privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தீவிரமாக செயல்படுகிறார்

முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தீவிரமாக செயல்படுகிறார்

-

ops 1செயல்படும் அரசும் செயல்படாத எதிர்க்கட்சிகளும்

“தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் சிறையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு, கடந்த செப்டம்பர் 27 அன்று மாலை 5 மணிக்கு, பெங்களூரு பரப்பன அக்ரகாரா சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து போய்விட்டது; ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு தமிழக அரசே செயலிழந்து போய்விட்டது” இப்படி எதிர்க்கட்சிகள் எல்லாம் ஓயாது ஒப்பாரி வைக்கின்றன.

editorial-1இது உண்மையா! இல்லை. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட அன்றும் மறுநாளும் அவரும் பிற அமைச்சர்களும் பெங்களூரு போய்விட்டதால் அவர்களின் கீழ் இருந்த அந்தந்த துறைசார்ந்த அதிகாரிகளும் ஊழியர்களும் தீர்ப்பின் பரபரப்பில் வேலை செய்யவில்லை. வெறுமனே அலுவலகத்துக்கு வந்தவர்களும் தமக்குரிய வழமையான பணிகளைக்கூடச் செய்யாது போய்விட்டார்கள்.

ஜெயலலிதாவைத் தண்டித்த தீர்ப்பு வந்த மறுநிமிடம் முதல் அவர் காலாலிட்ட உத்திரவைத் தலையால் ஏற்று அம்மா தி.மு.க.வின் அடிமைகளும் கைக்கூலிகளும் தமிழக அரசும் அவர் பிணையை விலைக்கு வாங்கிக் கொண்டு போயசுத் தோட்டம் மாளிகைக்குள் நுழையும் வரை செயல்பட்டனர். அதாவது, அம்மாவுக்காக அழுது புரண்டார்கள், ஒப்பாரி வைத்தார்கள், மொட்டை போட்டார்கள், பால்குடம் எடுத்தார்கள், உண்ணாவிரதம் இருந்தார்கள், பொங்கல் வைத்தார்கள், அபிசேகங்கள், யாகங்கள், வேண்டுதல்கள், பரிகாரங்கள் செய்தார்கள்; கடைகளை மூடச்சொல்லி அடித்து நொறுக்கினார்கள்; அரசு மற்றும் தனியார் வாகனங்களை எரித்தார்கள் – அதில் முன்பு நடந்ததைப்போல நரபலி நிகழாமல்போனது குறித்து தண்டிக்கப்பட்ட தெய்வத்துக்கு வருத்தம் இருக்கலாம். மற்றபடி அம்மா தி.மு.க.வின் அடிமைகளோடும் கைக்கூலிகளோடும் கைகோர்த்துக்கொண்டு தமிழக அரசு அதன் வழமையான செயல்பாடுகளோடு, மக்கள் பொதுச்சொத்தைக் கொள்ளையடித்த ஜெயலலிதா கிரிமினல் குற்றவாளி என்ற களங்கத்துக்கு, கறைக்கு வெள்ளையடிக்கும் ஆளுங்கட்சியின் அடாவடி, அராஜகச் செயல்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்கும் வேலையைச் செய்துகொண்டுதான் இருந்தது.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவைக் குற்றவாளியென அறிவித்துத் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து ஆளுங்கட்சியினர் கட்டவிழ்த்து விட்ட அடாவடி, அராஜகச் செயல்களையும் ஆளுங்கட்சி நடத்திய போராட்டங்களையும் அதிகாரிகளும் போலீசும் தடுத்து நிறுத்தவில்லை; பாதிக்கப்பட்ட மக்களுக்கும், எதிர்க்கட்சியினருக்கும் அவர்கள் பாதுகாப்பு வழங்கவில்லை. இவற்றை வைத்துத்தான் ‘தமிழக அரசே செயலிழந்து போய்விட்டது’ என்று எதிர்க்கட்சிகள் குறைபட்டுக் கொள்கிறார்கள். ஆனால், அவ்வாறு சொல்வதற்கு எந்த எதிர்க்கட்சிக்கும் அருகதை கிடையாது, ஏனெனில், செயல்படாமல் இருந்தவை எதிர்க்கட்சிகள்தாம்! ஜெயலலிதா சிறையிலடைக்கப்பட்ட பிறகும் பன்னீர்செல்வம் முதலமைச்சரான பிறகும் தமிழக அரசும் அதிகாரிகளும் போலீசும் வழக்கம்போல செயல்பட்டுக் கொண்டுதான் இருந்தார்கள் என்பதுதான் உண்மை.

