privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்தேசியகீதத்திற்கு நிற்கா விட்டால் தேச துரோகம்

தேசியகீதத்திற்கு நிற்கா விட்டால் தேச துரோகம்

-

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பேரூர்கடா என்கிற பகுதியைச் சேர்ந்த சல்மான் என்கிற இசுலாமிய இளைஞர் தேச துரோக குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 20-ம் தேதி அன்று நள்ளிரவில் போலீசாரால் எந்தக் காரணமும் குறிப்பிடாமல் இழுத்துச் செல்லப்படும் சல்மான், தொடர்ந்து மூன்று நாட்களுக்கு “பயங்கரவாதியைப்” போல் பல இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சல்மான்
சல்மான்

அதிர்ச்சியடைந்த சல்மானின் பெற்றோர் தங்கள் மகனின் நிலை என்ன, எங்கே வைக்கப்பட்டுள்ளான், அவன் செய்த குற்றம் என்ன என்பதை அறிய மறுநாள் முழுவதும் அலைந்து திரிந்துள்ளனர். போலீஸ் தரப்பில் அவர்களுக்கு எந்தப் பதிலும் தரப்படவில்லை. ஆகஸ்டு 21-ம் தேதி மாலை “தேசிய கீதத்தை அவமதித்த” காரணத்தின் பேரில் சல்மான் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்த போலீசார், பின்னர் முகநூலில் தேசத்திற்கு விரோதமான தகவல்களை சல்மான் பரிமாறியதாகச் சொல்லி தேச துரோக குற்றத்தையும் இணைத்துக் கொண்டனர்.

ஒரு பயங்கரவாதியைப் போல் நடத்தப்படுவதற்கு காரணமாக கூறப்பட்ட சல்மானின் தேசதுரோகச் செயல் என்ன?

கடந்த 18-ம் தேதி சல்மானும் அவரது ஆறு நண்பர்களும் (அதில் இருவர் பெண்கள்) கேரள மாநில அரசுக்குச் சொந்தமான திரையரங்கு ஒன்றிற்குச் சென்றுள்ளனர். அங்கே திரைப்படம் துவங்குவதற்கு முன் தேசிய கீதம் போட்டிருக்கின்றனர். தேசிய கீதம் திரையில் ஓடிய சமயத்தில் சல்மானும் அவரது நண்பர்களும் அமர்ந்தே இருந்துள்ளனர். இதைக் கவனித்த இந்துத்துவ காலிகள் சிலர் சல்மான் தேசிய கீதத்தை அவமதித்து விட்டதாக அங்கேயே கலாட்டா செய்து போலீசிடமும் புகார் தெரிவித்துள்ளனர்.

சல்மானின் அடையாளம் அவர் இசுலாமியர் என்பதல்ல. திருவனந்தபுரத்திலும் அவர் வசிக்கும் பகுதியிலும், கல்லூரியிலும், நண்பர்கள் வட்டத்திலும் அவருக்கு வேறு அடையாளம் இருந்தது. சல்மான் நண்பர்கள் வட்டாரத்தில் மட்டுமின்றி அதிகார வர்க்கத்தினரிடையேயும் அறியப்பட்ட மனித உரிமை ஆர்வலராக இருந்தார். கடந்த ஆகஸ்டு 14-ம்  தேதி திருவனந்தபுரத்திலுள்ள அரசுத் தலைமைச் செயலகத்தின் முன் ஊஃபா சட்டத்திற்கு எதிரான போராட்டம் ஒன்றில் பங்கெடுத்திருந்தார். மேலும், மனித உரிமை மீறல் தொடர்பான சில மேடை நாடகங்களிலும் பங்கேற்றிருந்தார். அவரது முகநூலில் பதிந்திருக்கும் அனேகமான நிலைத் தகவல்கள், போலீசாரின் அதிகார அத்துமீறலைக் கண்டிப்பதாகவே உள்ளன.

