privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கமின்கட்டண உயர்வின் காரணம் என்ன ?

மின்கட்டண உயர்வின் காரணம் என்ன ?

-

மிழ்நாட்டில் ‘அம்மா’வின் ஆணையில்லாமல் ஒரு அணுவும் அசைய முடியாது என்று அனைவரும் நம்பிக் கொண்டிருக்கும் நிலையில் ‘அம்மா’வுக்கே அதிர்ச்சி அளிக்கும் விதமாக தமிழக மக்கள் தலையில் ரூ 6,805 கோடி சுமையை இறக்கியிருக்கிறது ஒரு ‘தீய’ சக்தி. அந்த தீயசக்தியின் பெயர் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்.

இன்றைய நாளிதழ்களில் (24.09.2014) முழுப்பக்க விளம்பரமாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, வீட்டு உபயோகம் மற்றும் தொழில்துறை பயன்பாட்டுக்கான மின்சாரக் கட்டணங்களை உயர்த்தி உத்தரவிட்டிருக்கிறது இந்த ஆணையம்.

மின் கட்டணம்
தமிழக மக்கள் தலையில் ரூ 6,805 கோடி சுமையை இறக்கியிருக்கிறது ஒரு ‘தீய’ சக்தி

வீடுகளுக்கு உள்ளிட்ட குறைந்த அழுத்த பயன்பாட்டுக்கு 15% அதிகரிப்பு, தொழிற்சாலைகள், வணிகநிறுவனங்கள், நீர்இறைப்புக்கு பயன்படுத்தப்படும் உயர்அழுத்த பயன்பாட்டுக்கு 30% அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஒரு யூனிட்டுக்கு ரூ 2.60-ரூ 5.75 ஆக உள்ள வீடுகளுக்கான மின்கட்டணம் இனி ரூ 3 முதல் ரூ 6.60 என அதிகரிக்கும். இந்த மின் கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு சடங்கு முடிந்த பிறகு வரும் நவம்பர் மாதம் முதல் இதை அமலுக்கு கொண்டு வருகிறார்கள்.

தான் ஆட்சியில் இருக்கும் மாநிலத்தில் தனது அனுமதி இல்லாமல், தான் சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு செய்யாமல் ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மீது குண்டர் சட்டத்தை ‘அம்மா’ பாய்ச்சுவார் (தேவைப்பட்டால் அதற்கேற்றபடி சட்டத்தை திருத்திய பிறகு பாய்ச்சுவார்); அல்லது குறைந்தபட்சம் ஒரு அவதூறு வழக்காவது போட்டு பல்வேறு ஊர்களுக்கு இழுத்தடிப்பார் என்று யாராவது நினைத்தால், ஆணையத்தின் மீது கைவைக்க அம்மாவாலேயே, ஏன் ‘ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்குள் இந்தியாவுக்கு வெளியே பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம் அனைத்தையும் கொண்டு வந்து விடக் கூடிய’ திறன் படைத்த (ஆனால் இன்னும் கொண்டு வரவில்லை) மோடியாலேயே கூட முடியாத காரியம். ஆணையத்தின் உத்தரவுகளை எதிர்த்து நீதிமன்றங்களில் கூட மேல்முறையீடு செய்ய முடியாது.

மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்பது மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத்தை தனியார்மயமாக்கும் நோக்கத்திற்காகவே உலக வங்கியின் ஆணைக்கேற்ப உருவாக்கப்பட்ட அமைப்பு. கட்டண நிர்ணய அதிகாரம், உரிமம் வழங்கும் அதிகாரம் ஆகியற்றை மாநில அரசிடமிருந்து பிடுங்கி இந்த அமைப்புக்குக் கொடுப்பதற்கான சட்டம் 1998 பா.ஜ.க அரசினாலேயே இயற்றப்பட்டு விட்டது. அரசிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றி முதலாளிகளின் நேரடி பிரதிநிதிகளால் ஆளப்படும் ஒழுங்குமுறை ஆணையங்களே இன்றைக்கு மக்கள் மீது அதிகாரம் செலுத்தும் வலிமையான அமைப்புகள்.

2003-ல் பா.ஜ.க. ஆட்சியில் இயற்றப்பட்ட மின்சார சட்டத்தின்படி மின் உற்பத்தி, மின் அனுப்புகை, மின் விநியோகம் ஆகிய 3 பணிகளையும் மின்வாரியமே செய்யக்கூடாது என்று வாரியங்கள் மூன்றாக உடைக்கப்பட்டன.

முதலமைச்சர் ஜெயலலிதா
மின்கட்டண உயர்வுக்கான அறிவிப்புக்கு எதிராக எதுவும் செய்ய முடியாத கையாலாகாத முதலமைச்சர் ஜெயலலிதா.

