகிறது. இதனாலேயே இந்த நல்லவர் அடுத்தடுத்த காட்சிகளில் என்ன பேசுவார், செய்வார் என்பது ஒரு சில குறியீடுகளைப் பார்த்த உடனேயே புரிந்து விடுகிறது. மேலே குறிப்பிட்ட பண்ணையார் வகை கருணையை நோக்கி கவனம் குவிக்கும் படமிது என்பதும் உரக்க அறிவிக்கப்படுகிறது.

நான்தான் பாலா - வினவு 3இதை, ஏதோ படத்தை விறுவிறுப்பு இல்லாமல் எடுத்ததன் விளைவு என்று குமுதம் – விகடன் விமரிசனங்களை படித்து சினிமா ஆய்வை செய்து வரும் மொக்கைகள் வேறுபாடின்றி எழுதலாம். அப்படி இல்லை. ஒரு நல்லவனின் போராட்டத்தில், நல்லதை அடைவதற்கு தன்னிடமுள்ள கெட்டவைகளை அவன் எப்படி சிரமப்பட்டு இழந்தான் என்பதை ஆழமாக உணரும் பட்சத்தில் அங்கே கிளிஷே காட்சிகளுக்கும், கிளி ஜோசியத்திற்கும் இடமில்லை. ஆனால் சமூக இயக்கத்தை இப்படி ஃபார்முலாவாக பார்க்கும் நமது இயக்குநர்களில் பெரும்பாலானோர் சுட்டுப் போட்டாலும் அதன் உயிர்ப்பை உணர்ந்தவர்கள் அல்லர்.

அதனால்தான் இந்த படம் செயற்கையாக நகர்கிறது. தலித் வக்கீல் ஒருவரது வீட்டிற்கு விவேக் செல்கிறார். வெளியே அம்பேத்கர் படம். வழக்கமாக சினிமா போலிஸ் ஸ்டேசன்களில் இருக்கும் அம்பேத்கர் படம் இங்கே இருப்பதே, குறியீடாய் அந்த வக்கீல் என்ன சாதி என்பதை சொல்லி விடுகிறது. அதனால் அடுத்து மனதை உருக்கும் காட்சி ஒன்று வரப்போகிறது என்றும் தெரிந்து விடுகிறது.

வீட்டிற்கு வெளியே நின்று பேசும் விவேக், வக்கீல் அம்மாவிடம் குடிநீர் வாங்கி குடிக்கிறார். ஐயர் பிள்ளை நம்ம வீட்டில் குடிக்கும் ஆச்சரியம் குறித்து அம்மாவும், மகனும் குற்ற உணர்வில் இருக்க, “இதிலென்ன வேறுபாடு, எல்லாரும் பகவானது குழந்தைகள் (அரிஜன்)” என்று நெகிழாமல் சாதாரண லா பாயிண்டாக சொல்கிறார் விவேக். அவ்வளவு ஊறிப்போன விசயமாம் அது.

சேரிப் பிரிவினை, தீண்டாமை கொடுமைகள் காரணமாக வாழும் தலித் மக்கள், ஒரு பார்ப்பனரின் பெருந்தன்மை பார்த்து பரவசப்படுகிறார்கள். குற்ற உணர்வு அடைய வேண்டிய பார்ப்பனர்களோ பெருமித உணர்வு அடைகிறார்கள். பாதிப்பு அடைந்த பிரிவினர் கூட பாதிப்பு உருவாக்கிய பிரிவினரின் ‘கருணையை’ சிலேகிக்கும் இந்த காட்சிகள் உண்மையில் பெரும் வன்முறையை நியாயப்படுத்துகிறது.

எளிமையாக சொல்வதென்றால் சேரி, ஊர், அக்ரகாரம் பிரிவினை மூலம் தீண்டாமை தொடங்கி தெய்வம் வரை பிரிவினைகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் உருவாக்கி காத்து வரும் பார்ப்பனியம் தனது ஆன்மாவை மறைத்து இவையெல்லாம் பார்ப்பனியம் அல்ல, நல்ல பார்ப்பனியம் வேறு என்று சொன்னால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இந்த படமும். இதையே நல்ல இந்துமதம் என்று ஆர்.எஸ்.எஸ் சிலாகிக்கிறது. இந்த அணுகுமுறையில் இருப்பது அந்த கொடுங்கரத்தை கொடுத்துச் சிவந்த கரம் என்று மாற்றும் தந்திரமே அன்றி வேறல்ல.

