privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைஇலக்கிய விமரிசனங்கள்கஜினியை சந்தித்த ரஜினி – தி இந்து சுட்ட கதை

கஜினியை சந்தித்த ரஜினி – தி இந்து சுட்ட கதை

-

anton-chekhov
ஆன்டன் செகாவ்

“ஃபில்டர் காஃபியும், தி இந்துவும் இல்லாத காலைப் பொழுதை கற்பனை செய்ய முடியாது” – இது தன்னைப் பற்றி நடுத்தர வர்க்கம் கொண்டிருக்கும் பெருமை என மவுண்ட்ரோடு மஹாவிஷ்ணு கருதுகிறது.

ஆங்கில இந்துப் பத்திரிகையின் எடையில் மூன்றாம் பக்க மாநகர அக்கப்போர் தீனிகளே ஆக்ரமித்திருக்கும் நிலையில் தமிழ் இந்துவின் நிலை எப்படி இருக்கும்? ஏற்கனவே விகடன், குமுதம் வகையறாக்கள் நொறுக்குத் தீனி வாசிப்பையும், வீக் எண்ட் சமூக உணர்வையும் உருவாக்கி விட்ட நிலையில் இப்பேற்பட்ட பத்திரிகைகளில் பயிற்சி எடுத்து “தி இந்து”-வில் பணியில் சேர்ந்திருக்கும் அறிஞர் பெருமக்கள் என்ன சாதனையை ஏற்படுத்த முடியும்?

தி இந்துவின் 29.01.2015 இதழைப் பிரித்து இரண்டாம் பக்கத்திற்கு செல்லுங்கள். “கில்லாடி கேவான்” படக்கதையின் கீழே வலதுபுறம் முதல் பெட்டி செய்தியை படியுங்கள்!

“ஆண்டன் பாவ்லோவிச் செக்கோவ்” எனும் தலைப்பில் ராஜலட்சுமி சிவலிங்கம் என்பவர் எழுதியிருக்கிறார். புகழ் பெற்ற எழுத்தாளரான செகாவின் பிறந்த தினைத்தை முன்னிட்டு அவரைப் பற்றிய பத்து துணுக்கு செய்திகளை தொகுத்திருக்கிறார்கள்.

இலக்கிய வட்டத்திலும், இடதுசாரி கட்சிகளிலும் பிரபலமான செகாவைப் பற்றி என்ன எழுதியிருக்கிறார்கள் என்று பார்த்த போது………….

“‘இலக்கிய உத்தியிலும், வடிவமைப்பிலும் செகோவை மிஞ்சக் கூடியவர்கள் யாருமே இல்லை,” என்று ஷேக்ஸ்பியர் இவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.” –

இந்த வரிகள் தூக்கி வாரிப் போட்டன. (தற்போது “தி இந்து” இணையத்தில் இந்த கட்டுரையின் மேற்கண்ட வரிகளை சத்தம் போடாமல் தூக்கிவிட்டார்கள். அச்சு இந்துவில் மட்டும் இருக்கிறது)

பதினாறாம் நூற்றாண்டின் சேக்ஸ்பியர் (26.04.1564 – 23.04.1616) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த செக்காவை (29.01.1860 – 15.07.1904) எப்படி சந்தித்தார்?

இந்த அநீதியை புரிய வைக்கவே தலைப்பில் 11-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கஜினி முகமது, 21-ம் நூற்றாண்டில் வாழும் நடிகர் ரஜினியை சந்தித்தார் என்று வைத்திருக்கிறோம். தமிழ் கூறும் நல்லுலகம் மன்னிக்க!

