privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைகுழந்தைகள்பெண்கள் விடுதலை முன்னணி டாஸ்மாக் முற்றுகை !

பெண்கள் விடுதலை முன்னணி டாஸ்மாக் முற்றுகை !

-

பெண்கள் விடுதலை முன்னணி டாஸ்மாக் முற்றுகை !டாஸ்மாக் புண்ணியத்தில் தமிழ்நாடே தள்ளாடுகிறது. ஆண்களோ குடல்வெந்து சாகிறார்கள். பெண்களோ குடும்பத்தை நடத்தவும், குழந்தைகளைக் காப்பாற்றவும் வழியில்லாமல் தினம், தினம் நொந்து சாகிறார்கள். இன்னொரு பக்கம் 3 வயதுக் குழந்தை பாலியல் வல்லுறவு செய்யப்படுகிறாள். பொள்ளாச்சியில் கத்தி முனையில் மிரட்டி 12 வயது சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டாள். கரூரில் வேலைக்குச் சென்று திரும்பிய 17 வயது இளம் பெண்ணை குதறிக் கொல்கிறார்கள். தமிழகமே – அரசு சாராயத்தாலும், பாலியல் வல்லுறவாலும் சீரழிந்து கொண்டிருக்கிறது

இன்றைய நிலை என்ன?

10, 15 வருடங்களுக்கு முன்பெல்லாம் ஊருக்கு வெளியே முள்ளுத் தோப்பில் பதுங்கி பதுங்கி சாராயம் விற்றார்கள். குடிப்பவர்களும் யாராவது பார்த்து விடுவார்களோ என பயந்து கொண்டே தலையில் துண்டைப் போட்டு மறைத்துக் கொண்டே போய்க் குடித்தார்கள். ஆனால், இன்றோ 12, 13 வயதிலேயே குடிக்கிராக்ள், பட்டப் பகலில் பஸ் ஸ்டாண்டில் நின்று பெருமையாக மடக் மடக்கெனக் குடிக்கிறார்கள். இதெல்லாம் தப்பில்லையா என்றால், “நாள் முழுக்க கஷ்டப்பட்டு உழைக்கிறோம், வலி தெரியாம இருக்கக் குடிக்கிறோம்” என்ற குடிமகன்கள், நியாயம் பேசுகிறார்கள். 12,15 வயது பள்ளிக் கூடப் பையனெல்லாம் குவார்ட்டரை ராவாக அடிக்கிறானே, அவனுமாக கஷ்டப்பட்டு உழைக்கிறான்?

ஏன் இந்த அவலம்?

“விக்கிற அரசாங்கமே வெக்கமில்லாம ஊருக்குள்ள விக்குது, காசு குடுத்து குடிக்கிற நாங்க ஏன் வெக்கப்படணும் என்பதே குடிமகன் கேள்வி. என்றைக்கு அரசு டாஸ்மாக் மூலம் சரக்கை விற்க ஆரம்பித்ததோ அன்றையில் இருந்தே மறைந்து மறைந்து குடிப்பதெல்லாம் மறைந்து விட்டது. ட்ரீட் என்ற பெயரில் குடிப்பதையே ஒரு ஃபேஷனாக்கி விட்டனர்.

குடிப்பதால் என்ன பிரச்சனை?

ஒரு பக்கத்தில் குடித்துக் குடித்துக் குடல்வெந்து அரசு மருத்துவமனையில் கிடந்தே செத்துப் போகும் கணவன்மார்கள். 2, 3 குழந்தைகளுடன் நடுத்தெருவில் நிற்கும் தாய்மார்கள். இன்னொரு பக்கத்தில், குடிபோதையில் தனது மகளிடமே தவறாக நடக்க முயன்ற தகப்பனை அடித்துக் கொன்ற தாய், குடிவெறியில் 13 வயது சிறுமி புனிதாவை பலத்காரம் செய்து கொன்ற காமுகன்.

