privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்தொழிலாளிகளை கொத்தடிமையாக்க துடிக்கும் பாஜக !

தொழிலாளிகளை கொத்தடிமையாக்க துடிக்கும் பாஜக !

-

பா.ஜ.கவின் வசுந்தர ராஜே தலைமையிலான இராஜஸ்தான் மாநில அரசு தொழில்துறை தாவா சட்டம் 1947, ஒப்பந்த தொழிலாளர் சட்டம் 1971, தொழிற்சாலைகள் சட்டம் 1948 ஆகிய தொழிலாளர் நலச் சட்டங்களை கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக திருத்துவதற்கான அமைச்சரவை குறிப்பை தயாரித்திருக்கிறது. இது தொடர்பான மசோதாக்களை அடுத்த மாதம் மாநில சட்டசபையில் தாக்கல் செய்து, பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப உள்ளது.

ஒப்பந்த தொழிலாளர்கள்
குறைந்த கூலிக்கு அதிக உழைப்பு சுரண்டப்படும் ஒப்பந்தத் தொழிலாளிகள்

90 சதவீதத்துக்கு மேற்பட்ட இந்திய உழைக்கும் மக்கள் முறைப்படுத்தப்படாத துறைகளில் நிரந்தரமற்ற வேலைகளில் பணிபுரிந்து வாழ்க்கை போராட்டத்தை நடத்தி வருகின்றனர். உதாரணமாக 1990-களுக்குப் பிறகு, வேலை வாய்ப்புகளை வாரி வழங்குவதாக விளம்பரப்படுத்தி, கொண்டு வரப்பட்ட வாகன உற்பத்தித் துறையில் 56 சதவீதம் பேர் ஒப்பந்த தொழிலாளர்கள். உற்பத்தித் துறை முழுவதையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் 52 சதவீதம் தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். ஒப்பந்த தொழிலாளிகள் என்பது வெறுமனே பெயர்ச்சொல் மட்டுமல்ல, குறைந்த கூலிக்கு அதிக உழைப்பை சுரண்டும் ஒரு வினைச் சொல்லும் கூட.

கடந்த 10 ஆண்டுகளாக நிரந்தரத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவது கணிசமாக குறைந்திருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் முறைசாரா துறையிலேயே 100% வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 2013-ம் ஆண்டு மட்டும் ஒப்பந்த வேலை வாய்ப்புகள் 39% அதிகரித்தன. நிரந்தர வேலை வாய்ப்புகள் அதிகரிக்கவே இல்லை.

தாங்கள் விரும்பியபடி நினைத்த நேரத்தில் தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கும் உரிமை வேண்டும் என்றும் தொழிலாளர் நலச் சட்டங்கள்தான் இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சிக்கு தடையாக உள்ளன என்றும் தொழிலாளர் நலச் சட்டங்களின் காரணமாக இயந்திரங்களை அதிகமாக பயன்படுத்த வேண்டியிருக்கிறது என்றும் முதலாளிகள் கூறுகின்றனர்.

ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்ற பெயரில் ஆகக் குறைந்த பட்ச கூலி கொடுத்து வேலைக்கு அமர்த்திக் கொள்ளும் உரிமை வேண்டும்; விரும்பிய நேரத்தில் வேலைக்கு அமர்த்திக் கொள்ள வேண்டும்; பற்றாக்குறை கூலிக்கு எதிராகவோ, வேலை நேர அதிகரிப்பை மறுத்தோ, பாதுகாப்பற்ற பணிச்சூழலை கண்டித்தோ முணு முணுத்தால் கூட வீட்டுக்கு அனுப்பும் அதிகாரம் வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், உரிமைகளற்ற கொத்தடிமைகளாக தொழிலாளர்களை வேலை வாங்கி தமது லாப வேட்டையை நடத்துவதற்கு ஏற்றபடி சட்டங்கள் திருத்தப்பட வேண்டும். இதுதான் முதலாளிகளின் விருப்பம்.