திரையரங்கில் ’தேசிய கீதத்தை’ அவமதித்து வெளியேறிய சல்மான், அவரது பெண் நண்பர் ஒருவர் “தேசியக் கொடியின் நிறத்தில் உள்ளாடை தேவை” என்பதைப் போல வெளியிட்டிருந்த முகநூல் நிலைத்தகவல் ஒன்றிற்கு விருப்பம் தெரிவித்திருந்த தேச ‘துரோக’த்தையும் செய்திருந்தார். இத்துடன் அவர் ஒரு இசுலாமியராகவும் இருக்கவே போலீசார் அவர் மேல் தேச துரோக குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளனர்.

தேசிய கீதம் குறித்து இந்தளவுக்கு அக்கறை காட்டி தம் கட்டும் அதிகார வர்க்கம் ஏன் அரசுத் திரையரங்கில் மட்டும் தேசிய கீதத்தை ஒலிக்க விடுகிறது? ஏன் தனியார் திரையரங்கில் ஒலித்துக் கொண்டிருந்த தேசிய கீத ரிக்கார்டை உருவிப் போட்டது?

ஏனென்றால், திரையரங்குகளில் தேசிய கீதம் வாசிக்கப்படும் போது மக்களே அதை மதிக்கவில்லை. தேசமே அடிமையாகும் போது தேசிய கீதத்திற்கு மட்டும் என்ன மதிப்பிருக்க முடியும்? ஆகவே சுதந்திரமாக வெளியே தம்மடிக்க சென்று விட்டனர். எனவே தான், முன்பு தனியார் திரையரங்குகளிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்பதாக இருந்த விதிமுறையைத் தளர்த்தினர். ”தேசியப் பெருமிதத்திற்கு அவமரியாதை நேர்வதைத் தடுக்கும்” 1971-ம் ஆண்டின் சட்டம் ‘யாரெல்லாம் தேசிய கீதம் இசைப்பதற்கு இடையூறு செய்கிறார்களோ அவர்களெல்லாம் தண்டனைக்குரியவர்கள்” என்று சொல்வதன் படி பார்த்தால், முதலில் தண்டனைக்குரியவர்கள் தனியார் திரையரங்குகளில் தேசியகீதம் இசைக்கப்படுவதை தடுத்த அதிகாரிகள் தான்.

சல்மான் ஆதரவு போஸ்டர்
சல்மான் ஆதரவு போஸ்டர்

அப்படியே தனியார் திரையரங்குகளில் மீண்டும் தேசிய கீதத்தை ஒலிக்கச் செய்தாலும் ‘அஞ்சரைக்குள்ள வண்டி’, ’மாயக்கா’ போன்ற ஷக்கீலாவின் திரைக்காவியங்கள் துவங்குவதற்கு முன் தேசிய பெருமிதத்தை எழுச்சியுறச் செய்த குற்றத்தை இழைத்தவர்களாகவே கருதப்படுவார்கள். ஆபாசப் படங்களுக்கும் தேசிய கீதம் போடவேண்டுமென்றால் பிறகு இணையத்தின் நீலப்பட தளங்களுக்கும் அதை அமல்படுத்தலாமே? தற்போது ஷகீலா திரைப்படங்கள் வருவது அரிதாகி விட்டாலும், வெளிவந்து கொண்டிருக்கும் திரைப்படங்களில் வரும் குத்தாட்டங்கள் ஷகீலா படங்ககளுக்கே சவால் விடுப்பதாகவே இருக்கின்றன என்பது வேறு விசயம்.