“குடிச்சா பொண்டாட்டிக்கும், பொண்ணுக்கும் கூடவா வித்தியாசம் தெரியாது” எனக் கேள்விகள் எழுப்பலாம். ஆனால் இதற்கு குடிபோதை மட்டுமா காரணம்? இல்லை, குடிபோதையோடு மோசமான காமவெறியும்தான், குடிக்கு டாஸ்மாக் போல, காமவெறியைத் தூண்டுவதற்கு ஆபாச இணைய தளங்களும், மெமரி கார்டுகளும் கெடுத்துக் குட்டிச்சுவராக்குகின்றன. பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலோர் குடிப்பது மட்டுமின்றி, ஆபாச செக்ஸ் படங்களையும் பார்ப்பவர்கள்தான்.

பெண்கள் விடுதலை முன்னணி டாஸ்மாக் முற்றுகை !காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராமப்புற ஆய்வுக்காக சென்ற நமது தோழர்களிடம், 15 வயது சிறுவன் சொன்ன தகவல் இது “நான் ஒரே நாள்ல 250 பிட்டு படம் டவுன்லோடு பண்ணியிருக்கேன், யாராலயும் முடியாது” என்று பெருமையாகச் சொல்லியிருக்கிறான். இப்படி சிறிய வயதில், நாள் முழுக்க ஆபாசப் படத்தைப் பார்ப்பவன் மனநிலை என்னவாக இருக்கும்? படத்தில் பார்ப்பதை அனுபவிக்க வேண்டும் என்ற வெறிதான் வரும். இதைதான் எதிர்க்க முடியாம பிஞ்சுக் குழந்தைகளிடம் தீர்த்துக் கொள்கிறார்கள்.

இப்போது சொல்லுங்கள், டாஸ்மாக்கின் போதைவெறியும், செக்ஸ் படத்தின் காமவெறியும் தலைக்கேறியவனுக்கு தாய்க்கும் – தாரத்திற்கும் – மகளுக்கும் வித்தியாசம் தெரியுமா?

இதற்கு யார் காரணம்?

சாராயக் கடைகளைத் திறந்து வைத்து சரக்கை விற்று மக்களின் பணத்தைப் பறித்துக் கொண்டதோடு உடலையும் மனதையும் நாசமாக்கியது அரசுதானே. மக்கள் சந்தோசமாக இருக்க வேண்டிய பொங்கல், தீபாவளிப் பண்டிகைக் காலங்களில் கூட 200 கோடி, 300 கோடி என “டார்கெட்” வைத்துக் கொள்ளையடிப்பது அரசுதானே? இதே அரசுதானே செக்ஸ் பட இணைய தளங்களையும் அனுமதிக்கிறது.

அரசு எப்படி எல்லாவற்றையும் தடுக்க முடியும் என்று கேட்கலாம். ஆனால், 2014 உலகக் கோப்பை கால்பந்து போட்டியை இணையதளம் மூலமாக யாரும் இலவசமாகப் பார்த்து விடாமல் தடுக்க, 20 இணைய தளங்களை செயல்பட விடாமல் தடுத்தது அரசு. டி.வி நிறுவன முதலாளிகளின் லாபத்திற்காக இதைச் செய்ய முடியுமென்றால், மக்களின் நன்மைக்காக செக்ஸ் பட இணைய தளங்களை தடுக்க முடியாதா?

10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு பாடம் நடத்த அரசுப் பள்ளிகளில் வாத்தியார் இல்லை. குடிக்கத் தண்ணீர் இல்லை, அவசரத்துக்குப் போக கக்கூஸ் கூட இல்லை. இதெல்லாம் கொடுக்காத அரசு எதற்காக இலவச லேப்டாப் கொடுக்கிறது? வாத்தியாரே இல்லாமல் பையன் அதை எப்படிக் கற்றுக் கொள்வான்? வேண்டுமானால், 5 ரூபாய்க்கு இண்டர்நெட் கார்டு வாங்கி லேப்டாப்பில் போட்டு எதைப் பார்க்கக் கூடாதோ அதைப் பார்க்கத் தொடங்கி கடைசியில் காஞ்சிபுரம் மாணவன் போல சீரழிவில் ‘சாதனையாளனாக’ மாறி விடுகிறான்.

இப்படி மக்களை, மாணவர்களைக் கெடுத்து சீரழித்து, அதிலும் பணம் பார்க்கும் அயோக்கிய பேர்வழிகளான முதலாளிகள்தானே; இவர்களுக்கு அடியாள் வேலை செய்யும் அரசுதானே காரணம். உண்மை இப்படி இருக்கும் போது அரசு எப்படி மக்களுக்காக இருக்க முடியும்?

