privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்கடலூர்: எங்கள் மண், எங்கள் மக்கள், சைமா கும்பலே வெளியேறு !

கடலூர்: எங்கள் மண், எங்கள் மக்கள், சைமா கும்பலே வெளியேறு !

-

கடலூர் சைமா சாயப்பட்டறை: போராட்டம்
ஊரை விக்குது ஊராட்சி மன்றம்! நாட்டை விக்குது நாடாளு மன்றம்!

டலூரிலிருந்து சிதம்பரம் செல்லும் வழியில் உள்ளது பெரியப்பட்டு எனும் சிறு நகர கிராமம். இங்கு ‘ஜவுளி தொழில் நுட்பப் பூங்கா அமைக்கப்போகிறோம், நிறைய பேருக்கு வேலை கிடைக்கும்’ என்ற பொய்யைச் சொல்லி 400 ஏக்கருக்கு மேல் வளைத்துப்போட்டு அதை சைமா எனும் தென்னிந்திய ஜவுளி முதலாளிகள் சங்கத்தின் சாயப்பட்டறைக்கு தாரை வார்த்துள்ளது கடலூர் சிப்காட் அலுவலகம்.

இவ்வட்டாரம் எங்கும் 5 அடியில் பள்ளம் வெட்டினாலே அற்புதமாக சுரக்கும் ஊற்று நீரைக் கொண்டு, கத்தரி, வெள்ளரி, தர்பூசணி, சவுக்கை நாத்து பயிரிடுதல், வெட்டிவேர் பயிரிடுதல் போன்றத் தொழில்களை செய்து தங்களின் வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர் விவசாயிகள்.

அரங்கக் கூட்டம்
மே மாதம் சைமா திட்டத்தை எதிர்த்த கண்டன ஆர்ப்பாட்டம், பேரணி அரங்கக் கூட்டமாக மாற்றப்பட்டது (கோப்புப் படம்)

இந்நிலையில் சைமா சாயப்பட்டறையில் ஏற்படவிருக்கும் அபாயத்தை உணர்ந்து கடந்த 2008-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வந்த மக்கள் கடந்த ஏப்ரல்-15-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டு இருந்தனர். காவல்துறையின் அனுமதி மறுப்பால் அரங்க நிகழ்ச்சியாக மாற்றப்பட்டது.

இதற்கிடையில் ஆர்ப்பாட்டத்திற்கு உயர் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு மனுப்போடப்பட்டதுடன் மக்கள் வாழ்வாதாரப் பாதுகாப்பு இயக்கம் எனும் அமைப்பின் சார்பிலும், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பிலும் ஆர்ப்பாட்டத்திற்கு மக்களை அணிதிரட்டும் வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த போது திருட்டுத்தனமாக போர்வெல் வேலையைத் துவங்கியது சைமா நிறுவனம். இதைக் கண்டு ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் கடந்த மே-16-ம் தேதி அன்று அதிகாலையில் ஆயிரக்கணக்கில் திரண்டு கட்டுமானப் பணி செய்த பொருட்களை சேதப்படுத்தினார்கள். ஏற்கனவே போடப்பட்டு இருந்த 2 ஆழ்துளை குழாய்களையும் மூடினார்கள்.

சிமா எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
சைமா திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

இதன் பின் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலிசின் குவிப்பாலும், மிரட்டலாலும் இப்போராட்டம் அடக்கப்பட்டு போராட்ட முன்னணியாளர்கள் மீது வழக்கு போட்டு கைது செய்ய கிராமம், கிராமமாகத் தேடியது போலீசு.

மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கமும், பு.மா.இ.மு-வும் இவ்வட்டாரம் எங்கும் இப்போராட்டத்தை ஆதரித்தும், பொய் வழக்கை வாபஸ் வாங்கக் கோரியும் சுவரொட்டி பிரச்சாரம் செய்து போராடிய மக்களை சந்தித்து மீண்டும் அடுத்த கட்டப் போராட்டத்திற்கு ஆயத்தப்படுத்தி ஜுலை 4-ம் தேதி அன்று உயர்நீதி மன்ற அனுமதியின் பேரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆண்களும், பெண்களுமாய் ஆயிரத்து ஐநூறு பேர் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து கிராமம் தோறும் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்து போராட்ட அமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

சைமா திட்டம்
பேரழிவைக் கொண்டு வரும் சைமா திட்டம் (கோப்புப் படம்)

இந்நிலையில் கடந்த 11-07-2015 அன்று காலையில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் சார்பில் கண்டன ஊர்வலம் நடத்த திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு போலிசிடம் அனுமதிக்கு கொடுத்தபோது “மேலாதிகாரியப் பார்க்கனும், கீழ் அதிகாரியப் பார்க்கனும்” என்று அலையவிட்டது போலிசு. முன்னணியாளர்கள் “தடை செய்தால் கைதாவோம்” என்ற முடிவுடன் மக்களை அணிதிரட்டத் தீவிரம் காட்டினார்கள். இதன் அடிப்படையில் சுமார் 1000 பேருக்குமேல் மக்கள் திரண்டு விட்டதால் போலிசு திகைத்து வாயடைத்துப் போய் நின்றது.