பிறகு “தி இந்து” செய்தியை கூர்ந்து படித்த போதே இது சொந்த புரிதலில் எழுதாத ஒரு சுட்ட எழுத்து என்பது தெரிந்தது. சரி, எங்கே சுட்டிருப்பார்கள்? ஆங்கில விக்கிபீடியாவில் பார்த்த போது அதில் சுடுமளவு “தி இந்து” அறிஞர்களுக்கு அறிவில்லை என்பது உடன் தெரிய வந்தது. பிறகு தமிழ் விக்கிபீடியாவில் பார்த்தோம்.

ஆங்கில விக்கிபீடியாவில் ஒரு உண்மை குறித்து ஆராய்ந்தால் ஒன்றுக்கு பதில் பல பத்து ‘உண்மைகள்’ இருக்கும். எது உண்மை என்று குழப்பம் வந்துவிடும். தமிழ் விக்கி பீடியாவில் அந்தக் குழப்பம் இல்லை. முழுப் பொய்யையே அறுதி உண்மை போல அடித்து விடுவார்கள். இந்த அடித்து விடுதலை செய்பவர்கள் இந்துமதவெறியர்கள். உண்மை தெரிந்த தமிழ் விக்கி பீடியா நண்பர்கள் செய்வது அறியாது திகைத்து நிற்பார்கள் என்று ஊகிக்கிறோம். இது குறித்து தனியே எழுத வேண்டும்.

சரி இரண்டிலும் இல்லை என்று ஆன பிறகு பத்து நிமிட ஆராய்ச்சியில் “தி இந்து” சுட்ட செக்கோவ்  கதையை கண்டுபிடித்து விட்டோம். தோழர் மாதவராஜின் “தீராத பக்க”ங்களில் அந்தக் கட்டுரை இருக்கிறது. “செகாவுக்கு வயது 150” எனும் அந்தக் கட்டுரை மாதவராஜின் நண்பரும் விமரிசகருமான எஸ்.ஏ.பெருமாள் எழுதியிருக்கிறார்.

இந்த கட்டுரையை “தி இந்து” அறிஞர்கள் நிச்சயம் படிக்கவில்லை. பார்த்திருப்பார்கள். பிறகு அதில் ரேண்டமாக சில பத்திகளை எடுத்து அதை சுருக்கி போட்டிருக்கிறார்கள். வழக்கமாக “மண்டபத்தில் எழுதப்படும்” கவிதைகளுக்கு கூட இடையில் மானே, தேனே என்று போட்டு ஒரிஜினாலிட்டி காட்டுவார்கள். இந்தக் கருமத்தில் அதுவும் இல்லை. சரி மூலத்தையாவது சரியாக காட்ட வேண்டாமா?

இனி சில சாம்பிள்கள்……

இது பெருமாள் சொன்னது:

“அன்டன் செகாவின் கதைகள் மாஸ்கோ, பீட்டர்ஸ்பர்க் பத்திரிகைகளில் வெளிவந்தன. ஐந்தாண்டு காலத்தில் தங்குதடையின்றி நானூறு சிறுகதைகளுக்கு மேல் எழுதிவிட்டார். 1884ம் ஆண்டு செகாவுக்கு டாக்டர் பட்டம் கிடைத்தது. அதன்பின் அவர் பீட்டர்ஸ்பர்க் நகருக்குச் சென்றார். அங்கு செகாவின் எழுத்துக்கள் பிரபலமடைந்து புகழ்பெற்றிருந்தார்.”

இது தி இந்து சுட்டது:

“1879-ல் நிதியுதவி கிடைத்ததால், மருத்துவம் பயின்றார். மருத்துவராகப் பணியாற்றிக்கொண்டே சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். இவரது கதைகள் மாஸ்கோ, பீட்டர்ஸ்பர்க் பத்திரிகைகளில் வெளிவந்தன. ஐந்தே ஆண்டுகளுக்குள் 400-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதினார்.”

இது பெருமாள் சொன்னது:

“44 ஆண்டு வாழ்க்கையில் செகாவ் 24 ஆண்டுகள் எழுதியிருக்கிறார்….

