privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.ககோட்டையில் ரஜினி : லிங்கா – பாஜக – ஊடக சதி !

கோட்டையில் ரஜினி : லிங்கா – பாஜக – ஊடக சதி !

-

ரஜினி மோடி கார்ட்டூன்
லிங்காவும் பாஜகவும் எழுச்சி பெற வேறு வழி?

பாரதிய ஜனதாவை வெறும் அகோரி, சங்கர மட, ஆதீனங்களின் கட்சியாக மட்டும் சுருக்குவது தவறு. கஞ்சா, நெய் பொங்கல், புளியோதரையால் வரும் சக்தியையோ இல்லை சதியையோ ஒரு ஊட்டி தேநீரை அருந்தியபடியே நாம் எதிர்கொண்டு விடலாம். ஆனால் அமேசான் காட்டின் ‘மூலிகை திரவ’த்தை ஆம்வேயால் அருந்திக் கொண்டு, மெக்டனோல்டு, பர்கரோடு புல்லட் புரூஃப் இறுமாப்பில் மௌரியா ஷெர்ட்டனில் கதைக்கும் கனவான்களை அப்படி எதிர்கொள்வது சிரமம்.

அமெரிக்கா முதல் அம்பானி வரை, விகடன் துவங்கி குமுதம் வரை, சோ தொட்டு சுப்ரமணியசாமி இட்டு ஒரு பெரும் அறிஞர் கூட்டமே ராப்பகலாய் பாஜகவின் எதிர்கால அதிகார மென்பொருட்களை வன்நபர்களால் வடிவமைத்து வருகிறது. இந்த சிந்தனைக் குழாம் ஒன்று விடாமல் சர்வசாத்திய வஸ்துக்களையும் குலுக்கி போட்டு தாமரையை மலர வைக்க பகீரதப் பிரயத்தனம் செய்கிறது.

இவர்களின் எண்ணங்களோ, எதிர்பார்ப்புகளோ பல்வேறு வண்ணபாதைகளை காட்டினாலும் பாதைகள் சேருமிடம் காவிக்கரைதான். பாஜகவின் புதிய தமிழகத் தலைவரான தமிழிசை சௌந்தர்ராஜனின் நியமனத்தை பெண்ணுரிமையின் வெற்றியாக கொண்டாடுகிறார்கள். வானம் பார்த்த சோகத்திலிருக்கும் வானதி சீனிவாசனும் கூட ஒரு பெண்தான் என்பதை மறந்துவிடுகிறார்கள். பாஜகவின் ப்ரியத்திற்குரிய வட இந்திய வணிக வர்க்க கூட்டணியை இங்கேயும் நட்டு வைப்போமென பாடுபடும் நாடார் பெருவணிகர்கள் தங்களது வெற்றியாக அகமகிழ்கிறார்கள். தமிழிசை ஒரு நாடார் அல்லவா!

தொலைக்காட்சியில் எட்டுக்கட்டையில், ஒளி விளக்குகளே பயந்து ஃபியூசாகும் அளவுக்கு கத்திப் குதறிப் பேசியதை வைத்தே தலைவர் ஆனவர் தமிழிசை சௌந்தரராஜன். அதே அளவுக்கு கத்தியும் கொத்தியும் பேசினாலும் மாநிலத் தலைவர் பதவி பறிபோனதில் எரிச்சலைடையாமல் இருக்க ஹெச்.ராஜா முதல் பச் கூஜா வரை பலருக்கும் தேசிய செயலாளர் ஆரம்பித்து செய்தித் தொடர்பாளர் வரையிலும் பல பதவிகள்.

பாஜக கூட்டணி தமிழகத்தில் பெரும் வெற்றி பெறவேண்டும் என்று கருத்துக் கணிப்பு ஜோசியம் பார்த்த ஜூ.விகடன் திருமாவேலன் இன்று கமலாலயத்தில் அதிமுக கூட்டணிக்கான பேச்சுக்கள் கிசுகிசுக்கப்படுகின்றன என்று புலம்புகிறார். திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக பாரத இயக்கம் தனித்து வரவேண்டாமா என்பது அவர் ஆதங்கம். அம்மாவை விடமுடியாது என்றாலும் மோடியையும் விடமுடியாத குமுதம் இருவரது நலனையும் மனதில் கொண்டு வார்த்தைகளை உருவாக்குகிறது.

அமித் ஷா கார்ட்டூன்
வேவுபார்ப்பது, பின்தொடர்வது, என்கவுண்டர் செய்வது, சாதி-மத வெறி டிஆர்பி ரேட்டிங்கை எகிறச் செய்வது எல்லாவற்றிலும் அமித்ஷா வல்லவர்.

