கடந்த வாரம் வேலை முடிந்து அம்பத்தூர் தொழிற்பேட்டையை கடந்த பொழுது, பரபரப்பான அந்த சாலையில் விளக்கு எரியாமல் இருட்டாக இருந்தது. அங்கு சிறு கூட்டம் கூடியிருந்தது. 24 வயதுடைய இளைஞனை சாலையோரமாய் கிடத்தியிருந்தார்கள். உடம்பில் எங்கும் அடியில்லை. பின்னந்தலையில் அடிபட்டு, ரத்தம் வந்திருந்தது. காதில் ரத்தம் வெளிவந்து உறைந்து போயிருந்தது.
பலரும் 108 ஆம்புலன்ஸை அழைத்தார்கள். எல்லா ஆம்புலன்ஸும் பிஸியாக இருந்ததாக சொன்னார்கள். நேரம் போய்க்கொண்டேயிருந்தது. ஒருவர் அங்கு கடந்த ஷேர் ஆட்டோவை நிறுத்தி விசயத்தை சொல்ல, பயணிகளை இறக்கிவிட்டு அந்த பையனை நான்குபேர் தூக்கி போட்டுக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு நகரந்தார்கள்.
இந்த களேபரத்தில் அந்தப் பையனிடமிருந்து எடுத்த செல்போனை யாரோ சுட்டுவிட்டார்கள். அந்த ஹோண்டா வண்டியில் சைடில் இருந்த பெட்டியில் ஆர்.சி. ஜெராக்ஸ் தாளில் இருந்த ஒரு எண்ணை கண்டுபிடித்து பேசிய பொழுது அடிப்பட்டவருடைய தம்பி பேசினார். உடனே மருத்துவமனைக்கு வரச்சொன்னோம்.
ஆம்புலன்சுக்கு போன் செய்யும் பொழுதே, அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள காவல்நிலையத்திற்கும் ஒருவர் போன் செய்து தெரிவித்தார். அந்தப் பையனை அவ்வளவு போராட்டத்திற்கு பிறகு மருத்துவமனைக்கு எடுத்து சென்ற பிறகு, காவல் நிலையத்திலிருந்து ஒரு போலீசும், போக்குவரத்து காவலர் ஒருவரும் அசமந்தமாய் வந்து சேர்ந்தனர். வண்டியை செந்நீர் குப்பம் எடுத்து செல்வதாய் தெரிவித்தார். அடிபட்டவருடைய செல்லை திருடிவிட்டார்களே என பொதுமக்களில் இருவர் மிகவும் ஆதங்கப்பட்டனர்.
இந்த விபத்தில் கவனிக்கத்தக்கவை :
- தலையில் அடிப்பட்டு காதில் ரத்தம் வந்து கொண்டிருந்த அந்தப் பையனுக்கு ஒவ்வொரு துளியும் முக்கியமானது. ஆனால் 108 ஆம்புலன்ஸ் வெகுநேரமாகியும் வந்து சேரவில்லை.
- 1970-களில் எம்.ஜி.ஆர் படங்களில் படத்தில் இறுதிக்காட்சியில் வருவது போலவே இப்பொழுதும் சாகவாசமாய் போலீசு வந்து சேர்கிறது. வந்தும் கூட எந்தவித பதைபதைப்பும் இல்லை.
- அம்பத்தூர் தொழிற்பேட்டை என்பது சென்னையில் முக்கியமான தொழிற்பேட்டை. அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து வாவின் வரும் வழியில் உள்ள பிரதான சாலையில் தான் விளக்கெரியாமல் கும்மிருட்டாக இருந்தது. இந்த விபத்துக்கு அடிப்படை காரணம் இருட்டுதான். இந்த தொழிற்பேட்டையை பராமரிக்கும் பொறுப்பு AIEMA (AMBATTUR INDUSTRIAL ESTATE MANUFACTURER’S ASSOCIATION) -க்கு தான்! அந்த நாள் மட்டுமில்லை. அதற்கடுத்து வந்த நாட்களும் அங்கு கும்மிருட்டாக தான் இருந்து வருகிறது. இந்தப் பகுதியில் சாலை பராமரிப்பு, பார்க்கிங் பிரச்சனை, கால்வாய் பராமரிப்பு என பல பிரச்சனைகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து நிலவுகின்றன. அய்மாவின் தொடர்ச்சியான அலட்சியம் இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்கப் போகிறதோ!
- இதே சாலையில் தான் தினமணியும், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்கள் இயங்கிவருகினறன. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள பல அடிப்படை பிரச்சனைகளை தொடர்ந்து அம்பலப்படுத்தினாலே ஓரளவு நிலைமை சீராகும். செய்வதில்லை.
கவலைதரும் அம்சங்கள் :
- அந்தப் பையனின் வண்டியில் முன்னாடி உள்ள பம்பர் நன்றாக வளைந்து வண்டியோடு ஒட்டிப் போயிருந்தது. இடித்தது தெரியாமல் இருக்க வாய்ப்பேயில்லை. இடித்துவிட்டு வண்டியை நிறுத்தாமல் போயிருக்கிறான்.
