சட்டம் சமம்
சட்டம் பொது
சந்தேகமே வேண்டாம்
தீர்ப்புதான் தனித் தனி!
லாலு, சவுதாலா…
ஜெயலலிதா
சாதி வேறு
நீதி வேறு!
மகாபாரதம்
ராமாயணம் மட்டுமல்ல
அரசியல் சட்டத்தையும்
ஆளுக்கு ஏற்ற மாதிரி
வியாக்கியானம் செய்யலாம்.
குன்கா ராமாயணத்தில்
அவர் மட்டுந்தான்
நோக்கினார்,
குமாரசாமி ராமாயணத்தில்
“அண்ணலும் நோக்கினார்
அவளும் நோக்கினாள்”
அரசியல் சட்ட அதிகாரத்தில்
ஜெயா- சசி
காற்சிலம்பு தெறித்த
கடைசிக் காட்சியில்
நல்லவேளை
“யானோ அரசன்
யானே கள்வன்-” என்று
குமாரசாமி
குப்புற விழுந்து
உயிரை விடாமல்
“யானே அள்ளுவேன்”
என,
நீதியை அள்ளும் காட்சியில்
சுப்பிரமணிய சாமிக்கே
சுரணை வந்தது.
இத்தனை சதவீதம்
சொத்துக் குவிக்கலாம்
என ஒத்துக்கொண்ட பிறகு
எதற்கு நீதி மன்றங்கள்?
கட்டிடங்களை எல்லாம்
கமிஷன் மண்டியாக
மாற்றிவிடலாம்.
சாலையோர மக்களை
காரை ஓட்டிக் கொன்ற
சல்மான் கானுக்கு
உடனே ஜாமீன்.
வேலை தேடி
வெளி மாநிலம் போகும்
அப்பாவி தொழிலாளிகளுக்கு
துப்பாக்கிச் சூடு!
கட்டைகளை கடத்தியதாக பழி
சட்டத்தையே கடத்திய
ஜெயா- சசி கும்பலுக்கு
நீதிமன்றமே வழி!
ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்,
நீதிமன்றங்களி்ன் தரத்தை
ஜெயலலிதாவை விட
யாரால் சிறப்பாக விளக்கமுடியும்?
அம்மாவின்
வருகைக்காகவே
காத்திருந்தது போல்,
நீதிமன்றத்தின்
அலங்காரத் திரை அவிழ்ந்தது
ஏதோ
அங்க ஒண்ணு இருக்கு
என்று
நீதி மன்றத்தை உற்றுப்பாத்தவர்களின்
கண்களையே நோண்டிவிட்டது
காவல் தெய்வம்!
பாருங்கள்!
பரம்பொருளின் அருள்வாக்கு,
“இனி ஊழலை ஒழிக்க முடியாது
நீதியை ஒழித்துவிடு!”
அம்மா குடிநீர்,
அம்மா உணவகம் மாதிரி
இது அம்மா தீர்ப்பு!
சந்தேகமேயில்லை,
அம்மாவுக்கு மட்டுமா? விடுதலை?
நீதி… நேர்மை .. வெட்கம்.. மானம்
அனைத்துக்குமே விடுதலை!
– துரை. சண்முகம்
கோபம் கொப்பளிக்கிறது…ஆனால் கோபத்தை எப்படி நிவர்த்தி செய்ய ?
சட்டத்தின் முன்னால்
அனைவரும் சமம்…
சிலர் மட்டும்
பின்னால்….
//குமாரசாமி ராமாயணத்தில்
“அண்ணலும் நோக்கினார்
அவளும் நோக்கினாள்”//
குமாரசாமி மட்டும்தானா,
மோடி,ஜைட்லி,பானுமதி, தத்து எல்லாம் நோக்கவில்லையா?
ஆம்!
அலங்காரச்சிலை(திரை) அம்மனமானது,
மனு நீதி நூலோ வெளியானது
அம்மாவின் விடுதலையோ தனியானது.
தோழர்.லெனின் கூறியதை போல சட்டமன்றமும், பாராளுமன்றமும் பன்றித் தொழுவங்களாக இருக்கும் போது நீதித்துறை மட்டும் மக்களுக்காகவா இருக்கப்போகிறது.
20ஆண்டு வழக்கு 3 நிமிட தீர்ப்பில் புஸ்வானம் ஆகும்போதே தெரியவில்லையா,புஸ்வானம் காசு கொடுத்தால் தான் வாங்கமுடியும் என்று
இத்தனை சதவீதம்
சொத்துக் குவிக்கலாம்
என ஒத்துக்கொண்ட பிறகு
எதற்கு நீதி மன்றங்கள்?
கட்டிடங்களை எல்லாம்
கமிஷன் மண்டியாக
மாற்றிவிடலாம். —-அது எப்போதும் கமிஷன் மண்டியாகத்தானே இருந்திருக்கிறது..
மனு நீதிப்படி எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.
பணம் இருந்தால் எதையும் வாங்கிவிடலாம்