privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதைபுரட்சிக்கு ஏங்கும் காலம் - நூல் அறிமுகம்

புரட்சிக்கு ஏங்கும் காலம் – நூல் அறிமுகம்

-

புரட்சிக்கு ஏங்கும் காலம் – தோழர். துரை.சண்முகத்தின் கவிதை தொகுப்பு – நூல் அறிமுகம்

விதைக்கு பொய்யழகு என்ற தமிழ் கவிதை மரபினை உடைத்து அதன் மெய்யான அழகை பாட்டாளி வர்க்கத்தின் பார்வையில் பதிவு செய்திருக்கிறார் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் தோழர் துரை.சண்முகம். ஆனால் 2011 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்தும் இவர் எடுத்தாண்ட சமூக பிரச்சினைகளை ஒரு பிரச்சினையாக கருதாத வாசகர்களிடம் ஒருவித குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவதில் இக்கவிதைகள் முன்னிற்கின்றன. கீழைக்காற்று வெளியீடாக வந்துள்ள 72 பக்கத்தில் விரியும் இக்கவிதைத் தொகுப்பின் விலை ரூ.40.

புரட்சிக்கு ஏங்கும் காலம்மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து சென்னை வரையிலான பேருந்து பயணத்தினைக் கூட பொதுவான நபர்கள் கவனிக்கத் தவறும் ஓட்டுநர்களின் உழைப்பினை, பொறுப்பினை எடுத்துச் சொல்லும் கவிதையாக உள்ளீடு செய்கிறார் கவிஞர். அந்த உழைப்பை உதாசீனம் செய்யும் பயணிகளின் சொற்களோடு கவிதை முடிகிறது. இக்கவிதையை புதிய கலாச்சாரம் இதழின் அட்டையில் படித்தவர்களுக்கு இது புதிதாக இல்லாவிட்டாலும் பல கவிதைகளில் இந்த வடிவம் இருப்பதை தொகுப்பில் தான் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த முரண்பாட்டை கவிதை சுட்டிக்காட்டுவதால் ஏற்படும் குற்ற உணர்ச்சி கவிதையை மீண்டும் முதலில் இருந்து படிக்க சொல்கிறது. அதன்பிறகு வாசகர்களிடம் ஒரு சுய விமர்சனத்தை அது கோரி நிற்கிறது.

அழிபடல் சரியோ அண்ணாச்சி கடைகள் என்ற கவிதை சிறுவணிகர்களது வாழ்க்கையை கெடுக்க வரும் வால்மார்ட் போன்ற பன்னாட்டு கம்பெனிகளுக்கு எதிராக அவர்களை பாதுகாக்க எல்லோருக்கும் அறைகூவல் விடுக்கிறது. உணர்ச்சி அம்சம் பொதுவான சமூக, அரசியல் கவிதைகளில் இருக்காது என்று சொல்பவர்களை தட்டி எழுப்பியபடியே செவுளில் அறைந்து அக்கருத்தை மாற்றச் சொல்கிறது கவிதையின் வடிவம். வாசகன் இதயத்தை விற்க சம்மாதிக்காதவனா என்று அவர்களிடம் ஒரு சுயபரிசோதனையை கோரி நிற்கிறது கவிதை.

ஆதலினால் காதல் செய் என்ற கவிதை தருமபுரி இளவரசன்-திவ்யா காதல் திருமணத்தை தொடர்ந்து ஆதிக்க சாதி வெறியர்கள் நான்கு தாழ்த்தப்பட்டோருக்கான கிராமங்களை சூறையாடிய போது எழுதப்பட்டது. “சைவப்பிள்ளையும், புதிரை வண்ணாரும் இணைந்தால் கீரிப்பிள்ளையா பிறந்து விடும்” என்ற எளிய படிமங்களை காடசிப்படுத்தி செல்லும் கவிதை எளிய மொழியில் இருப்பதும் வாசகர்களை சென்றடையவும், படித்த திருப்தியை அளிக்கவும் முக்கிய காரணமாக இருக்கிறது.

