இந்தித் திணிப்பு: மீண்டும் வாலாட்டும் பார்ப்பனத் திமிர்! (தலையங்கம்)
வளர்ச்சி, முன்னேற்றம் என்று கூறிக்கொண்டு ஆட்சியைப் பிடித்தவுடனேயே இந்தித் திணிப்பு உள்ளிட்டு தனது பார்ப்பன பாசிச நடவடிக்கைகளைத் தீவிரமாகத் தொடங்கிவிட்டது மோடி அரசு. வெளியுறவுத் துறையில் ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைத்தான் பயன்படுத்த வேண்டுமென்ற அறிவிப்பு ஏற்கெனவே வந்துள்ள நிலையில், 1963-ம் ஆண்டின் அலுவல் மொழிகள் சட்டம் மற்றும் ஆட்சி மொழிச் சட்டத்துக்கு எதிராக பொதுத்துறை வங்கிகள், நிறுவனங்கள், வெளியுறவுத்துறை உள்ளிட்ட அனைத்து அமைச்சகங்களின் அதிகாரிகள் மட்டுமின்றி, அலுவலர்களும் சமூக வலைத்தளங்களில் இந்தியில்தான் பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த மே 27 அன்று உள்துறை அமைச்சகத்திலிருந்து உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனைச் சரியாகப் பின்பற்றுவோருக்குப் பரிசுத்தொகையும் வழங்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களிலிருந்து இதற்கு எதிர்ப்பு கிளம்பியதும், இந்தி பேசும் மாநிலங்களுக்குத்தான் அந்த சுற்றறிக்கை என்று பார்ப்பனக் கும்பலுக்கேயுரிய இரட்டை நாக்குடன் ஒரு பித்தலாட்ட விளக்கத்தை அளித்து தற்காலிகமாகப் பின்வாங்கிக் கொண்டது மோடி அரசு. எனினும் இது தற்காலிகமானதே. இந்திதான் தேசிய மொழி என்றும் மற்றவை பிராந்திய மொழிகள் என்றும் உள்துறை இணை அமைச்சரான கிரண் ரிஜிஜு திமிர்த்தனமாகப் பேசுவதும், மைய அமைச்சர் ஸ்மிரிதி இரானி பள்ளிப் பாடத் திட்டத்தில் வேதம் – உபநிடதங்களைச் சேர்க்க வேண்டுமென்று கூறியிருப்பதும், மைய அமைச்சர்களில் நான்கு பேர் சமஸ்கிருதத்தில் பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டிருப்பதும், இசுலாமியருக்கு எதிரான பகைமையைத் தூண்ட காஷ்மீருக்கான சிறப்புரிமை ரத்து, பொது சிவில் சட்டம் போன்ற பிரச்சினைகளை பாரதிய ஜனதா கிளப்புவதும் பார்ப்பன பாசிசக் கும்பலின் உண்மை முகத்தை அம்பலமாக்கியிருக்கின்றன.
இந்தித் திணிப்புக்கு எதிராக தாளமுத்து, நடராசன், சின்னசாமி உள்ளிட்டு 60-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உயிர் துறந்து, மக்கள் இயக்கமாக வளர்ந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழக வரலாற்றில் அழிக்க முடியாத கல்வெட்டாக நீடிக்கிறது என்ற போதிலும், தமிழ்வழிக் கல்வி அழிவுக்குத் தள்ளப்பட்டு தமிழகத்தில் ஆங்கில மோகம் தலைவிரித்தாடுகிறது. ஆங்கிலவழிக்கல்வியை அரசே ஊக்குவிக்கிறது. தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு ஒரு மொழிப்பாடமாகக் கூடத் தமிழைக் கற்பிக்க முடியாது என்று மெட்ரிக் பள்ளிக் கொள்ளையர்கள் வழக்கு போடும் அளவுக்கு மொழிப்பற்று மங்கியிருக்கிறது. பிள்ளைகளுக்கு சமஸ்கிருதப் பெயர் வைப்பது ஒரு பண்பாடாகப் பரவி வருகிறது. பார்ப்பன எதிர்ப்பு, சுயமரியாதைப் போராட்ட மரபு என்பது தமிழகத்தின் இளைய தலைமுறைக்குத் தெரியாத பழைய கதையாகிவிட்டது மட்டுமல்ல; அத்தகைய போராட்ட மரபுகள் குறித்த பெருமித உணர்வு மங்கி, சுயமரியாதையும் மொழிப்பற்றும் இல்லாத ஒரு பிழைப்புவாதம் இளம் தலைமுறையின் கலாச்சாரமாகப் பரவியிருக்கிறது.
