privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்நான் விபச்சாரியா இல்லேங்கிறதுதான் அவன் கவலை !

நான் விபச்சாரியா இல்லேங்கிறதுதான் அவன் கவலை !

-

நான் திருச்சிக்கி பக்கத்துல ஒரு கிராமமுங்க. நிலமில்லா ஒரு கிராமத்து ஏழை குடும்பத்துல குடிகார அப்பனுக்கு மகளாப் பொறந்தவ. ஊரு நெலமைக்கி தவுந்தபடி சீருவருச சீதனம் குடுத்து கல்யாணம் பண்ண முடியாததால வெள்ளேந்தியான வயசு மூத்த ஆம்பளைக்கி வாக்கப்பட்டேன்.

ஏழ்மை நெலமையில இருந்த எங்க குடும்பத்துல அடுத்தடுத்து நடந்த துயர சம்பவங்களும் அது தந்த மன சங்கடமும் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் சொந்த பந்தங்க பாக்குற நேரமெல்லாம் ஆறுதலா பேசுறதா நெனச்சு நடந்த தொயரத்த நெதமும் கண்ணு முன்னால கொண்டு வருவாங்க. அடுத்தவங்க பரிதாபமும் பச்சாதாபமும் எனக்கு ஆறுதலா இல்லேங்கிறது மட்டும் நெசம். அதுல மன சமாதானம் அடையுற மாறி வாழ்க்கை அமையலேன்னா யாரு என்ன செய்யறது சொல்லுங்க!

Broken
ஓவியம் : Carol Allen Anfinsen
http://anfinsenart.blogspot.in/2011/06/painting-from-within-leads-to-discovery.html

எங்கன இருந்தாலும் வயித்து பொழப்புக்கு நம்ம கைய ஊனிதான் கரணம் போடனும். கஷ்டத்துல இருந்து கை தூக்கிவிட நமக்கு நாதியுமில்ல. வறுமையும் தொயரமும் போட்டிப் போட்டு தொரத்தும் போது, பொழைக்க வழியில்லாத இந்த குண்டு சட்டி ஊருக்குள்ள குதுர ஓட்றதவிட பட்டணம் போகலான்னு புருசனும் பொஞ்சாதியுமா கைக்கொழந்தைய தூக்கிக்கிட்டு சென்னைக்கி வந்தோமுங்க.

கோடியில பணம் பொழங்கும் ஒரு பண பெருச்சாளிகிட்ட புருசனும் பொஞ்சாதியுமா வீட்டோட தங்கி வீட்டு வேல பாக்க ஆரம்பிச்சோம்.

ஓனரு என்ன தொழில் பாக்குறான்னு இப்பவும் எனக்கு வெளங்காது. என்னமோ வெளிநாட்டு பொருளுகள கப்பல்ல எறக்குமதி செஞ்சு யாவாரம் பாக்குறாருன்னு சொல்வாங்க. யாவரத்துல எம்புட்டு பணம் அள்றாருன்னு அவங்க வீட்டு கண்ணாலம், காச்சி, விசேசங்கள பாத்தா உங்களுக்கே தெரியும். அவங்க வீட்டுல வளர்ற மூணு நாயிங்களுக்கு சிக்கன், முட்டை, என்னமோ பிஸ்கெட்டு, பாலுன்னு சாப்பாடு போடும் செலவே நெதமும் 1000 ரூவாயத் தாண்டும்.

அன்னாடம் பூசை புனஸ்காரம்ன்னு 2000-ரூபா வரைக்கும் செலவு செய்வாரு அந்த முதலாளி. ஆந்திராவுலேருந்து லாரில வெங்கடாசலசாமி செலைய கொண்டு வந்து வீட்லேயே அஞ்சு நாளைக்கி திருவுழா நடத்துவாரு. அஞ்சு நாளைக்கும் ஊரு பூரா மூணு வேளை விருந்து வைச்சு, திருப்பதி லட்டு தாம்பூலப் பை (பை மட்டும் 100 ரூபா) கொடுத்து எல்லாம் பாத்தா செலவு பல லட்சத்தை தாண்டுங்க.