மின்சாரம் வணிக ரீதியில் விற்கப்படவேண்டும், மின்சாரம் உற்பத்தி செய்ய அரசாங்க உரிமம் தேவையில்லை, தனியார் முதலாளிகள் மின்னுற்பத்தி செய்வதுடன் மின்சாரச் சந்தையில் ஊக வணிக சூதாட்டமும் நடத்தலாம் என்றும் அனுமதி அளிக்கப்பட்டது. மின்வாரியங்கள் சொந்த உற்பத்தியை நிறுத்திவிட்டு, தனியாரிடம் மின்சாரத்தைக் கொள்முதல் செய்யுமாறும், விநியோகத்தையும் அவர்களிடம் ஒப்படைக்குமாறும் உத்திரவிடப்பட்டது. தனியாரிடமிருந்து அரசு கொள்முதல் செய்கின்ற மின்சாரத்திற்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரமும் ஆணையத்திடமே தரப்பட்டது. கட்டண உயர்வுக்கு எதிராக யாரும் நீதிமன்றத்தை நாடவியலாதென்றும், இதற்கென உருவாக்கப்படும் ‘மின்சாரத்துக்கான மேல்முறையீட்டு ஆணையம்’தான் தீர்ப்பளிக்க முடியும் என்றும் இச்சட்டம் கூறுகிறது.

மின்சார வாரியம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30-ம் தேதிக்கு முன்பு மின்கட்டணத்தை உயர்த்துவதற்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்பது சட்டம்; அதை மின்சார ஒழுங்குமுறை மேல் முறையீட்டு ஆணையமும் உறுதி செய்திருக்கிறது. எனவே,  தமிழ்நாடு மின்சார வாரியம் (மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்) மின்கட்டண உயர்வு கேட்டு விண்ணப்பிக்காத போதே, 2014-15 நிதி ஆண்டுக்கான அதன் வருவாய்த் தேவையை கணக்கிட்டு மின் கட்டண உயர்வை அறிவித்திருக்கிறது ஒழுங்குமுறை ஆணையம். அப்படி மின்வாரியத்தின் ஆரோக்கியத்தின் மீது இந்த ஆணையத்துக்கு என்ன அக்கறை?

தனியார் மின் உற்பத்தி முதலாளிகளிடம் கொள்ளை விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதற்கு செலவழிக்க வேண்டிய சுமார் ரூ 18,000 கோடி மற்றும் கடந்த 10 ஆண்டுகளில் அவ்வாறு வாங்கியதால் பட்ட கடனுக்கு வட்டி ரூ 2,000 கோடி கட்டுவதை உறுதி செய்வதற்குத்தான் இந்த ரூ 6,800 கோடி ரூபாய் கட்டண உயர்வை அறிவித்திருக்கிறது ஆணையம்.

இந்த மின்கட்டண உயர்வுக்கான அறிவிப்புக்கு எதிராக எதுவும் செய்ய முடியாத கையாலாகாத முதலமைச்சர் ஜெயலலிதா விடுத்த அறிக்கையை தலைப்புச் செய்தியாக முதல்பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது தினத்தந்தி நாளிதழ்.

அதில், தனியார் முதலாளிகளின் பிரதிநிதிகளும், அதிகாரிகளும் அடங்கிய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக எதுவும் செய்ய இயலாத தனது கையாலாகாத்தனத்தை ஒத்துக் கொண்டு, ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் ஓய்வூதியச் செலவு ரூ 4,370 கோடியாக உயர்ந்திருப்பதாலும், மின் வாரியத்தின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியின் விலை உயர்ந்திருப்பதாலும் ஆணையம் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறது என்று மின்கட்டண உயர்வுக்கு நியாயம் கற்பிக்கிறார் ஜெயலலிதா.

மேலும், இந்த 30% கட்டண உயர்வு ஏழை மக்களை பாதிக்கா வண்ணம் தனது அரசு பார்த்துக் கொள்ளும் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஏற்கனவே 2014-15 நிதி ஆண்டில் மின்கட்டண மானியம் வழங்க ரூ 10,575 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது, தமிழ்நாடு அரசு. இந்த கட்டண உயர்வுக்குப் பிறகு இந்த மானியச் செலவும அதிகரிக்கும். அந்தச் சுமையும் மறைமுக வரிகள் மூலம் மக்கள் மக்கள் தலையில் கட்டப்படும். ஏற்கனவே பெரும்பான்மை நேரம் மின்வெட்டில் அவதிப்படும் குடிசைப்பகுதி மக்களுக்கு ஒரு குண்டு பல்பு எரிவதற்கு கட்டண உயர்வில்லை என்று அறிவிப்பது யாரை ஏமாற்ற?

ஊழியரின் ஊதியம், நிலக்கரி விலை என்று பேசும் ஜெயலலிதா மின்வாரியத்தின் மொத்த வருவாயில் சுமார் 55%-ஐ விழுங்கும் மின்சாரம் வாங்கும் செலவு பற்றி பேசவில்லை.

தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி 2003-04-ம் ஆண்டில் தனியாரிடமிருந்து 1,317 கோடி யூனிட்டுகள் மின்சாரம் பெறப்பட்டிருக்கிறது. இது 2008-09-ம் ஆண்டில் 2,114 கோடி யூனிட்டுகளாக அதிகரித்திருக்கிறது. இதே காலகட்டத்தில் மின் வாரியம் அடைந்த நட்டம் 2003-04-ம் ஆண்டில் 1,110 கோடியிலிருந்து 2008-09-ம் ஆண்டில் 7,131 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது.

2009-10-ல்  தமிழக மின்வாரியம், தனது மொத்த மின்தேவையில் 19 விழுக்காட்டை  வணிக மின் உற்பத்தியாளர்களிடம் வாங்கிவிட்டு, அதற்கு விலையாக தனது மொத்த வருவாயில் 49.45 விழுக்காட்டை கொடுத்திருக்கிறது.