அமித் ஷா தலைவரானதும் கட்சி பலவீனமாயிருக்கும் மாநிலங்களில் பட்டயைக் கிளப்புவார் என்று இதே ஊடகங்கள் சத்தியம் செய்து சாமியாடின. பார்ப்பதற்கு ஐந்து காசு கந்து வட்டி சேட்டு போல இருந்தாலும் வேவுபார்ப்பது, பின்தொடர்வது, என்கவுண்டர் செய்வது, சாதி-மத வெறி டிஆர்பி ரேட்டிங்கை எகிறச் செய்வது எல்லாவற்றிலும் அமித்ஷா வல்லவர். காய்ந்திருந்த உத்திரப்பிரதேச மாநிலத்தில் அவர் பாய்ச்சிய சகுனி-சாணக்கியத் திட்டங்களே பாஜக-வை பெரும் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்தில் அமரச் செய்தது. விளைவு பலர் முனகினாலும் மோடி சொன்னதும் எதிர்ப்பே இல்லை, அமித் ஷாவை தலைவராக்கியதற்கு.

சரி தமிழகத்தில் என்ன திட்டம்?

ஆதிக்க சாதி கட்சிகள், குழுக்களை அணிதிரட்டும் தந்திரம் வழக்கம் போல நடைபெறும். 2014 பாராளுமன்ற தேர்தலில் 5% வாக்குகள் பெற்று மூன்றாவது பெரிய கட்சியானதும், 2016 தேர்தலில் ஒரு பாய்ச்சல் பெற வேண்டாமா? அம்மாவுடன் நேசமென்றாலும் பதவி என்று வந்துவிட்டால் சும்மா இருந்து விட முடியாது.  தருமபுரியில் பாமக சாதிவெறியும், குமரியில் இந்துமதவெறியும் சாதித்த வெற்றியை தமிழகம் முழுவதும் செய்வதற்கு ஏதாவது மாஜிக் வேண்டும்.

இதன் முன்னாட்டமாகவே சென்ற பாராளுமன்ற தேர்தலின் போது மோடி வெட்கங்கெட்ட முறையில் ரஜினி வீட்டிற்கு சென்றார். கோச்சடையான் எடுக்கப்பட்ட விதத்தை அறிந்தார். தேநீர் சாப்பிட விரும்பியவரை எப்படி மறுக்க முடியும் என்பதாக ரஜினி மானத்தை வாங்கினாலும், கோவை விமானநிலையத்தில் விஜயையும் பார்த்தார் மோடி. அவரும் அவ்வாறே மானம் வாங்கினாலும் இவைகளின் பின்னே இருப்பது தன்மானமால்ல, அம்மா மேலுள்ள பயமே! ஆனால் அம்மாவும், அய்யா மோடியும் காவிக் கொள்கைகளில் நட்பு சக்திகள் என்றாலும் வாயும் வயிறும் வேறல்லவா? அம்மா அய்யாவை பாரட்டலாமே அன்றி சூப்பர், இளைய ஸ்டார்கள் பாராட்டினால் நட்சத்திரங்களின் ஒளிர்தலுக்கு மின்சாரம் லேது.

இருந்தாலும் ரஜினி – விஜய் ரசிகர்கள் கண்ணை மூடிக் கொண்டு வாக்குகளை குத்துவார்கள் என்றே கமலாலயமும், ஊடக காரியாலயங்களும் கதை பரப்பின. கதை சிதைந்தாலும் மத்தியிலே தமிழகத்தின் உதவியின்றியே பாஜக ஆட்சியை பிடித்தது. இங்கே தாமரை பூக்கவில்லை என்றாலும் தில்லியில் நச்சு மரமாக காலூன்றியது. பதவியேற்பு விழாவுக்கு ரஜினி அழைக்கப்பட்டு லதா ரஜினிகாந்த் சென்றார். வரும் வராது என்ற நகைச்சுவையின் பொருளை ரஜினி தில்லிக்கு சென்றார் செல்லவில்லை என்று புரிந்து கொள்வது சிரிக்கத் தெரிந்தவர்களின் சாமர்த்தியம்.

ரஜினி மோடி சந்திப்பு
தேநீர் சாப்பிட விரும்பியவரை எப்படி மறுக்க முடியும் என்பதாக ரஜினி மானத்தை வாங்கினாலும், கோவை விமானநிலையத்தில் விஜயையும் பார்த்தார் மோடி.