செகாவ் வாழ்ந்த காலத்தில் எழுத்தாளர்களுக்கும் நாடகம் எழுதும் ஆசை தீவிரமாக இருந்தது. அவரும் நாடகங்கள் எழுதினார். “இவானோவ்” என்ற அவரது நாடகம் 1887ம் ஆண்டு மாஸ்கோவில் அரங்கேற்றப்பட்டது. நாடக ரசிகர்களுக்கு அந்த நாடகம் புரியவில்லை………

பீட்டர்ஸ்பர்க்கில் அரங்கேற்றியபோது “கடல்நாரை” நாடகம் படுதோல்வியடைந்தது. பின்பு புகழ்பெற்ற இயக்குனர் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி தனது மாஸ்கோ ஆர்ட் தியேட்டர் மூலம் கடல் நாரை நாடகத்தை மாஸ்கோவில் மீண்டும் மேடையேற்றினார். நாடகம் பெரும் வெற்றி பெற்றது. ஸ்டானிஸ்லாவ்ஸ்கியுடன் நட்பு ஏற்பட்ட பின்பு செகாவ் மேலும் மூன்று நாடகங்கள் எழுதினார்.மூன்றும் பெரும் வெற்றி பெற்றன….”

இது தி இந்து சுட்டது:

ஒரு கட்டத்தில் மருத்துவத் தொழிலை விட்டுவிட்டு, முழு நேர எழுத்தாளராகிவிட்டார். 44 ஆண்டுகால வாழ்க் கையில் 24 ஆண்டுகள் எழுதிக்கொண்டே இருந்தார். இவரது படைப்புகள் தமிழிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. நாடகங்களும் எழுதியுள்ளார். இவரது முதல் நாடகம் தி சீகல் படுதோல்வி அடைந்தது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு புகழ்பெற்ற நாடக இயக்குநர் ஸ்தனிஸ்லாவ்ஸ்கி தனது மாஸ்கோ ஆர்ட் தியேட்டர் மூலம் இவரது நாடகம் மீண்டும் மேடையில் அரங்கேறி வெற்றி பெற்றது. அவருடன் நட்பு ஏற்பட்ட பிறகு, செகோவ் மேலும் மூன்று நாடகங்களை எழுதினார். அனைத்தும் வெற்றி பெற்றன.”

(ஆங்கில மொழியில் கல்வி பயின்றிருக்கும் “தி இந்து” அறிஞர்களுக்கு கடல் நாரை என்ற பெயர் தெரிந்திருக்காது. அதனால் அதை சீகல் என்று போட்டிருக்கிறார்கள்.)

இது பெருமாள் சொன்னது:

“புகழும் பணமும் மரியாதையும் செகாவுக்கு குவிந்த நேரத்தில் அவரது உடல்நலம் வேகமாகக் கெட ஆரம்பித்தது. காசநோயும் ரத்த வாந்தியும் அதிகரித்தது. அவரது கடைசி நாடகமான “செர்ரிப் பழத்தோட்டம்” 1904ல் அரங்கேறியபோது பல தடவை ரத்தமாக வாந்தி எடுத்தார். ஒரே நாளில் பல கதைகளை எழுத முடிந்த அவருக்கு ஒரு நாளில் நான்கு வரிகள் கூட எழுத முடியாமல் போய் விட்டது. ஆனால் அவரது நோயும் துன்ப துயரமும் அவரது இலக்கியப் படைப்புகளில் வெளிப் பட்டதேயில்லை. வாழ்க்கையை அதன் இயல் போடு ஒட்டியதாக நுட்பமான தகவல்களை மிக எளிமையாக எழுதினார். சுருக்கமாகவும், நகைச் சுவையோடும் மிகுந்த பரிவோடும் எழுதியிருப்பதை இன்றும் நாம் வாசித்து உணரலாம்.”..