2014, ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலை நினைவுபடுத்திப் பார்த்தாலே இந்த உண்மை புரியும். அத்தேர்தலின்போது ஆளுங்கட்சியினர் நடத்திய தேர்தல் தில்லுமுல்லுகள், அடாவடி, அராஜகச் செயல்களை அதிகாரிகளும் போலீசும் தடுக்கவோ, நிறுத்தவோ முயன்றார்களா? குற்றமிழைத்த ஆளுங்கட்சியினர் மீது கைதோ வழக்கோ போட்டார்களா? அவற்றை எதிர்த்து அம்பலப்படுத்திய எதிர்க்கட்சியினர் மீது தானே நடவடிக்கை எடுத்தார்கள். போலீசு வேன்களில்தானே பணம் கடத்தப்பட்டது; அதை வாக்காளர்களுக்கு விநியோகித்தவர்களுக்குத்தானே பாதுகாப்புக் கொடுத்தார்கள். 144 தடைவிதித்து ஆளுங்கட்சிக்கு வசதிசெய்து கொடுத்த தேர்தல் ஆணையமே ஆளும்கட்சியின் பணப் பட்டுவாடாவைத் தடுக்க முடியாமல் போய்விட்டது என்று ஒப்புக்கொண்டது. தேர்தல் ஆணையத்தின் ஊழியர்களாகச் செயல்பட்ட அதிகாரிகளும் போலீசும் உடந்தையாக இல்லையென்றால், அத்தேர்தல்களில் ஆளுங்கட்சி வெற்றி பெற்றிருக்க முடியுமா?

அவ்வளவு ஏன், அதிகாரிகளும் போலீசும் உடந்தையாக இல்லாமலா இப்போது தண்டிக்கப்படுவதற்குக் காரணமான சொத்துகளை எல்லாம் ஜெயா-சசி கும்பல் குவித்தது? அந்தச் சொத்துகள் எல்லாம் இலஞ்ச-ஊழல் மூலம் மட்டும் குவிக்கப்பட்டவை அல்ல. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் முதல் கோடநாடு பண்ணை, கங்கை அமரனின் பையனூர் பங்களா வரை பல அசையா சொத்துக்கள் எல்லாம் மிரட்டி வாங்கப்பட்டவைதாமே. அப்போதும் அதற்கெல்லாம் பாதுகாப்பாகத்தானே அதிகாரிகளும் போலீசும் நின்றார்கள். போயசு மாளிகைக்கே போய் சொத்துக்களைப் பதிவுசெய்து கொடுத்தவர்கள்தானே!

உயர் அதிகாரிகளும் போலீசும் மட்டுமல்ல; கிராம அதிகாரி முதல் தலைமைச் செயலாளர் வரை, சாலையில் நிற்கும் போக்குவரத்துப் போலீசுக்காரன் முதல் மாநிலத் தலைமைப் போலீசு இயக்குநர் வரை, கீழ்நிலை முன்சீப் கோர்ட் முதல் உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி வரை, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் முதல் நாட்டின் முதல் குடிமகனான அரசுத் தலைவர், பிரதமர் வரை – இவர்கள் எல்லாம் எதற்காகச் செயல்படுகிறார்கள்? நாட்டு நலனுக்காகவா? மக்கள் நலனுக்காகவா? இல்லையே. இலஞ்ச-ஊழலிலும், அதிகார முறைகேடுகளிலும் ஊறித்திளைக்கும் அவர்கள் ஜெயலலிதாவைப் போன்ற ஊழல் பெருச்சாளிகளுக்குத் துணை நிற்பது ஒன்றும் வியப்புக்குரியதல்ல.

ஜெயலலிதா மட்டும் நேரில் போயிருந்தால், உச்சநீதி மன்றம் தாமே தண்டனிட்டு, அவர் காலில் விழுந்து கும்பிட்டு, ஜாமீன் உத்திரவைக் கையளித்திருப்பார்கள். அதையும் விஞ்சும் அளவுக்குக் கடுமை காட்டுவதைப் போல நடித்துவிட்டு, ஜெயலலிதாவே எதிர்பாராத தீர்ப்பை வழங்கியது அந்நீதி மன்றம். சொத்துக் குவிப்பு வழக்கை 18 ஆண்டுகள் இழுத்தடித்ததைப்போல மேல்முறையீட்டு வழக்கைத் தாமதிக்காது, 2 மாதங்களில் தாக்கல் செய்து, 3 மாதங்களில் தீர்ப்பு வாங்கவேண்டுமாம்! ஒருநாள் தவறினாலும் கடும் நடவடிக்கை மேற்கொள்வார்களாம்! இதைத்தான் கடும் நிபந்தனை ஜாமீன் என்று கருணாநிதி நம்பச் சொல்லுகிறார். தண்டனை வருமுன் வழக்கை இழுத்தடிப்பதும், தண்டிக்கப்பட்ட பிறகு மேல்முறையீட்டை விரைந்து முடித்து விடுதலை பெறுவதும்தானே கடைந்தெடுத்த குற்றவாளியும் நாலாந்தர வக்கீலும் கையாளும் தந்திரம். அவ்வாறாக விதிக்கப்பட்டது கறாரான, கடுமையான, நிபந்தனையுடன்கூடிய ஜாமீனா, குற்றவாளியுடன் கூட்டுக் களவாணித்தனமா? களவாணித்தனம் செய்து கையும் களவுமாகச் சிக்கிக் கொண்டீர்களா, சரி! போ! இனி இப்படிச் செய்யாதீர்கள்” என்பதுதான் டான்சி நில அபகரிப்பு வழக்கு முதல் ஜெயலலிதாவின் எல்லா விவகாரங்களிலும் நீதியரசர்களின் வழுவாநீதி!