சிறுதொழில்கள்
அழிக்கப்படும் சிறுதொழில்கள்

சட்டங்கள் அவர்களது விருப்பத்துக்கு மாறாக இருந்தாலும், அவற்றை மயிரளவுக்குக் கூட மதிக்காமல் பழகுனர்கள், பயிற்சியாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் என தொழிலாளர்களை சட்ட விரோதமாக சுரண்டி வரும்  முதலாளிகள் தற்போது இந்த சட்டங்களையே ஒழித்துக் கட்ட கோருகின்றனர்.

சட்டவிரோதமாக தொழிலாளர்களை சுரண்டும் முதலாளிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தொழிலாளர் நலத் துறை முதல் அடிமட்ட காவல் துறை அதிகாரிகள் வரை அவர்களது எச்சில் காசை பொறுக்கி பிழைத்து வருகின்றனர். தொழிலாளர் நலச் சட்டங்களை புறக்கணிப்பதில் நாட்டிலேயே முதல் இடம் வகிப்பது, மோடி ஆண்ட குஜராத் மாநிலம்தான் என்பதும், மோடி கார்ப்பரேட்டுகளின் டார்லிங் ஆக இருப்பதும் தற்செயலானவை அல்ல.

இந்நிலையில் குஜராத்தில் ஒளிரும் வெளிச்சத்தை இந்தியா முழுவதும் ஏற்றப் போவதாக பிரச்சாரம் செய்து மத்தியில் ஆட்சியைப் பிடித்திருக்கிறது, மோடி தலைமையிலான பா.ஜ.க. பெயரளவில் மிஞ்சியிருக்கும் பணி பாதுகாப்பு சட்டங்களையும் ரத்து செய்வதன் மூலம் தொழிலாளர் போராட்டங்களை சட்ட விரோதமாக்கி முதலாளிகளுக்கு வெளிச்சம் காட்ட அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது புதிய அரசு.

முதலாளிகளின் லாப வேட்டைக்காக விவசாயத்திலிருந்து விரட்டி அடிக்கப்படும் கூலித் தொழிலாளர்கள், காடுகளிலிருந்து துரத்தப்படும் பழங்குடி மக்கள், அழிக்கப்பட்டு வரும் நெசவு, கைத்தொழில், மீன் பிடிப்பு துறைகளின் சிறு உற்பத்தியாளர்கள் என்று நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் நகர்ப்புறங்களுக்கு விசிறியடிக்கப்படுகிறார்கள். அவர்கள் எந்த உத்தரவாதமும் இன்றி முதலாளிகளின் தேவைக்கேற்ப அலைக்கழிக்கப்படுவதற்கு சட்டம் வகை செய்ய வேண்டும் என்பதுதான் முதலாளிகளின் விருப்பம்.

தொழிலாளர் நலச் சட்டங்கள் மத்திய-மாநில கூட்டு பட்டியலில் உள்ளதால், மாநில அரசு இயற்றும் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற வேண்டியிருக்கிறது. எனவே இந்த துறையை மாநில பட்டியலில் சேர்த்து மாநிலங்கள் தமக்குள் போட்டி போட்டு முதலாளிகளுக்கு சாதகமாக சட்டங்களை திருத்திக் கொள்ள வழி வகுக்க வேண்டும் என்றும் முதலாளித்துவ அறிஞர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.

வசுந்தரராஜே சிந்தியா
மோடி குஜராத்தில் செய்தது போல தொழிலாளர் நலன்களை பறித்து முதலாளிகளிடம் நல்ல பெயர் வாங்க திட்டமிட்டிருக்கிறார் இராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரராஜே சிந்தியா.

