privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதைசிரிப்பாய் சிரிக்கிறது நுங்கு !

சிரிப்பாய் சிரிக்கிறது நுங்கு !

-

.சி.யில் இருப்பவர்களுக்கு
எதார்த்தத்தின்
தட்பவெப்பம் மட்டுமல்ல
ஏழைகளின் கர்ப்பவெப்பமும்
தெரிவதில்லை!

nunguவெயில் நிக்க முடியல
சீக்கிரம்… சீக்கிரம் என்று
அய்ந்து நிமிட காத்திருப்பில்
ஆயிரம் கேள்வி கேட்கும் அவனுக்கு
அதுவே கதியான
அவள் வாழ்க்கை சுடுவதில்லை!

நுங்கின் ஈரம் காத்து
தலை ஆவியாகும்
அவள் கோலம் பார்த்தும்
‘ இதான் பகல் கொள்ளையா
பத்து ரூபாய்க்கு நாலுதானா ‘
என நுகர்வோனின்
வாங்கும் சக்தி
குலை, குலையாய் காய்க்கிறது!

“அய்யய்யோ… என்ன இப்புடி சொல்றீங்க
காய்ப்பு கிடையாது, டிமாண்டுங்க ”
பழிக்கஞ்சி பதைக்கிறாள்
நுங்கு விற்கும் பெண்.

ஒரு லிட்டர் கின்லேயை
இருபது ரூபாய்க்கு வாங்கி
நாக்கு மரத்துப் போகும் அவன்
சாமர்த்தியத்தில் உறைகிறான்,
“கொடுக்கலாம். கொடும்மா…
எல்லாம் எனக்கும் தெரியும்
இன்னும் ரெண்டு போடு!”

“ஏன்சார் நுங்குன்னா
ரோட்ல கெடக்கா
கழுத்தெலும்பு ஒடிய
நான் தூக்கி வந்தா
நீ இடுப்பெலும்ப ஒடிக்கிற மாதிரி
காய் கேக்குற!

அரக்கோணத்துல
ஆளுக்கொரு கை
ஆர்.பி.எஃப் எடுத்து,
இறங்குற ஸ்டேசன்ல
இன்னும் ரெண்டு போலீசு எடுத்து,
இப்ப இங்க நீ வேற,
மரத்துல பறிச்ச காய விட
என் கூடையில பறிச்ச காய்
கூடும் போல
இதுல நான் பகல் கொள்ளையா!
கட்டுப்படியாவாது சார்!
விழிநுங்கு வெடித்ததுபோல்
இமையோரம் சூடு கசிந்தது.

ரிலையன்ஸ் பிரெஷ் அம்பானியிடம்
வாயை மூடிக்கொண்டு
கேட்டதைக் கொடுத்தவன்,
தலைச்சுமை வியாபாரப் பெண்ணிடம்
தத்துவம் பேசினான்,
“கிராமத்துல சிரிப்பா சிரிக்குது
இங்க டவுன்ல வந்து கிராக்கி பண்ணி
லாபம் பாக்குறீங்க
சரி ஒன்னாவது கொடு”!

“ஏன்சார், சொல்றேன்னு கோவிச்சுக்காத
இந்த முத்துன நுங்கோட மல்லுகெட்டலாம்
உன்னோட முடியல,
உனக்கு கட்டுப்படி ஆவலேன்னா ஆள வுடு!

ஆவடிக்கு தாண்டி அவனவன்
பிளாட்டு போட்டு நிலமே
காய்ஞ்சு கட்டாந்தரையா கெடக்கு,
ஏது பன மரம்?
இருக்கறதும் காய்ந்து மட்டக் கருகுது!
பன மரமே இல்ல!
பயிர் விளையாம நிலமே ரியல் எஸ்டேட்டா கெடக்கு,
ஊர் உலகம் தெரியாம
நீ வேற உயிர எடுக்குற? போய்யா!”
கையிலுள்ள இலைக்கொத்தால்
ஈ யோடு
அவனையும் ஓட்டினாள்!

இதயம் இல்லாதவனின்
மூளையைப் பார்த்து
உண்மையில்
நுங்கு சிரிப்பாய் சிரிக்கிறது!
_____________________

– துரை.சண்முகம்