- ஒரு உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும் பொழுது, காப்பாற்ற வேண்டிய வேண்டிய நேரத்தில் செல்லை சுட்டு நகர்ந்த நபர். நுகர்வு கலாச்சாரம் மனிதர்களை இந்த அளவுக்கு சீக்குப்பிடித்த நபராக மாற்றுகிறது.
நம்பிக்கை தரும் அம்சங்கள் :
- அந்த பையனை எப்படியாவது காப்பாற்றிவிடவேண்டும் பதறி, மருத்துவமனைக்கு தூக்கி சென்ற மனிதர்கள்.
- தனது ஷேர் ஆட்டோவில் முழுவதுமாய் இருந்த பயணிகளை இறக்கிவிட்டு, பையனை தூக்கிச் சென்ற அந்த ஆட்டோகாரர்.
இரண்டு மூன்று நாட்கள் சாலையில் கிடத்தப்பட்டிருந்த அந்த பையனின் உருவம் நினைவில் ஓடிக்கொண்டேயிருந்தது. நடந்த நிகழ்வுகளை அசைபோடும் பொழுது, எனக்கென்னவோ சமூகம் கூட அந்தப் பையனின் நிலையில்தான் இருப்பதாகப் படுகிறது.
– குருத்து
எனது அனுபவத்திலிருந்து…
சில ஆண்டுகளுக்கு முன்பு..
ஒரு நாள் மாலை 4.45 மணிக்கு எனது உடல்நல பரிசோதனைக்காக மருத்துவரை பார்க்க இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன். நான் செல்ல வேண்டிய தூரம் சுமார் 25 கி.மீ. ஒரு நான்கு கி.மீ சென்றிருப்பேன். தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு ஒன்றில் சுமார் 20 பேர் கூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். எட்டிப் பார்த்த போது அருகிலிருந்த பொதுத்துறை நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் சாலை விபத்தில் அடிபட்டு காதிலும் மூக்கிலும் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. நான் எனக்காக மருத்துவரை பார்க்கச் சென்ற வேலையை நிறுத்திவிட்டு அந்த ஊழியரை மருத்துவ மனையில் சேர்க்க முன்வந்தேன். அடிபட்டவரிடமிருந்து ஏற்கனவே களவாடப்பட்ட பர்சையும் செல்போனையும் யார் யார் எடுத்தார்கள் என்பதை மற்றவர்கள் சொல்லிட அதையெல்லாம் நான் வாங்கி வைத்துக் கொண்டு ஆம்புலன்சுக்கு தொடர்பு கொண்டேன். பயனில்லை. பிறகு அருகில் இருந்த ஒரு மினி லோடு லாரியில் அவரைத் தூக்கிப் போட்டு அவர் பணிபுரியும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றேன். அவரது பர்சிலிருந்த பணத்தில் லாரிக்காரருக்கு ஒரு தொகையைத் கொடுத்து நன்றி கூறி அனுப்பி வைத்தேன். அதற்குள் அவருடன் பணிபுரியும் சகஊழியர்களும் அவரது உறவினர்களும் அந்த மருத்துவ மனைக்கு வந்துவிட்டார்கள். அவர்களிடம் பர்சையும் செல்போனையும் ஒப்படைத்துவிட்டு வீடு திரும்பினேன். மேல் சிகிச்சைக்காக ஒரு பிரபல தனியார் மருத்துவமகை்கு அவரை அழைத்துச் சென்றார்கள். உரிய நேரத்தில் முதல் உதவி சிகிச்சை கிடைத்ததால் அவர் உயிர் பிழைத்தார். அடுத்த நாள்தான் எனது உடல்நிலைக்கு மருத்துவரைப் பார்க்கச் சென்றேன். ஒரு உயிரைக் காப்பாற்றிய இந்த நிகழ்வு எனது வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று.
போலீஸ் தொந்தரவு இனி இருக்காது: சாலை விபத்தில் சிக்குபவர்களுக்கு உதவலாம் – மத்திய அரசு புதிய உத்தரவு
சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்பவர்களுக்கு இனி போலீஸ் தொந்தரவு இருக்காது. அதற்கான பல புதிய உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
சாலை விபத்துகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை, அருகில் உள்ளவர்கள் காப்பாற்றவே நினைக்கின்றனர். ஆனால் விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது, இவர்களே குற்றவாளிகள் என்பது போல் பார்ப்பதும், போலீஸார் விசாரணை என்ற பெயரில் அவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதும் அடிக்கடி நடக்கிறது. இதற்கு பயந்தே சாலை விபத்துகளின்போது பலர் ஒதுங்கி விடுகின்றனர்.
இந்நிலையில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், ‘முறையாக செயல்படும் விதிமுறை களை’ (ஸ்டாண்டர்ட் ஆபரேட்டிங் புரசீஜர்) வெளியிட்டுள்ளது. அதன் விதிமுறைகள் வருமாறு:
* சாலை விபத்தில் சிக்கியவர்கள் பற்றி போலீஸுக்கு தகவல் அளிப்பவர்களோ அல்லது அவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களையோ மரியாதை யாக நடத்த வேண்டும்.
* விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்பவர்களிடம் அவர் களுடைய முழுப் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை கேட்கக் கூடாது. சாட்சி சொல்ல அவர்களாக விரும்பி விவரங்களை கொடுத்தால் மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும்.
* உதவி செய்பவர்கள் சாட்சி சொல்கிறேன் என்று ஒப்புக் கொண்டால், அவர்களுக்கு வசதியான நேரத்தில்தான் விசாரணை அதிகாரி சந்திக்க வேண்டும். அதுவும் அவருடைய வீடு அல்லது அலுவலகத்தில் விசாரணை நடத்தலாம். உதவி செய்தவரை விசாரிக்கச் செல்லும் போது, போலீஸார் சீருடையில் செல்லக்கூடாது, சாதாரண உடையில்தான் செல்ல வேண்டும்.
* ஒருவேளை சாலை விபத்தை நேரில் பார்த்து பாதிக்கப் பட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்தவரே போலீஸ் நிலையம் வந்து விரிவான தகவல்கள் தர ஒப்புக் கொண்டால், நியாயமாகவும் குறிப்பிட்ட நேரத்துக்குள்ளும் அவரிடம் ஒருமுறை மட்டும் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும். பல முறை வரவழைத்து அலைக்கழிக்க கூடாது.
* உதவி செய்தவர் பேசும் மொழி, விசாரணை அதிகாரிக்கு தெரியாவிட்டால், மொழிபெயர்ப் பாளரை அதிகாரியே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக சாலை விபத்து களில் சிக்கியவர்களை காப்பாற்ற முன்வருவோரை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் புதிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஆண்டுதோறும் 1.4 லட்சம் பேர் சாலை விபத்துகளில் இறப்பதாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் 50 சதவீதம் பேரை சரியான நேரத்தில் (கோல்டன் ஹவர்) மருத்துவமனையில் சேர்த்தால் அவர்களின் உயிரை காப்பாற்ற வாய்ப்புள்ளது என்று மத்திய அரசு கூறியுள்ளது.
– தமிழ் இந்து நாளிதழ் – 28/01/2016
அடிபட்டவர் நலமுடன் இருக்கிறார்!
இன்றைக்கு ஆவடி வரைக்கும் ஒரு வேலை இருந்தது. அப்படியே அடிப்பட்டவரை நலம் விசாரிக்கலாம் என தோன்றியது. அடிப்பட்டவரின் ஓட்டுநர் உரிமத்தை அன்றைக்கு பார்த்தப்பொழுது வீடு திருமுல்லைவாயிலிருந்து, செங்குன்றம் போகிற வழியில் ஒரு கிராமம் தான் வீடு. ஊரில் அந்த பையனின் தெருவிலிருந்து நாலு தெரு தள்ளி ஒரு கடையில் கேட்ட பொழுது கூட அந்த பையனைப் பற்றி சொன்னார்கள். இதெல்லாம் கிராமத்தில் மட்டும் தான் சாத்தியம்.
வீட்டிற்கு போன பொழுது, அடிபட்டவர் படுத்துக்கொண்டு டிவி பார்த்துக்கொண்டிருந்தார். ராம்கி, நிலம் விற்கும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறார். அன்றைக்கு அலுவலக வேலை சம்பந்தமாக மதுராந்தகம் வரை போய்விட்டு திரும்பும் பொழுது தான் அடிப்பட்டிருக்கிறது. எப்படி விபத்து நடந்தது என்பது அவருக்கு சுத்தமாக நினைவில்லை. என்னை இடிச்ச ஆள், நிற்கவேயில்லை என சொன்னார்கள் என்றார். ஹெட்மெட் போடாமல் பெட்ரோல் டாங்கில் வைத்துக்கொண்டு சென்றிருக்கிறார். தலையில் அடிப்பட்டதினால் நாலு நாள் சொந்த அம்மாவையே அடையாளம் காணமுடியவில்லையாம். பிறகு நினைவுகள் திரும்ப வந்திருக்கின்றன. வலது முட்டியில் தான் பலத்த அடி. அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள். ரூ. 50000 வரைக்கும் செலவானதாம்.
“செல் காணாமல் போச்சுன்னு சொல்லிட்டுருந்தாங்க! உங்ககிட்ட அதுக்கப்புறம் யாரும் கொடுத்தார்களா?” என்றதற்கு, ”இல்லண்ணா” என்றார். ”பர்சும் கூட காணாம போச்சுண்ணா! நிறைய பணம் இருந்ததுண்ணா” என்றார். அந்த களேபரத்தில் அவர் பர்சில் ஏதாவது போன் நம்பர் இருக்கிறதா என பார்ப்பதற்காக, வேகமாக பர்சை எடுத்து பார்த்த நபரை அன்றைக்கு கவனித்தேன். இப்பொழுது அந்த முகத்தை நினைத்துப் பார்க்கிறேன். சுத்தமாக நினைவில்லை!