அனைத்துக்கும் மேலாக, இனப்படுகொலைக் குற்றவாளி என்று உலகத்துக்கே தெரிந்த பாசிச மோடியை பல்லக்கிலேற்றி, பார்ப்பன பாசிசக் கும்பலுக்குத் தமிழக மக்கள் மத்தியில் அரசியல் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்து அரியணையிலும் அமர்த்தியிருக்கிறார்கள் தமிழருவி, வைகோ, ராமதாசு, விஜயகாந்த் முதலான பிழைப்புவாதிகள். தேசிய இன அடையாளங்களை அழித்து இந்து தேசியப் பண்பாட்டைப் பரப்புவதைத் தனது நோக்கமாகக் கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு இத்தகைய புறச்சூழல் பெரிதும் சாதகமாக அமைந்திருக்கிறது. அதன் காரணமாகத்தான் தமிழக மக்கள் இந்திக்கு ஆதரவாகப் போராடுவார்கள் என்று பா.ஜ.க.வின் இல.கணேசனால் தைரியமாகப் பேச முடிந்திருக்கிறது. நாம் எதிர்கொள்வது வெறும் இந்தித் திணிப்பு குறித்த பிரச்சினை அல்ல. தமிழகத்தின் பார்ப்பன எதிர்ப்பு மரபுக்கு விடப்பட்டிருக்கும் ஒரு சவால்!
______________________________
புதிய ஜனநாயகம் – ஜூலை 2014
______________________________
எந்த ஒரு மொழியையும் திணித்தல் என்பது கண்டிக்கத்தக்கது.இந்தியை விருப்பபாடமாக வைத்துவிட்டு தமிழை பாடமாக கொண்டு பாடத்திட்டங்களை வகுக்க வேண்டும். தமிழக ஆட்சி மொழியாக தமிழே இருத்தல் வேண்டும்.
well said mr hameed. thank you
“இசுலாமியருக்கு எதிரான பகைமையைத் தூண்ட காஷ்மீருக்கான சிறப்புரிமை ரத்து, பொது சிவில் சட்டம் போன்ற பிரச்சினைகளை…”
ஒருவேளை நாளை புரட்சி ஜனநாயக ஆட்சி வந்தால் இந்த விஷயங்களில் அவர்களுடைய நிலைப்பாடு என்னவாக இருக்கும் ? எல்லாவற்றிற்கும் புரட்சி பிறந்த இடத்திலேயே மருந்து தேடுவதால், இந்தக் கேள்விக்கும் ரஷ்யாவில் விடை கிடைக்குமோ?
English is medium of communication in offices.
I don’t see any real job benefits in learning Hindi. At the most its used to discuss cricket or bollywood during lunch breaks.
ஹிந்தியே வேண்டாம் என்று சொல்லும்போது அதை ஏன் விருப்படமாக வைக்கவேண்டும்?.
ஏனங்கோ நம்ம முன்னாள் திமுக ஆளுங்க மத்திய மந்திரியா இருக்கறபோது கூட நம்ம ஊரு நெடுஞ்சாலையில பல தமிழ் ஊர்கள இந்தியில எழுதியிருந்தாங்க.. அவஙகளே கம்முன்னு இருக்காங்க.. நீங்க என்னடான்னா…?
hon.chief minister J Jayalalitha madam had given a statement in tamil nadu assembly about how many DMK ministers& members dmk have wards to hindhi schools. so it is no wonder they had kept mute over hindhi
புரட்சி தலைவி பட்டத்தை விட்டுட்டீங்களே பச்சை! அம்மா கோவிச்சுக்க போறாங்க 🙂
மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்கள் இந்த இந்தி ஆதிக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இதை தட்டிக்கேட்கும் ராஜ் தாக்கரே போன்ற அரசியல்வாதிகளுக்கு இனவெறியர்கள் என்ற பட்டம் தான் வினவு கொடுக்கிறது. இங்கே தமிழ்நாட்டில் இந்தி திணிப்பை எதிர்த்து கட்டுரை எழுதுவது, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது, கண்டன அறிக்கை வெளியிடுவது ஆகியவற்றால் எதுவும் நடக்கப்போவதில்லை. ஏனெனில் தமிழ்நாடு இந்தியாவில் இருக்கும் பல மாநிலங்களில் ஒரு மாநிலம். அவ்வளவு தான். மத்தியில் இருக்கும் ஆட்சியாளர்களும் அதிகார வர்க்கத்தினரும் தமிழ்நாட்டையும் அதன் மக்களையும் எப்போதும் மதித்ததில்லை. தமிழக அரசியல்வாதிகள் கோமாளிக்கூட்டம் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். இந்தி பேசாத மற்ற மாநிலங்களில் இருக்கும் அரசியல் அமைப்பினர், கலாச்சார அமைப்பினர், அறிவுஜீவிகள், சிவில்சமூகத்தினர் ஆகியோருடன் தொடர்பு கொண்டு இந்தி திணிப்பினால் விளையும் தீங்கை விளக்கி அங்கெல்லாம் எதிர்ப்பையும் போராட்டத்தையும் ஏற்படுத்த வேண்டும். இதை வினவு போன்றவர்கள் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மத்திய அரசு வேலைவாய்ப்பு, பணி ஆகியவை இந்தி பேசுவோரின் மற்றும் அவர்களின் அடிமைகளின் தனிச்சொத்தாகிவிடும். தமிழகத்தில் இருக்கும் இந்தி எழுத்துக்களை தார் பூசி அழிக்க வேண்டும்.
who is going to pay for the TAR brush? and pay for the wages ? will you?