privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காநிரபராதிக்கு தண்டனை 25 வருட சிறை !

நிரபராதிக்கு தண்டனை 25 வருட சிறை !

-

“இந்த நாளைப் பற்றி நான் நிறைய கனவு கண்டிருக்கிறேன். இன்று ஒரு வழியாக சுதந்திர மனிதனாகி விட்டேன். எங்க அம்மா, குடும்பத்தோட சேர்ந்து சாப்பிடப் போறேன். மிச்சமிருக்கும் வாழ்க்கையையாவது வாழப் போறேன்” என்கிறார் செய்யாத குற்றத்துக்காக 25 வருடம் சிறையில் இருந்து ஒரு வழியாக வெளியே வந்த ஜோனாதன் ஃபிளெமிங்.

விடுதலை செய்யப்பட்ட ஃபிளெமிங்
விடுதலை செய்யப்பட்ட ஃபிளெமிங்

25 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் நிரபராதி என்று தெரிய வந்ததாக அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் நகர நீதித்துறை அறிவித்திருக்கிறது. இப்போது 52 வயதான ஃபிளெமிங் 1989-ம் ஆண்டு அவரது நண்பர் டேரில் “பிளாக்” ரஷ் என்பவரை சுட்டு கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். ஆனால், கொலை நடந்த நேரத்தில் தான் ஊரிலேயே இல்லை என்றும் ஃபுளோரிடாவில் உள்ள டிஸ்னி வேர்ல்ட் சுற்றுலா தலத்திற்கு சென்றிருந்ததாகவும் அவர் சொன்னதை போலீசும், நீதித் துறையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஃபிளெமிங் ஃபுளோரிடா சென்றதற்கான விமான பயணச் சீட்டுகள், அங்கு எடுத்த வீடியோக்கள், புகைப்பட அட்டைகள் இவற்றை காட்டியும் அவரது வாதத்தை நிராகரித்தது அரசு தரப்பு. ‘ஃபுளோரிடாவிலிருந்து இன்னொரு விமானத்தில் வந்து நண்பரை சுட்டு கொலை செய்து விட்டு போய் மீண்டும் அடுத்த நாள் திரும்பியிருக்கலாம்’ என்று வாதிட்டனர். ஃபிளெமிங் தனது நண்பர் ரஷ்ஷை சுட்டதை நேரில் பார்த்ததாக ஒரு பெண்ணை சாட்சி சொல்ல வைத்தனர்.

அதன் அடிப்படையில் 1990-ம் ஆண்டு ஃபிளெமிங் சிறைக்கு அனுப்பப்பட்டார். சில நாட்களுக்குள்ளாகவே, ‘போலீஸ் தன்னை வேறொரு வழக்கில் விடுவிப்பதற்காக அவர்கள் சார்பில் தான் பொய் சாட்சி சொன்னதாக’ கூறி அந்தப் பெண் தனது சாட்சியத்தை திரும்பப் பெற்றுக் கொண்டார். இருப்பினும், அடுத்தடுத்த மேல் முறையீடுகளிலும் ஃபிளெமிங்கின் தண்டனை ரத்து செய்யப்படவில்லை.

மகனை கட்டித் தழுவும் தாய் பேட்ரிசியா
மகனை கட்டித் தழுவும் தாய் பேட்ரிசியா

அந்தப் பெண் தான் கைது செய்யப்பட்டதாக கூறியது தொடர்பான காவல் துறை பதிவுகள் இப்போது நடத்தப்பட்ட விசாரணையின் போது கண்டறியப்பட்டுள்ளன. மேலும் ஃபிளெமிங் கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களில், கொலை நடந்த சில மணி நேரம் முன்பு அவர் ஃபுளோரிடா தங்கும் விடுதியிலிருந்து பேசிய தொலைபேசி உரையாடலுக்கான ரசீது இருந்தது தெரிய வந்துள்ளது. ஃபிளெமிங் தங்கியதாக சொன்ன ஹோட்டலில் விசாரணை நடத்திய காவல் துறையினரிடம் விடுதி ஊழியர்கள் பலர் அவரை பார்த்ததாக கூறியதும் அப்போதே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஃபிளெமிங் கொலையை செய்திருக்க முடியாது என்ற நிறுவும் இந்த ஆதாரங்களை வேண்டுமென்றே மறைத்து, பொய் சாட்சியின் அடிப்படையில் அவருக்கு தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கின்றன போலீசும், நீதித்துறையும்.

இப்போது வெளியான இந்த தகவல்களின் அடிப்படையில் ஃபிளெமிங் குற்றமற்றவர் என்று சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

வழக்குரைஞர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஃபிளெமிங்
வழக்குரைஞர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஃபிளெமிங்

ஃபிளெமிங்கின் 72 வயதான தாயார் பேட்ரிசியா தன் மகனை கட்டித் தழுவி “இதற்காக நான் இத்தனை வருடங்களாக காத்திருந்தேன்” கண்ணீர் பொங்க கூறினார். 25 வருடங்களுக்கு முந்தைய வழக்கு விசாரணையின் போது ஃபிளெமிங்குடன் தானும் ஃபுளோரிடா சென்றிருந்ததாக பேட்ரிசியா சொன்ன சாட்சியத்தை நிராகரித்திருந்தது அமெரிக்க நீதித் துறை.

புரூக்ளின் நகர நீதித்துறை 1980-களிலும், 1990-களிலும் நடத்திய பல வழக்குகள் இப்போது மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்படுகின்றன. சித்திரவதை செய்து வாங்கப்பட்ட வாக்குமூலங்கள், மிரட்டி பெறப்பட்ட சாட்சியங்கள், அரசுத் தரப்பின் முறைகேடுகள், நம்பத் தகாத காவல்துறை அதிகாரிகள் என்று அடுக்கடுக்காக குவிந்த ஆதாரங்களைத் தொடர்ந்து புரூக்ளின் நகரின் நீதித்துறை நூற்றுக் கணக்கான கொலை வழக்குகளை மறு பரிசீலனை செய்ய உத்தரவிட்டிருந்தது.

வன்முறை குற்றங்களுக்கு விரைவில் தீர்வு காணும் அழுத்தத்தின் கீழ், “வழக்கமான சந்தேகத்திற்கிடமான நபர்களை வளைத்து, எதையாவது செய்து தண்டனை பெற்றுக் கொடுத்து வழக்கை மூடி விட வேண்டும்” என்ற காவல் துறையின் போக்கு இந்த தவறான தண்டனைகளுக்கு காரணமாக இருந்திருக்கின்றது. இந்த வகையிலும் சரி, பொதுவில் வெள்ளையர்களின் குற்றங்களை விட கருப்பர்களின் குற்றங்கள், சமயத்தில் அவை குற்றங்களே இல்லையென்றாலும், ஃபிளெமிங் போன்ற கருப்பினத்தவர்கள் அமெரிக்க போலீஸ்-நீதித் துறையினரால் கடுமையாக ஒடுக்கப்படுகின்றனர்.

ஃபிளெமிங் விடுவிக்கப்பட்ட போது
25 ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திரம்

இந்தியாவிலும் பாகிஸ்தானிய பயங்கரவாதம், ‘இசுலாமிய’ பயங்கரவாதம் என்று வெறுப்பு பிரச்சாரம் செய்து வரும் இந்துத்துவ சக்திகளின் தாக்கத்தில் நூற்றுக் கணக்கான அப்பாவி முஸ்லீம்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது.

2002-ல் குஜராத் காந்திநகரில் அக்சர்தாம் கோவிலில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக 6 அப்பாவி முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டு, சித்திரவதை மூலம் வாக்குமூலம் பெறப்பட்டு தூக்கு, சிறைத் தண்டனை வழங்கப்பட்டனர். அவர்களை சென்ற மாதம் உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது.

2001 நாடாளுமன்ற தாக்குதல் வழக்கு தொடர்பாக காஷ்மீரில் இருந்து போலீசால் பிடித்து வரப்பட்ட அப்சல் குரு, ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றாலும், ‘தேசத்தின் கூட்டு மனசாட்சியை திருப்தி செய்ய’ தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு சென்ற ஆண்டு இந்திய அரசால் கொல்லப்பட்டார். இஷ்ரத் ஜகான் என்ற கல்லூரி பெண் மோடியின் குஜராத் அரசின் ரத்த தாகத்துக்கு பலியாக போலீஸ் உயர்அதிகாரிகளால் போலி மோதலில் படுகொலை செய்யப்பட்டார்.

2002-ம் ஆண்டு மோடியின் சொந்தக் கட்சிக்காரர் ஹரேன் பாண்டியா மர்மமான முறையில் கொல்லப்பட்ட பிறகு கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லீம்கள் 12 பேர் 10 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் நூற்றுக் கணக்கான முஸ்லீம் கைதிகள் செய்த/செய்யாத குற்றங்களுக்காக சிறையில் வாடுகின்றனர். முசுலீம்கள் மட்டுமல்ல தலித்துக்களும் பிற ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஏழைகளும் பெரும் அளவில் செய்யாத குற்றத்திற்காக சிறை வைக்கப்படுவதும், காவல் துறையின் ‘சீரிய’ பணிகளுக்காக கணக்கு காண்பிக்கப்படுவதும் இந்தியாவில் சகஜம். சந்தேகக் கேஸ்களுக்காக கைது செய்யப்பட்டு கொட்டடியில் கொலை செய்யப்பட்டோர் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரிக்கிறது.

அமெரிக்காவில் சில வழக்குகளிலாவது, உள்ளூர் அரசியல் போட்டியின் காரணமாக, நிரபராதிகள் பல ஆண்டுகள் தண்டனை அனுபவித்த பிறகு காலம் தாழ்ந்து ஒரிரு உண்மைகள் வெளியாகிறது. இந்தியாவில் ஒடுக்கப்படும் பிரிவினரான தாழ்த்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர், ஏழைகள் இவர்களுக்கு நீதித்துறையில் நியாயம் கிடைப்பது குதிரைக் கொம்பாகவே இருந்து வருகிறது.

மேலும் படிக்க