privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைஇலக்கிய விமரிசனங்கள்புத்தகக் கண்காட்சி : வாசகர்களுக்கு கீழைக்காற்றின் நன்றி

புத்தகக் கண்காட்சி : வாசகர்களுக்கு கீழைக்காற்றின் நன்றி

-

lenin-stalinல வகையான வாசகர்களை உட்கவர்ந்த சென்னை புத்தகக்காட்சி 21-1-2015 அன்று நிறைவுற்றது.

மார்க்சியத்தின் வரலாற்றுச் சிறப்பியல்புகள்புதிய புத்தகங்களை அறிமுகப்படுத்துவதன் மூலமாக புதிய மனிதர்களை நமக்கு அறிமுகப்படுத்தும் சூழலின் மகிழ்ச்சி எமது பணிக் களைப்பை போக்கிவிடுகிறது!

ஏராளமான இளம் வாசகர்களின் வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்தத் தருணத்தில் 20 ஆண்டுகாலம் பின்னோக்கி நடந்து வந்த பாதையை பார்க்கத் தோன்றுகிறது.

முதன் முதலாக தெளிவான அரசியல் அடையாளத்துடன் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ படங்களுடன் “கீழைக்காற்று” இடம் பெற்ற போது பார்வைகள் பல விதமாய் பதிந்தன.

“இது கம்யூனிஸ்ட் கடை!” என்று எச்சரிக்கையாய் எட்டு வைத்தவர்கள் பலர். சந்தித்திராத சமூக உண்மைகளை உள்ளடக்கமாகக் கொண்ட நூல்களை தொட்ட மாத்திரத்தில் “ஏய்! நக்சலைட்டு புத்தகண்டா!” என்று அதிர்ச்சி கலந்து அணுகியவர் பலர். கொஞ்சம் உள்ளே வந்தவர்களோ, “பெரியார், அம்பேத்கர் சமூக ஆய்வுகள் எல்லாம் இருக்கு!” என்று ஜனநாயகத்தின் நறுமணத்தில் இதழ் விரித்தவர் பலர். “இங்கேயும் வந்துட்டானுங்களா?!” என்று தொண்டைக் குழியில் தூர்ந்து போனவர் சிலர்.

இப்படி மெல்ல மெல்ல கீழைக்காற்றின் அடையாளத்தில் தங்கள் அடையாளத்தையும் கண்டுகொண்ட ஏராளமான வாசகர்களின் இனிய அரவணைப்பில் வாசகர்களின் வளர்ச்சியில் கீழைக்காற்றின் வளர்ச்சியும் விளைந்த கதிராய் பணிவுடன் மகிழ்கிறது!

muslims-in-soviet-russiaஇந்த ஆண்டு புதிதாக கொண்டுவந்த வெளியீடுகள் அனைத்தும் பரவலாக வாசகர்களிடம் வரவேற்பை பெற்றது, எமக்கு சமூகப் பொறுப்புணர்வை உணர வைத்தது.

ஒப்பீட்டளவில் மலிவான விலையுடன், சிறு, சிறு வெளியீடுகளால், நடப்பு சமூக விவகாரங்களை விளங்கிக்கொள்ள உதவி செய்யும் எமது நூல்கள் பெரும் பயனளிப்பதாய் நேரில் பல வாசகர்கள் பகிர்ந்து கொண்டது உற்சாகமளிக்கிறது.

சிற்றுளிகள் செதுக்கித் தரும் மலையளவு விசயங்களின் சாரம் மக்களைப் பற்றிக் கொண்டது. பரந்துபட்ட மக்களின் நலனிலிருந்து தொடங்கப்படும் விசயங்கள் பரவலாக வரவேற்கப்படும் என்ற அரசியல் முயற்சியிலிருந்து இந்த வெற்றி சாதிக்கப்படுகிறது.

கூட்டு உழைப்பின் பரிமாணங்கள் தான் எனினும், எமது வெளியீடுகளுக்கான கட்டுரைகளை எழுதிய தோழர்கள், புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் இதழின் எழுத்தாளர்கள், வினவின் கட்டுரையாளர்கள், மேலும் எல்லாவற்றிலும் இதை அனைத்தையும் ஒருங்கிணைக்கும் மார்க்சிய-லெனினிய அரசியலின் மைய இழை அனைத்தும் சேர்ந்த அழகியல் இது என்றால் மிகையில்லை.

எமது வெளியீடுகளை யாரும் வாங்கி விற்பனை செய்ய முன்வராத சூழலிலும், எங்கெல்லாம் சமூகக் கண்ணோட்டத்துக்கு தேவையான நல்ல நூல்கள் கிடைக்கின்றனவோ, அவைகளை சேகரித்து ஒரே இடத்தில் வாசகர்களுக்கு வழங்கும் எமது ஜனநாயகக் கண்ணோட்டத்தின் பரப்பளவே, இத்தனை வாசகர் பரப்பை எமக்கு வழங்கியுள்ளது.

புரட்சிக்கு ஏங்கும் காலம்இது மட்டுமல்ல, இதன் ஊடாக வாசக மனதையும் ஜனநாயகப்படுத்தும் அரசியல் முன்முயற்சியும் இதில் அடங்கியுள்ளது. அந்த வகையில் குறுகிய, குழு மனப்பான்மை கொண்ட கருத்துலகில் ஒரு கோட்பாட்டு அர்த்தத்துடன் வெகுமக்களுக்கான ஜனநாயகம் மார்க்சிய-லெனினிய பார்வையிலேயே சாத்தியம் என்பதை கீழைக்காற்று அனுபவமும் நிரூபித்துள்ளது.