இதன் விளைவு என்ன?

சாராய போதையும், ஆபாசப் படங்களும் மனிதனை இயல்பு நிலையில் வைத்திருப்பதில்லை. எந்த நேரமும் சீரழிந்த சிந்தனையைத் தூண்டி விடுகின்றன. தவறுகளைச் செய்யத் தூண்டுகின்றன. எந்த அநியாயத்தையும் கண்டும் கோபம் கொள்ளாத மழுங்கிய நிலைக்குத் தள்ளுகின்றன. படிக்கும் படிப்பு முதல் குடிக்கும் தண்ணீர் வரை காசாகி விட்டதைக் கண்டோ, உரிமைகள் பறிக்கப்படுவதைக் கண்டோ, வெளிநாட்டுக் கம்பெனிகள் நம் நாட்டைக் கொள்ளையடிப்பது கண்டோ, கோபமோ, ஆவேசமோ கொள்ளாமல் தடுக்கின்றன. இதைத்தான் கார்ப்பரேட் கம்பெனி முதலாளிகளும், நமது ஆட்சியாளர்களும் விரும்புகிறார்கள்.

இதை நாம் சகித்துக் கொள்ள முடியுமா? சூடு, சொரணை இல்லாத சதைப் பிண்டங்களாக நமது பிள்ளைகளும், சகோரதர்களும் மாறுவதை அனுமதிக்க முடியுமா? இளம்வயதிலேயே பாலியல் குற்றவாளியாக நமது மகன் மாறுவதை அனுமதிக்க முடியுமா? 3 வயது, 4 வயது குழந்தைகளுடன் நமது சகோதரிகள் தாலியறுப்பதைத் தாங்கிக் கொள்ள முடியுமா? முடியாது என்றால் என்ன செய்வது?

பெண்கள் விடுதலை முன்னணி டாஸ்மாக் முற்றுகை !தீர்வுதான் என்ன?

அரசாங்கம் என்ன செய்யும்? குடிப்பவர்கள், ஆபாசப் படம் பார்ப்பவர்கள் தானாகத் திருந்தினால்தான் உண்டு என்று வசனம் பேசுவது நியாயமா? சிகரெட் கம்பெனிகளை அனுமதித்து விட்டு புகைபிடிப்பவனைத் தண்டிப்பது, ஊத்திக் கொடுக்கும் அரசை விட்டுவிட்டு குடிப்பவனைத் தண்டிப்பது என்னவகை நியாயம்? இந்தியக் குற்றவியல் சட்டமே என்ன சொல்கிறது? தப்பு செய்யத் தூண்டுபவன்தான் முதல் குற்றவாளி. அப்படி என்றால் அந்த சட்டம் அரசுக்குப் பொருந்தாதா? விற்பவனை உதைத்தால் குடிப்பவன் அடங்குவான் என்று கூறுவது போல முதல் குற்றவாளியான அரசின் அயோக்கியத் தனத்தைத் தோலுரிப்பதோடு, மக்களுக்கு உதவாத இந்த அரசை அப்புறப்படுத்துவோம். இதற்கு மக்களுக்கான அதிகார கமிட்டிகளைக் கட்டியமைப்போம். மக்களைக் கொல்லும் சாராயத்தையும், மக்களைச் சிதைக்கும் ஆபாசச் சீரழிவுகளையும் ஒழித்துக் கட்டுவோம்.

ஊத்திக் கொடுப்பதும் சீரழிப்பதுமா அரசின் வேலை?

நாகல்கேணி டாஸ்மாக் கடை முற்றுகை

24-12-2014 – காலை 11 மணி
பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை

உழைக்கும் பெண்களே!

வீதிக்கு வீதி குடிநீர் குழாய்கள் இல்லை,
குடி கெடுக்கும் சாராயக் கடைகளுக்கோ பஞ்சம் இல்லை!
அறிவைப் புகட்டும் கல்வி தனியார்மயம்!
புத்தியைக் கெடுக்கும் சாராயம் அரசுமயம்!

ஆட்சியைப் பிடிப்பதில் ஜெ.வும் ‘கருணா’வும் பங்காளிகள்!
ஊத்திக் கொடுத்து உருவிக் கொள்ளும் நம் உழைப்பு பணத்தை
சாராயப் பேக்டரி முதலாளிகளுக்கும் இலவசங்களுக்கும் படையல் வைப்பதில் கூட்டாளிகள்!

