privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கடிபன் பாக்ஸ் குண்டும் நிலைய வித்வான்களும்

டிபன் பாக்ஸ் குண்டும் நிலைய வித்வான்களும்

-

சென்ற வாரம் புதிய தலைநரை டிவி அலுவலகத்தின் மீதான டிபன் பாக்ஸ் குண்டு தாக்குதலை கண்டித்து தமிழகத்தின் விவாத பிரபலங்கள் கொடுத்த எக்ஸ்க்ளூசிவ் பேட்டி உங்களுக்காக…

காவடி குமார்

puthiya-thalainarai-2(அகில இந்திய அம்மாவை மீண்டும் முதல்வராக்கியே தீருவோர் கழகம் – பவர்ஸ்டார் ஜனதா கட்சியின் திராவிட சேனா) :

இதுல பாத்தீங்கன்னா பட்டாச வெடிச்சதுக்கே பிரச்சினை பண்றாங்க. இந்த விவகாரத்தில் உரிய முடிவ அம்மா எடுப்பாங்க. அதுக்குப் பிறகு நாங்க அவரது வழிகாட்டலோடு உரிய நேரத்துல, உரிய வழியில கண்டிப்போம்.

சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்ட டிபன் பாக்ஸ் கருணாநிதி ஆட்சிகாலத்தில் செய்யப்பட்டத நீங்க பாக்கணும். இப்ப ஆட்சியில இல்லேன்னு கருணாநிதியோட குடும்ப ஆட்சி பண்ண சதிதான் இதுக்கு காரணம்.

கோனு பாம்ஸ்

(ராஷ்ட்ரீட இண்டீரியர் டிசைனிங் சங் அமைப்பின் தலைவர் மற்றும் தொண்டர், சமூக ஆர்வலர், அரசியல் விமர்சகர், சமூக செயற்பாட்டாளர், புதிய தலைநரை நிறுவனத்தால் சான்றளிக்கப்பட்ட நடுநிலையாளர் மற்றும் அம்மா சத்தியமாக பவர்ஸ்டார் ஜனதாவின் ஆதரவாளர் அல்ல) :

இது ஒரு கொடுமையான சம்பவம். இதற்கு காரணமான இஸ்லாமிய தீவிரவாதத்தை வன்மையாக கண்டிக்கின்றேன்.

(பேட்டியாளர் குறுக்கிட்டு இந்த சம்பவத்துக்கு காரணம் இந்து “சமூக விரோதிகள்” என விளக்கியபின் சுதாரிக்கிறார்).

இந்த சம்பவத்தை இந்து அமைப்புகள் (சமூக விரோதிகள் அல்ல) செய்திருந்தாலும், அதனை அவர்களே ஒத்துக்கொண்டாலும் கோர்ட்டில் நிரூபணம் ஆகும் வரை நாம் யாரையும் இதில் குற்றம் சாட்டக்கூடாது.

தமிழ் வசை
இந்த தாக்குதலானது தாக்கியவரின் சொந்தக்கருத்து என்பதே ப.ஜ.கவின் கருத்து

தமிழ்வசை சவுண்டுராஜன் : (தமிழக தலைவர், பவர்ஸ்டார் ஜனதா கட்சி) :

நாடு வளர்ச்சிப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்த வேளையில் அதற்கு இடையூறு செய்யும் வகையில் இத்தகைய செய்திகள் பூதாகரமாக்கப்படுகின்றன. இத்தகைய ”வெளிப்படையான” தாக்குதல்களை ப.ஜ.கவும் அதன் சகோதர அமைப்புக்களும் ஒருபோதும் செய்யாது என உறுதியாக சொல்லிக் கொள்கிறேன். இந்த தாக்குதலானது தாக்கியவரின் சொந்தக்கருத்து என்பதே ப.ஜ.கவின் கருத்து. அதையே என் தனிப்பட்ட கருத்து என்பதை நான் மிகத்தெளிவாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

வீனிதி சானிவாசன் : ( ப.ஜ.கவின் தலைவராக இருப்பதற்கான எல்லா தகுதிகளும் கொண்ட கருத்தாளர். சவுண்டுராஜனுக்கு எதிர்கோஷ்டி)

நாட்டில் நடக்கும் எல்லா பிரச்சனைகளுக்கும் ப.ஜ.கவை குற்றம் சாட்டுவது ஒரு பேஷனாகிவிட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்னால் அதே பகுதியில் கரீம் பாய் என்பவரது வீட்டில் புதிய தலைநரை சேனல் ஓடும்போது டிவி வெடித்துவிட்டது, இது ஊடக சுதந்திரத்துக்கு எதிரான தாக்குதல் இல்லையா? அதை ஏன் இந்த போலி மதச்சார்பின்மை பேசுபவர்கள் கண்டிக்கவில்லை?? ஆகவே இந்த போலி மதச்சார்பின்மைவாதிகளை நான் கண்டிக்கிறேன்.