ஆணாதிக்கத்தை, பாலியல் வக்கிரத்தை தோலுரிக்கும் கவிதைகள், தனியார் கல்வியின் வியாபார புத்தியை சுட்டிக் காட்டும் மெட்ரிக் பள்ளிப் பக்கம் மேயப் போவதில்லை என்ற நாமக்கல் கோழிப் பள்ளிக்கெதிரான கவிதை, நரகாசுரன் பற்றிய தீபாவளிக் கவிதை, சச்சின் பற்றிய விமர்சன தொடுப்போடு வந்த கவிதை என எல்லா கவிதைகளுமே ஒரு புதிய பாட்டாளி வர்க்க பார்வையில் தனியாக மிளிர்ந்து நிற்கின்றன.

நடந்து முடிந்த நாடாளுமற்ற தேர்தலுக்கு காவிக் கும்பலும், சாதிக்கணக்குகளும் இணைவதை எள்ளி நகையாடும் தேர்தல் குறவஞ்சி, அரி பரந்தாமனின் வேட்டிக்காக தமிழகமே சட்டசபையின் 110 விதியின் கீழ் புரட்சித் தலைவியின் கீழ் ஒன்றுபட்டதை ஆதிக்க சாதிகள் எப்படி பார்க்கின்றன என்பதை விளக்கும் கவிதை என தோழரின் கவிதைகள் புதிய பரிமாணத்தில் மிளிர்கின்றன. கவிதை நீளமாக இருந்தாலும் வாசகனை அலுப்பு தட்டாத விதமாக அழைத்துச் செல்கின்றன அவர் எடுத்தாளும் பிரச்சினைகள்.

இந்தித் திணிப்பிற்கெதிராகவும், கோயம்பேட்டில் கருவாடு விற்க கூடாது என்ற மவுண்ட் ரோடு மகா விஷணுவின் நடவடிக்கைக்கு எதிராகவும் உள்ள கவிதைகள் பார்ப்பன பாசிசத்திற்கெதிரான நல்ல படைப்பு என எல்லோரும் ஒத்துக் கொள்வார்கள்.

புரட்சித்தலைவிக்கு தண்டனை என்றவுடன் எல்லோரையும் தங்களது துக்கத்தில் பங்குபெற சொன்ன ரத்த்தின் ரத்தங்களது கோரிக்கையை எள்ளி நகையாடுதல், தேர்தல் புறக்கணிப்பு என சமகால வெளியில் செல்லும் பயணிக்கும் கவிதைகளை அரசியல் முன்னணியாளராக தம்மை வடிவமைத்துக் கொள்ள நினைக்கும் இலக்கிய வாசகர்கள் அவசியம் படித்தாக வேண்டியிருக்கிறது.

கடந்த நான்கு ஆண்டுகளில் வெளிவந்த சமுக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகளை கவிஞர் பாட்டாளி வர்க்க பார்வையில் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். அந்த வகையில் கட்டாயம் கவிதைக்கு மெய்யழகுதான் இருக்கிறது. அதனை தரிசிக்க வாசகர்களை அழைக்கிறது புத்தகம் – அதாவது “புரட்சிக்கு ஏங்கும் காலம்“.

புரட்சிக்கு ஏங்கும் காலம்

துரை சண்முகம்

வெளியீடு : கீழைக்காற்று

விலை : ரூ 40
பக்கங்கள் : 72

புத்தகக் கண்காட்சியில் கிடைக்குமிடம்

கீழைக்காற்று வெளியீட்டகம்
சென்னை – 600002
044-28412367

எண்: 80-81 (முதல் நுழைவாயில்)

38-வது சென்னை புத்தகக்காட்சி
சென்னை ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி,
நந்தனம், சென்னை – 35

நாள் : சனவரி 9 – 21 (9 – 1 – 2015  முதல் 21 – 1 – 2015 வரை)

நேரம்:
வேலைநாட்கள் : மதியம் 2 – இரவு 9 – மணி வரை
விடுமுறைநாட்கள் : காலை 11 – இரவு 9 – மணி வரை