இது தி இந்து சுட்டது:

“பணமும் புகழும் குவிந்த நேரத்தில் காசநோய் தாக்கியது. ஆனாலும் தங்கு தடையின்றி எழுதி வந்தார். வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்களை எதிர்கொண்டாலும் அவை எதையும் தன் எழுத்துக்களில் அவர் கொண்டு வந்ததேயில்லை. லியோ டால்ஸ்டாய், மக்ஸிம் கார்கி ஆகியோர் இவரது நண்பர்கள்.”

இது பெருமாள் சொன்னது:

“ஊழல் குடும்பம், ஊழல் அரசு,ஊழல் சமூகம் இவற்றைச் சகித்துக் கொள்ள முடியாத வராக செகாவ் திகழ்ந்தார். மனிதகுலம் இவற்றைச் சகித்துக் கொள்வதை அவர் ஒரு போதும் ஏற்கவில்லை. அதே சமயம் அவர் தன்னை ஒரு சீர்திருத்த வாதியாகவோ, தர்மோபதேசியாகவோ எண்ணிக் கொண்டதில்லை. வாழ்க்கையில் திறமையோடு வாழ வேண்டும். எதிலும் ஒரு அளவும், அழகும் வேண்டும். அனைவரும் நல்ல மனிதராக இருக்க வேண்டும் என்பதே அவரது லட்சியமாக இருந்தது. வாழ்க்கை எவ்வளவு மோசமானதாக, சாரமற்றதாக இருக்கிறது என்பதை உறைக்கச் செய்வதே தனது நாடகங்களின் குறிக்கோள் என்றும் கூறினார். அதற்காக நான் நீதிகளைப் புகுத்தவில்லை என்று கூறினார்.”

தி இந்து கொடூரமான எடிட்டிங்கில் சுட்டது:

“தன் எழுத்துகளில் சீர்திருத்தக் கருத்துகளையோ தர்ம நெறிகளையோ உபதேசம் செய்ததில்லை. திறமையோடு, எதிலும் ஓர் அளவோடும் அழகோடும் செயல்பட வேண்டும். நல்ல மனிதனாக இருக்க வேண்டும் என்பதே இவரது வாழ்க்கைத் தத்துவம்.”

(அடப்பாவிகளா சுடுவதைக் கூட ஒழுங்காக செய்ய தெரியவில்லையே. இந்த பத்தியில் செகாவ் சமூக நேயமுள்ள மனிதராகவே பெருமாளால் காட்டப்படுகிறார். அதை எந்த பொருளுமின்றி ஏனா தானோவென்று எழுதி அந்த எழுத்தாளரையே கொலை செய்திருக்கிறார்கள்.

இது பெருமாள் சொன்னது:

“வாழ்க்கையில் போலித்தனத்தையும், போலித்தனமான மனிதர்களையும் செகாவ் வெறுத்தார். நாடக மேடையில் நடிகர்கள் நடிப் பதைப் பார்த்து “இந்த நடிகர்கள் இன்னும் கொஞ்சம் குறைவாக நடித்தால் நன்றாக இருக்கும்.” என்பார். மாக்சிம் கார்க்கியைக் கூட செகாவ் கண்டித்துள்ளார். “உங்கள் எழுத்தில் அடக்கம் குறைவு. இயற்கையை வர்ணிக்கும் போது உரையாடலில் குறுக்கிடுகிறீர்கள். உங்கள் வர்ணனைகளைப் படிக்கும் போது அவை இரண்டு மூன்று வரிகளில் சுருக்கமாக நறுக்குத் தெறித்தாற் போல இருக்கலாம் என்று தோன்றுகிறது” என்று கார்க்கியிடம் கூறியுள்ளார். ஆனால் கார்க்கியை அவர் ஒரு போதும் புறக்கணித்ததில்லை. கார்க்கிக்கு எழுதிய கடிதமொன்றில் “நீங்கள் ஒரு அற்புதக் கலைஞர், அறிஞர், வாழ்வின் விசயங்களை அற்புதமாக உணர்ந்து எழுதுகிறீர்கள்” என்று செகாவ் குறிப்பிட்டுள்ளார்.”