நான்தான் பாலா - வினவு 5திருட்டு பட்டம் சுமத்தப்பட்டு பின்னர் தற்கொலை செய்து கொண்ட விவேக்கின் பெற்றோர், அதனால் அவர்களை வெளியேறச் சொல்லும் அக்ரஹாரம் என்று படம் முழுவதுமே இந்த முற்போக்கு பார்ப்பனர், தான் யார் என்பதை உரக்கச் சொல்கிறார். சோவின் எங்கே பிராமணன் இந்த இடத்தில் நினைவு கூர்வதற்கு பொருத்தமானது. நாம் விமரிசிக்கும் எவையும் உண்மையான பிரமாணர்களின் அழகல்ல, அவர்கள் வேறு என்று சோவோ இல்லை இந்த படமோ திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறது. அதைக் கொஞ்சம் செண்டிமென்டாகவும், மாடி வீட்டு மனிதர்களின் வள்ளல்தனமாக காட்டும் போது ஒடுக்கப்படும் பிரிவினர்கள் கூட ஒடுக்கப்படுதலின் கருணை முகம் கண்டு ஏமாறலாம்.

காஞ்சிபுரத்தில் இருக்கும் காட்டூரான் எனும் தாதாவின் அடியாளான பூச்சி, கும்பகோணம் சென்று ஒரு கொலை செய்து விட்டு தற்செயலாய் விவேக்கை சந்திக்கிறான். கோர்ட்டில் அபராதம் கட்டி தந்தையை மீட்பதற்கு வழியில்லாமல் பெருமாளிடம் புலம்பும் விவேக் நிலையை பார்த்து பூச்சி பண உதவி செய்கிறான். பிறகு பெற்றோர் இறந்ததும், அந்த ரவுடியின் பணத்தை ஒப்படைக்க கும்பகோணத்தில் இருந்து காஞ்சிபுரம் பயணிக்கிறார் விவேக்.

வரதராஜ பெருமாள் கோபுரத்தின் அருகே மாடி வீட்டு அறையில் இருக்கும் பூச்சி, அங்கேயே விவேக்கை தங்கச் சொல்லி நட்பாகிறான். பிறகு போளி விற்கும் பெண்ணுடன் விவேக் காதல், பூச்சி செய்த கொலை குறித்து விசாரிக்கும் போலீஸ் விவேக்கிடம் பேரம் பேசி, பூச்சியை அப்ரூவர் ஆகச் சொல்கிறது. இல்லையென்றால் என்கவுண்டர் என்று சொல்லும் டிஎஸ்பியிடம் வாக்கு கொடுத்து அப்ரூவராக்கும் வேலையை விவேக் செய்கிறார்.

இது தெரிந்து  காட்டூரான், பூச்சியை கொல்ல, விவேக் காட்டூரானை கொன்று ஏழு வருடம் தண்டனை பெற்று பின்னர் காதலியை மணப்பதாக சொல்கிறார். படம் முடிகிறது.

இடையிடையே துரியோதனன், கர்ணன், தர்மம், நட்பு என்று ஏதோதோ பேசி ஏராளமாய் வதைத்து துன்புறுத்துகிறார்கள். ஒரு ஐயங்கார் பூசாரி, ஒரு கொலைகார ரவுடியை திருத்தும் கதை என்று ஒன்லைனை தீர்மானித்து விட்டு கூட இயக்குநர் இதை விரித்திருக்கலாம். நல்லவன் கெட்டவன் நட்பு, போராட்டம் என ஃபார்முலாக்களை வைத்திருக்கும் கோடம்பாக்கத்தின் ஒன்பது கதைகளில் ஒன்றனவும் இதைச் சொல்லலாம்.