editorial-protest-against-electricity-rate-hike‘தமிழக அரசே செயலிழந்து போய்விட்டது, அதிகாரிகள் ஆளுங்கட்சிக்குச் சாதகமாக செயல்படுகின்றனர், காவல்துறை ஆளுங்கட்சியின் ஏவல்துறையாகிவிட்டது, மக்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்கத் தவறி விட்டது’ என்றெல்லாம் இப்போது கூச்சல்போடும் எதிர்க்கட்சிகளுக்கும் இது நன்றாகவே தெரியும், அது இராஜாஜியோ, காமராஜரோ, பக்தவச்சலமோ, அண்ணாதுரையோ, கருணாநிதியோ, எம்.ஜி.ஆரோ., ஜெயலலிதாவோ யார் ஆண்டாலும் அரசும் ஆட்சியாளர்களும் எப்போதும் இப்படித்தான் செயல்பட்டிருக்கிறார்கள்; இனியும் இப்படித்தான் செயல்படுவார்கள்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற வக்கிரமான, பொறுக்கி அரசியல், பாசிசக் கோமாளிகள் எதற்கும் தமது செல்லப் பிள்ளைகளான அரசு அதிகாரிகளையும் போலீசுக்காரன்களையும் கூலி எழுத்தாளர்களையும் நம்பி ஆட்சி நடத்தினார்கள்; தடையற்ற அதிகாரமுறைகேடுகளுக்கு அனுமதிக்கப்பட்ட இவர்கள் கூடுதலான விசுவாசத்தைக் காட்டுவதில் வியப்பொன்றுமில்லை. ஆகவே, எப்போதும் போல அரசும் ஆட்சியாளர்களும் செயல்பட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள். இந்த உண்மையை அறிந்திருந்தும் எதிர்க்கட்சிகள்தாம் வேடிக்கை பார்க்கிறார்கள், அறிக்கை விடுகிறார்கள்; தமக்கும், தாம் முடிந்த அளவு குவித்து வைத்திருக்கும் சொத்துக்களுக்கும் பாதிப்பு வராதவாறு அடையாளப் போராட்டங்கள் நடத்துகிறார்கள். மற்றபடி செயல்படாமலிருப்பவை எதிர்க்கட்சிகள்தாம்!

துணுக்குகள்: அம்மா சேவை தவிர, சகாயம் கமிசனை செயல்படாமல் நிறுத்தி வைப்பது, பால் விலை, மின்கட்டணம் உயர்வு, ஆம்னிப் பேருந்துக் கட்டணத்தை விண்ணுயர ஏற்றிக்கொள்ள அனுமதி, கேரளாவில் மதுவிலக்கு என்றால் எல்லையோரக் கிராமங்களில் டாஸ்மாக் கடைகள் திறந்து வசூல்வேட்டை – இவற்றுக்காக அதிகாரிகள் செயல்படவில்லையா! அம்மா சேவை தவிர, டாஸ்மாக் கடைகளை மூடச்சொல்லிப் போராடினால் தடியடி-கைது-சிறை, லாக்அப் சித்திரவதை-கொலை-பாலியல் வன்முறை என்று போலீசுக்காரன்கள் செயல்படவில்லையா!
________________________________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2014 (தலையங்கம்)
________________________________________________

  1. மக்களுக்கேற்ற மன்னர்கள்!.
    இதைக் கண்டு அமைதியாயிருக்கும் அறிவாளிகள் இருக்கும் வரையில் இத் தீமைகள் அகலவே அகலாது.