குடிகெடுக்கும் டாஸ்மாக்கை இழுத்து மூடுவோம்! டாஸ்மாக் பிடியில் இருந்து மக்களை விடுவிப்போம்!

தாலிக்கு தங்கம் தரும் தமிழக அரசே,
மக்கள் தாலியறுக்க காரணமான
டாஸ்மாக் சாராயக் கடைகளை இழுத்து மூடு

சாராய போதையும் ஆபாச சீரழிவு படங்களும்
சிந்தனையை சீரழிக்கும் வக்கிரங்களே!

குடிகெடுக்கும் சாராயக் கடைகளை இழுத்து மூடுவோம்!
மக்களின் சிந்தனையைச் சீரழிக்கும் ஆபாச வக்கிரங்களை ஒழித்துக் கட்டுவோம்.

பெண்கள் விடுதலை முன்னணி டாஸ்மாக் முற்றுகை !

பெண்கள் விடுதலை முன்னணி
சென்னை
தொடர்பு எண் : 98416 58457

  1. தமிழ்நாட்டின் எல்லாப் பகுதி மக்களுக்கும் சென்று சேரும் வகையில், ஒரு வருஷம் முழுக்க பிரச்சாரம் செய்து மக்களைத் திரட்டி, கடைகளை நொறுக்க வேண்டுமென உணர்வூட்ட வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சனை தீராது. தமிழ்நாடு ஸ்டெடி ஆகாது…..

  2. கல்வி கொடுக்க துப்புல்லாத அரசு. சாராயம் விற்ப்பதில் இலக்கு நிர்ணைத்து பெண்களிண் தாலியருக்கின்றது,மாணவர்களை திட்டமிட்டே சிறழிக்கிறது
    தமிழகத்தில் நடக்கும் சாலை விபத்தில் 80 சதவிகிதம் குடிபோதையல் தான் நடக்கிறது .
    குடித்துவிட்டு வாகனம் ஒட்டினால் டிரிங்கன் டிரைவ் வழக்கு போடப்படுகிறது நியப்படி பார்த்தால் இந்த வாழக்கை தமிக அரசின் மீதோ அல்லது குற்றவாளி ஜெயலலித்தமீதோ தான் போட வேண்டும்.

    தாலிக்கு தங்கம் கொடுப்பதாக சொல்லிக் கொண்டு டாஸ்மார்க் மூலாமாக தாலியை பறித்துக் கொண்டு இருக்கிறது தமிழக அரசு. இந்த அரசை தமிழக அரசு என்று சொல்வதர்க்கு பதிலாக தாலியருத்த அரசு என்று சொண்ணால் போருத்தாமாக இருக்கும்.

    பள்ளி, கல்லூரியில் லைப்ரரி இருக்கோ இல்லையோ பள்ளி,கல்லூரியின் அருகாமையில் கட்டாயம் டாஸ்மார்க் இருக்கிறது மாணவர்களை குடி போதைக்கு அடிமையாக்கி சமூக மாற்றத்திற்க்காக சிந்திக்க விடாமல் குற்றவாளிகலாக சித்தறித்து கல்லூரிக்குள்ளேயே கைதிகளைப் போல் சிறைபிடித்துவைத்து கல்லூரி வாசளில் போலிசை நிருத்தி வக்கின்றனர்.

    சென்னை தாசபிரகஸ் பெருந்து நிலையம் பக்கத்தில் உள்ள ஆரமுதன் கார்டனில் ஒரு டாஸ்மார்க் உள்ளது இந்த கடையை தாண்டிதான் எழும்பூரில் உள்ள பிரசிடல்சி மகளிர் உயர் நிலைப் பள்ளிக்கு தினமும் 500க்கும் மேற்ப்பட்ட மாணவிகள் சென்று வருகின்றனர் இந்தக்கடையை இழுத்துமூட வேண்டும்.

    போராட்டம் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்

  3. மதுகுடிக்கும் ஆண்களையும், அவர்களின் ரத்தம் குடிக்கும் அரசையும் பெண்கள் போராடித்தான் ஒழிக்கவேண்டும்!

Leave a Reply to Ajathasathru பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க