“செகாவின் கதைகள், நாடகங்களில் சொற்கள் சிக்கனமாய் கையாளப்பட்டுள்ளதைக் காணலாம். அவரது நாடகங்களில் “மௌனம்” என்ற குறிப்பு இருக்கும். செர்ரிப் பழத்தோட்டத்தில் மட்டும் 35 மௌனங்கள் உள்ளன. முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ சமூகத்தின் ஊழல்களையும், அராஜகங் களையும் அம்பலப்படுத்தியதால் லெனினும், ஸ்டாலினும் செகாவைப் பிற்காலத்தில் கொண்டாடினர். செகாவின் ‘ஆறாவது வார்டு’ தோழர் லெனினுக்கு மிகவும் பிடித்தமான கதையாகும்.”

இது தி இந்து சுட்டது:

போலித்தனத்தை வெறுத்தவர். வாழ்க்கையின் மிக நுட்பமான விஷயங்களை மிக எளிமையாக எழுதியவர். இவரது படைப்புகள் அதிக வார்த்தைகளில் இல்லாமல் மிகவும் சுருக்கமாகவும் நகைச்சுவையோடும் இருக்கும்.”

(போலித்தனத்தை வெறுத்தவர் என்ற வார்த்தைகளுக்கு பொருள் தெரிந்திருந்தால் இப்படி சுட முடியுமா? இல்லை ஒரு விசயத்தை புரிந்து கொண்டு சுருக்கமாக எழுத தெரிந்திருந்தால் இப்படி செகாவை குற்றுயிரும் கொலையுயிருமாய் சிதைத்திருக்கமுடியுமா?)

இது பெருமாள் சொன்னது:

சேக்ஸ்பியர்
சேக்ஸ்பியர்

“டால்ஸ்டாய், செகாவைப் பற்றி “எனக்கு ஷேக்ஸ்பியரின் நாடகங்களை உனது நாடகங்கள் தூக்கியடித்து விடுகின்றன. ஷேக்ஸ்பியர் வாசகனை எங்கேயோ அழைத்துச் செல்வது போல் உணர முடிகிறது. ஆனால் உனது படைப்புகளோடு எங்கே போவது? இங்கேதான் இருக்க வேண்டும்” என்று செகாவிடம் கூறினார். அதே டால்ஸ்டாய் “இலக்கிய உத்தியிலும் உருவ அமைப்பிலும் செகாவை மிஞ்சக்கூடியவர்கள் எவருமில்லை அவர் ஈடு இணையற்றவர்” என்றும் கூறினார். டால்ஸ்டாய் மணிக்கணக்காகப் பேசுவதை செகாவ் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருப்பார். இந்தச் செகாவ் ஒரு நாத்திகன் என்று கூறிவிட்டுப் போவார்.”

இது தி இந்து கொலை செய்து கொடூரமாக சுட்டது:

“‘இலக்கிய உத்தியிலும், வடிவமைப்பிலும் செகோவை மிஞ்சக்கூடியவர்கள் யாருமே இல்லை,” என்று ஷேக்ஸ்பியர் இவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். வார்ட் நம்பர் 6, தி லேடி வித் தி டாக் உள்ளிட்ட மொத்தம் 568 சிறுகதைகளும் நாடகங்களும் எழுதியுள்ளார்.”

____________

நண்பர்களே,

ராயல் விக்டோரியன் மொழியில் படித்து தென்னிந்தியாவிலேயே தாங்கள்தான் அறிவுள்ளவர்கள் என்று “தி இந்து”வில் எழுதுபவர்களும், படிப்பவர்களும் கருதிக் கொள்கிறார்களே, அதன் யோக்கியதை எப்படி இருக்கிறது பாருங்கள்!