கதையின் ஒருவரி செய்தி இதுவென்றாலும் இதை விரிக்கும் போது இயக்குநரின் சமூக கண்ணோட்டமே அதை திரைக்கதையாக கட்டுகிறது. பார்ப்பனியம் மற்றும் ரவுடியிசம், மேல் தோற்றத்தில் வேண்டுமானாலும் சைவம்-அசைவம், சாது-வில்லன், மென்மை-வன்மை என வேறுபடலாம். இதை தனிநபர்களது பிரச்சினை என பார்க்காமல் சமூக இயக்கத்தில் வைத்து பார்த்தால் இந்த பாத்திரங்களின் மேற்கண்ட சித்தரிப்பு எதிர்மறையாகவோ இல்லை ஒற்றுமையாகவோ கூட மாறலாம்.

தமிழகத்தில் சுற்றுலா மற்றும் ஆன்மீகத் தலமாக இருக்கும் ஊர்களில் கோவிலை நம்பி வாழும் பார்ப்பனர்கள், இதர சாதி வணிகர்கள் அனைவரும் ஒரு ரியல் எஸ்டேட் தரகனது அனைத்து மோசடிப் பண்புகளையும் ஒருங்கே கொண்டிருப்பார்கள். அதிலும் கோவிலின் மையமான பூஜை புனஸ்காரத்தை கையில் வைத்திருக்கும் பூசாரிகள், கோவிலுக்கு வரும் முதலாளிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் தொடர்பில் இருப்பதால் அவர்களது பார்வை, அணுகுமுறை அனைத்தும் ஒரு அதிகாரத் திமிர் கொண்ட போலிஸ்காரனது போலவும் இருக்கும்.

நான்தான் பாலா - வினவு 1கோவில்கள் நகரமான கும்பகோணத்தில் இருக்கும் பார்ப்பனர்கள் மேற்கண்ட இலக்கணத்தைவிட இன்னும் தீவிரமானவர்கள். நஞ்சை வளம், கலை இலக்கிய பண்பாட்டு வளம் இன்ன பிற வாழ்க்கை வசதிகளால்  மற்ற பார்ப்பனர்களை விட எங்கேயும் தமது இடம் என்று முடிவு செய்யும் ஒன்றை விடாமல் பறித்துக் கொள்வார்கள். மதம், அரசு மற்றும் சுற்றுலா வருமானம் அனைத்தும் உருவாக்கிய அதிகாரத்தில் திளைத்தவர்களது பண்பை ஓரிரு வார்த்தைகளில் சுருக்கிவிட முடியாது.

அப்பேற்பட்ட கும்பகோணத்தில் ஒரு ஒதுக்கப்பட்ட மடமாக இருந்து காஞ்சிபுரத்திற்கு மாறியதுதான் காஞ்சி சங்கரமடம். இந்த மடம் ஆதிசங்கரரால் உருவாக்கப்பட்ட ஒன்றல்ல, திருட்டு மடம் என்று மற்ற சங்கரமடங்கள் கூறிவருகின்றன. என்றாலும் இந்திய ஆளும் வர்க்கத்தின் ஆஸ்தான குரு போன்ற இடத்தை இந்த மடம் சில பல ஆண்டுகளுக்கு முன்னர் பிடித்தது. இன்றைக்கும் செத்துப்போன சீனியர் சங்கராச்சாரியின் படத்தையும், வார்த்தைகளையும் பிதுக்கித்தான் பக்தி இதழ்கள் பிழைக்கின்றன. அதே நேரம் அவரது பிரச்சினைக்குரிய சூத்திர – தமிழ் – பெண்கள் சம்பந்தமான அருள்வாக்குகளை அவர்கள் வெளியிடுவதில்லை.

இப்பேற்பட்ட எவர்கிரீன் சீனியர் கண்டுபிடித்த ஜெயேந்திரன் எனும் ச.சாரிதான் சங்கரராமன் எனும் கேள்வி கேட்ட பார்ப்பனரை இல்லாதொழிக்கிறார். அந்த வழக்கையும் இல்லாத ஒன்றாக்கி விட்டார். பூச்சி எனும் ரவுடியை திருத்தும் பாலா எனும் ஐயங்காரின் கதையை இங்கே பொருத்தி பாருங்கள். பூச்சி குடியிருக்கும் மாடிக்கு அருகில் இருக்கும் வரதராஜபெருமாள் கோவிலின் வளாகத்தில்தான் சங்கரராமன் கொடூரமாக கொல்லப்பட்டார். அப்பேற்பட்ட பெருமாளை சாட்சியாக வைத்தும், ஆசீர்வாதத்தோடும்தான் ஒரு ரவுடி திருத்தப்படுகிறார் என்றால் என்ன சொல்ல?

