privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்திஹார் சிறையில் சஹாராவின் கார்ப்பரேட் அலுவகம் !

திஹார் சிறையில் சஹாராவின் கார்ப்பரேட் அலுவகம் !

-

ளவாணிகளுக்கு நம் ஊரில் என்ன மதிப்பு என்பது நமக்கெல்லாம் நன்றாகத் தெரியும். பேருந்தில் எதேச்சையாக மாட்டிக் கொள்ளும் ஜேப்படித் திருடர்களை பொதுமக்கள் ‘கவனிப்பதும்’ நாம் காணாத காட்சிகள் அல்ல. சொம்பு களவாணிகளும், கோழி களவாணிகளும் பிறப்பெடுத்ததே அவ்வப்போது போலீசு பூட்சுகளின் உறுதியை சோதித்துப் பார்த்துக் கொள்வதற்காகத் தான் என்பதும் எழுதப்படாத சட்டம்.

சுப்ரதா ராய்
‘சுல்தான்’ சுப்ரதா ராய்

ஆனால், நமது புண்ணிய பாரதத் தாய் வெள்ளைக்காரனிடம் இருந்து விவாகரத்து பெற்று இந்திய ஓனர்களின் கையில் மாட்டிக் கொண்ட சம்பவ நாளிலிருந்து – அட, அதுதாங்க ‘சுதந்திரம்’ பெற்ற நாளில் இருந்து யாருக்காக சேவை ஆற்றி வருகிறாள் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள இன்றைக்கு சகாராவின் சுப்ரதா ராய் வாழ்ந்து வரும் வாழ்க்கையைப் புரிந்து கொண்டாலே போதுமானது.

சுப்ரதா ராய் குறித்து வினவு வாசகர்களுக்கு புதிதாக அறிமுகம் செய்யத் தேவையில்லை. ஈரோட்டு ஈமு கோழி யாவாரத்தை அகில இந்திய அளவில் மிகப் பெரிய பிளேடு கம்பேனிகளின் பெயர்களின் கீழ் நடத்திய சூட்டு கோட்டு போட்ட பிளேடு பக்கிரி தான் சுப்ரதா ராய்.

தங்களைத் தாங்களே முதலீட்டாளர்கள் என்று மூடநம்பிக்கை வைத்திருக்கும் பேராசை கொண்ட அப்புராணிகளிடமிருந்து முதலீடு என்ற நாகரீகமான பெயரில் 17,000 கோடி ரூபாய்களை சுப்ரதா ராய் ஆட்டையைப் போட்டிருந்தார்.

லோக்கல் திருடர்கள் என்றால் திருடிய காசில் உல்லாசமாக இருக்க தினத்தந்தியின் ‘அழகிகளிடம்’ செல்லும் வழியில் போலீசு மடக்கி பிடரியில் ரெண்டு தட்டி பிடித்து வந்து கைலியோடு குந்த வைத்து போட்டோ பிடித்து நாளிதழ்களில் விளம்பரம் கொடுப்பார்கள். மீட்கப்பட்ட தேட்டையில் போலீசு அடித்த உள்திருட்டு போக எஞ்சியதை பரிகொடுத்தவர்களுக்கு ஒரு சுபயோக சுபதினத்தில் வழங்கும் வைபவமும் தினத்தந்தி புகைப்படக் கலைஞரின் முன்னிலையில் நடக்கும். நாம் தான் பலமுறை பார்த்திருக்கிறோமே?

ஆனால், சுப்ரதா ராய் அகில இந்திய அளவில் தொழில் அதிபர் அல்லவா?

எனவே அவரைக் கோழி அமுக்குவது போல் அமுக்கி மயிலைப் பராமரிப்பது போல் சீராட்டி வருகிறது மத்திய அரசு. அன்னார் தனது முதலீட்டாளர்களிடம் ஜேப்படி செய்த தொகையில் ஒரு பகுதியை – அதாவது சுமார் 9.7 ஆயிரம் கோடி ரூபாய்களைத் திரட்ட அன்னாருக்குச் சொந்தமாக லண்டனிலும், நியூயார்க்கிலும் உள்ள இரண்டு ஆடம்பர விடுதிகள் உள்ளிட்ட மூன்று நட்சத்திர விடுதிகளை விற்க தற்போது முயற்சித்து வருகிறார்.  அன்னாரின் முயற்சிக்கு உறுதுணையாக திகார் சிறையில் சுமார் 600 சதுர அடிக்கு நவீன பாணி அலுவலகம் ஒன்றை சிறை நிர்வாகம் அமைத்துக் கொடுத்துள்ளது.

இந்த நவீன அலுவலகத்தில் இருந்து சுப்ரதா ராய் இணையம் பாவித்துக் கொள்ளலாம், தொலைபேசிக் கொள்ளலாம், எந்த நேரத்திலும் யாரும் அவரை வந்து சந்திக்கலாம், காணொளிக் கலந்துரையாடல்களில் (video conference) பங்கெடுத்துக் கொள்ளலாம். இந்த நவீன வசதிகளைப் பயன்படுத்தி மேற்படி பிளேடு பரந்தாமன் வரும் ஆகஸ்டு 20-ம் தேதிக்குள் பணத்தைத் திரட்ட வேண்டும் என்று நீதிமன்றம் கெடு விதித்திருந்தது. ஆனால், பாருங்கள் அவரால் நீதிமன்றம் கெடுவுக்குள் விற்க முடியாமல் போய் விட்டது. எனவே தனது சுகபோகங்களுக்கு மேலும் பதினைந்து நாள் நீட்டிப்பு கேட்டிருக்கிறார்.

தற்போது புருனே சுல்தான் மேற்படி நட்சத்திர விடுதிகளை வாங்க யோசிப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன. ஒரு சுல்தானின் கஷ்டத்தை இன்னொரு சுல்தான்தான் புரிந்து கொள்ள முடியும். ஆனால் புருனேயில் சுல்தான்தான் கடவுள், இங்கேயும் சுல்தான்கள் கடவுள்தான் என்றாலும் ஏகப்பட்ட பேர்கள் இருப்பதால் தனி மரியாதை சுற்று முறையில்தான் வரும்.

பதினைந்து நாட்களுக்குப் பிறகாவது அவரைக் குப்புறப் போட்டு பல்ராம் நாயுடுவின் ஹைதரபாத் லாட்டின்னா என்னவென்று காட்டுவார்களா என்ன? கிடையாது, அதன் பின் வெளியே வந்து சொந்தக் காசில் சுக போகங்களைத் தொடர்வார்.

சீமைப் பசு போஸ்டர் தின்னும் காட்சியைக் கூட பார்த்து விடலாம்; ஆனால் இந்தியாவில் முதலாளிகளுக்கு வியர்த்து பார்க்கவே முடியாது. அதிலும் அந்த வியர்வைக்கு நீதிமன்றமோ அரசாங்கமோ தெரியாமல் கூட காரண கர்த்தாவாக  இருந்து விட முடியாது. ஏற்கனவே சென்ற ஆண்டு தனது ஊழியர்கள் 11 லட்சம் பேரை ஒரே நேரத்தில் தேசிய கீதம் பாட வைத்து கின்னஸ் சாதனை வேறு படைத்திருக்கிறார். பாரத மாதவுக்கே பன்னீர் தெளித்த தேச பக்தரை, பாரத மாதாவின் தவப்புதல்வரான மோடி ஆட்சியில் கை விடுவார்களா என்ன?