வம்புமணி (பாட்டாளி மைனர் கட்சி) :

அந்த குண்டு வீசியவர்கள் ஜீன்ஸ் பேண்ட், கூலிங் கிளாஸ் அணிந்திருந்தார்கள் என்பதாலும் பல்சர் வண்டியில் வந்தார்கள் என்பதாலும் அவர்கள் நாடகக் காதலர்கள் என்பது தெளிவாக தெரிகிறது. ஆகவே இத்தகைய குற்றங்களை தடுக்க வேண்டுமானால் இனி இளைஞர்கள் தங்கள் பெற்றோர்களிடமும், அரசிடமும், தங்கள் ஜாதிச்சங்க தலைவர்களிடமும் அனுமதி பெற்ற பிறகே காதலிக்க வேண்டும் என சட்டமியற்ற வேண்டும். மேலும் காதல் திருமணத்துக்கான குறைந்தபட்ச வயதை நாற்பதாக நிர்ணயிக்க வேண்டும்.

பொய்கோ (தலைவர், குறைவளர்ச்சி திமுக) :

பொய்கோ
ஏதென்ஸ் நகர வீதிகளிலும், ஸ்பார்ட்டகஸ் களமாடிய கப்பல்களிலும்கூட நடக்காத கொடூரம்

ஏதென்ஸ் நகர வீதிகளிலும், ஸ்பார்ட்டகஸ் களமாடிய கப்பல்களிலும்கூட நடக்காத கொடூரம் இப்போது நிகழ்ந்திருக்கிறது. கொடியவன் ராஜபக்சே வீழ்ந்த பிறகு அந்த இடத்தை நிரப்பும் ஆட்கள் இந்தியாவில் உருவாகிவிட்டார்கள். இதற்கு காரணமான பவர்ஸ்டார் அரசு விரைவில் வீழ்த்தப்படும். ஆனால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. இப்போது தேர்தல் வந்தாலும் ஜெயலலிதாவே ஜெயிப்பார் என்பது உறுதி.

பள்ளி செல்லும் தளிர்களுக்கு பன்னும் பக்கோடாவும் கொடுத்தனுப்பப் பயன்படும் தாயுள்ளங்களின் மனங்கவர்ந்த டிபன்பாக்ஸைப் போய் இப்படிப்பட்ட துர்கார்யங்களுக்கு பயன்படுத்தலாமா என்று அருமை தம்பி ஜெயம் பாண்டியனை அன்போடும், பண்போடும், பரிவோடும் கேட்கிறேன்.

நச்சு. கூஜா

(ப.ஜ.கவின் தேசிய செயற்குழு உறுப்பினர், கராத்தே, குங்ஃபூ, டேக்வாண்டோ, லொஜக் மொஜக் உள்ளிட்ட ஆரிய கலைகள் அறுபத்து நான்கையும் கற்றவர்) :

இல்லேங்கறேன் நான். டிபன் பாக்ஸ் வீசியவர்கள் ஹிந்துக்கள் என்பதால் அவர்களை சமூகவிரோதிகளாக சித்தரிக்கின்றனர் இந்த ஊடகக்காரர்கள்.

இப்படித்தான் துப்பாக்கி ஒழுங்காக வேலைசெய்கிறதா என பரிசோதனை செய்து பார்த்த கோட்சேவை தேசதுரோகியாக்கி தூக்கிலிட்டார்கள். அவனுக்கு சொந்தமான தோட்டாவை கள்ளத்தனமாக கைப்பற்றி ஜின்னாவிடம் ஒப்படைக்க முயன்ற காந்தியை தேசப்பிதாவாக்கிவிட்டார்கள். பெஸ்ட் பேக்கரியில் வெஜ் பப்ஸ் சாப்பிடச் சென்ற ஸ்வயம் சேவகர்களை கொலைகாரர்களாக்கிவிட்டனர்.

ஹிந்து இயக்கத்தை சேர்ந்தவர்கள் குஜராத், முசாபர்நகர் பாணியில் எதையும் ஜனநாயகபூர்வமாக எதிர்கொள்வார்கள். இப்படி முகத்தை மூடாமல் யாருக்கும் சேதாரம் வராதவகையில் டிபன்பாக்ஸ் வீசமாட்டார்கள்.