இப்பேற்பட்ட பாரி வள்ளல் முதலாளி, எங்க ரெண்டு பேருக்கும் சேத்து தந்த மாச சம்பளம் 5,500 ரூவாதானுங்க.

எங்களுக்குன்னு மாடியில சின்னதா ஒரு அறை, கேஸ் அடுப்பு, சம்பளம் போக சமையல்கட்டு சாமானுங்கன்னு பாத்ததுமே, முதலாளி இவ்ளோ தங்கமானவரான்னு தோணிச்சு. ஆரம்பத்துல கிராமத்து வாழ்க்கைக்கு சென்னை வாழ்க்கை தேவலான்னு நெனச்சேன். வூட்டுக்குள்ள தங்க வைச்சு செக்கு மாடாட்டம் நிக்காம சுத்த வெக்கிறதுன்னா என்னண்ணு அப்ப தெரியல. பொதுவா இழுத்துப் போட்டு வேலை செய்யும் குணம் எனக்கு. ஆரம்பத்துல நமக்கு கெடச்சது அற்புத வாழ்க்கன்னு நெனச்சு அத தக்க வச்சுக்க சொன்ன வேலையையும் தாண்டி சொல்லாத வேலையையும் சேத்து செஞ்சோம். வூட்டுல கஷ்டம்னு சந்தைக்கி வந்த நல்ல உழவு மாட சல்லிசா வாங்கிபுட்டதா முதலாளியும் அவரோட வூட்டம்மாவும் நெனச்சுருப்பாங்கண்ணு இப்ப தோணுது.

எனக்கு வீட்டு வேல. வீடு தொடைக்கணும், பாத்திரம் கழுவணும், கையால துணி தொவைக்கணும், வீட்டுல உள்ள மத்த பத்து வேலக்காரங்களுக்கு மூணு நேரம் சமைச்சு போடணுன்னு தான் வேலைக்கி பேசிவிட்டவரு சொன்னாரு.

வேலைக்கி சேந்த கொஞ்ச நாள்ல தெரு பெருக்கறதுலேர்ந்து, டாய்லட் கழுவுற வரைக்கும் செய்யச் சொன்னாங்க. ஒவ்வொருத்தரு ரூமுலயும் ஒரு டாய்லெட்டு, ஆபீஸ் ரூமையும் சேத்து வீட்டுக்குள்ள மட்டும் ஆறு டாய்லெட். வெளியில வேலக்காரங்க போறதுக்கு நாலு டாய்லெட். அத்தனையும் கழுவணும். முதலாளி வூட்டம்மாவுக்கு காய்கறி நறுக்குறது, பாத்திரம் கழுவுறது, சமையலுக்கு உதவறது, காத்தால நாலு மணிக்கு எந்திரிச்சி நாளுக்கு தக்க ரெண்டு கிலோ, நாலு கிலோ பூவ நின்னுக்கிட்டே கட்டுறதுன்னு சொல்லி மாளாத வேலைங்க.

எங்க வீட்டுக்காரருக்கு வாட்சுமேன் வேல. தோட்ட வேலையிலேருந்து நாயி பேண்டதை கழுவி, வாக்கிங் கூட்டிட்டு போய், குட்டிப் போட வைக்கிற வரைக்கும் எல்லா வேலையும் செய்யணும். இது போக எங்ககூரு கரம்பக் காடு மாறி விரிஞ்சு கெடக்குற அந்த மாளிகை வீட பெருக்கி, துடைச்சு கண்ணாடி மாறி வெக்கணும்.