பிறகு ரஜினி “லிங்கா” படப்படிப்பில் தீவிரமாக ஈடுபட்டார். மங்களூரில் படப்படிப்பின் போது செய்தியாளர்களை சந்தித்திருக்கிறார். பொதுவில் புதுமுக நடிகரின் படங்களுக்கே ஏகப்பட்ட பில்டப்பில் படத்தின் விளம்பரம் பல்வேறு உத்திகளோடு கடை விரிக்கப்படும் போது ரஜினி படத்திற்கு அவர் ஊடகங்களை சந்தித்து ஏதாவது இலை மறையாக பேசினாலே போதும். அப்படித்தான் அவர் சந்தித்தார் என்றாலும் ஊடகங்கள் அதற்கு மறைபொருள் விளக்கத்தை அளிக்கின்றன.

ரஜினியின் காதலிக்கு அப்பாவாக நடிக்கும் ராதாரவி போன்ற ஓய்வு பெற்றவர்களெல்லாம் கூட “லிங்காவில்” நடிக்கிறார்கள் என்பதால் நேர்காணல்களில் இடம் பெறுகிறார்கள். விக்கு போட்ட ராதாரவிக்குத்தான் வேடங்கள் எவ்வளவு கச்சிதமாக பொருந்துகின்றன என்று ரஜினி சாதாவாக கூறியதை மாபெரும் ஸ்பெசல் இலக்கியமாக ஊடகங்கள் பொறித்திருக்கின்றது. “கோச்சடையான்” எனும் பொம்மை படம் ஊற்றிக் கொண்ட நிலையில் “லிங்கா”-வை ‘எழுச்சியுறச்’ செய்வதற்கு இத்தகைய அழுகுணி ஆட்டங்கள் அவசியம்தான். உண்மையில் ஆண்மைக்குறைவுக்கு சேலம் சிவராஜ் சித்த வைத்தியர் செய்யும் எழுச்சி விளம்பரங்களை ‘லிங்கா’ குழுவினர் செய்யக் கூடாதா என்ன?

90-களில் ஒரு போக்குவரத்து நெரிசலில் ரஜினியின் கார் சிக்கிக் கொண்டதும், அந்த நெரிசலுக்கு காரணம் ‘அம்மாவின்’ முதல்வர் பவனி கார் வரிசையே என்பதே சூப்பர் ஸ்டாரின் சமூக, அரசியல் ஓப்பனிங்கின் இரகசியம். இதை வைத்து போயஸ் தோட்டத்தால் வாழ்விழந்த ஆர்.எம்.வீரப்பன், பார்ப்பனியத்தின் மயிலாப்பூர் சாணக்கியர் சோ, தஞ்சாவூர் பண்ணையார் மூப்பனார், பார்ப்பனிய ஊடகங்கள் அனைவரும் ரஜினிக்கு காற்றடித்து ஊதிப் பெருக்கினார். என்றாலும் சுறுசுறுப்பான நடிப்பிற்கு பெயர் பெற்ற ரஜினி நிஜத்தில் பயந்து ஒதுங்கினார்.

அவ்வப்போது ‘குத்து’ வசனங்களில் அரசியல் மாதிரி சில அபத்தங்களை பேசினாலும் காலப் போக்கில் எல்லாம் ஆண்டவன் செயல் என்று தப்பித்து வந்தார். எனினும் அதே ஆண்டவன் ‘பாபா’-வில் கைவிட்டது வேறு கதை. ரஜினியை நம்பி காசு செலவழித்த மாவட்ட ரசிகர் தளபதிகள் பிறகு அரசியல் முதலீட்டை எடுக்க முடியாது என்றதும் அடக்கி வாசித்தனர். ஆனால் பார்ப்பனிய சாணக்கிய சகுனிகள் மட்டும் முடங்கி விடவில்லை.

தற்போது கர்நாடகாவில் ‘லிங்கா’ படத்தில் நடித்து வரும் செய்தியாளர்கள் ரஜினியை சந்தித்த போது, அரசியலுக்கு வருவீர்களா, நீங்கள்தான் அடுத்த முதலமைச்சரா என்ற வழக்கமான டிஎம்ஸ் குரலில் அறுந்து போன முருகன் பாடல் வரிகளை கேட்டார்கள். எல்லாம் ஆண்டவன் செயல் என்று அதே முருகன் பாடலை ஒலிக்கும் துருப்பிடித்த ஒலிக்குழாய் போல ரஜினி சொல்வார் என்றே அனைவரும் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் துருவில் கொஞ்சம் பாலிஷ் போட்டு “மக்கள் மனது வைத்தால்” நடக்கும் என்றாராம் ரஜினி. ஆண்டவன் இடத்தில் மக்கள் வந்ததற்கு என்ன காரணம்?