சீன் தமிழன் பேமான்

(தலைவர், நாமம் தமிழர் கட்சி, காரத்தமிழர் முன்னணி மடத்தின் மூத்த ஆதீனம்) :

இந்த குண்டை வீசியவரின் பெயர் பொரி உருண்டை என சொல்லப்படுகிறது. பொரிஉருண்டை தமிழனின் உணவே கிடையாது எனும்போது இது வந்தேறி திராவிடர்களின் தாக்குதல் என்பதில் சந்தேகத்துக்கே இடமில்லையே. தம்பி, முப்பாட்டன் முருகன் காலத்துல டிபன் பாக்சே கிடையாது.. கட்டுசாதம் மட்டும்தான். இவ்வளவு ஏன், அப்பன் ராவணன் காலத்துல வெடிகுண்டு கிடையாது. இவையெல்லாம் வடுகர்கள் வருகைக்குப் பின்னால் நிகழ்ந்த சீரழிவுகள். வேல்கம்பும் வீச்சரிவாளும்தான் தமிழனின் மீட்டெடுக்கப்படவேண்டிய தொன்மங்கள். ஆகவே டிபன் பாக்ஸ் குண்டுவீச்சு போன்ற வடுக சூழ்ச்சிக்கு தமிழ்ப் பிள்ளைகள் பலியாகிவிட வேண்டாம்னு கேட்டுக் கொள்கிறேன்.

காமகோபாலன்
அமைதியான முறையில் கேமராவை உடைத்து, செய்தியாளரை தாக்கிய எங்கள் இயக்க தேசபக்தர்கள் மீது காவல்துறை நடவடிக்கையை பொந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது

காம கோபாலன் (தலைவர், பொந்து முன்னணி) :

இது அந்த டிவிக்காரர்களே செய்த சூழ்ச்சி. அங்கே வேலை பார்க்கும் பலரும் கோமாதா மாமிசம் சாப்பிடுபவர்கள் என்பதே அது ஒரு தீவிரவாதிகள் கூடாரமாக மாறிவிட்டது என்பதற்கான முதல் சாட்சி. அந்த குண்டை வீசியதாக கைது செய்யப்பட்டவர் இதுவரை ஒருமுறைகூட அவர் வீட்டில் அவரே குண்டு வீசிக்கொள்ளவில்லை. இதுவே அவர் இந்து இயக்கத்தை சேர்ந்தவர் அல்ல என்பதற்கான நிரூபணம். அமைதியான முறையில் கேமராவை உடைத்து, செய்தியாளரை தாக்கிய எங்கள் இயக்க தேசபக்தர்கள் மீது காவல்துறை நடவடிக்கையை பொந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இதுபோன்ற தாக்குதல்களைத் தடுக்க பசுவதையை உடனே தடை செய்ய வேண்டும்.

மாதவன் ( வழக்கறிஞர், ப.ஜ.க ) :

மக்கள் எங்களுக்கு பெரும்பான்மையை நாடாளுமன்றத் தேர்தலில் கொடுத்திருக்கிறார்கள். ஆகவே இதுபோன்ற கேள்விகளுக்கு நாங்கள் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை. ஐ.எஸ் தீவிரவாதிகள் பத்திரிக்கையாளர்களை கழுத்தறுத்து கொல்கிறார்கள் அதைப்பற்றி இந்த கம்யூனிஸ்ட்டுகள் பேசுவதில்லை. இது அவர்களது இரட்டை வேடத்தை காட்டுகிறது. ப.ஜ.க சார்பாக இத்தகைய நடவடிக்கைகளை பவர்ஸ்டாரே முன் தேதியிட்டு கண்டித்துவிட்டார் என்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்கிறோம்.

நாற.நாராயணன் (ப.ஜ.க) :

இது புதிய தலைநரை டிவியின் அராஜக மனப்பான்மையை காட்டுகிறது. சொறிமுத்துதான் எங்கள் கட்சியோடு இணைய வந்த முதல் தைரியசாலி. அவரது தயவால்தான் தேர்தல் துட்டு முதல் டிவி டிபேட்டு வரை பட்டையக் கிளப்புகிறோம். சும்மாயிருந்த எங்களை கேமரா ஆசைகாட்டி பிரபலமாக்கிவிட்டு, இப்போது அந்த டிவி விவாதத்துக்கு போகக்கூடாது என கட்சி அறிவிக்கும் நிலையை உருவாக்கிவிட்டார்கள்.