இவங்கிட்ட வேலைக்கி சேந்து அஞ்சு வருசம் ஆச்சு. ஒரு வயசு கூட ஆகாத கைக்கொழந்தைய தூக்கிட்டு வேலைக்கி வந்தேன். பிள்ளைய மூணாவது மாடில ரூம்ல பூட்டிட்டு கீழ வீட்டு வேல செய்வேன். எங்க வீட்டுக்காரரு போயி அப்பப்ப பாத்துக்குவாரு. ஆனாலும் புள்ள நெனப்புல எனக்கு மாருல பாலு கட்டிக்கிட்டு ஊத்தும். நான் போயி பாக்கும் போது ஏம்புள்ள ஏங்கி அழுதுட்டு கைய சப்பிகிட்டு படுத்து தூங்கிருக்கும். அன்னாடம் இப்புடி எம்புள்ளய பாக்கும் போது செத்தரலாமுன்னு தோணும்.

முதலாளி பணத்திமுருல ஒரு ஆளு உக்காந்து போகவே 7 காரு வச்சுருக்காரு. எங்கூட்டுக்காரு  நெதமும் அத பளபளன்னு தொடைக்கணும். காருங்கள பாக்கையில எம்புள்ள ஆசையா தொட்டு வெளையாடும். ஒடனே பங்களாவே கலகலத்துப் போற மாறி அழுக்கா போயிருச்சின்னு அந்த கத்து கத்துவாரு ‘நல்ல மனசு’ முதலாளி.

இல்லாத கஷ்டத்துக்கு இடுப்பொடிய வேல பாத்தாலும், தோட்டத்துல தண்ணி விட்டியா, நாயெ குளிக்க வச்சியா, சோறு போட்டியா, பேல வச்சியான்னு எங்க வீட்டுக்காரர, நாயவிட கேவலமா நடத்துவாரு. இதெல்லாம் பரவாயில்ல. “நாயி எதுக்கு இத்தன நாள செனை புடிக்கல. அதுக்குள்ள நீ படுக்க போயிட்டியா”ன்னு அசிங்கப் படுத்துவாரு. கேக்கையில எனக்கு ரத்தம் கொதிச்சாலும் அப்பாவியான என் வீட்டுக்காரரு நெலமெ ரொம்ப மோசமுங்க.

இந்த மாதிரி பாவிங்ககிட்ட வேலை பாக்கறதுக்கு ஊரோட போயிரலாமான்னு நெனப்பேன். ஆனா, ஊருல உள்ள கடன அடைக்க இந்த முதலாளிகிட்ட ஒன்ர லட்ச ரூவா கடன வாங்குனேன். சம்பளத்துல மாசாமாசம் புடிச்சுகிட்டதுல அம்பதாயிரம் முடிஞ்சு போச்சு.

திடீர்னு எங்க அப்பா செத்துப் போய்ட்டாரு. அதுக்காக ஒரு இருவதாயிரம் கடன் கேட்டேன். காசு குடுக்குறது அவருக்கு பெரிசில்ல. ஆனா, துக்கத்துக்கு போனா கருமாதி முடிஞ்சுதானே வருவேன்னு சண்ட போட ஆரம்பிச்சுட்டாரு. எத்தனையோ தடவ அசிங்கப் பட்டப்பெல்லாம் பொறுத்துகிட்டுதான் போனோம். ஆனா பெத்த அப்பனோட சாவுக்கு கூடவா கணக்கு பாப்பாங்கன்னு கோவத்துல நானும் ரெண்டு வார்த்த கூட பேசினேன்.