இந்த ஆலோசனையை அமல்படுத்துவதற்கு முதலாளிகள் தேர்ந்தெடுத்திருக்கும் முதல் மாநிலம் இராஜஸ்தான். தங்க நாற்கர நெடுஞ்சாலை திட்டத்தின் டெல்லி-மும்பை பிரிவு, சரக்கு போக்குவரத்துக்கு அர்ப்பணிக்கப்பட்ட ரயில் பாதை (DFC), மற்றும் டெல்லி-மும்பை தொழில் தாழ்வாரம் ஆகியவற்றின் பகுதியாக இருப்பதால் இராஜஸ்தான் மாநிலம் முதலாளிகள் மொய்ப்பதற்கான மையமாக உருவெடுத்து வருகிறது. செயின்ட் கோபேன், ஹீரோ, ஹோண்டா, லாஃபார்ஜ் ஆகிய நிறுவனங்கள் இராஜஸ்தானை நோக்கி படையெடுத்திருக்கின்றன.

மோடி குஜராத்தில் செய்தது போல தொழிலாளர் நலன்களை பறித்து முதலாளிகளிடம் நல்ல பெயர் வாங்க திட்டமிட்டிருக்கிறார் இராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரராஜே சிந்தியா.

ஜூன் 4-ம் தேதி டாடா குழும முதலாளி ரத்தன் டாடா ராஜஸ்தான் அதிகாரிகளை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய அடுத்த நாள் அம்மாநில அரசு தொழிலாளர் நல சட்டங்களில் திருத்தங்களை அறிவித்திருக்கிறது. முதலாளிகளின் கட்டளையை சிரமேற்கொண்டு நிறைவேற்றிக் கொடுக்கும் ஊழியர்கள்தான் அரசாங்கமும், அரசு அதிகாரிகளும் என்பதில் இன்னமும் யாருக்காவது சந்தேகம் இருக்கிறதா, என்ன?

இராஜஸ்தான் அரசாங்கம் முன் வைத்திருக்கும் திருத்தங்களின்படி 300 தொழிலாளர்கள் வரை வேலை நீக்கம் செய்வதற்கு அரசின் அனுமதி பெற வேண்டியதில்லை. தற்போதைய விதிமுறைகளின்படி 100 தொழிலாளர்களுக்கு மேல் வேலை நீக்கம் செய்ய அனுமதி பெற வேண்டும். கடந்த 2000-ம் ஆண்டு பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் தொழிலாளர்களை யாரையும் கேட்காமல் வேலையிலிருந்து துரத்தும் வரம்பை 100 தொழிலாளர்களிலிருந்து 1,000 ஆக உயர்த்துவதற்கு நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா பரிந்துரைத்திருந்தார். தொழிலாளர்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து அந்த சட்டத் திருத்தம் கைவிடப்பட்டது. தற்போது தனிப்பெரும்பான்மையுடன் கொலு வீற்றிருக்கும் மோடி அரசில் இந்த சட்டங்கள் படிப்படியாக நீர்க்கப்பட்டு எத்தனை தொழிலாளர்கள் இருந்தாலும், யாரையும் கேட்காமல் தொழிற்சாலையை இழுத்து மூடி விட்டு ஓடி விடலாம் என்று வழி வகை செய்யப்படும்.

சுபீர் கோகரன்
புரூக்கிங்ஸ் என்ற அமெரிக்க சிந்தனை குழாமின் இந்திய இயக்குனரும், முன்னாள் ரிசர்வ் வங்கி துணை கவர்னருமான சுபீர் கோகரன்.

இரண்டாவதாக, தற்போது 20 தொழிலாளர்களுக்கு மேல் வேலை செய்யும் நிறுவனங்களுக்கு பொருந்தும் ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம் இனிமேல் 50 தொழிலாளர்கள் வரை வேலை செய்யும் நிறுவனங்களுக்கு பொருந்தாது. நடைமுறையில் முதலாளிகளால் செல்லாக் காகிதமாக்கப்பட்டு விட்ட இந்த சட்டமும் நீர்த்துப் போகவிருக்கிறது.