தேசியக் கொடியை அவமரியாதை செய்த குற்றத்தைப் பொருத்தவரை, இந்தியாவிலேயே தேசிய பெருமிதம் அதிகபட்சமாக பொங்கி வழியும் ஒரே இடம் கிரிக்கெட் மைதானம் தான். மைதானங்களில் உயர் வர்க்க குலக்கொழுந்துகளின் முகரைகளிலும், முதுகு மற்றும் மார்புகளிலும் தேசிய கொடியின் வண்ணங்கள் சீப்பறுந்து சீரழியும் காட்சிகள் நமக்குப் புதிதில்லை. தேசிய கொடியின் வண்ணத்தில் உள்ளாடை கிடைக்குமா என்று கேட்டதற்கு விருப்பம் தெரிவித்தது தேச துரோகம் என்றால், கொடியைத் தன் சளியொழுகும் மூஞ்சியில் வரைந்து கொண்டும், கொடியால் விசிறிக் கொண்டும் மைதானத்தில் அமர்ந்து 20-20 கிரிக்கெட்டை ரசிக்கும் திருமதி. அம்பானியையும் ப்ரீதி ஜிந்தாவையும் எத்தனை முறை கைது செய்யலாம்?

காலனிய ஆட்சியாளர்களால் 1860-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தேச துரோகச் சட்டம் எனப்படும் IPC 124 Aவின் படி பார்த்தால், ‘சட்டப்படி அமைந்த இந்திய அரசாங்கத்தை வெறுப்பது” குற்றமாகிறது. இந்த வரையறையின் படி பார்த்தால், ஒட்டுமொத்த காஷ்மீர் மாநிலத்தையும், ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களையும், தண்டகாரண்யா, கூடன்குளம், ஜெய்தாபூர், விதர்பா என்று நாடெங்கும் பரவலாக அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் அனைவரையும் உள்ளே தள்ள வேண்டியிருக்கும். ’இந்திய அரசே ஒழிக’ என்பதும் ’தேச துரோக’ குற்றமாகி விடும். 99% சதவீத மக்களின் செயல் தேச துரோகமென்றும் எஞ்சிய 1% கொழுப்பெடுத்தவர்களே தேசபகதர்கள் என்றும் சொல்கிறது ஆங்கிலேயன் போட்ட சட்டம்.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் எனும் பெயரில் பெரும் நிலப் பிரதேசங்களையும், தண்ணீர் தனியார்மயத்தின் கீழ் ஆறுகளையும், பன்னாட்டு சுரங்க நிறுவனங்களிடம் மலைகளையும், வங்கி இன்சுரன்சு துறைகள் தனியார்மயமாக்கல் என்கிற பெயரில் மக்களின் சேமிப்பையும், இராணுவத்துறையில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி என்ற பெயரில் இராணுவத்தையும் – ஆகமொத்தத்தில் முழு நாட்டையும் கூறுகட்டி விற்பது தேசபக்தியில் சேர்த்தியா என்பது பற்றி வெள்ளைக்காரன் சட்டங்கள் ஏதும் போட்டுள்ளானா, நமக்குத் தெரியவில்லை; ஏனெனில், என்னதான் சுதேசிகளாக இருந்தாலும் தேச பக்தி அல்லது துரோகம் என்று வரும் போது காலனிய எஜமானர்கள் கழித்துச் சென்ற அளவுகோல்களைத் தானே பயன்படுத்தியாக வேண்டியுள்ளது?

நாட்டின் இறையாண்மையை விற்பது தேசபக்தி, பொருளாதார நடவடிக்கை என்றும் அதை எதிர்ப்பது தேசத் துரோகம் என்றும் சட்டங்களைக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில் சல்மான்கள் கைது செய்யப்படாமலிருந்தால் தான் அதிசயம். சமகாலத்தில் தேசத்தை விற்றதன் மூலம் புகழ்பெற்ற ‘தேசபக்தர்களின்’ பெயர் பட்டியலைப் பார்த்தால், நாமெல்லாம் தேச துரோகிகளாக இருப்பதே உத்தமம்!

எனவே, தேச துரோகிகளாக மாறுவோம் – தேசத்தைக் காப்போம்!