  2. “அவ்வளவு ஏன், அதிகாரிகளும் போலீசும் உடந்தையாக இல்லாமலா இப்போது தண்டிக்கப்படுவதற்குக் காரணமான சொத்துகளை எல்லாம் ஜெயா-சசி கும்பல் குவித்தது? அந்தச் சொத்துகள் எல்லாம் இலஞ்ச-ஊழல் மூலம் மட்டும் குவிக்கப்பட்டவை அல்ல. ………………..உயர் அதிகாரிகளும் போலீசும் மட்டுமல்ல; கிராம அதிகாரி முதல் தலைமைச் செயலாளர் வரை, சாலையில் நிற்கும் போக்குவரத்துப் போலீசுக்காரன் முதல் மாநிலத் தலைமைப் போலீசு இயக்குநர் வரை, கீழ்நிலை முன்சீப் கோர்ட் முதல் உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி வரை, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் முதல் நாட்டின் முதல் குடிமகனான அரசுத் தலைவர், பிரதமர் வரை – இவர்கள் எல்லாம் எதற்காகச் செயல்படுகிறார்கள்? நாட்டு நலனுக்காகவா? மக்கள் நலனுக்காகவா? இல்லையே. இலஞ்ச-ஊழலிலும், அதிகார முறைகேடுகளிலும் ஊறித்திளைக்கும் அவர்கள் ஜெயலலிதாவைப் போன்ற ஊழல் பெருச்சாளிகளுக்குத் துணை நிற்பது ஒன்றும் வியப்புக்குரியதல்ல.”

    ஆஹா ஆஹா ,,இதைதான் நான் ரொம்ப நாளாக எதிர்பார்த்தேன்.
    சும்மா எப்பொழுது பார்த்தாலும் “பாப்பாத்தி அம்மா”, ” பாப்பாத்தி அம்மா” என்று இந்த ஒரு அம்மாவே யார் தயவும் இல்லாமல் தனியாக நின்று எல்லா காரியங்களையும் செய்ததுபோலவும் இந்த ஒரு அம்மாதான் அந்த சாதிக்கே பிரதிநிதிபோலவும் இத்தனை நாளாக பதிவிட்டுகொண்டிருந்ததைதான் வினவின் முயற்சிகள் சாதியின் பெயரால் சாடுவதால் வீணாகி போவதாக நான் கவலையோடு எதிர்த்துவந்தேன்.

    தேர்தலுக்கு தேர்தல் ஊழல் காரணாமாக கருணாநிதி ஆட்சி இழக்கலாம் ஜெயலிலதா ஆட்சி இழக்கலாம்.ஆனால் அதிகாரிகள் ? அவர்கள் அதே சீட்டில் அப்படியேதானே அட்டுழியம் பண்ணிகொண்டிருக்கிறார்கள்?
    வேண்டுமாயின் ஆட்சிகொரு அதிகாரிகளின் கும்பல் என அவர்களிலும் கும்பல் மட்டுமே மாறுகிறது.மற்றபடி அட்டுழிய செயல்கள் எல்லாம் தொடர்கதையாகத்தான் உள்ளது.
    இதுவரை தன்னை தவறு செய்ய சொல்லி நிர்பந்தப்படுதினார்கள் என ஒரு அதிகாரியாவது புகார் தெரிவித்திருக்கிறாரா?அவர்களது சங்கங்கள் மூலம் நியாயம் கோரி இருக்கிறார்களா ?
    இங்கே நியாயமாக நடந்துகொள்ளும் அதிகாரி(கள்) ஒரு தனி தீவு போலவே கருதப்பட்டு தீண்டதகாதவர்கள்போலவே சக அதிகாரிகளால் நடத்தப்பட்டு வருகிறார்கள்.

    இதனால் தான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பது ஒரு உண்மையில் கானல் நீராகவே உள்ளது.

    ஊழலில் சாதி மதம் பாராமல் ஊழலுக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகளின் அட்டுழியங்களை ஒரு வரியிலேனும் சுட்டி காட்டிஇருப்பதின் மூலம் ஊழல் சாம்ராஜ்யத்தில் ஒளிந்திருந்து கோலோச்சிய நபர்கள் மீது முதல்முறையாக தீபந்த ஒளியை அடித்திருக்கிறது வினவு. அத்தகைய கருங்காலிகள் அந்த தீபந்த ஒளியின் உதவியுடன் நேர்வழிகண்டு தங்களையும் சமுகத்தையும் காத்துகொள்வதோ அல்லது அதேஇடத்தில் இருந்து அந்த தீயில் வெந்து உயிர்விடுவதோ நமது தொடர்முயற்சிகளில் தான் இருக்கிறது.

Leave a Reply to வேலுமணி சரவணகுமார் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க