ஐந்து ரூபாய் கொடுத்து வாங்கும் வாசகரை தமிழ் “தி இந்து” பத்திரிகை மதிக்கும் இலட்சணம் இதுதான். இது ஏதோ இந்த துணுக்கை எழுதிய ராஜலட்சுமி சிவலிங்கத்தின் தவறாக நாம் பார்க்கவில்லை. “தி இந்து” இதழின் ஆசிரியருக்கே கூட மாஸ்கோ எங்கு இருக்கிறது, சேக்ஸ்பியர் எந்த மொழியில் எழுதினார், செகாவ் எந்த காலத்தில் வாழ்ந்தார் போன்ற பொது அறிவு விவரங்கள் தெரியுமா என்பது சந்தேகமே.

பொது அறிவே இருக்காது என்றால் இவர்கள் வரலாறு, அறிவியல், அரசியல் போன்ற துறைகளின் அரிச்சுவடி கூட அறிந்திருக்கமாட்டார்கள். செகாவை விடுங்கள், இதே தேதியிட்ட “தி இந்து”வில் 11-ம் பக்கத்தில் வந்த செய்தியைப் பாருங்கள்.

“மேடைகளில் ஆங்கிலத்தில் சரளமாக பேச மோடிக்கு உதவும் அதிநவீன ‘டெலிபிராம்டர்’ “ எனும் செய்தியை படியுங்கள். ஆங்கிலம் சரளமாக பேச தெரியாத மோடி தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்களைப் போல கண்ணுக்கு முன்னே ஓடும் பெரிய எழுத்துக்களை படித்து உரையாற்றுகிறாராம். அவர் படிக்கும் கருவியை நாம் பார்க்க முடியாது என்பதால் அவர் நம்மை பார்க்கிறார் என்று நாம் நினைக்கிறோம். இது செய்தி.

இந்த செய்தியை கண்ணோட்டமின்றி இந்த அளவில் போட்டால் கூட தொலையட்டும் சனியன் என்று விட்டுவிடலாம். மாறாக இத்தகைய நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் மோடி முன்னணியில் இருக்கிறார் என்று அடித்து விடுகிறார்கள். இது செய்தியல்ல, கண்ணோட்டம். அதாவது மோடிக்கு ஜால்ரா அடிக்கும் வெட்கம் கெட்ட தனம்.

ஆங்கிலம் தெரியாது என்று காட்டினால் அது ஒன்றும் பிழையில்லை. மாறாக அப்படி ஒரு பிரமையைக் காட்டி ஷோ பண்ணும் மோசடியான மனிதராக மோடி திகழ்கிறார். கோட்டு சூட்டிலேயே தனது பெயரை போட்டு ரசிக்கும் அந்த நார்சிச மனிதனைக் கண்டிக்காமல் அல்லது அற்பத்தனமாக நடக்கிறார் என்று கூட பேசாமல் ஏதோ சமூக வலைத்தளங்கள் உள்ளிட்டு டெக்னாலஜியில் பட்டையைக் கிளப்புகிறார் என்று ஏன் எழுத வேண்டும்?

ஆகவே விளம்பரம் தரும் முதலாளிகள், அரசு, ஆளும் கட்சிகளின் தயவில் பிழைக்கும் இந்த கனவான்களுக்கு சொந்த அறிவு என்பது எப்படி இருக்க முடியும்?

கோயம்பேட்டில் கருவாடு விற்பதற்காக இவர்கள் நடத்திய அழுகுணி ஆட்டத்தை ஏற்கனவே எழுதியிருக்கிறோம். அதில் பெரும்பான்மை மக்களின் கருவாட்டை விட சில பத்து மூக்குகளின் பிரச்சினையே இவர்களை அழச் செய்கிறது.