  1. உங்களுக்குப் பிடிக்குதோ இல்லையோ தேசிய கீதம் பாடும் போது எழுந்து நிற்க வேண்டும் என்பது ஒரு மரபுதானே… சல்மான் படித்தவர்தானே.. அது தெரியாதா… ஏற்க முடியவில்லை.. சரி.. …

  2. முஸ்லீம்களுக்கும், பறையனுக்கும் ஆதரவான ஒரு கட்டுரை எனும் மட்டத்தில் இது நன்றாக உள்ளது…வினவும், அதன் சார்பு அமைப்புகளும் இளிச்சவாய் பசங்களை புரட்சி எனும் பெயரில் போராட்டகாரனாக்கி, பின் நக்சலைட்டாக்கி, பின் ஒரு முழுமையான தீவீரவாதி ஆக்கும் ஒரு செயலில் ஈடுபட்டுள்ளது… இந்த கட்டுரை அப்படி ஒரு அஸ்திவாரத்தில் தான் எழுதப்பட்டது… தேசிய கீதத்திற்கு எழவில்லையென்று ஒருவனை, அதுவும் அவன் முஸ்லீம் என்பதற்காக கைது செய்தால் அது கண்டிக்கவும், தண்டிக்கவும்பட வேண்டிய செய்கை தான்… அதற்காக கிரிக்கெட் முதல் பெண்கள் உள்ளாடை வரை அலசி இருப்பது.. மூன்றாம்தர விலைமாதுவின் செயலை போல உள்ளது….

    • => முஸ்லீம்களுக்கும், பறையனுக்கும் ஆதரவான ஒரு கட்டுரை///// (*) இந்த வரி உங்களின் முகத்திரையினை கிழிக்கிறது. இந்த்துத்துவா காலிகள் எப்பொழுதும் தாழ்த்தபட்ட மக்களின் எதிரிகள் என்பதற்கு இந்த வரி உதாரணமாக உள்ளது.

      => வினவும், அதன் சார்பு அமைப்புகளும் இளிச்சவாய் பசங்களை புரட்சி எனும் பெயரில் போராட்டகாரனாக்கி, பின் நக்சலைட்டாக்கி, பின் ஒரு முழுமையான தீவீரவாதி ஆக்கும் ஒரு செயலில் ஈடுபட்டுள்ளது///// (*) காவி டவுசரை கழட்டி விட்டு எழுதினீர்களோ? ஏனெனில் ஆர்.எஸ்.எஸ் போன்ற நாதாரிகள் கராத்தே சொல்லி தர்ரேன், வாள் பயிற்சி தருகிறேன் என கூறி அப்பாவு சிறுவர்கள் மனதில் கொடூர காவி சிந்தனை பதித்து அவர்களை இந்த்துத்துவ தீவரவாதிகளாக மாற்றும் காவி டவுசரை கண்டிக்க துணிவுண்டோ?

    • //பறையனுக்கும் ஆதரவான ஒரு கட்டுரை// மித மிஞ்சிய சாதி வெறியனால் மட்டுமே இப்பிடி பேச முடியும்

      • /முஸ்லீமுக்கு ஆதரவான ஒரு கட்டுரை/ மித மிஞ்சிய மத வெறியனால் மட்டுமே இப்படி பேச முடியும்

  3. தேசிய கீதத்திற்கு எழுந்துநிற்க கட்டாயமில்லை! தேசியகீதம் வெறும் போற்றி பாடலே! அரசு சம்பலம் வாங்கும் ஊழியர்களை, ராணுவ வீரர்களை வேண்டுமானால் இப்படி அடிமைப்படுத்தலாம், சுதந்திர (?) இந்தியாவில், குடிமகனுக்கு வேறு என்னதான் சுதந்திரமிருக்கிறது? ஆண்டவனைநேரடியாக வழிபடக்கூட சுதந்திரமில்லை! இடையில் பார்ப்பானும், சமஸ்கிருதமும் ! பார்ப்பன சட்டங்கள் கொலுத்தப்படல் வேண்டும்! தனிமனித சுதந்திரம் இல்லாத நாட்டில் கொடிக்கும், கீதத்திற்கும் மட்டும் மரியாதையா?