இங்கே லோக குரு என்று போற்றப்பட்ட ஒரு ச.சாரி கூலிக்கு கொலை செய்யும் கும்பலை அமர்த்தி, மடத்திற்கு வரவழைத்து ஆசிர்வாதம் மற்றும் காணிக்கை கொடுத்து கோவிலில் வைத்து கொன்றிருக்கிறார் என்றால் இதை எப்படி புரிந்து கொள்வது?

தயிர்சாதம் மற்றும் நெய் பொங்கல் சாப்பிட்டு சாத்வீக குணம் கொண்டிருக்கும் ஒரு பார்ப்பனர் அசுர குணத்திற்குரிய கொலையை செய்வது சாத்தியமா என்று கேட்கலாம். இந்த கேள்விக்கு விடை வேண்டுவோர் பார்ப்பனியம் என்றால் என்ன என்பதைப் புரிந்திருப்பது நல்லது.

இசுலாமியரை விமரிசிக்க வேண்டுமென்றால் அவர்களை பொதுவாக விமரிசக்காமல், டிஎன்டிஜே போன்று  பேர் குறிப்பிட்டு விமரிசிக்கும் போது பார்ப்பனியத்தை மட்டும் நபர்கள் வாரியாக பிரித்து விமரிசிக்காமல் பொதுவாக விமரிசிப்பது சரியா என்று கேட்டிருந்தார் ஒரு நண்பர். மதங்களை விமரிசக்கும் வினவு பாரபட்சமாக இருக்கிறது என்பதாக இந்த விமரிசனத்தில் அவர் சொல்கிறார்.

முதலில் இந்த நண்பர் கூறியிருப்பது போன்றுதான் வினவு எழுதுகிறது என்பதை ஒத்துக் கொள்கிறோம். ஏன்?

பார்ப்பனியம், இஸ்லாம் இரண்டையும் பிரிப்பது எது என்பதிலிருந்து அதை பார்க்கலாம். ஓரிறைக் கொள்கை, உருவ வழிபாடு கிடையாது போன்ற இறைவன் குறித்த மதக் கொள்கை தவிர்த்து வாழ்க்கை குறித்த சட்டங்களில் இசுலாத்திற்கு என்று ஒரே மாதிரியான கொள்கை கிடையாது. புர்கா போடுவது, போடக்கூடாது, இசை கேட்கலாம், கூடாது, திருப்பதி லட்டு சாப்பிடலாம், கூடாது, இனம்-சாதி-பிரிவினைக்கேற்ப மணமுடிக்கலாம், கூடாது என்று நாட்டுக்கு நாடு இது வேறுபடுகிறது. வகாபியிஸ்டுகளும், டிஎன்டிஜேக்களும் இதற்காக கரடியாக கத்தினாலும் அப்படி ஒரு வாழ்வியல் ஒற்றுமையை யாரும் கொண்டுவர முடியாது.

இசுலாமிய நாடான வங்கதேசத்தின் பெண் சபாநாயகர், மோடியுடன் கைகுலுக்குகிறார், பாக் அணி கிரிக்கெட் ஆடும் போது பாக்கிஸ்தான் மாநகர முசுலீம் பெண்கள் ஜீன்ஸ் போட்டுக் கொண்டு கைதட்டுகிறார்கள், துனிசியா நாட்டை சார்ந்த வாலிபால் பெண்கள் அணி மேற்கத்திய அணிகளின் உடை பாணிகளோடு ஆடுகிறார்கள் என்று இதற்கு ஏராளம் ஆதாரங்களைச் சொல்லலாம்.

ஆனால் பார்ப்பனியத்தைப் பொறுத்த வரை இறை குறித்த கொள்கைகளில் – ஓரிறை, பல கடவுள்கள், உருவ வழிபாடு, உருவ வழிபாட்டை மறுக்கும் இறை நம்பிக்கை, வேதத்தை ஏற்று கடவுளை மறுக்கும் நாஸ்திகம் – என்று பல வேறுபாடுகள் இருந்தாலும், ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், வாழ்வியல் குறித்த கொள்கைகளில் பிரிவினையோ, அனுமதியோ கிடையாது. அதாவது ஏற்றத் தாழ்வான சாதிகளாய் பிரித்து வைத்து ஒரு சமூகத்தை சுரண்டும் அடிப்படை அம்சமே பார்ப்பனியத்தின் உயிர்நாடி. இதை ஏற்றுக் கொள்பவர்கள் நாத்திகர்களாக இருந்தாலும் அவர்களுக்கு பிரச்சினை இல்லை.