ஒடனே வாங்குன கடங்காச வச்சுட்டு அந்தண்ட போன்னுட்டாரு. எங்கேருந்து ஒடனே பணம் தர முடியும். “இவ்வள பணம் எங்கிட்ட இருந்தா எதுக்கு ஒங்ககிட்ட வேல பாக்குறேன். என்ன வெளிய விடுங்க. நான் எங்கயாவது வேல பாத்து ஒரு வருசத்துல ஒங்க கடன அடைக்கிறேன்னு” சொன்னதுக்கு “என் வீட்டு எச்சி சோத்த தின்னுட்டு என்னையே எதுத்து பேசுரியாடி தேவுடியா”ன்னு கேட்டாங்க அந்த பொறம்போக்கு. இந்தாளு இப்படி திடீரென்னு சண்டை போடறதுக்கு நாலு நாளைக்கு முன்னாடி நடந்த சம்பவம்தான் காரணுமுன்னு தோணுது.

ஆமாங்க. நான் தேவுடியாளா இல்லங்கறதுதான் அவனோட கவலை. பேரம் பேத்தி எடுத்தாலும் முதலாளிங்கற ஆணவத்துல பொறுக்கி புத்திய காட்டி அப்பப்ப பல்லிளிச்சிகிட்டுதான் அந்தாளு பேசுவான். அன்னைக்கு சமையகட்டுல பாத்திரம் வெளக்கும் போது பின்னாடியே பூனை மாறி வந்து என் தோள்பட்டை மேல கைய வெச்சான். நிலை குலைஞ்சு போன நானு, “என்ன சார் இந்த மாதிரி பண்றீங்க, மேடத்துக்கிட்ட சொல்லுவேன்னு” கையை தட்டி விட்டேன்.

“உனக்கு பிழைக்க தெரியல, புரிஞ்சு நடந்துக்க மாட்டேங்குற”ன்னு பேரம் பேசுனான் அந்த படுபாவி. ஆத்திரத்துல வாயில வந்தத நான் பேச கடைசியில, “இத வெளிய சொன்னா, கடனை அடைக்கிறதுக்கு நீதான் கூப்ட்டேன்னு கதைய மாத்துவேன்”னான் அந்த கடங்காரன். வறுமையின்னு வேலைக்கி வர்றவங்க பணத்த பாத்தா, பல்ல இளிச்சுகிட்டு வருவாங்கன்னு சாதாரணமா நெனச்சுருக்கான் அந்த கம்முனாட்டி. பெறகு நம்ம விதி இதுதான்னு நான் மனசொடிஞ்சு போய் வேலைய பாக்க போயிட்டேன். இந்த சண்டைக்கு பெறகுதான் அவன் ஒரு தினுசா என்ன கருவற மாதிரியே காத்திருந்தான்னு இப்ப தோணுது.

ரேப்

“தேவுடியாள இருந்தேன்னா உன் வீட்டு கக்கூசு வரைக்கும் கழுவிட்டு இருந்துருக்க மாட்டேய்யா. இருந்த எடத்துல சம்பாரிச்சுட்டு போயிருப்பேன். மானத்தோட ஒடம்ப ஓடா தேச்சு ஒழச்சதுக்கு நீ தர்ற பரிசாய்யா இது. நீ காசு தரவேண்டாம். இனிமே வேல பாக்கவும் முடியாது. எதுவா இருந்தாலும் சாவுக்கு போயிட்டு வந்த பொறவு பேசிக்கலாமு”ன்னு சொல்லிட்டு ஊரப் பாக்க கிளம்பிட்டோம்.

சாவுக்கு போயி மூணா நாளு போலீசுலேருந்து போனு வருது, நீங்க ஒடனே ஸ்டேசனுக்கு வாங்கன்னு. ஸ்டேசனுக்கு போயி பாத்தா, “பணத்த வாங்கிட்டு சொல்லாம கொள்ளாம ஓடி வந்துட்டிங்கன்னு எங்களுக்கு கம்ப்ளேண்டு வந்துருக்கு, என்ன சொல்றீங்க” அப்புடிங்குறாரு போலீசு. எனக்கு கையும் ஓடல காலும் ஓடல. இடிஞ்சு போயிட்டேன். நெஞ்சுக்குள்ள சுருக்குன்னுச்சு. “ஊருக்குள்ள தெரிஞ்சா  திருடிட்டு ஓடியாந்துட்டேன்னு சொல்லுவாங்களே. அசிங்கப்பட்டு சாவணுமா? ஏழை சொல்லு அம்பலம் ஏறுமா”ன்னு?