தமிழகத்திலுள்ள ஜி.எம்.ஆர். பவர் நிறுவனம், பிள்ளைபெருமாநல்லூர், சாமல்பட்டி மற்றும் சமயநல்லூரில் அமைந்திருக்கும் தனியார் மின்நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை முறையே ரூ 10.41, ரூ 8.55, ரூ 10.18, ரூ 10.96 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழக மின்வாரியம் உற்பத்தி செய்யும் நீர்மின்சக்தியின் விலை யூனிட்டுக்கு 21 காசுகள், அனல் மின்சக்தியின் அதிகபட்ச விலை ரூ 2.14 காசுகள் என்பதையும் இத்துடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதற்குமேல் ரூ 657 கோடி தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு கப்பமாக ஆண்டு தோறும் செலுத்தப்படுகிறது. ஜி.எம்.ஆருக்கு ரூ 147 கோடி, அப்போலோ மருத்துவக் குழுமத்துக்குச் சொந்தமான பிள்ளைபெருமாள் நல்லூர் மின் நிறுவனத்துக்கு ரூ 292 கோடி, சாமல்பட்டி மின் நிறுவனத்துக்கு ரூ 108 கோடி, சமயநல்லூர் மின் நிறுவனத்துக்கு ரூ 110 கோடி ரூபாய் 2013-14-ம் ஆண்டுக்கான திறன் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்திருக்கிறது. திறன் கட்டணம் என்பது தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கப்படும் மின்சாரக் கட்டணத்திற்கு அப்பாற்பட்டு, அவர்களுக்கு ஆண்டுதோறும் மின்சார வாரியம் செலுத்த வேண்டிய கப்பத் தொகையாகும். தனியாருடான ஒப்பந்த காலம் முடியும் வரை மின்சாரம் வாங்கினாலும் வாங்காவிட்டாலும் இந்தத் திறன் கட்டணத்தை மின்சார வாரியம் செலுத்த வேண்டும்.

1994-ல் தனது மின்சாரத் தேவையில் 0.4 சதவீதத்தை மட்டுமே தனியாரிடமிருந்து கொள்முதல் செய்து வந்த தமிழக மின்வாரியம், 2008-ல் சுமார் 35% மின்சாரத்தைத் தனியாரிடம் வாங்கியது.

1994-95-ல் தமிழக மின்வாரியம் ஈட்டிய உபரி ரூ 347 கோடி. 2007-08-ம் ஆண்டில் இது ரூ 3,512 கோடி பற்றாக்குறையாக மாறியது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், குடிசைகளுக்கு இலவச மின்சாரம் இவைதான் நட்டத்துக்கு காரணம் என்று அவதூறு சொல்கின்றனர் மேட்டுக்குடி ‘அறிவுஜீவி’கள். ஆனால், இந்த திட்டங்களுக்கான மானியத்தை தமிழக அரசு வழங்கிய பிறகும் ஏற்படும் மின்வாரியத்தின் பற்றாக்குறைக்கு  தனியார் முதலாளிகளுக்கு அளிக்கப்பட்ட அதிகப்படியான பணமே முக்கிய காரணம் என்பது தெளிவாகிறது.

இதற்கு உதாரணமாக 2005-06-ல் தமிழக அரசு வாங்கிய மின்சார விலை பற்றிய விபரங்களைப் பார்க்கலாம்.  அந்த ஆண்டு அப்போலோ (மருத்துவமனை) குழுமத்துக்குச் சொந்தமான பிள்ளைப்பெருமாநல்லூர் மின்நிலையத்திலிருந்து வாங்கிய மின்சாரத்தின் விலை யூனிட்டுக்கு ரூ 17.78.  சாமல்பட்டி பவர் என்ற நிறுவனத்திடமிருந்து யூனிட் ரூ 8.74; மதுரை பவர் ரூ 8.63. சென்னை பேசின் பிரிட்ஜில் மின் வாரியத்துக்குச் சொந்தமான நிலத்தில் அமைந்திருக்கும் ஜி.எம்.ஆர். என்ற தனியார் அனல் மின் நிலையத்திலிருந்து வாங்கப்பட்ட மின்சாரத்தின் விலை யூனிட்டுக்கு ரூ 6.58. யூனிட்டுக்கு ரூ 17.74 கொடுத்து அப்போலோ நிறுவனத்தின் மின்சாரத்தை வாங்க முடியாததால், மின்சாரம் வாங்கத் தவறியதற்குத் தண்டமாக, 2005-06-ல் மட்டும் நாளொன்றுக்கு ஒரு கோடி வீதம் ரூ 330 கோடி கொடுத்திருக்கிறது மின்வாரியம்.

இப்படி அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதைக் கேள்விக்குள்ளாக்கினால், தீவிரமான மின்வெட்டைப் பொதுமக்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றவாறு அடாவடித்தனமாகப் பதில் அளித்து இப்பகற்கொள்ளை நியாயப்படுத்தப்படுகிறது.

2011-ம் ஆண்டு ஜெ ஆட்சிக்கு வந்தவுடனே மின் கட்டணத்தை இருமடங்கு உயர்த்தி விட்டு, இனி கட்டண உயர்வும் மின்வெட்டும் இருக்காது என்று அறிவித்தார். மின்வெட்டு தீராதது மட்டுமல்ல, கட்டணமும் மீண்டும் உயர்த்தப்படுகிறது. மூன்றே ஆண்டுகளில் தமிழக மின்வாரியத்தின் நட்டம் ரூ 45 ஆயிரம் கோடியிலிருந்து ரூ 75 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த ஜூன் 1 முதல் தமிழ்நாட்டில் மின்வெட்டே இல்லை என்று சவடால் அடித்தார் ஜெயலலிதா. ஆனால் சென்னையைத் தவிர்த்து சிறுநகர மற்றும் கிராமப் பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலில் உள்ளது. இப்போது, கூடுதலாக உயர்அழுத்த மின்சாரம் பயன்படுத்தும் தொழில்துறை மற்றும் வணிகத்துறையினருக்கு செவ்வாய் கிழமையிலிருந்து இரவு 10 மணி முதல் மறுநாள் மாலை 6 மணி வரை 20% மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி முதல் 10 மணி வரை தரப்பட்டுள்ள மின்திறனில் 10% மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மின்சாரம், தொலைபேசி, பெட்ரோல்/டீசல்/சமையல்வாயு கட்டணங்களை நிர்ணயிக்கும் அதிகாரம் தனியார் நிறுவனங்களின் லாபத்தை உறுதி செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஆணையங்களுக்கு கொடுக்கப்பட்ட நிலையில், கல்வி, குடிநீர், மருத்துவம் போன்ற சேவைகள் தனியாரின் லாபக் கொள்ளைக்கு விடப்பட்டுள்ள நிலையில் காசு இருப்பவர்களுக்குத்தான் வெளிச்சம், மற்றவர்கள் இருட்டில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எதிர்காலத்தை ஏற்றுக் கொள்ளப் போகிறோமா?

–    அப்துல்

மேலும் படிக்க

  1. எனது தலைமைலான அரசு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்ற தன்னாட்சி அமைப்பை கட்டுப்படுத்த துப்பில்லததனாலும், ‘எனது’ கையாலாகாத்தனத்தினாலும் , என்னையும் மீறி இங்கு அதிகாரம் செலுத்தும் அமைப்பான அந்த அமைப்பை ஜானதிபதி ,உச்சநீதிமன்றம் , பிரதமர் ,என எந்த டகல்டியாலும் ஒன்றும் செய்ய முடியாத காரணத்தால் இந்த 6000 கோடி சொற்ப கட்டண உயர்வை பொறுத்துக்கொள்ளுமாறு ‘நான்’ உங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். செய்வீர்களா ???? செய்வீர்களா ????

  2. தமிழ் நாட்டில் இரண்டரைக் கோடி மின் இணைப்புகள் உள்ளன.இந்த இணைப்புகளில் பொருத்தப் பட்டிருந்த மின் அளவிகள் அனைத்தும் கட்டாயமாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.சரியாக ஓடிக்கொண்டிருக்கும் மீட்டராக இருந்தாலும் கட்டாயப்படுத்தி மாற்றுகின்றனர். காரணம் கேட்டால் அரசு உத்தரவு என்று சொல்கின்றனர்.இந்த வேலைக்கு அதிகாரிகள் யாரும் வருவதில்லை. கீழ் மட்ட ஊழியர்களை விட்டு மாற்றி விடுகின்றனர்.அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு கேட்டால் பழைய மீட்டர்கள் பயன்பாட்டு அளவைக் குறைத்துக் காட்டுகின்றன.அதனால் வாரியத்திற்கு நட்டம் ஏற்படுகிறது.புதிய டிஜிட்டல் மீட்டர்கள் துல்லியமாகக் காட்டக்கூடியவை.எனவேதான் மாற்றுகிறோம் என்று சொல்கிறார்கள்.ஆனால் புதிய டிஜிட்டல் மீட்டர்கள் பயன்பாட்டின் அளவைப் பல மடங்கு அதிகமாகக் காட்டுகின்றன.எங்களுடைய வீட்டில் புதிய மீட்டர் பொருத்த வந்த போது நான் கடுமையாக எதிர்த்தேன்.பலமுறை முயற்சி செய்து மேலதிகாரிகள் ஒழுங்குமுறை ஆணையத்தைப் பற்றிப் பேசி இறுதியில் மாற்றிவிட்டார்கள்.புதிய மீட்டர் பொருத்திய பின்னர் கட்டணம் இரு மடங்கு ஏறி வந்தது .புகார் செய்து மீட்டரை மாற்றச் செய்தேன்.அந்த மீட்டர் வேறு ஒரு கம்பேனியின் தயரிப்பு.அப்போதும் கட்டணம் இரு மடங்குக்கு மேல் தான் வந்தது.இது தான் எல்லோருடைய அனுபவமும்.சமீபத்தில் இது பற்றி செய்தித் தாளில் வெளிவந்த ஒரு செய்தி அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. புதிய டிஜிட்டல் மீட்டர்கள் அளவைக் கூட்டிக் காட்டுகிற வகையில் மாற்றி சூடு வைக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல் தெரிவிக்கிறது.இந்த செய்தி உண்மை இல்லை என்று வைத்துக் கொண்டாலும் இரண்டரைக் கோடி மின் இணைப்புகளிலும் இருமடங்கு கட்டணம் என்றால் அது 100% கட்டண உயர்வுக்குச் சமம் அல்லவா?குடிசைகளுக்கும் விவசாயத்திற்கும் கட்டண உயர்வை சென்ற ஆண்டு அரசே ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது.இப்போது கட்டண உயர்வை அரசு பார்த்துக் கொள்ளும் என்கிறார் ’எனது அரசு’ஜெயலலிதா.எங்கிருந்து பார்ப்பார் அவர்.எல்லாம் மறைமுகமாக மக்கள் தலையில் தான் விழும்.ஒழுங்குமுறை ஆணையத்தை எதிர்த்து மூச்சுக் கூட விட முடியவில்லை. சொத்துக் குவிப்பு வழக்கில் கண்டத்தை எதிர்பார்த்து நிற்கும் அவர் மோடியை தைனாத்து செய்கிறார்.பன்னாட்டுக் கம்பேனிகளுக்கு இலவச/குறைந்த கட்டணத்தில் மின்சாரம் தருகிறார்.பல ஆயிரம் கோடிகள் மின்கட்டண பாக்கி வைத்துள்ள முதலாளிகளிடம் வசூல் செய்யமுடியவில்லை.ஆணையம் ஆண்டுதோறும் மின் கட்டணத்தை உயர்த்திக்கொண்டே போகிறது.டாஸ்மாக் எதையெல்லாம் தாங்கும்.தமிழகமே செத்து சுடுகாடாகும் வரை இவர்கள் விடப் போவதுமில்லை.மக்களும் உணருவதாகத் தெரியவில்லை.எல்லாவற்றுக்கும் ஆணையம்.எல்லா கட்டணமும் பல மடங்கு உயர்வு.சாலையில் போவதிலிருந்து காலையில் கழிவது வரை அனைத்திலும் கட்டண உயர்வு.சுடுகாட்டில் பிணத்தை எரிப்பதுகூட காஸ்ட்லியாகிவிட்டது.ஆனால் மக்களின் உணர்வு மட்டம் மட்டும் இதற்கெல்லாம் எதிராக உயரவில்லையே ஏன்?அம்மாவின் தர்மம் காத்துக் கொண்டிருக்கிறதோ?!

    • For the benefit of Vinavu readers,why don’t you give the name of the meter company so that we can also be cautious?In our apartments also,meters have been changed and there are complaints regarding excess billing.

    • Why the Government has to purchase Rs.17.50 per unit from private power stations and give Rs.5.50 per unit to MNC companies. Do you understand! If government stops giving power to the private companies and allow them to purchase directly from the private power stations then there is no loss to electricity board. Why there is ‘mall culture’ with multistory building with centralized air conditioner and flooding lights. All are wastage of power lavishly. All mall has to be closed, all ATM has to be closed, all advertisement boards has to be removed, discotheque has to be stoped..then we can save power..

      • தமிழ்னாட்டிலுள்ள காற்றாலை மின்சாரத்திற்கு ரூ3.50 காசுகள்,கொடுத்து மின்சாராம் கொள்முதல் செய்யாமல், கர்னாடகா, குஜாராத் முதலாளிகளிடமிருந்து ரூ17.50 க்கு மின்சாரம் வாங்குவதாக கூறப்படுவது வியப்பை அளிக்கிறது! இது ஊழல் அல்லவா? எவ்வளவு பணம் கைமாறியது?

        மேட்டுர் மின்நிலயம், தூத்துக்குடி மின்நிலயங்களுக்கு காலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றனவா?
        அதற்கான உதிரி பாகங்களுக்கு சர்யான சமயத்தில் ஆணை தரப்பட்டதா? பராமரிப்பு பணிகளை ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு கான்ட்ரக்ட்தரப்பட்டதா? தூத்துக்குடி 3வது அலகு கொதிகலன் ஓட்டை, அதனால் பணிநிருத்தம் என அடிக்கடி செய்தி வருகிறதே! அதைப்பற்றி, மதிய அரசுநிருவன மான அதன் தயாரிப்பாளர்களுடன் பேசியதா? அவர்கள் அளித்த உதிரி பாகங்களுக்கு காலத்தில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதா? தெரிந்தே இந்த அரசு தமிழக மக்களின் குரலவளையைநெரித்து, குஜராத் மின்சாரம் அதிக விலைக்கு வாங்குவதை நியாயப்படுத்துகிறதோ?

  3. எங்கள் வீட்டிலும் அதே நிலைமைதான். முன்பெல்லாம் ஒரு மாதத்திற்கு ஒரு முறை கணக்கு எடுப்பார்கள். ஆனால் இருமாதத்திற்கு ஒரு முறை கட்டினால் போதும். இப்போது கணக்கீடே இரு மாதத்திற்கு ஒருமுறை எடுக்கின்றார்கள். ஆக, பயன்பாட்டு அளவுகூடி, கட்டண விகிதம் அதிகமாகி விடுகின்றது என் கிறார்கள். கடவுளுக்குதான் வெளிச்சம்.

  4. We can’t avoid this price increase under the current system. It’s going to increase further.
    Doesn’t matter who rules the state; things are going to be more expensive because people of the State have to free-feed the majority of TN State govt employees.
    It’s just like in movies; every labor paying a big part of his/her daily earnings to local gangster. Price increase is not going to stop with Electricity; it’s going to spread to other departments like Transport. We the public won’t demand Privatization; hence we will continue to struggle.

      • Sorriyan,

        Let me list the problems in Electricity…..
        1.
        In all State run electricity boards, approximately 2/3 of the revenue is spent on the Employee wages; more than half of the employees are unnecessary. This dead-weight falls on the public shoulders. These unwanted employees bring down the efficiency.
        2.
        Power distribution wastages are high (30-40%); Pilferages, out-dated technology, poor monitoring are the reasons.
        3.
        Need to stop free power to farmers; let them pay and add it to the cost to the crop while selling. Then there will be accountability.

        • ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதால் மின் வாரியங்கள் நட்டத்தை சந்திக்கின்றன எனபது தவறான வாதம்.உமா சங்கர் பதிவை படிக்காமலே மறுமொழி எழுதுவார் போலும்.பதிவிலேயே இதற்கு பதில் இருக்கிறது.

          \\ஊழியரின் ஊதியம், நிலக்கரி விலை என்று பேசும் ஜெயலலிதா மின்வாரியத்தின் மொத்த வருவாயில் சுமார் 55%-ஐ விழுங்கும் மின்சாரம் வாங்கும் செலவு பற்றி பேசவில்லை.

          2009-10-ல் தமிழக மின்வாரியம், தனது மொத்த மின்தேவையில் 19 விழுக்காட்டை வணிக மின் உற்பத்தியாளர்களிடம் வாங்கிவிட்டு, அதற்கு விலையாக தனது மொத்த வருவாயில் 49.45 விழுக்காட்டை கொடுத்திருக்கிறது.//

          ஊழியர்கள் தேவைக்கு அதிகமாக இருக்கிறார்கள் என்பதும் உண்மையல்ல.

          பார்க்க;http://timesofindia.indiatimes.com/city/chennai/With-50000-vacancies-TNEB-gropes-in-the-dark/articleshow/7471954.cms

          \\Need to stop free power to farmers; let them pay and add it to the cost to the crop while selling. Then there will be accountability.//

          இலவச மின்சாரம் என்பது விவசாயிகளுக்கு வழங்கப்படும் சலுகையல்ல.அது அவர்களின் உரிமை.பெய்கின்ற மழையை ஏரிகளிலும் கண்மாயிலும் சேமித்து வைத்து பாசனத்திற்கு அளிக்க வக்கற்ற அரசுகள்,காவிரியிலும் பாலாற்றிலும்,முல்லை பெரியாறிலும் தமிழக விவசாயிகளுடைய உரிமையை மீட்டு தர வக்கற்ற அரசுகள் அதற்கு பரிகாரமாகத்தான் மின்சாரத்தை இலவசமாக வழங்குகின்றன.இலவச மின்சாரம் விவசாயிகளின் சொந்த தேவைக்கு அளிக்கப்படுவதில்லை.அவர்கள் செலுத்துகின்ற நிலவரிக்கு பகரமாக பாசன நீரை இலவசமாக அளிக்கும் கடமை அரசுகளுக்கு இருக்கிறது.அந்த கடமையை செய்ய தவறும் அரசு நீர் இறைக்கும் செலவை ஏற்கத்தான் வேண்டும்.நியாயமாக கிணறு வெட்டும் செலவையும் அரசு ஏற்க வேண்டும்.அதை விவசாயிகளின் தலையில் கட்டி அவர்களை கடன் வலையில் தள்ளி விடுகிறது இந்த கேடு கெட்ட அரசு .

          • Sooriyan,

            Sorry, it was a typo…it can happen to anyone.
            A person’s typo error has nothing to do with his/her manners.

            Yes, I am from TN.

            BTW, thanks for your decision (not wanting to interact with me).

  5. அனானி என்ற யோக்கியர் கட்டுரயாளர் எழுப்பிய கேள்விக்கு விடையளிக்குமளவு இன்னும் வளரவில்லை அவர் அதியமான் சீடரகவோ அல்லது அதியமானாகவோ இருக்க வேண்டும்….. ஒன்னுமில்லாததுக்கு இதுவாவது இருக்குல்ல,ஒன்னுமில்லாம பண்ணினது யாரு??இதுக்கு பதில் சொல்லனும் நீங்க.

    பொண்ணுக்கு கல்யாணம் பண்ண வக்கில்லாம , அந்த பொண்ண விபச்சாரியாக்கி மாமா வேல பாத்த ஒரு அப்பன் சொன்னானாம் கல்யாணம் பண்ணிருந்தா இத்தன மாப்பிள்ள கெடச்சு இருப்பானா ??? (இது ஒர்த்தர் முகநூலில் பதிந்தது)உங்க வாதம் சரி தான்…. அனானி….

      • சவரணக்குமார் மற்றும் அஹிலன்,
        சற்று கண்ணியமாகப் பேசவும். அதியமான் இங்க வராததுக்கு காரண்மே அர்த்தமில்லாத தாக்குதல்கள்தான். அந்த அனானி நபர் தன் கருத்தை சொல்லிருக்கார். அவ்ளோதான். இதுக்கு எதுக்கு மூஞ்சில அறையணும்!

  6. கட்டண நிர்ணயம் செய்யும் முன்பு, பயனீட்டாளர்களை அழைத்து, கருத்துக் கேட்பு நடத்துவது, ஒரு சம்பிரதாயம்! அதனையும் மீறிவிட்டார்கள்!

  7. ஒழுங்கு முறை ஆணையம் அதன் அதிகாரம் பற்றி தெரிந்து கொண்டேன் .

    சொசியாளிசதால் இலவச திட்டங்களில் அரசாங்கம் மூழ்கி இருக்கும் வேளையில் ,மின்சார உற்பத்தியை தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப திட்டம் இடவில்லை . அந்த வாய்ப்பை தனியார் பயன்படுத்தி கொள்கிறார்கள் .

    அரசாங்கத்திடம் போதுமான அளவு இருந்தால் தனியாரும் தரை ரேட்டுக்கு தருவார்கள்
    இன்கே தவறு செய்தது அரசாங்கம் , திட்டம் தீட்டாதது தவறு . அந்த வெற்றிடத்தை நிரப்பிய தனியாரை பாராட்டத்தான் வேண்டும்.

    • ஐயா, வினவு என்ன சொல்றாங்கன்னா அரசாங்கம் திட்டம் தீட்டாததுக்கு காரணமே அந்த வெற்றிடத்தை தனியார் நிரப்பி பகல் கொள்ளை அடிக்கட்டும்னு விடறதுக்குதான். ஆக அரசாங்கம் நீங்கள் சொல்வது போல தவறுதான் செஞ்சிருக்கு. வினவு என்ன சொல்லுதுன்னா முதலாளித்துவ அரசாங்கம் தவறு மட்டும்தான் செய்யும்னு சொல்லுது.

    • கருத்துக்களை மோசடியாக சோடித்திருக்கிறீர்கள் இராமன்.

      முதலாவதாக சோசலிசத்தினால் இலவச திட்டங்களில் அரசாங்கம் மூழ்கி இருக்கிறது என்று குண்டைத் தூக்கி போடுகிறீர்கள்!. சோசலிசம் பற்றிய உங்கள் புரிதல் ஒருபக்கம் இருக்கட்டும். மக்கள் வரிப்பணத்தால் பன்னாட்டு கம்பெனிகள் கொள்ளை இலாபம் அடைவதும், இடையில் அரசியல்வாதிகள் இதே திட்டங்களில் பொறுக்கித்தின்பதும் வெட்டவெளிச்சமாகும். நீங்கள் என்னவென்றால் இலவசதிட்டங்களுக்கு புதுவிளக்கம் தருகிறீர்கள். இலவச மடிக்கணினி திட்டத்தில் மைக்கோரசாப்ட் நேரடியாக அதிமுக அரசுடன் இலாபியிங் செய்தது வினவில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. 5000 ரூபாய் காபி குடிக்கிற மேட்டுக்குடிகளுக்கு சார்பாக உங்களால் தேற்றம் எல்லாம் சொல்லமுடிகிறது!! ஆனால் உங்களது கருத்திற்கு அடிப்படையே இல்லாமல் இலவச திட்டங்கள் என்று மக்கள் தலையில் மிளகாய் அரைப்பதோடு நில்லாமல் அதை சோசலிசம் என்று வேறு சரடுவிடுகிறீர்கள்.

      இரண்டாவதாக மின்சார உற்பத்தியை தொழில்வளர்ச்சிக்கு ஏற்ப திட்டமிடவில்லை என்பது முழுக்க முழுக்க அவதூறாகும். ஏனெனில் அரசு மின்சார உற்பத்தியில் ஈடுபடக்கூடாது என்கிற மறுகாலனியாதிக்க கொள்கையின் நிர்பந்தம் தான் இங்கு மூல காரணம். அது பற்றி வாய்திறக்காதவர் அரசு என்றால் சோடை; தனியார் என்றால் திறமைசாலி என்று வழக்கமான கதைவிடுகிறீர்கள். இந்த வியாபாரம் இங்கு செல்லாது இராமன்!!

      தமிழில் தான் பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் படிக்க உங்களுக்கு அருவெறுப்பாக இருக்கும். ஆங்கிலத்தில் இதே புத்தகம் இருக்கிறது. மூன்றாம் உலகநாடுகளில் உலகமயமாக்கல் கொள்கையால் உலகவங்கி மின்சாரம் போன்ற துறைகளை எப்படி கபளீகரம் செய்கிறது என்பது விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது. இந்தோனேசியாவில் அரசு கட்டமைப்பு தகர்க்கப்பட்டு எவ்விதம் அடுத்த முப்பது வருடங்களுக்கு மின்சார சந்தையை தனியாருக்கு விடுகிறார்கள் என்பது விளக்கப்பட்டிருக்கிறது. நேரமிருந்தால் வாசியுங்கள்.

      தமிழக மின்துறையில் தனியார்மயம் புகுத்தப்படுவதற்கு முன்பாக இலாபத்தில் இயங்கிதற்கு உங்களால் ஒருபதிலும் தரமுடியவில்லை. தமிழ்நாடு மின்பொறியாளர்கள் சங்கத்தலைவர் காந்தி, அரசின் கொள்கைகளை அம்பலப்படுத்தி பலகட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார். ஏகாதிபத்திய அரசியல் கைக்கூலிகளாலும் மிரட்டப்பட்டிருக்கிறார். இதையும் வாசித்துப்பாருங்கள்.