    • அஜாத சத்ரு அவர்களே,

      மற்ற விடயங்களில் உங்களுடன் ஒத்து போகிறேன்.
      ஆனால் தேசிய கொடியை அவமதிக்கும் செயல் தவறு தான்.
      தேசம் என்பது நமது தாய்க்கு சமம். மற்றவர்கள் நம் தாயை அவமதிப்பதனால் நாமும் அவமதிக்க நினைக்கலாமா?

      அரசியல்வாதிகள் ஊழல் செய்வதால் நாமும் தேசத்தை அவமதிப்பது சரியல்ல.
      மற்றவர்கள் தவறு செய்கிறார்கள் என்பதால் நாமும் தவறு செய்யலாம் என்று நாம் எண்ணுவது தவறு.

      இந்தியன் என்ற பெயரில் பதிவிடுபவர் வரம்பை மீறி தரக்குறைவான வார்த்தைகளை பிரயோகிக்கிறார். அது தவறு.

      • //ஆனால் தேசிய கொடியை அவமதிக்கும் செயல் தவறு தான்…// நன்றி அய்யா!

        அவமானம் என எதைக்கருதுகிறீர்கள்? எந்த மக்களால், எந்த மக்களுக்காக தேசம் என்னும் உருவாக்கம் ஏற்படுகிறதோ , அந்த மக்களுக்கில்லாத உரிமை இருக்கமுடியுமா?

        வெறும் கொடித்துணியிலா இருக்கிறது, தேசத்தின் கவுரவம்? கல்லிலே கடவுள் இருப்பது போலவா?

        அடிமைத்தனத்தின் ஆரம்பமே இதுதான்! ஆதிக்கவாதிகளின் மூளைச்சலவையே இந்த பக்தி, பாசம், தேசப்பற்று, மொழிபற்று, சாதிபற்று இதெல்லாம்! சோற்றுக்கில்லாதவனுக்கு இந்த பற்றெல்லாம் எதற்கு? மனிதனேயமென்னும் மக்கட்பற்று ஒன்றே போதுமே!

        • அஜாத சத்ரு அவர்களே,

          மக்களுக்கு உரிமை கிடைக்க கூடாது என்று நான் நினைக்கவில்லை. கண்டிப்பாக மக்களுக்கு உரிமை இருக்க வேண்டும். அதே சமயம் அந்த மக்களுக்கு நம் தேசம் மீது பற்று இருக்க வேண்டும். அரசியல்வாதிகள், அதிகாரிகள் செய்யும் தவறுக்கு தேசத்தின் மீது பழி போட வேண்டிய அவசியம் இல்லை.

          Jingoism என்று கூறுவார்களே, அதை போன்ற தேசவெறி, இனவெறி மற்ற மனிதர்களிடம் மனிதநேயமற்று நடக்க வைக்கும். நான் கூறுவது அது போன்ற வெறியல்ல. நான் கூறுவது தேச வெறியன்று, தேசப்பற்று. நாம் பிறந்த மண்ணின் மீது நமக்கு அக்கறை இருப்பதில் தவறில்லையே, இங்கு பிறந்த மண் என்பது அந்த மண்ணில் வாழும் மனிதரையும் சேர்த்து தான்.

          என்னுடைய சில நண்பர்கள் இருக்கிறார்கள். பாகிஸ்தான் நாடு முழுக்க அழிந்து விட வேண்டும் என்று சூளுரைப்பார்கள். அது ஜிங்கோயிசம். என் தாய்நாட்டின் மீது, நாட்டு மக்களின் மீது கொண்ட பற்று என்பது வெறியல்ல. அது நாட்டுப்பற்று.

          தங்களது தாயை யாராவது பழித்தால் அப்போதும் இப்படி தான் சோற்றுக்கில்லாதவனுக்கு தாய்ப்பற்று தேவையா என்று விவாதம் புரிவீர்களா? அரசியல்வாதிகளை, ஊழல்வாதிகளை, அராஜகம் செய்பவர்களை, மக்களை ஏமாற்றுபவர்களை எதிர்ப்பதில் நான் உங்களோடு என்றும் ஒத்துப்போகிறேன். ஆனால் அவர்களை எதிர்க்கும் வேகத்தில் தாய்நாட்டை, தாய் மண்ணை, அவமதிக்கும் செயலை எதிர்ப்பதில் உங்களிடம் இருந்து நான் விலகி யோசிக்கிறேன்.