நம்மைப் போன்றவர்களுக்கு செகாவை படிக்கவும் பிடிக்கவும் தேவை இருக்கிறது. இவர்களுக்கு? “அஜித் படத்துக்கு வந்த மிரட்டல் கடிதம்” என்று அரைப்பக்கத்தில் செய்தி போட்டு தமிழுக்கு சேவை புரியும் “தி இந்து” கனவான்களுக்கு செகாவுக்கும் செக்குமாட்டுக்கும் என்ன வித்தியாசம் தெரியும்?

சரி, போகட்டும் விடுங்கள்!

உலகம் போற்றும் ஒரு எழுத்தாளரின் பிறந்த நாளில் அவரை எழுத்தில் கொலை செய்த “தி இந்து” அதற்கு பிராயச் சித்தம் செய்ய வேண்டும்.

கீழ்க்கண்ட மூன்றில் ஒன்றை தெரிவு செய்யலாம்.

1.   இளம் வாசகருக்கு செகாவைப் பற்றி அழகாக அறிமுகம் செய்த தோழர் பெருமாள் மற்றும் மாதவராஜுக்கு தலா ஒரு இலட்சம் அபராதத் தொகை கட்ட வேண்டும். இந்த தொகை “தி இந்து” சேர்மேன், ஆசிரியர், இலவச இதழ் ஆசிரியர், நடுப்பக்க ஆசிரியர் போன்ற இதர ஆசிரியர்களின் ஊதியத்திலிருந்து அளிக்க வேண்டும்.

2.   அபராதம் அதிகம் என்று கருதினால் வினவு அலுவலகத்திற்கு ஏதேனும் ஒரு  அதிகாலையில் வந்து அனைத்து ஆசிரியர்களும் 100 தோப்புக் கரணம் போடவேண்டும்.

3.   இதுவும் சரியில்லை என்றால் மூன்று நாட்களுக்கு “தி இந்து” பத்திரிகையை நிறுத்த வேண்டும்.

இப்படியெல்லாம் நடக்காமல் செகாவை செதுக்கி எழுதிய அந்த நபரை திட்டிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கவும் அவர்கள் போகலாம். நம்மைப் பொறுத்த வரை எழுதியவரை விட எடிட்டரையே குற்றம் சாட்டுகிறோம்.

“தி இந்து” தமிழ் இதழ் வெளியான போது உலக அரசியலை “குலோப் ஜாமூன்” என்று பா.ராகவன் எழுதிய தொடரை பார்த்த போதே குமட்டிக் கொண்டு வந்தது. டவுண்லோடு பதிப்பகத்திலிருந்து பல்வேறு டவுண்லோடு அதுவும் அமெரிக்க பிரச்சாரக் குப்பைகளை டன் டன்னாக தரவிறக்கி வரலாறு என்று உளறும் ஒரு நபரை போய் உலக அரசியலை எழுத வைக்கிறார்களே என்று அதிர்ச்சியடைந்தோம்.

பத்திரிகை, பத்திரிகையாளர்கள் என்ன தரத்தில் இருக்கிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. உண்மையில் இளைஞர்களுக்கும், மக்களுக்கும் சேவையாற்ற கூடிய அறிஞர்கள், செய்தியாளர்கள் அனைவரும் வெளியே வேறு வேறு வேலையில் இருக்கிறார்கள். விளம்பரக் கம்பெனியில் பிழைப்பவர்கள் பத்திரிகைகளை நடத்துகிறார்கள்.

எனினும் செகாவுக்கு இழைக்கப்பட்ட மகாவிஷ்ணுவின் அநீதியை அம்பலப்படுத்தியிருக்கிறோம் என்பதுடன் முடித்துக் கொள்கிறோம்.

வினவில் வெளிவந்த செகாவ் சிறுகதை: சிறுகதை: எழுத்தரின் மரணம்! – ஆன்டன் செகாவ்

பதிவர் தீபா மொழிபெயர்த்த செகாவ் சிறுகதைகள்: