privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்விரைவில் பிரியாணிக்கு தடை - மோடி அரசு அடக்குமுறை

விரைவில் பிரியாணிக்கு தடை – மோடி அரசு அடக்குமுறை

-

mohan-bhagwat
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்: மாட்டுக்கறி பிரியாணியை மறுக்கும் பார்ப்பனியத்தின் ரவுடி!

தெருவில் சினிமா போஸ்டரை மேய்ந்து கொண்டும், எப்போதடா பிரியாணியாகும் பாக்கியம் தனக்கு வாய்க்கும் என்று வயதான காலத்தில் ஏக்கத்தோடு சாவை எதிர்பார்த்தும், திரிந்து கொண்டிருக்கும் கோமாதாவை வம்படியாக பிடித்து சித்திரவதை செய்கிறது சங்கப்பரிவார கும்பல்.

மாடு புனிதம், மாடு பேண்ட சாணி புனிதம், மாடு மோண்ட மூத்திரம் புனிதம் என்று ”இந்து புனிதங்களுக்கு” விதவிதமான விளக்கங்களை காவி கும்பல் வழங்கி வந்த நிலையில் தற்போது புதிய விளக்கங்களை முன்வைக்கத் துவங்கியுள்ளனர். அதாவது மாடு மட்டுமல்ல, மாட்டை ஒத்த எருமை, ஆடு, ஒட்டகம் ஆகிய பிராணிகளும் புனிதம் என்கிறார்கள்.

2014-ம் ஆண்டு விஜயதசமியன்று உரையாற்றிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், இந்தியாவிலிருந்து இறைச்சி ஏற்றுமதி செய்யப்படுவது உடனடியாக தடை செய்யப்பட வேண்டும், மாடுகள் ’கடத்தப்படுவது’ உடனடியாக தடை செய்யப்பட வேண்டுமென்றும் கூறியிருந்தார். மோகன் பாகவத்தின் உரைக்கு பொழிப்புரை எழுத வந்த பிரதமரின் ஆலோசகரும் ஆர்.எஸ்.எஸ் பத்திரிகையான ஆர்கனைசரின் முன்னால் ஆசிரியருமான சேஷாத்ரி சாரி, பசு மட்டுமின்றி ஒட்டு மொத்த கோ வம்சத்தையும் இறைச்சிக்காக கொல்வது தடை செய்யப்பட வேண்டும் என்று பாகவத் அரசுக்கு ஆலோசனை வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே கடந்த மாதம் 14-ம் தேதி ஜெய்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மேனகா காந்தி, இறைச்சி வியாபாரத்தின் மூலம் கிடைக்கும் பணமெல்லாம் தீவிரவாத செயல்களுக்கு திருப்பி விடப்பட்டு இந்தியர்கள் கொல்லப்படுவதில் முடிகிறது என்று தெரிவித்துள்ளார். ஆனால், உண்மை என்னவோ மேனகா காந்தி சொல்வதில் இருந்து நேர்மாறானதாக இருக்கிறது. இந்தியாவிலிருந்து இறைச்சி ஏற்றுமதி செய்வதில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் முதல் மூன்று நிறுவனங்களும் ‘இந்துக்களுக்கே’ சொந்தமானதாக இருக்கிறது. இல்லை இந்தியாவில் உள்ள பயங்கரவாதங்களுக்கு இந்த ‘இந்துக்களே’ காரணமென்று ஆகிறது.

ஆர்.எஸ்.எஸ் கும்பலின் புரவலர்கள் பனியாக்கள் என்பதால் மேனகா காந்தியின் கூற்று உணமையாக இருப்பதற்கான சாத்தியங்களையும் நாம் மறுத்து விட முடியாது என்பது வேறு விசயம்.

பார்ப்பனிய கலாச்சாரத்தையே பொதுவான ‘இந்துக்கள்’ கலாச்சாரமாக சித்தரிப்பது, அதனடிப்படையில் சமூகத்தை மதவாத அடிப்படையில் குறுக்கு நெடுக்காக பிளப்பது என்கிற தமது செயல் தந்திரத்தை காவி கும்பலின் உயர்மட்டம் தெளிவாக முன்னெடுக்கத் துவங்கியுள்ளது. கூடவே அதை அமல்படுத்தும் வண்ணம் வன்முறை வெறியாட்டத்தையும் துவங்கியுள்ளது.

இந்தாண்டு ஈத் பண்டிகையின் போது குஜராத்தின் அகமதாபாத் நகரெங்கும் சிறிதும் பெரிதுமான கலவரங்கள் நடந்துள்ளன. குஜராத்தின் பல இடங்களில் இசுலாமியர்கள் குர்பானிக்காக கொண்டு சென்ற ஆடுகளை போலீசின் துணையோடு பஜ்ரங் தள் குண்டர் படைதடுத்து நிறுத்தியுள்ளது. இசுலாமியர்கள், தலித்துகள், பழங்குடியினர், கோலிகள் மற்றும் சித்திகள் உள்ளிட்டு சுமார் 60 சதவீதம் அசைவ உணவுப் பழக்கம் கொண்டவர்கள் நிறைந்த குஜராத்தின் பாலிடானா பகுதியை முற்றிலுமான சைவ உணவுப் பிரதேசமாக அறிவித்து அசைவ உணவுகளைத் தடை செய்துள்ளனர்.

menka
கறி வியாபார காசுதான் பயங்கரவாதிகளுக்கு வசூலாம்.- மேனகா காந்தி. அசுர குல நாட்டில் தேவர் குல அடக்குமுறை!

சுமார் 1.5 லட்சம் மக்கள் தொகை கொண்ட தில்லி புறநகர் பகுதியான பாவனாவில் 70 சதவீதமானோர் இசுலாமியர்கள் ஆவர். சுமார் 200 குண்டர்களோடு அப்பகுதியில் ஊடுருவிய இந்துத்துவ குண்டர்கள் அங்கே மூன்று பசுக்களை கடத்தி ஒளித்து வைக்கப்பட்டிருப்பதால், அதை மீட்கப் போவதாகவும் போலீசின் உதவியோடு வெறியாட்டம் போட்டுள்ளனர். கடைசியில் அவர்களால் ஒரே ஒரு பசுவைத்தான் கண்டு பிடிக்க முடிந்துள்ளது, அதுவும் அந்தப் பகுதியைச் சேர்ந்த இந்து பால்காரர் ஒருவருக்கு சொந்தமானது என்பது கண்டறியப்பட்டது. ராஜஸ்தானில் ஒட்டகங்கள் பாதுகாக்கப்பட்ட உயிரினமாக வசுந்தரா ராஜேவால் அறிவிக்கப்பட்டுள்ளது.

சைவ உணவுப் பழக்கமே மேலானது என்றும் அதுவே ’இந்து’ அடையாளம் என்பதாகவும் நிலைநாட்டத் துடிக்கிறது இந்துத்துவ கும்பல். என்றாலும், இதைக் கீழ்மட்டத்திலிருந்து மக்களின் ஆதரவோடு நிலைநாட்டுவதிலும் சிக்கல் உள்ளது. தம்மை ’இந்துக்கள்’ என்று அடையாளப்படுத்திக் கொள்வோரில் பார்ப்பனர்கள் மற்றும் பட்டேல்கள், ஜெயின்கள் உள்ளிட்ட ஒருசில ஆதிக்க சாதியினர் தவிர பெரும்பான்மையானோர் அசைவ உணவுப் பழக்கம் கொண்டவர்களாகவே உள்ளனர்.

பெங்காலி பார்ப்பனர்களோ சூத்திரர்களே மூக்கில் விரல் வைக்கும் வண்ணம் மீன் உணவுப் பிரியர்களாக இருக்கிறார்கள். வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் வட மாநிலங்களின் ”சத்திரிய” சாதியினரிடையே தங்கள் இஷ்ட தெய்வங்களுக்கு எருதையும் எருமையையும் பலி கொடுக்கும் வழக்கம் உள்ளது. இது தவிர தெற்கே தமது வளர்ச்சிக்கான இலக்காக ஆர்.எஸ்.எஸ் இனங்கண்டுள்ள கேரளத்தில் நம்பூதிரி தவிர்த்த அனைத்து ‘இந்துக்களும்’ மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் கொண்டவர்களே. தமிழகத்திலும் இதுவே நிலைமை.

ஆக, கீழ்மட்டத்தில் சைவ உணவுக்கு ஆதரவான அணிதிரட்டலோ கலவரங்களோ முழுமையான அளவில் சாத்தியமில்லை என்பதை உணர்ந்துள்ள ஆர்.எஸ்.எஸ், மேலிருந்து சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் மூலமும் கலாச்சார ரீதியில் அசைவத்தை இழிந்த உணவாக நிலைநாட்டுவதன் மூலமும் தனது நோக்கங்களை நிலைநாட்டிக் கொள்ளத் துடிக்கிறது. அதிலும் குறிப்பாக இந்துமதவெறியின் கோட்டையான இந்தி பேசும் மாநிலங்களில் அதை அமல்படுத்த துவங்கியிருக்கிறது. இது குறித்து ‘கருவாடு’ ஆவணப்படத்தில் விரிவாக பேசுகிறது.

முதலில் பசுவை தெய்வம் என்பது, பின்னர் பசுவதையை தடுக்க கோருவது, அடுத்த கட்டமாக பசு மாமிசம் உண்பது இசுலாமியர்கள் மட்டும் தானென்பதை நிலைநாட்டுவது, அடுத்த கட்டமாக எல்லா மாமிச உணவையும் மாட்டிறைச்சியோடு தொடர்புபடுத்துவது என்கிற பாதையை தெரிவு செய்துள்ளது.

Hyderabadi biryani
பிரியாணிக்கு எதிரான பார்ப்பனியத்திற்கு பாடை கட்டுவது எப்போது?

இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு புறம் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 12 சதவீத பங்கு வகிக்கும் இறைச்சி ஏற்றுமதியின் மொத்த மதிப்பு சுமார் 500 கோடி டாலராகும் (சுமார் ரூ 30,000 கோடி). இதில் சுமார் 440 கோடி டாலர் (சுமார் ரூ 26,400 கோடி) எருமை மாட்டிறைச்சி ஏற்றுமதியின் மூலமே கிடைக்கிறது. மாட்டிறைச்சி மற்றும் எருமை மாட்டிறைச்சி ஆகியவற்றின் உள்நாட்டு நுகர்வும் அதிகமாகவே இருக்கிறது.

பெரும்பான்மையான ஏழை மக்களின் புரதம் மற்றும் ஊட்டச்சத்து தேவையை மாட்டிறைச்சியே பூர்த்தி செய்து வருகிறது. முன்பு பாரதிய ஜனதா பசுவதைத் தடைச்சட்டத்தை தனிநபர் மசோதாவாக கொண்டு வர முயன்ற போது அதை எதிர்த்துப் பேசிய பி.ஏ சங்மா, ஒரு வேளை பசுவதை தடை சட்டப்பூர்வமானதாக ஆகும் பட்சத்தில் வடகிழக்கு மாநில மக்கள் பெரியஅளவில் பாதிக்கப்படுவார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இசுலாமியர்களின் வேலையே மாட்டைக் கொன்று தின்பது தான் என்கிற ரீதியில் இந்துத்துவ கும்பல் அடித்து விடுவது முதலில் அடிப்படையற்றதாகும். மாட்டிறைச்சி என்பது மலிவாக (கிலோ 140 ரூ) கிடைக்கக் கூடிய அசைவ உணவாக இருப்பதால், சமூகத்தின் கீழ் அடுக்கில் உள்ள தலித்துகள், பழங்குடியினரின் மற்றும் கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடும் இதர பிரிவு உழைக்கும் மக்களின் உணவாகவே எதார்த்தத்தில் உள்ளது. வசதியான இசுலாமியர்கள் மாட்டிறைச்சியை விட மென்மையான ஆட்டிறைச்சியையே விரும்புவர். தவிர வடகிழக்கு மாநில மக்களிடையேயும் மாட்டிறைச்சி உண்பது கலாச்சார ரீதியில் சகஜமானதாக உள்ளது.

ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்கள் நிறைந்த நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை எட்டிப் பிடித்துள்ள இந்தியாவை சைவ நாடாக மாற்றுவதன் மூலம் பெரும்பான்மை மக்களை கொன்று போடத் துடிக்கிறது இந்துத்துவ கும்பல். இது ஆர்.எஸ்.எஸ் – இசுலாமியர்கள் பிரச்சினையல்ல; பெரும்பான்மை உழைக்கும் மக்களை கேவலப்படுத்தும் நேரடியான உணவுத் தீண்டாமை. பெரும்பான்மை மக்களின் உணவுப் பழக்கத்தை கொச்சைப் படுத்துவதன் பின்னிருக்கும் பார்ப்பனியத் திமிரை நாம் இனங்கண்டு கொள்வதோடு நேரிட்டு மோதி ஒழித்துக் கட்ட வேண்டியது அவசியம்.

மானமும் சொரணையும் உள்ளவர்கள் செய்யக்கூடிய காரியமும் அதுதான்.

–    தமிழரசன்