          தாய்நாட்டை அவமதிப்பதால் சோற்றுக்கில்லாதவனுக்கு சோறு கிடைத்து விடும் என்று நம்புகிறீர்களா? இருவேறு விடயங்களை இணைப்பதால் வரும் குழப்பம் இது.
          மனித நேயமும், மக்கட்பற்றும் இருக்கும் இடத்தில் நாட்டுப்பற்றும் இருக்கலாம், தவறில்லை 🙂

  4. ஒரு பிரபல நடிகை ஒட்டுத்துணி இல்லாமல் தேசியக்கொடியையே தன்னுடைய ஆடையாக கொண்டு படுக்கை அறையில் இருப்பது போஸ் கொடுத்த செய்தி சில நாட்களுக்கு முன் வந்ததை வாசகர்கள் மறந்திருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன் . அந்த நடிகை மீது அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பது பற்றிய மொவ்னத்தை இன்னும் யாரும் கலைக்காத போது யாரோ ஒரு தனிமனிதன் செய்ததை விமர்சனத்துக்கும் , அரசியல் ஆக்குவதும் ஏன் என்ற கேள்வி தான் மிஞ்சி நிக்கிது…

    • சாகீர் அவர்களே,

      இரண்டு செயல்களுமே தவறு தான். கண்டிக்கத்தக்க செயல்கள் தான். அதே சமயம் தண்டிக்க தக்க செயல்கள் அல்ல என்பது என் அபிப்பிராயம்.

      • எனக்கு வரும் மின்மடல்களில் நமது தேசிய கீதம் பற்றிய ஒரு மின்மடல் என் கவனத்தை கவர்ந்தது. அது சொல்ல வந்த சேதி கொஞ்சம் புதுசா தான் இருந்தது எனக்கு. எந்தளவு உண்மையெனத் தெரியவில்லை. மின்மடலில் வந்த கருத்தை முதலில் சொல்ல முயல்கிறேன்.

        “நமது தேசிய கீதத்தின் அர்த்தம் எந்த அளவுக்கு உங்களுக்குத் தெரியும்? நானும் நீண்ட நாளாக எனக்குள் சில கேள்விகளைக் கேட்டுக் கொண்டதுண்டு. தேசிய கீதத்தில் வரும் வார்த்தைகளில் ‘அதிநாயக’ என்பது யாரை குறிக்கிறது? ‘பாரத பாக்கிய விதாத’ என்று யாரை புகழ்ந்து பாடுகிறார்கள். நான் கீழே சொல்லப் போவது உங்களுக்கு தெரியுமா? எனக்கும் இப்போது தான் தெரிந்தது.

        நம் தேசிய கீதமாகப் போற்றப்படும் ‘ஜன கன மன அதிநாயக’ என்ற பாடலை இரவீந்திரநாத் தாகூரால் 1919-ல் இந்தியாவுக்கு வருகை தந்த ஜார்ஜ் V மன்னரையும், இங்கிலாந்து இராணியையும் கவுரவிப்பதற்காக பாடப்பட்டது. ஆனால் நாம் ஜன கன மன இந்திய தாய் திருநாட்டை புகழ்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

        பெங்காலியிலுள்ள ‘ஜன கன மன’ மூலக் கவிதையில் பஞ்சாப், சிந்து, குஜராத், மராட்டா போன்ற மாகாணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனென்றால் அவை அப்போது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்திய நாட்டின் முக்கிய மாகாணங்களான காஷ்மீர், ராஜஸ்தான், ஆந்திரா, மைசூர், கேரளாவோ அந்தப் பாடலில் சொல்லப்படவில்லை. ஏனென்றால் அவையெல்லாம் போர்ச்சுகீசியர்களின் ஆட்சியின் கீழிருந்தது.