கடந்த சில நாட்களாக ஸ்டூடியோ வெளிச்சம் படாமல் கைகாலெல்லாம் நடுங்குகிறது. எங்களது இந்த பிரச்சினையைப் பற்றி பேச இங்கே எந்த ஊடகமும் தயாரில்லை. இதன் பின்னால் இருக்கும் அன்னிய நாட்டின் சதியை மத்திய அரசு கண்டுபிடிக்க வேண்டும்.

ரோம சுப்பிரமணியம் (கல்வியாளர், பொருளாதார ஆலோசகர், பொருளாதார வல்லுனர், வக்கீல் குமாஸ்தா, அரசியல் ஆர்வலர், லெமன் ரைஸ் நிபுணர், பவர்ஸ்டார் பரிஷத்தின் அகௌரவ ஆலோசகர், மற்றும் ப.ஜ.க.வோடு எந்த சம்பந்தமும் இல்லாதவர்) :

இதற்கு பொறுப்பு நாற்பதாண்டுகாலம் தமிழகத்தை ஆண்ட திராவிடக் கட்சிகள்தான். வளர்ச்சிக்கு எதிரான பெரியாரின் கருத்துக்கள் தமிழகத்தில் இன்னமும் இருப்பதால் ஹிந்து சேவை அமைப்புக்கள் வடமாநிலங்களைப் போல இங்கே வளர முடியவில்லை. மேலும் கடந்த சில காலமாக இஸ்லாமிய தீவிரவாத தாக்குதல்கள் என்று ஒரு செய்திகூட வருவதில்லை. இப்படி இருந்தால் எப்படி அவர்களால் அரசியல் செய்ய முடியும்? ஆகவே இந்த பிரச்சினையை கொஞ்சம் மனிதாபிமானத்தோடு அணுகவேண்டும் என்பது என் அபிப்ராயம்.

மிஸ்.ஆர்.சேகர் ( ஆர்.பிஸ்ஸ்.பிஸ்ஸ் பிரமுகர்) :

இதனை இரண்டு விதமாக பார்க்க வேண்டும். டிபன் பாக்ஸ் வீசியது ஒரு குற்றம். அதில் இருந்த குண்டு வெடித்தது ஒரு சம்பவம். குற்றத்தை ஒரு சம்பவமாக பார்க்கலாம், ஆனால் சம்பவத்தை குற்றமாக பார்ப்பது தவறு. டிபன் பாக்சுக்குள் குண்டு வைக்கப்பட்டதா அல்லது குண்டின்மேல் டிபன் பாக்ஸ் வைக்கப்பட்டதா என்பது தெரியவில்லை. டிவி ஆஃபீசுக்கு குண்டு வைப்பதாக இருந்தால் அதனை டிபன் பாக்சில் வைக்க வேண்டிய அவசியமில்லை. ஆகவே இது டிவி அலுவலகத்தின் மீதான கோபத்தில் வைக்கப்பட்ட குண்டாக இல்லாமல் டிபன் பாக்ஸ் மீதான கோபத்தில் வைக்க்கப்பட்ட குண்டாக இருந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

இதனை தீவிரவாதத் தாக்குதல் என குறிப்பிடுவது கடுமையான கண்டனத்துக்குரியது. சம்பவத்திற்காக கைது செய்யப்பட்டவர்களும் சரணடந்தவர்களும் ஹிந்துக்கள் பாரிவேந்தர் டிவியும் ஹிந்துக்களுடையது என்பதால் சம்பவத்தை தீவிரவாதம் என குறிப்பிடுவது தேசதுரோகம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சம்பவத்தை ஆர்.பிஸ்ஸ்.பிஸ்ஸ் ஏன் கண்டிக்கவில்லை என கேள்வி எழுப்புகிறார்கள். எங்களிடம் செயல்படுவதற்கென்று ஒரு குழுவும், கண்டிப்பதெற்கென்று ஒரு குழுவும் உண்டு. அதன்படி கண்டிக்கவேண்டிய குழு இச்சம்பவத்தை கண்டித்துவிட்டது.

பாரு நிவேதிதா (எழுத்தாளர்களை கேவலமாக விமர்சிக்கும் அவராலேயே சிறந்த எழுத்தாளர் என போற்றப்படுபவர், 2(X)IST Gold Range ஜட்டிக்காகவும் Marquis de Montesquiou 1904 Vintage Armagnac பிராந்திக்காகவும் கையேந்தும் பரம ஏழை எழுத்தாளர்) :

குண்டு வெடிப்பை எதிர்த்தால் போதிய விளம்பரம் கிடைக்காது என்பதாலும், நேற்று என் கனவில் வந்த மார்க்சிஸ்ட் எழுத்தாளர்கள் என் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தியதாலும் இந்த குண்டு வெடிப்பை ஆதரிக்கிறேன். சிலியின் பிரபல எழுத்தாளர் குன்ஸ் பாமுக் இப்படி டிபன் பாக்ஸ் குண்டை வீசியே தன் எதிர்ப்பை பதிவுசெய்தவர் என்பதையும் இப்போது குறிப்பிட விரும்புகிறேன்.

இதற்கு முன் பிரதமரானவர்களெல்லாம் டிரஸ்ஸிங் சென்சே இல்லாமல் சின்(sin)னாக உடையணிந்து இந்தியாவை பாம்பாட்டிகளின் தேசமென்று இழிவுபடுத்துவதற்கு காரணமானவர்கள். அதை மாற்றி பத்து இலட்ச ரூபாய் கோட்டு என்று இந்த பிச்சைக்காரர்களின் தேசத்தில் உலா வந்த என் ஆருயிர்த் தலைவன் மோடியை டேமேஜ் பண்ணவே இந்த டிபன் பாக்ஸ் பாம். மோடி கோட்டுக்கு ஈடாக கிளஸ்டர் பாம் போட்டிருந்தால் கூட மன்னிக்கலாம். பிச்சைக்கார ஜெயம் பாண்டி, சிவகாசியின் நமத்துப்போன ரெண்டு பட்டாசை வாங்கி வீசியிருக்கிறான், பிளடி ஃபூல்!

சரக்கு மற்றும் மெக்சிகன் முள்ளம்பன்றி ஊறுகாய் செலவே நாளுக்கு பதினைந்தாயிரம் ஆகிறது என்பதால் உங்களுக்கு என் வங்கி கணக்கு எண் கொடுப்பது தவிர்க்க முடியாததாகிறது (இந்தியன் வங்கி, மாம்பலம் கிளை 0109812763465). இது தொடர்பாக விவாதிக்க விரும்பும் இளம்பெண்கள் என்ன இன்பாக்சில் தொடர்பு கொள்ளலாம்.

15 திரி
குஜராத்தின் வளர்ச்சியை கருத்தில் கொள்கையில் அங்கு நடைபெற்ற கலவரத்தை பொருட்படுத்தத் தேவையில்லை என்பது எனது முந்தைய நிலைப்பாடு. அதேதான் இங்கேயும்

பதினைந்துதிரி சேஷாத்ரி (மரபுரீதியான அறிவுஜீவி, மற்றும் நாளொன்றுக்கு 30 ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவன் ஏழை அல்ல என்பதை அறிவியல்பூர்வமாக நிறுவியவர் – இந்த பொருளாதார ஆய்வுக்காக அமர்த்தியா சென்னுக்கு அடுத்தபடியாக நோபல் பரிசு வாங்க சாத்தியமுள்ள இந்திய விஞ்ஞானி) :

இதை குண்டுவெடிப்பாக கருத முடியுமா என்பதே எனக்கு சந்தேகமாக இருக்கிறது. தீபாவளி பட்டாசையெல்லாம் வெடிகுண்டு என்று பேசுவோமானால் இங்கே தீபாவளியையே பயங்கரவாதிகளின் பண்டிகை என்று இடதுசாரிகள் மாற்றிவிடுவார்கள்.

குஜராத்தின் வளர்ச்சியை கருத்தில் கொள்கையில் அங்கு நடைபெற்ற கலவரத்தை பொருட்படுத்தத் தேவையில்லை என்பது எனது முந்தைய நிலைப்பாடு. அதேதான் இங்கேயும், வளர்ச்சியை கருத்தில் கொள்கையில் குண்டுவெடிப்புக்களை நாம் பெரிதுபடுத்தத் தேவையில்லை என்கிறேன். என்னை எப்போதும் கிழக்கு பிராண்ட் டி ஷர்ட்டுடன் அனுமதிக்கும் புதிய தலைநுரை டிவிக்கு நன்றிகள்.

நெறியாளர் தனசேகரன் :

நேயர்களே, விருந்தினர்களது கருத்துக்களை கேட்டீர்கள். இது தொடர்பாக நாம் நேயர்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பை இப்போது பார்க்கலாம்.

கேள்வி : ஊடகங்கள் மீதான அச்சுறுத்தல் முந்தைய திமுக ஆட்சியை ஒப்பிடுகையில்,

குறைந்திருக்கிறது – 22%
கணிசமாக குறைந்திருக்கிறது – 16%
அப்படியேதான் இருக்கிறது – 62%

அந்த நேயர்களுக்கு நன்றி…

– வில்லவன்