கடந்த புதன்கிழமை 17-06-2015 இரவு ஒன்பது மணியளவில் அமெரிக்க தேவாலயம் ஒன்றில் ஒன்பது கருப்பின மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
தெற்கு கரோலினா மாகாணம், சார்ல்ஸ்டன் நகரில் 19-ம் நூற்றாண்டிலிருந்து இயங்கும் பழமையான இமானுவேல் ஆப்பிரிக்கன் மெத்தடிஸ்ட் எபிஸ்கோபல் எனும் கருப்பின தேவாலயம் உள்ளது. 17-ம் தேதி அங்கு பிரார்த்தனைக் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது 21 வயதே நிரம்பிய தைலான் ஸ்டார்ம் ரூஃப் எனும் வெள்ளையின இளைஞன் அருகாமையில் இருந்து கைத்துப்பாக்கியால் சுட்டு 9 பேரைக் கொன்றிருக்கிறான். கொல்லப்பட்டவர்களில் ஆறு பெண்களும் மூன்று ஆண்களும் அடங்குவர்.
நேரில் பார்த்தவர்களின் வாக்குமூலங்கள் படி “இக்கொலைகாரன் சுடுவதற்கு ஒரு மணிநேரம் முன்னாடியே தேவாலய பிரார்த்தனை கூட்டத்தில் காத்துக் கொண்டிருந்திருக்கிறான். தானியங்கி வசதி உள்ள கைத்துப்பாக்கியினால் சுட்டவன் மொத்தம் ஐந்து முறை அதை குண்டுகளால் நிரப்பியிருக்கிறான்”. ஆக குண்டு தீர்ந்த பிறகும் அவன் நிதானமாகவே செயல்பட்டிருப்பதை இது காட்டுகிறது. ஆம். வெள்ளை நிறவெறி என்பது வெறுமனே உணர்ச்சிவசப்படும் ஒன்று மட்டுமல்ல.
மேலும், “நான் இதை செய்தே ஆக வேண்டும். நீங்கள் எங்கள் பெண்களை வன்புணர்ச்சி செய்கிறீர்கள், எங்கள் நாட்டையும் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆகவே நீங்கள் வெளியேற வேண்டும்” என்று கத்திக் கொண்டே சுட்டிருக்கிறான் அந்தக் கொடியவன்.
மேலும், சுடும் போது ஒரு பெண்ணிடம் அவளை சுடாமல் விடுவதற்கு காரணம் “இந்த தேவாலயத்தில் என்ன நடந்தது என்று மற்றவர்களிடம் சொல்ல வேண்டும்” என்றே அமைதியாக சொல்லியிருக்கிறான். நேரில் பார்த்த சாட்சியங்களின் திகில், பயம் அனைத்தும் முழுநாட்டிற்கும் தெரிவிக்கப்பட வேண்டும் எனுமளவு அவனது மூளை சிந்தித்திருக்கிறது. இவ்வளவிற்கும் அவனது வயது 21 மட்டுமே.
“கடந்த ஏப்ரலில் பிறந்த நாளன்று அவனது, அப்பா .45 காலிபர் கைத்துப்பாக்கியை பரிசாக அளித்தார்” என கொலையாளியின் உறவினர் கார்சன் காவ்ல்ஸ் தெரிவித்திருக்கிறார். தங்களது குடும்பத்தில் எவரும் இது போன்று நடந்து கொண்டதில்லை என்று கூறியிருக்கும் அவர், “ரூ.ஃப் இதைச் செய்திருக்கும் பட்சத்தில் அதற்குரிய விளைவை அனுபவித்தே தீரவேண்டும்” என்றிருக்கிறார்.
ஆனால், பிறந்த நாளன்று கைத்துப்பாக்கியை பரிசளிக்கும் தந்தையினை வைத்து பார்க்கும் போது இந்த குடும்பம் கௌரவமான நிறவெறியை தனது அடையாளமாகக் கொண்டிருப்பது நிச்சயம். மேலும் இவன் போதை பொருள் பயன்படுத்தியதற்காகவும் கைது செய்யப்பட்டிருக்கிறான். போதை, நிறவெறி, வன்முறை மூன்றும் அமெரிக்காவின் தேசியப் பண்புகளாகி விட்டன.
ரூஃப் உடன் பழகியவர்கள், ஆசிரியர்கள் “இந்தப் பையனா இப்படிச் செய்திருக்கிறான்” என்று வியக்கிறார்கள். ஆனால் அவனது ஃபேஸ்புக் பக்கங்களில் நிறவெறிக்கான சான்றுகள் ஏராளம் உள்ளன. ஒரு படத்தில் வெள்ளை நிறவெறி காலத்திய தென்னாப்பிரிக்கா மற்றும் வெள்ளை ஆதிக்க நாடாக இருந்த ரொடிஷியா – பிறகு கருப்பின மக்களின் ஜிம்பாப்வேயாக மாறியது – நாடுகளின் கொடிகளை சட்டையில் அணிந்திருக்கிறான்.