        ‘ஜன கன அதிநாயக’ என்பது ஜார்ஜ் V மன்னனை மக்களின் கடவுளாகவும், ‘பாரத பாக்கிய விதாத’ என்றால் மன்னர் நல்லவனவற்றை கொண்டு வருவதாகக் கூறுகிறது.

        ‘ஜன கன மன’ வின்

        முதல் பத்தி: இந்திய மக்கள் உங்கள் நற்பெயரைப் பாடி, உங்களின் ஆசிர்வாதத்தை நாடுகிறார்கள் (தவ சுப நாமே ஜாஹே; தவ சுப ஆசிச மாகே…)

        இரண்டாம் பத்தி: எல்லா மத மக்களும் உங்க நல்ல அன்பை பெற மிகுந்த ஆவலோடு உங்கள் அரியணையை நாடி வந்திருக்கிறோம்.

        (இப்படியே 5 பத்திகளைப் பற்றி நிறைய அந்த மின்மடலில் சொல்லப்பட்டிருந்தது. நேரமின்மையால் சுருக்கிக் கொடுத்திருக்கிறேன்)

        இப்படி அர்த்தம் தெரியாமல் 50 ஆண்டுக்கு மேலாக நாம் ஜன கன மன பாடலை தேசியகீதமாக பாடி வந்திருக்கிறோம். விழித்தெழுவோம். உண்மையை உணர்வோம்.

        நேரு இந்தப் பாடலை ஏன் தேர்ந்தெடுத்தாரென்றால் பேண்டு இசைக் கருவியின் மூலம் வாசிக்க எளிதாக இருந்தது. உண்மையில் சொன்னால் ‘வந்தே மாதரம்’ பாடல் தான் நாட்டின் எழுச்சியை உண்மையாகப் பாடுவதாக உள்ளது, இப்போது இசைக்கருவிகளின் முன்னேற்றத்தால் வந்தே மாதரம் பாடலையும் மிக அருமையாக இசைக்க முடியும். ஏன் வந்தே மாதரம் நம் தேசிய கீதமாக ஆகக் கூடாது”

        என் கருத்து: அந்த மின்மடல் எதாவது வேலையற்றவன் வேலையான்னு தெரியவில்லை. தேசிய கீத வரலாறு தெரியாத நிலையில் பெங்காலி மொழி புரியாத நிலையில் நான் கருத்து சொல்லவதை விட அந்த மடலின் கருத்துக்களை உங்கள் முன் வைக்கிறேன். தேசிய கீத வரலாறு அறிந்தவர்கள் மேலே சொல்லப்பட்டிருப்பது எந்த அளவு உண்மை என்பதை எங்களுக்கு விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

      • தோழரே ,
        நான் இங்கு சொல்லவந்தது இந்த தனிமனிதனின் செயல்பாட்டை காட்டிலும் ஊடகத்தின் வழியாக செய்யப்படும் அந்த அனாச்சாரமானது மிகவும் கேவலமானது.ஆனால் அரசு அதன் மீது பாராமுகமாக இருப்பதற்கான காரணம் தான் விளங்கவில்லை. மேலும் தேசத்தின் மீது மதிப்பு காட்டுவதற்கு ஆனா வழிமுறை(எழுந்து நிற்பது) இதுதான் என்று யார் வரையரத்தது என்பதும் தெளிவுபெற கூரினால் நானும் புரிந்துக்கொள்ள எதுவாக இருக்கும்.

  5. இதில் வேடிக்கை என்னவென்றால் சல்மான் மீது போலீசில் புகார் அளித்த இந்துத்துவ காலிகளுக்கும் தேசபக்திக்கும் மயிரளவு சம்பந்தம் கூட கிடையாது.அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி வெள்ளைக்காரனுக்கு அங்கிள் வேலை பார்த்து ஆட்டயை போடும் கூட்டம்தான் இந்த கூட்டம்.