பொணந்தின்னி கழுகுன்னா அது இவனுக்குதான் சரியாருக்கும். எழவு விழுந்த வீட்ல ஒப்பாரி ஓயறதுக்குள்ள அவனோட திமிர காமிச்சுட்டான். ஸ்டேசனுக்கு போயி நடந்தத சொல்லிட்டு. குடுத்த பணத்துக்கு ஈடா வெத்துப் பத்தரத்துல கையெழுத்து போட்டு குடுத்துருக்கோம். அந்த கழிசடை முதலாளி எங்க வூட்டுக்காரரு பள்ளிக்கூட டீசி, பாஸ்போட், ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை எல்லாத்தையும் வாங்கி வச்சுகிட்டுதான் பணமே தந்தான். இவ்வளவு நடந்தப்புறம் இனி அவங்கிட்ட வேல செய்ய முடியாதுன்னு அஞ்சு மாசத்துக்குள்ள வாங்குன பணத்த தந்துர்ரேன்னு போலிசுகிட்ட எழுதி குடுத்துட்டு வந்துட்டேன்.

“நீயும் ஒம் புருசனும் இவ்வளவு நாளா ராப்பகலா அவனுக்கு வேல பாத்ததுக்கு அவந்தான் காசு தரனும். நீ வாங்குன பணத்த தர்ரேன்னு ஒத்துகிட்டது தப்பு. அவமேல கேசு போட்டா பணம் கெடைக்கும்”னு எங்கூருல பல பேரு சொன்னாங்க. இதுல அவனோட பொறுக்கிதனத்தை யாருகிட்டயும் சொல்லலை. கிராமத்து பொண்ணு ஒருத்தி இதையெல்லாம் எதுத்து நிக்காம மென்னு முழுங்குறது ஏன்னு எப்புடி உங்களுக்கு புரிய வெக்கிறதுன்னே தெரியல.

அவனுக்கு இருக்குற செல்வாக்குக்கு எதுவேணுன்னாலும் செய்வான். பணத்த, நகைய திருடிட்டேன்னு கேசு குடுப்பேன்னு என்னைய ஒரு தடவ மெறட்டுனான். ஒத்தாளா நின்னு அவங்கிட்ட மல்லுக்கு நிக்க முடியாது. அதுவும் போக, வாங்குன பணத்த இல்லன்னு சொன்னா அவனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் இருக்கு, சொல்லுங்க பாப்போம்.

மானத்த எழந்துட்டு அவங்கிட்ட வேல பாக்க முடியாது. குடுத்த வாக்க காப்பாத்த தலைய அடகு வச்சாவது அவன் பணத்த தூக்கி எரியணும். என்ன செய்ய! திரும்பவும் ஊருல உள்ள மிராசுதாருகிட்ட அஞ்சு காசு வட்டிக்கி வாங்க வேண்டியதுதான்.

ஊருக்கும் சென்னைக்குமா பல வாட்டி அர்த்த ராத்திரியிலயெல்லாம் தனியா போயிருக்கேன். இளவட்ட பொண்ணுதான்னு எந்த ஊரு ஜனமும் இப்படி என்னை கேவலப்படுத்தல. ஒரு பணக்கார கெழட்டு நாயி என்ன பாடுபடித்திச்சுன்னு இப்ப யோசிச்சு பாத்தா மனசு கெடந்து தவிக்கிது. என்ன மாறி ஊருகாட்டு பொண்ணுங்க வறுமையில சாகாம வாழணும்ணா நிறைய போராடணும் போல!

–    சரசம்மா.

(உண்மைச் சம்பவம். ஊர், பெயர், அடையாளங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.)