மறுத்தால் பார்ப்பனியத்தை ஆளும் வர்க்க சித்தாந்தமாக கொண்டிருக்கும் அரசுகள், சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்கும். அதனால்தான் பார்ப்பன இந்துமதத்தில், மதம் சம்பந்தமான அம்சங்கள் இல்லை என்றும், கிரிமினல் சட்ட விதிமுறைகள் மட்டுமே இருப்பதாக அம்பேத்கர் விளக்கினார்.

இறை வழிபாடு, உடை, உணவு குறித்த அம்சங்களில் ‘இந்துக்கள்’ வேறுபட்டாலும், வருணாசிரம தர்மம், சாதி எனும் சமூகக் கட்டமைப்பை ஏற்பதில் ஒன்றுபடுகின்றனர். இறை வழிபாடு தவிர்த்த மற்ற அம்சங்களில் இசுலாமியர்கள் வேறுபடுகின்றனர். ஆகவே இரண்டிலும் எது பிரதானமானது என்பதை வைத்தே ஒன்றில் தனிநபர்கள், இயக்கமாகவும், மற்றதில் ஒட்டு மொத்த அமைப்பையே விமரிசித்தும் எழுத வேண்டியிருக்கிறது.

இந்த வேறுபாட்டிற்கும் படத்திற்கும் என்ன தொடர்பு?

சாதி ஏற்றத் தாழ்வுதான் ஒரு மதத்தின் அடிப்படை எனும் போது அந்த அடிப்படையை சித்தாந்தரீதியாக ஷத்ரியர்கள் உள்ளிட்ட ஆளும் வர்க்கத்திற்காக உருவாக்கியும், காப்பாற்றியும் வருவதில் அறிவுத் துறை வேலை செய்து வருகின்ற மேல் பிரிவினரான பார்ப்பனர்களின் நல்ல பண்பு என்றால் என்ன என்பதே நமது கேள்வி!

சாதி பிரிவினையை வர்க்கமாக பார்த்தால் ஏழைகள், ஏழைகளாக இருந்தே ஆகவேண்டும் என்ற விதியை மதம், அரசு இதர தடிக்கம்புகளால் அமல்படுத்துகிற ஒரு பார்ப்பனரிடம் மனித நேயம் எப்படி என்னவாக இருக்கும் என்பதே நமது கேள்வி! பணக்காரர்களின் நலனுக்காக இயங்குவதையே தனது இருத்தலின் நியாயம் என்று கருதுகிற பார்ப்பன இந்துமதத்தில் ஏழைகளின் நியாயத்தை ஒரு பார்ப்பனர் எப்படி ஏற்பார்?

ஒருக்கால் ஏற்கிறார் என்றால் அது விவேக் போல இருக்குமா? நிச்சயம் இருக்காது. இப்படத்தில் விவேக் சித்தரிக்கும் பாத்திரம் இதுதான் உண்மையான பார்ப்பனியம் என்பதாகவும், கேடுகளுக்கு காரணம் அதை புரிந்து கொள்ளாத தனிநபர்களின் பிரச்சினை என்றும் திரிப்பதை ஏற்கனவே பார்த்து விட்டோம்.