அவன் ஏதும் வெள்ளை நிறவெறி குழுக்களில் இருந்திருக்கிறானா என்பது இதுவரை போலிசால் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் அப்படி குழுக்கள் இல்லாமலேயே நிறவெறி என்பது ஊட்டி வளர்க்கப்படும் ஒன்றாக உள்ளது.
அமெரிக்காவில் கணிசமான வெள்ளையர்கள் நிறவெறியை எதிர்த்தாலும் அது நமது நாட்டில் “இந்துக்களின்” உளவியலைப் போன்ற அமைதியான ஆதிக்கத்தை மறுப்பதில்லை. அமெரிக்க நகரங்களில் போலிசால் சுட்டுக் கொல்லப்பட்ட கருப்பின இளைஞர்கள் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகின்றனர். அதே போன்று நிறவெறி எதிர்ப்பு போராட்டங்களும் அதிகரித்து வருகின்றன.
இந்தப் படுகொலையை பரபரப்பு செய்திகளாக்கி வெளியிடும் ஊடகங்கள் தேவாலயத்தின் வரலாற்றுச் சிறப்பு, முதலில் கொலைகாரனை காட்டியது என்று வழக்கமான ஃபார்முலாவில் இறங்கியிருக்கிறார்கள். ஒபாமா தொடங்கி உருப்படாத அறிவுஜீவிகள் வரை ஸ்டாண்டர்டு கண்டன அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் வெள்ளை நிறவெறியின் அடிப்படை, அதை நிறுத்துவது குறித்து அங்கே ஆழ்ந்த கவலை ஏதுமில்லை. ஏனெனில் கொல்லப்பட்டவர்கள் கருப்பின மக்கள்தானே!
தேவாலயம் ஒன்றின் பிரார்த்தனைக் கூட்டத்தில் ஒரு மணிநேரம் அம்மக்களோடு இணைந்திருந்த ஒரு பையனுக்கு சுட வேண்டும் என்ற வெறி எப்படி வந்தது?
“இயேசு நாதரே நீர் ஒரு கருப்பனாக பிறந்திருந்தால் மீண்டும் உயிர்த்தெழுந்து வந்திருக்க முடியாது” என லாங்ஸ்டன் ஹியூஸ் எழுதிய கவிதை வரி அதற்கு பதிலளிக்கிறது.
இந்த செயல்__ பயங்கரவாதிகளை நினைவூட்டுகிறது. அங்கு >>>>எப்படி எல்லாம் கொல்லுகிறார்கள் என்று நினைத்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது. அவர்கள் மட்டுமல்லாது ….ஆகிய நாடுகளிலும் இதே நிலைதான். ஒன்பது பேர் கொல்லப்பட்டத்திற்கு வக்காலத்து வாங்கும் “வினவு” தினமும் … கவலைப்படுவதில்லை. கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறது. அது ஏன்? இதுவும் ஒருவகை இனவெறிதானே. …
மேலே சொல்லப்பட்டுள்ள சம்பவத்திற்கு, ஒரு வாரம் முன்பு, மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்ற இந்திய மாணவனை,ஐ.போன் தரவில்லை,என்ற ஒரே காரணத்திற்காக துப்பாக்கியால் சுட்டு கொன்ற கருப்பின திருடனைப்பற்றி இந்த கட்டுரையில் சொல்லாமல் விட்டது ஏனோ? இந்த செய்தி தமிழ் உட்பட இந்தியாவில் உள்ள அனைத்து தொலைகாட்சிகளிலும் காண்பிக்கப்பட்டது. “வினவு” கண்களில் படவில்லையோ? வெள்ளையனோ, கறுப்பனோ வெறிபிடித்த_______, எல்லா இனத்திலும் இருக்கின்றனர்.
பொருளாதாரம் சார்ந்த குற்றத்தையும் , வர்ணத்தினால் நடந்த கொலையும் ஒன்றே என்று சொல்ல உங்கள் நா கூசவில்லையா ?
புரியாத உங்களுக்காக ..
1.செல் போன் பிரச்சினையில் ஈடுபட்டவன் திருடன் , பணத்திற்காக கொலை செய்துள்ளான்
2.நிற கொலையில் ஈடுபட்டவன் நிற வெறியன், அப்பாவிகளை தேடி சென்று அவர்கள் கருப்பினதவரல் என்கின்ற ஒரே காரணத்தால் கொன்றுள்ளான்