மக்கள் அதிகாரமே வெல்லும்!
போராடும் மாணவரை
ஒரு புழுவைப் போல் மிதிப்பதா?
தீராத புழுக்கத்தை தீர்க்க
வாராது வந்த மாணவக் காற்றை
வன் குருதியிலே நனைப்பதா!
போலீசின் அராஜகத்தை
பொது மக்கள் சகிப்பதா?
மாணவர் மேல் விழுந்த அடி
இந்த மாநிலம் மேல் விழுந்த அடி!
காவியங்கள் முடிவதில்லை…
கண்ணகி மதுரையை எரித்தது
சிலபதிகாரம் – எங்கள்
கண்மணிகள் மதுக்கடையை எரிப்பது
மக்கள் அதிகாரம்!
போராடும் தமிழகமே
நம் உதிரக்கொடியை உயர்த்திப்பிடி!
குடிமக்கள் சொல்கிறோம்
குடி வேண்டாமென்று!
எதற்குத் திறக்கிறாய்
மதுக்கடையை?
மக்களின் கருத்தை
மதிக்காதற்குப் பெயர் மக்களாட்சியா!
பச்சையப்பன் கல்லூரி
மாணவர் உடம்பில் வழியும் ரத்தம்
உலகுக்கே உணர்த்துகிறது
இது குடியாட்சி அல்ல
பச்சையான தடியாட்சி!
ஊருக்கே தெரிந்துவிட்டது
போராடுவனின்
உடம்பில் ஓடுவது ரத்தம்.
போலீசின் உடம்பில் ஓடுவது
சாராயம்.
படிக்கும் மாணவரைப் பிடித்து
சட்டையைக் கிழிப்பதும்
துடிக்கும் இளம் மாணவனின்
குரல் வளையை நெறிப்பதும்,
கிடக்கும் மாணவியரை
பூட்ஸ் காலால் உதைப்பதும்,
வளைத்து இளம் தளிரை
முகத்தில் குத்துவதும்,
இந்த வெறியாட்டத்திற்குப் பெயர்தான்
சட்டம் – ஒழுங்கு!
எம் செல்வங்கள்
செய்த தவறென்ன?
உயிர் குடிக்கும் பாட்டிலை
உடைப்பது வன்முறை என்றால்,
மக்கள் உயிர்காக்கும் மாணவரை
கல்லால் அடிப்பதும்
பாட்டிலால் அடிப்பதும்
பயங்கரவாதம் இல்லையா?
மயங்கி விழுந்த மாணவிக்கு
தண்ணீர் கொடுக்கும்
மாணவிகளையும் தடுத்து
அடித்து இழுப்பது
போலீசின்
மனிதாபிமான பயிற்சிக்கு
ஒரு மாதிரி!
மதுவை எதிர்க்கும்
மாணவ – இளைஞர்களை
கொலைவெறியோடு தாக்கும்
சீருடை அணிந்த சாராய ரவுடிகள்
செம்மரம் கடத்திய
டி.எஸ். பி. மீது
இவ்வளவு மும்முரம் காட்ட வில்லையே!
குற்றக் கும்பலுக்கு பாதுகாப்பு
குடியை எதிப்பவனுக்கு தடியடி….
இதுதாண்டா போலீசு – என
எடுத்துக் காட்டுகிறது அரசு!
இங்கே மட்டுமல்ல,
குடிதண்ணிர் கேட்டால் தடியடி…
மணல் கொள்ளை தடுத்தால் தடியடி…
கல்விக் கொள்ளை தடுத்தால் தடியடி….
போலீசு ஆளும் வர்க்கத்தின் மிதியடி
புரிந்து கொள்வோம்
மக்கள் அதிகாரம் ஒன்றே பதிலடி!
– துரை. சண்முகம்.