பார்ப்பனிய இந்து மதத்தினை புரிந்து கொண்டு மாற நினைக்கும் ஒருவரது முதல் உணர்ச்சியே தனது சமூக அந்தஸ்தால்  தான் அடைந்த சலுகை குறித்த குற்ற உணர்ச்சிதான். இந்த சலுகைகள் மற்ற மக்களின் உரிமைகளை பறித்துத்தான் கிடைத்தது என்பதை அவர் உணர ஆரம்பிக்கிறார். இப்படித்தான் இன்னபிற நம்பிக்கைகள், சடங்குகள், சம்பிரதாயங்களில் இருந்து அவர் மாறுகிறார். ஒடுக்கப்படும் மக்களின் போராட்டங்களோடு இணைந்து கொள்கிறார். இதை பார்ப்பனர்களுக்கு மட்டுமல்ல ஏனைய சாதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் பொருந்தும் என்பதை விளக்கத் தேவையில்லை. எனினும் சாதிகளின் படிவரிசைக்கேற்ப இந்த மாற்றத்தின் அளவு மாறுபடும். ஆதலாம் மாற நினைக்கும் ஒரு பார்ப்பனர் இந்த அறுவை சிகிச்சையை செய்யாமல் மனிதனாக மாற முடியாது.

இருப்பினும் பார்ப்பனியத்தை விமரிசிக்கும் போதெல்லாம் சில வாசகர்கள் அப்பாவி பார்ப்பனர்களையும் சேர்த்து விமரிசிக்கிறீர்களே என்று கேட்கிறார்கள். பார்ப்பனியத்தின் ஏற்றத் தாழ்வான அநீதியான இந்த சமூக அமைப்பை ஏற்கவில்லை என்று ஒருவர் மனமுவந்து வரும் போது பார்ப்பனியம் எனும் அடையாளத்தில் தன்னை வைத்து பார்க்க மாட்டார். மாறாக அப்படி பேசுபவர்களை திருத்தவே முற்படுவார். மறுத்தால் அவர் தனது அடையாளங்களின் ஆதாயங்களை இன்னும் இழக்கத் தயாராக இல்லை என்றே பொருள். அதை உணர எந்த மக்களை பார்ப்பனியம் வதைத்து சிதைத்திருக்கிறதோ அந்த மக்களோடு வாழ்ந்து போராடுவதைத் தவிர வேறு வழியோ மருந்தோ இல்லை.

தனது பிற்போக்கான அடையாளம் சுட்டிக்காட்டப்படும் போது அதை இழப்பதின் அருமையை உணர்ந்தவர்கள் அதை இழப்பாகவோ தியாகமாகவோ உணரமாட்டார்கள். கேன்சர் கட்டிகளை வெட்டாமல் வைத்து அழகு பார்த்து ஆராதிக்க முடியுமா என்ன?

ஆகவேதான் ஜெயேந்திரன் – சங்கரராமன் கதைதான் பார்ப்பனியத்தின் ஆகச்சிறந்த சான்று என்பதால் அதை மறைப்பதற்கு இத்தகைய படங்களோ, இல்லை கதைகளோ, இல்லை ஊடகங்களின் உபதேசங்களோ தேவைப்படுகின்றது.

ஆரம்ப கால படங்களில் சமூக அமைப்பின் ஒரு சில மையங்களை விமரிசித்த விவேக் பின்னர் ஒரு அப்துல் கலாம் வகைப்பட்ட மொக்கையாக மாறியதின் கவித்துவமான நீதி இந்த படம். சிவாஜியின் மிகை உணர்ச்சியை கிண்டல் செய்தவர் பின்பு தானே அப்படி நடிக்க வேண்டியிருக்கும் என்று நினைத்திருக்கமாட்டார்.

இயக்குநர் பாலாவின் சீடரான ஆர்.கண்ணன்தான் இந்தப் படத்தின் இயக்குநராம். உண்மையில் குருவின் கீர்த்திக்கு குறைவில்லாமல்தான் படம் எடுத்திருக்கிறார். ஆனாலும் விவேக் ஐந்து நிமிடம் கழித்து அழுவார் என்று ஐந்து நிமிடத்திற்கு முன்பேயே திரைக்கதையும், இசையும் முன்னுரைக்க, பின்னர் அவர் அழ, ஐந்து நிமிடம் கழித்து ஐயர் அழுதார் என சில பாத்திரங்கள் பேசிக் கொள்ள, இசையும் அதை மீட்ட, வெல்டன் பாலா!

பாஜக ஆட்சியில் “பத்மஸ்ரீ விவேக்”கின் நான்தான் பாலா பொருத்தமாத்தான் வந்துள்ளது. காஞ்சிபுரம் ரவுடியை திருத்திய இந்த கும்பகோணம் ஐயங்காருக்கு அடுத்த தேசிய விருது கிடைக்காதா என்ன?