ஊர்வலமாய் வந்த மக்கள் ஒவ்வொருவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து, கையில்

  • எங்கள் ஊரு! எங்கள் வீடு! சைமா நாயே வெளியேறு!
  • ஊரை விற்க ஊராட்சி மன்றம்! நாட்டை விக்குது நாடாளுமன்றம்!
  • ஓட்டுப்போட்டது கிராம மக்கள்! ஊரை விற்கவா தலைவரு!

என்ற முழக்கப் பதாகைகளுடன் அணிவகுத்தனர்.

விண்ணதிரும் முழக்கங்களுடன் நீண்ட நெடுந்தூரம் வரை நடந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஆங்காங்கே மக்கள் கோசமிட்டு கொண்டு நின்றனர். சுமார் 9 மணிக்கு தொடங்கிய இப்போராட்டம் 12.30 மணிவரை நடந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

போராட்டம் துவங்கிய போது, “நாங்கள் உங்கள் போராட்டத்தை ஆதரிக்கிறோம்” என்றவாறு உள்ளே நுழைந்தனர் ஆம் ஆத்மி கட்சியினா 8 பேர். போராட்டத்தை அறுவடை செய்ய ஆம் ஆத்மி என அச்சிடப்பட்ட குல்லாக்களை போட்டு வந்ததோடு வந்திருந்த மாணவர்களுக்கும் குல்லாய் போட்டு விடுவதைப் பார்த்து எச்சரித்தனர் உள்ளுர் மக்கள். பிறகு குல்லாக்கள் நழுவிக் கொண்டன.

இறுதியாக பெரியப்பட்டுத் திடலில் அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்த முன்னணியாளர்கள் ஒருமணி நேரம் ஆர்ப்பாட்ட முழக்கமிட்டு பேசினார்கள். இதில் உள்ளுர் தலைவர்களும் வழக்குரைஞர் செந்தில் குமாரும் உரையாற்றினார்கள்.

“அடுத்த கட்டப்போராட்டம் என்பது அரசை அச்சுறுத்தும் வகையில் அமைய வேண்டும் சைமா சாயப்பட்டறைத் திட்டத்தை ரத்து செய்யும் வரை இந்தப் போராட்டம் ஓயாது. அதற்கு உங்களை தயார்படுத்தி கற்றுக் கொள்ளுங்கள். வரும் ஆகஸ்ட்-15 அன்று சுதந்திர தினத்தில் வீடு தோறும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடைபெறும். அதைத் தொடர்ந்து அடுத்த கட்டப் போராட்டத்திற்கு நாம் தயாராவோம்” என்ற அறைகூவலுடன் போராட்டம் நிறைவு பெற்றது.

குறிப்பு:

ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த ஆம் ஆத்மியினர் “நாம் வெற்றி பெற கோர்ட்டில் ஸ்டே போட்டு விட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 100 பேர் சாகும்வரை உண்ணாவிரதம் செய்யனும். நம் உயிரைப் பறித்து விட்டு இத்திட்டத்தை அரசு செய்யுமா என்று பார்ப்போம். காந்தி வழியில், அமைதி வழியில், அகிம்சை வழியில் போராடுவோம்” என்றனர்.

இடையில் ஒருவர் எழுந்து, “சோறு தின்னாம நாம ஏன் சாகணும், மசிறு அவன் சாகட்டும்” என்றார்.

கடைசியாக, “நம் தமிழகத்தில் நடைபெறும், செயில் போராட்டம், கெயில் போராட்டம், மீத்தேன் போராட்டம், கிரானைட் போராட்டம், தாதுமணல் போராட்டம், கூடங்குளம் போராட்டம், டாஸ் மார்க் எதிர்ப்பு போராட்டங்கள் அனைத்தும் மனுபோட்டும், மண்டியிட்டும், சட்டத்தின் படியும் நடத்தி பார்த்தாச்சி. இனி இந்த அரசையும், நீதித்துறையையும், சட்டத்தையும், கட்சிகளையும் நம்பிப் பலனில்லை. மக்களைத் திரட்டி (5,000 பேர் வரை) சாயப்பட்டறை முன் குடியேறி சமைத்து சாப்பிட்டு நாள் கணக்கில் தொடர்ச்சியாக போராடும்போது மட்டுமே தீர்வு கிடைக்கும்” என்று தோழர்கள் விளக்கினர்.

மக்களும் கைதட்டி வரவேற்று இதுதான் தீர்வு. அதற்காக உடன் தயாராவோம், இனிவரும் போராட்டங்கள் பயிற்சி எடுக்கும் பள்ளிக் கூடங்களாகட்டும் என்றனர்.

தகவல்

மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கம்,
கடலூர் – சிதம்பரம் வட்டம்

  1. தொடர்ந்து போராட வெற்றி பெற வாழ்த்துக்கள் தோழர்களே

    சைமா தடை தொடர்பாக பரங்கிப்பேட்டையை சேர்ந்த MYPNO தளத்தின் ஆசிரியர் கலீல் பாக்கவி என்பவர் முதலமைச்சரின் தனிப்பிவுக்கு அனுப்பிய கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. அது தொடர்பான செய்தியை கீழுள்ள லிங்கில் பார்க்கவும்.

    http://mypno.com/index.php?option=com_content&view=article&id=8727:—-mypno—&catid=36:mytown&Itemid=76

Leave a Reply to பரங்கியன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க