இவை எமது சாதனை என்பதை விட நாங்கள் சந்திக்கும் ஒவ்வொரு களத்திலும் கற்றுவரும் பாடங்கள் என்பதாக பகிர்ந்து கொள்வதையே முதன்மையாகக் கருதுகிறோம்.

இது ஒரு தொடக்கம்தான். முற்போக்கு இலக்கியங்களை, நூல்களை தனி ஒரு நிறுவன முயற்சி மூலமாக மட்டும் கொண்டு சென்றிட முடியாது. எந்த அளவு சமூகத்தில் புரட்சிகர போராட்டங்கள், இயக்கங்களின் தாக்கம் அதிகரிக்கிறதோ, அந்த அளவுக்கு நிறுவனங்களின் முன் முயற்சிக்கு வளர்ச்சி உண்டு என்பதையும் நடைமுறையில் பார்க்கிறோம்.

இன்றைய சமூக பொருளாதார, கலாச்சார, அரசியல் நெருக்கடியில் தவிக்கும் மக்களுக்கு மாற்று சிந்தனையை வழங்கும் மார்க்சிய-லெனினிய அமைப்புகளின் புறத்தூண்டுதல், எம் பக்கமும் மக்களை கவனம் கொள்ளச் செய்திருக்கின்றன என்ற உண்மையை உணர்கிறோம். அந்த வகையில் இன்னும் மக்களின் தேவைகளுக்கு தோள் கொடுக்கும் சமூகப் பொறுப்பை ஒவ்வொரு ஆண்டும் வாசகர்கள் தரும் வரவேற்பிலிருந்து புரிந்து கொள்கிறோம்.

கடவுள் இருட்டு! அறிவியல் வெளிச்சம்!புதியன கேட்டு எம்மை சிந்திக்க வைக்கும் வாசகர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். முக்கியமாக இந்தப் புத்தகக் காட்சியில் 25 வயதிலிருந்து 40 வயதுக்குள் உள்ளோர் நிறைய பேர் கீழைக்காற்றை சூழ்ந்து கொண்டு புத்தகங்களை புரட்டி, புரட்டி பார்த்து, பார்த்து வாங்கிய விதம், ஒரு புதிய சூழலுக்கான நம்பிக்கையை வெளிப்படுத்தியது.

“ஏய்! மச்சான் தோ கீழைக்காற்று, புக்ஸ் சூப்பரா இருக்குண்டா” என்று தன்னியல்பில் வெளிப்படுத்தி காதலாகி கால் வைக்கும் இளைஞன்.

“புத்தகங்கள் எல்லாம் நல்லா இருக்குங்க! நல்ல செலக்சன்!” என்று மனம் விட்டு பாராட்டிய பெண்.

“சார் இங்க வாங்க, எங்கயும் அலைய வேணாம், இந்த புதிய ஜனநாயகத்த படிங்க எவனும் இப்படி எழுதுனதில்ல” என்று நண்பருக்கு பரிந்துரைக்கும் ஒரு அரசு அதிகாரி.

“கம்யூனிசத்தப்பத்தி தெரிஞ்சுக்கனும்னா எந்தப் புத்தகத்த படிக்கனும்” என்று ஆர்வம் ததும்பும் விழிகளுடன் விசாரித்த இளைஞர்கள்.

இப்படி பல நிலைகளில், பல வகைகளில் கீழைக்காற்றை தன் வாசிப்பின் விருப்பமாய் ஏற்றுக் கொண்டிருக்கும் மக்களின் தேவைகளை கணக்கில் கொண்டு, பொறுப்பாக இயங்க இந்த காட்சி எங்களுக்கு கூடுதலாக கற்றுக் கொடுத்திருக்கிறது.

நக்சல்பாரி - புரட்சியின் இடிமுழக்கம்உலகமயம் உருவாக்கியிருக்கும் நுகர்வுமயம் இதை படிப்பதற்கு தேவையற்ற சமூகமாக மாற்றியுள்ள சூழலில், ஏன் படிக்க வேண்டும்? எதற்கு படிக்க வேண்டும்? என்ற கேள்விகள் முளைத்த இதயங்களால் கீழைக்காற்று சுவாசிக்கப்பட்ட தருணங்களின் மகிழ்ச்சியை என்னவென்பது! இது நிறைவடைந்த மகிழ்ச்சி அல்ல, நிறைவேற வேண்டிய மக்களின் இலக்குகளை அடைய வேண்டிய மகிழ்ச்சியாக நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்.

அந்த வகையில், இந்த புத்தகக்காட்சியில் கீழைக்காற்றை ஆதரித்து, வரவேற்று, வாசித்து பழகிய வாசக இதயங்களுக்கு நன்றி!

எமக்கு அன்றாடம் நூல் அறிமுகம் செய்த வினவுக்கும், புதிய ஜனநாயகம் இதழுக்கும், அறிந்து வந்த வினவின் வாசகர்கள், புரட்சிகர அமைப்புகள், தோழர்கள், பல்வேறு அமைப்புகளின் ஜனநாயக உள்ளங்கள், சகல தரப்பு தொழிலாளிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் அனைவருக்கும் ஆசை அடங்காத எமது நன்றிகள்!

கீழைக்காற்றுக்காக
துரை.சண்முகம்

கீழைக்காற்று புத்தகங்களை வாங்க

கீழைக்காற்று வெளியீட்டகம்
10, ஔலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை – 2
044-28412367