  6. கட்டுரையாளரே நீங்க மும்பை போயிருக்கீங்களா ?அங்குள்ள பெரும்பாலான தியேட்டர்களில் தேசிய கீதம் படம் துவங்கும் முன் ஒலிக்கிறது. அது நீங்கள் சொன்ன ஷகீலா படங்களை ஒத்த போஜ்பூரி மொழி படம் ஓடும் தியேட்டர்களையும் சேர்த்து தான். மொழி புரிந்தாலும் புரியாவிட்டாலும் எல்லா ரசிகர்களும் எழுந்து நிற்கின்றனர்.
    பெயர் பெறுவதற்காக அட்டூழியங்களை செய்யும் உயர்சாரி கழிசடைகளை விடுங்கள். சராசரி மனிதனாக இருக்கும் ஒருவன் தேசிய கீதம் ஒலிக்கும்போது எழுந்து நிற்பது தானே நியாயம். அந்த புத்தி எங்கே போய்விட்டது ? பக்கத்தில் உள்ளவன் நிற்கும்போது (நிச்சயமாக அவன் இவனையும் எழுந்தரிக்க சொல்லியிருப்பான் அல்லது சவுண்டாவது விட்டிருப்பாணுக, அப்பொழுதும் எழுந்தரிக்கவில்லை என்றால் இவனுக்கென்ன ஆண்மை குறைவா ? திமிர்தானே) இவனுக்கு எங்கே போனது புத்தி. அது சரி மனசுல முஸ்லீமாகவும் (எதோ அவரு ஊரு சவூதி மாதிரியும் இங்கே டூருக்கு வந்திருக்கிற மாதிரியும்) பெயரில் இந்தியனாகவும் இருந்தா மட்டும் பத்தாது…அப்படியே எழுந்து நின்னுட்டாலும் தேசப்பற்று வந்துடாது.. isis க்கு ஆதரவா பனியன் போட்டவங்க தான இவங்க. ஊரோடு ஒத்து வாழ்ன்னு ஒரு பழமொழி இருக்கு – அது இவங்களுக்கு பொருந்தாது. இதுல இந்துத்துவான்னு ஒரு இடைச்செருகல் வேற.. என்னமோ அடிச்ச ஒவ்வொருத்தன் பெயரையும் தீர விசாரிச்ச மாதிரி.

  7. தேசத்தை மதிக்காதவன் முஸ்லீமா இருக்கிற ஒரே காரணத்துனால அவன் நல்லவனாம்…
    எதிர் கேள்வி கேட்பவர் எவராக இருந்தாலும் அவர் – இந்துத்துவா காலி கம்னா..யாம்.
    இதுக்கு ஒரு கட்டுரை..

    • ஒருவன் எழுந்து நின்றால் மட்டும் நாட்டை மதிப்பதாக ஆகிவிடுமா? அப்போ தேசிய கீதம் பாடப்படும்போது மட்டும் தான் ஒருத்தன் நாட்டை மதிக்கிறான் அப்படித்தானே? என்ன ஒரு அபூர்வமான கண்டுபிடிப்பு..

      தேசபற்றை ஒருசில செயல்முறைகளை மட்டுமே வைத்து கணக்கிட்டு விட முடியுமா? என்னைப்பொறுத்தவரை மதிப்பளிப்பது என்பதெல்லாம் மனரீதியலானது, ஒருவர் செயல்முறையில் அதனை வெளிக்காட்ட வில்லை என்பதால் மதிப்பளிக்கவில்லை என்று அர்த்தம் கொள்ளமுடியாது. தேசத்தின் மீதான பற்று மற்றும் மதிப்பு ஒவ்வொருவரின் மனதிலும் இருத்தல் வேண்டும் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை ஆனால் அதனை இப்படித்தான் வெளிப்படுத்தவேண்டும் என்றால் நிச்சயமாக அதற்க்கான காரணத்தையும் அறிந்த பின்னரே முடிவெடுக்க இயலும்.

Leave a Reply to பிசாசு பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க