      மூன்றாவதாக அரசிடம் போதுமான அளவு இருந்தால் தனியார்கள் தரை ரேட்டுக்கு இறங்கிவருவார்கள் என்பது மோசடியான வாதமாகும். ஏனெனில் அரசின் மின்கட்டமைப்பு தகர்க்கப்படுவதைப் பற்றி வாய்திறக்கவில்லை. அரசு உற்பத்தியில் ஈடுபடக்கூடாது என்கிற மறுகாலனியாதிக்க கொள்கைகளையும் பரிசிலீக்கவில்லை. கடைசியில் நம்மிடம் இருக்கிற கட்டமைப்புகளையெல்லாம் துறந்துவிட்டு தனியாருடன் போட்டிபோட வேண்டும் என்பது அயோக்கித்தனம் இல்லையா?

      மின்சாரத்தில் தன்னிறைவு பெற்றிருக்கிற ஒரு மாநிலம் என்ன மயிருக்காக மின்சாரத்துறையை தனியாருக்கு திறந்துவிட்டது என்பதற்கு பதில் சொல்வீர்களா? இதில் தனியாரைப்பாராட்டுகிற குணம் உங்களுக்கே இழிவானதாக தெரியவில்லையா?

  8. இந்திய பணக்கார முதலாளிகள் வரிசையில் தற்போது பத்தாவது இடத்தை பிடித்திருக்கும் மோடியின் நண்பர் அதானி குஜராத்தில் தனியார் மின் உற்பத்தி நிறுவனம் நடத்தி அரசின் உதவியுடன் மக்கள் வரிப்பணத்தை ஏப்பம் விட்ட பண்பாளர்.இவருக்கு முறைகேடாக முந்தைய மோடி அரசு துணைப்போனதை சி.ஏ.ஜி அறிக்கை வெளிக்கொணர்ந்தது.வழக்கம் போல் வெள்ளிக்கிழமை மாலையில் சட்டமன்றத்தில் வைத்து சங்கு ஊதிவிட்டனர். 2 ஜி அறிக்கை வெளியான போது எம்பிக்குதித்த அம்பிகள் இப்போது பத்தினி விரதம் இருக்கின்றனர்.உண்மையில் தனியார் மின் முதலாளிகள் கொள்ளை லாபம் அடிக்கவே அரசும்,மின் ஒழுங்குமுறை ஆணையமும் உள்ளன.தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களை எவ்வித நட்ட ஈடுமின்றி பறிமுதல் செய்து அரசுடமை ஆக்க வேண்டும். மின்வெட்டு,கட்டண உயர்வு இருக்காது.

  9. இந்திய அரசே தனியார் மயமாகிவிட்டதால் வந்தவினை இது! பாராளுமன்றத்தின் மாண்பினையும், அமெரிக்க காங்கிரஸ் சபை போல, இந்திய பாராளுமன்றத்தினால், அன்னியநாடுகளுடன் பிரதமர் செய்யும் ஒப்பந்தஙகள் அங்கீகரிக்கபடல் தேவையில்லை எனவும், நீதிதுறையின் சட்டததை மீறும் அதிகாரமும் பல சந்தர்ப்பங்களில் பாராளுமன்ற ஜனனாயகத்தையே கேள்விக்குறியாக்கிவிட்டது!

    கடைசியாக, நீதியாளர்கள், ராணுவ தளபதிகள், ஆடிட்டர் ஜெனெரல், செபி தலைவர் முதலியோர் பதவி மூப்பிற்கு பின் உடனடியாக ஆட்சிக்கு வரும் கட்சியில் சேர்ந்து பதவியும் , சலுகைகளும் அனுபவிப்பது, இவர்கள் பதவியி இருந்த போது தஙகள் அதிகாரத்தை சுயனலநோக்கில் பயன்படுத்தைனார்களோ என்னும் அய்யத்தை ஏற்படுத்தி உள்ளது!

    மொத்தமாக பார்த்தால் சுதந்திரம் வெள்ளைக்காரனால், மக்களுக்காக அளிக்கப்பட்டதா அல்லது இந்த கொள்ளைக்காரர்களுக்கா என்ற் வியப்பாயுள்ளது!

    சு சாமிக்கு உள்ள அதிகாராம் கூட பிரதமர் என்ற பதவியிலுள்ள மோடிக்கு இருக்குமா? தலைமை நீதிமன்றத்துக்கே டிக்டேட் செய்யும் வல்லமை எஙகிருந்து வந்தது?

  10. மின் உர்பத்தி அனையத்தை கட்டுபடுதும் உரிமை மத்திய அரசுக்கும் இல்லை,மானில அரசுகும் இல்லை என்ரால் அதனை கட்டுபடுத்தும் அதிகாரம் யாருக்கு உன்ன்டு,அப்படி ஒரு ஆனையத்தை ஒருவாக்கியது யார்.எதர்க்காக இந்த அனையம்,யருக்காக இது.

    பழனிக்குமார்.ர

    மீனாட்சிபுரம்.டி

Leave a Reply to Raman பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க