அதுதான் அமித்ஷா அடிக்கடி தொலைபேசியில் ரஜினியுடன் பேசி அவரது மனதைக் கரைத்து வருவதன் வெளிப்பாடாம். 2014 தேர்தலில் மாநிலத்தில் ஒரு தொகுதியில் வென்றாலும் கூட்டணி ஆரோக்கியம் சீர்கெட்டு வருகிறது. மோடியின் பதவியேற்பு வைபவத்திற்கு முன் வரிசையில் அமருவதற்கு கூட “பாஸ்” கிடைக்காமல் புறக்கணிப்பு செய்த விஜயகாந்த், உடல் நலம், கட்சி நலம் குன்றி வாடி வருகிறார். இப்போதுதான் பிறந்த நாள் வாழ்த்துக்களை தமிழக பாஜக தலைவர்கள் சொன்னதால் அவர் மகிழ்ச்சியில் இருப்பதாக தேமுதிக வட்டாரங்கள் ஊடகங்களுக்கு செய்திகளை வீசி வருகின்றன. முன்வரிசை கிடைக்காவிட்டாலும் கடைசி வரிசையிலாவது விட்டால் கேட்டுக்கு பின்னால் எட்டிப்பார்க்கக் கூட கேப்டன் தயாராகிவிட்டார். ஆனால் மக்கள் கைவிட்டுவிட்டார்கள். வைகோவுக்கு வேறு போக்கிடம் இல்லையென்றாலும் எதிர்காலமும் இல்லை. பச்சமுத்துவிடமிருந்து பணம் வரலாமே அன்றி மக்கள் செல்வாக்கு பலம் ஓட்டுக்களாய் வராது.

ரஜினி கார்ட்டூன்
அரசியல் வாழ்க்கையில் ஃகிராபிக்ஸ் சாகசம் பயன்படாது.

இந்நிலையில்தான் ரஜினியை தமிழக முதல்வர் வேட்பாளராக்கி ஏதாவது செய்யலாம் என்று அமித்ஷா தீவிரமாக யோசித்து செயலிலும் இறங்கி விட்டாராம். இதை குதூகலத்துடன் வெளியிட்டிருக்கும் தினமலர், இதன் ஆதாரங்களை கமலாலாய வட்டாரங்களுடன் உறுதி செய்திருக்கிறது. குமுதமோ இன்னும் கொஞ்சம் சென்டிமெண்டாக ரஜினியின் மகள்கள் படம் எடுப்பதாக ஏற்படுத்திய நட்டம், லதா ரஜினிகாந்த் வியாபாரத்தில் ஈடுபட்டு உருவாக்கிய நட்டம், தனுஷ் – மகள் சண்டை காரணமாக நிம்மதியிழந்து அரசியல் ஆன்மீகத்தில் செட்டிலாக விரும்புவதாக அடித்து விட்டிருக்கிறது. ரஜினியின் இமேஜை உயர்த்துவதற்கு கூட டிவி சீரியல் போல வறுமை, மருமகன் சண்டை என்று லோக்கலாகத்தான் இவர்கள் புனைகிறார்கள்.

ஐந்து சதவீத வாக்கு வாங்கினாலும் தமிழகத்தில் பூஜ்ஜயமாக இருக்கும் பாரதிய ஜனதா, ரஜினி வந்தால் ராஜ்ஜியத்தை கைப்பற்றலாம் என்று மனப்பால் குடிக்கிறது. மோடிக்கு கொடி பிடித்த பார்ப்பனிய ஊடகங்களோ ரஜினியை வைத்து தாமரையை மலரச் செய்யலாம் என்று கனவு காண்கின்றன. ‘லிங்கா’ குழுவினரோ இந்த அமர்க்களத்தை வைத்து படத்தை வெற்றிகரமாக ரிலீஸ் செய்யலாம் என்று விளம்பரங்களை உத்வேகத்துடன் வடிவமைக்கிறார்கள். எல்லாம் சரிதான்!

ரஜினி என்ன செய்யப் போகிறார்?

அவர் என்ன செய்வார், என்ன செய்ய வேண்டுமென்பதை அம்மா இருக்கும் வரை ஆண்டவன் கூட முடிவு செய்ய முடியாது. அயோத்திக்கு ராமர் கோவில் கட்டுவதை பகிரங்கமாக கூறும் பாஜக கூட அம்மாவிற்கு போட்டியாக பாட்சாவை முன்னிறுத்த முடியாது.