மூன்றாவதாக, 20 தொழிலாளர்கள் வரை வேலை செய்யும் தொழிற்சாலைகளுக்கு தொழிற்சாலை சட்டம் பொருந்தாது என்றும் மின்சாரம் பயன்படுத்தாத நிறுவனங்களை பொறுத்த வரை இந்த வரம்பு 40 தொழிலாளர்கள் என்றும் மாற்றப்படவுள்ளது. இதன் மூலம் லஞ்சம், ஊழல் என்று கவலைப்படாமல் தொழிற்சாலை சட்டம் பரிந்துரைக்கும் வேலைநாள் வரையறை, பாதுகாப்பான பணிச் சூழல், ஆண்/பெண் பாகுபாடு காட்டாமை, குறைந்த பட்ச கூலி போன்றவற்றை முதலாளிகள் அலட்சியப்படுத்துவதற்கு வழி வகை செய்யப்படும்.

இராஜஸ்தான் அரசின் சட்ட திருத்தங்களுக்கு மோடியின் மத்திய அரசு ஒப்புதல் அளித்த பிறகு மற்ற மாநிலங்களும் போட்டி போட்டுக் கொண்டு சட்ட திருத்தங்களை நிறைவேற்றும் என்று முதலாளித்துவ ஆதரவாளர்கள் சப்புக் கொட்டுகின்றனர்.

‘இந்த சட்டங்களை புதிதாக ஆரம்பிக்கவிருக்கும் தொழிற்சாலைகளுக்கு மட்டும் பொருந்துவதாக திருத்தலாம், ஏற்கனவே செயல்படும் தொழிற்சாலைகளுக்கு பழைய சட்டத்தை கடைப்பிடிக்கலாம்’ என்று புரூக்கிங்ஸ் என்ற அமெரிக்க சிந்தனை குழாமின் இந்திய இயக்குனரும், முன்னாள் ரிசர்வ் வங்கி துணை கவர்னருமான சுபீர் கோகரன் கூறியிருக்கிறார். தொழிலாளர்களிடையே, பழைய தொழிலாளர்கள், புதிய தொழிலாளர்கள் என்ற  பிரிவினையை உருவாக்கி, இந்த திருத்தங்களுக்கு எதிராக போராடுவதை முறியடிக்கலாம் என்று நயவஞ்சகமாக இதனை பரிந்துரைத்திருக்கிறார் கோகரன். முதலாளிகளின் நலன்களுக்கு ஏற்றவாறு அரசுகளின் கொள்கைகளை மாற்றியமைக்கும் வேலைகளை செய்து வரும் சிந்தனை குழாமில் பணிபுரியும் இவர் முதலாளிகளின் கைக்கூலியாக கருத்து சொல்வதில் ஆச்சரியமில்லை. ஆனால், இவர் ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரியாகவும் பணி புரிந்திருக்கிறார் என்பதிலிருந்து இந்த அரசு யாருடைய நலனுக்கானது என்று தொழிலாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சங்க பரிவாரத்தைச் சேர்ந்த பாரதீய மஸ்தூர் சங்கம் என்ற கருங்காலி தொழிற்சங்க அமைப்போ, “பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையில் தொழிலாளர் சட்டங்களை மறுபரிசீலனை செய்யத்தான் நாங்கள் ஒத்துக் கொண்டோம், இப்போது இராஜஸ்தான் அரசு செய்யவிருப்பது சீர்திருத்தம், அதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று மோசடி செய்கிறது. முயல்களுடன் ஓடிக் கொண்டே, நாய்கள் வேட்டையாட உதவும் பாரதிய மஸ்தூர் சங்கம் போன்ற ஆளும் வர்க்க அமைப்புகளை தொழிலாளர்கள் துரத்தி அடிக்க வேண்டும்.

நிரந்தர தொழிலாளர்-ஒப்பந்த தொழிலாளர், புதிய தொழிலாளர்-பழைய தொழிலாளர் என்று தொழிலாளி வர்க்கத்தை பிளவுபடுத்தும் ஆளும் வர்க்க சூழ்ச்சிகளையும் அதற்கு அடியாளாக இருக்கும் பாஜக அரசுகளையும் முறியடித்து அனைத்து உழைக்கும் மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் போராட்டத்துக்கு தொழிலாளி வர்க்கம் தயாராக வேண்டும்.

–    அப்துல்

மேலும் படிக்க