வேண்டுமானால் இப்படி நடக்கலாம். அம்மா + பாஜக கூட்டணிக்கு சூப்பர் ஸ்டார் சுமாராகவாவது பிரச்சாரம் செய்யலாம்.

அதே நேரம் அமித்ஷா மற்றும் சாணக்கியர்களின் திட்டம் வேறாக இருந்தால்? அப்போதும் ரஜினி அரசியலுக்கு வரமாட்டார். ஏனெனில் அரசியல் வாழ்க்கையில் ஃகிராபிக்ஸ் சாகசம் பயன்படாது.

  1. நிம்பல் கு ஜி அரசியல் அலசல் கம்மி ஜி.
    ஜெயலலிதாவிற்கு பிறகு அதிமுகவை கைப்பற்ற மன்னார்குடி துடிக்கிறது.அப்படியே கைப்பற்றினாலும் இப்போது போன்றே திரைமறைவு தான் என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது.ஆனால் பார்ப்பன மணியாட்டிகள் ஜெயலலிதாவிற்கு பிறகு இலையை காவியில் கரைக்க விரும்புகிறார்கள்.
    ஜெயலலிதாவும் தன் அந்திம காலத்தில் அதே முடிவுக்கு வருவார்.அதுவரை காவி வாலை மட்டுமே ஆட்டிக்கொண்டு இருக்கும்….அதன் பிறகே குஜராத் போன்றொதொரு முயற்சி ராமனாதபுரத்திலோ அல்லது முத்துபேட்டையிலோ துவங்கும்.நீங்களும் நானும் கருத்து பதிந்து கொண்டே இருப்போம்

  2. தேர்தல் கூட்டஞ்களில் சிகரெட்டை
    தூக்கிப் போட்டு பிடித்தால்,ஓட்டு எகிறும் அப்பு….
    சிகரெட் கயை மீறி கீழே விழுந்தால்?
    …ரீ டேக் எடுத்து சமாளித்து விடலாமா அம்பி?

  3. /‘லிங்கா’ படத்தில் நடித்து வரும் செய்தியாளர்கள் ரஜினியை சந்தித்த போது../
    ‘லிங்கா’ படத்தின் விளம்பரத்தில் நடித்து வரும் செய்தியாளர்கள், ரஜினியை சந்தித்திருக்கிறார்கள்.. ம் சரி தான்.. அதில் அமித் ஷாவுக்கும் ஒரு கேரக்டர் குடுத்திருக்கிறார்கள்.
    நோக்கங்கள் வெவ்வேறாக இருந்தாலும் சங்கமிப்பது என்னவோ லிங்கத்துல தான்.

  4. குமரன்: ராமனாதபுரத்திலோ அல்லது முத்துபேட்டையிலோ துவங்கும்.நீங்களும் நானும் கருத்து பதிந்து கொண்டே இருப்போம்

    கவலை படதீர் தோழா கடைசி கம்யூன்ஸ்ட் இருக்கும் வரை அந்த காவி கூட்டத்தை எதிர்ப்போம் முடிந்தால் அழிப்போம் அப்பாவி மக்களை காப்போம் மக்களுக்காதான் மக்கள் கலை இலக்கியக் கழகம்
    பு ஜ இ மு இருக்கு

  5. “பாஜகவின் ப்ரியத்திற்குரிய வட இந்திய வணிக வர்க்க கூட்டணியை இங்கேயும் நட்டு வைப்போமென பாடுபடும் நாடார் பெருவணிகர்கள் தங்களது வெற்றியாக அகமகிழ்கிறார்கள். தமிழிசை ஒரு நாடார் அல்லவா!”

    வினவின் ஜாதி ஒழிப்பு முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது.

  6. தொலைக்காட்சியில் எட்டுக்கட்டையில், ஒளி விளக்குகளே பயந்து ஃபியூசாகும் அளவுக்கு கத்திப் குதறிப் பேசியதை வைத்தே தலைவர் ஆனவர் தமிழிசை சௌந்தரராஜன்.SUPER

  7. எனக்கு ஒன்னு நிச்சயமா தெரியுது.லிங்கா படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்யவிடாமல் தடுக்க நடக்கும் உள்நாட்டு சதிதான் இது.எப்படியோ லிங்காவில் இருந்து தமிழ்நாட்டு மக்கள் தப்பித்து கொண்டால் சரிதான்.

Leave a Reply to ram பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க