பாண்டேயும் பழ கருப்பையாவும் : தோழர் வில்லவனோடு ஒரு விவாதம் !
அம்மாவும், அ.தி.மு.கவும் ஊழல் திலகங்கள் என்று தெரிந்தே அதில் சேர்ந்து பின்னர் ஆதாயம் கிடைக்கவில்லை என்று விலகிய பழ.கருப்பையா தற்போது அ.தி.மு.க எதிர்ப்பு போராளியாக சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறார். தந்தி டி.வி பாண்டே இந்த பழ கருப்பையாவிடம் நடத்திய நேர்காணல் குறித்து தோழர் வில்லவன் அவரது ஃபேஸ்புக்கில் தொடர்ச்சியாக சில நிலைத்தகவல்களை வெளியிட்டிருந்தார். அதில் அவரது தவறான கருத்து குறித்து வினவு சார்பில் தெரிவித்த கருத்துக்கள் இங்கே தொகுக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன.
விவாதிப்பவர்கள் ஏன் பாண்டேயிடம் சமநிலை இழக்கிறார்கள்? – வில்லவன்
பாண்டே எழுப்புவதைவிட சிக்கலான கேள்விகளை மற்ற தொலைக்காட்சி நெறியாளர்கள் எழுப்புகிறார்கள். பாண்டே மிகவும் பழைய மற்றும் ஒரே பொருள் கொண்ட கேள்விகளைத்தான் திரும்பத்திரும்ப எழுப்புகிறார். ஆனாலும் மற்ற நெறியாளர்களிடம் உண்டாகாத பதட்டம் மற்றும் தடுமாற்றம் பாண்டேயிடம் பேசுவோரிடம் தென்படுகிறது.
காரணம் பாண்டேயின் தனிப்பட்ட (மற்றும் ஆபத்தான) உடல்மொழி. தலையை தாழ்த்தி மேல்பார்வை பார்ப்பது, தலையை ஒருபுறமாக சாய்த்து கோணலாக சிரிப்பது, அல்லது வெறுமனே கிண்டலடிக்கும் வடிவிலான சிரிப்பை வெளிப்படுத்துவது போன்ற பல செய்கைகளை நீங்கள் அவரிடம் காணலாம்.
இவை எதுவும் மற்ற நெறியாளர்களிடம் காண இயலாது. மூத்த நெறியாளர்கள் ஜென்ராம், வெங்கட், குணா (செந்திலை அதிகம் பார்க்க வாய்ப்பில்லை, ஜீவசகப்தனை பார்த்ததேயில்லை- உபயம் அரசு கேபிள்) ஆகியோரது விவாதங்களை கூர்ந்து கவனித்தால் அவர்கள் தலையாட்டுவது மிக அரிதாக நடப்பதை பார்க்கலாம். அது அனேகமாக ஆமோதிப்பதற்காக மட்டும் நடக்கும்.
பாண்டேயின் உடல் மொழியும், குரல் ஏற்ற இறக்கமும் (டோனாலிட்டி) எதிரிலிருப்பவரின் கருத்தின் மீது மறுப்பையும், அலட்சியத்தையும், எள்ளளையும் வெளிப்படுத்துகின்றன. அவர்கள் இதனை சகிக்க மறுப்பதால் (தன்னையறியாமல்) ஆத்திரமடைந்து எதிர்வினை செய்கிறார்கள். பொதுவாக மனிதர்கள் வார்த்தைகளில் இருந்து வெறும் 7 சதவிகிதத்தை மட்டுமே புரிந்துகொள்கிறார்கள். ஏனையவற்றை உடல்மொழியும் வார்த்தை உச்சரிப்பின் ஏற்ற இறக்கமும் புரியவைக்கின்றன. ( நான் நன்றாக இருக்கிறேன் என சோகமான குரலில் சொன்னால் நீங்கள் என்ன புரிந்துகொள்வீர்கள்… என் வார்த்தைகளையா அல்லது உணர்வையா? )
பேச்சளர்கள் பாண்டேயின் உணர்வுக்கு எதிர்வினை செய்ய முனைந்துதான் சிக்கிக்கொள்கிறார்கள். அதன் சமீபத்து விக்கெட் பழ.கருப்பையா. பாண்டேயின் பாணி ஒரு ஆக்கபூர்வமான விவாதத்துக்கு ஒருக்காலும் உதவாது, வேண்டுமானால் சுவாரஸ்யமான வாதத்துக்கு உதவலாம்.
நான் சொல்வதில் ஐயமிருந்தால் ஒரேயொரு சோதனையை செய்துபாருங்கள்.
ஒரு தீவிரமான உரையாடலில் எதிரேயிருப்பவர் பேச்சுக்கு பாண்டே பாணி உடல்மொழியோடு “ அருமை அருமை அருமை” என அவரது மாடுலேஷனோடு பதில் சொல்லிப்பாருங்கள்.. (விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல)
- வில்லவன்
_____________
பாண்டேக்களை பட்டி பார்க்க பழ கருப்பையாக்களால் முடியாது !
வில்லவன், உங்களுடைய கருத்து அடிப்படையிலேயே தவறாக இருக்கிறது. விவாதங்களில் கேள்வி கேட்கும் நெறியாளர்கள் பாண்டே துவங்கி நீங்கள் பாராட்டும் ஏனையோர் வரை தங்களது விவாதங்களின் அடிப்படையை அல்லது திசை வழியை சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி மற்றும் தமது சொந்த அரசியல் கண்ணோட்டங்களிருந்தே பெறுகிறார்களே அன்றி உடல் மொழியில் அல்ல. உடல் மொழியில் 93 சதவீதமும், வார்த்தையில் அதாவது குறிப்பிட்ட அரசியல் கண்ணோட்டத்தோடு தொடர்புடைய பொருளில் 7 சதவீதமும் மட்டுமே எதிரில் இருப்போரிடம் சென்றடைகிறது என்பது மிகவும் அபத்தமானது.
இது உண்மை எனில் இந்தப் பூனையும் பால்குடிக்குமா என்பதாக பேசும் பல்வேறு பாசிச எண்ணம் கொண்டோரையும், செயல்பாட்டில் உள்ளோரையும் உங்களுடைய உளவியல் ஆய்வு நல்லோர் என்று விடுதலை செய்து விடும். இவையெல்லாம் சமூக அறிவியல் அதாவது சொல்லிலும் செயலிலும் நடைமுறை சாராத வெறுமனே வார்த்தைகளை மட்டும் வைத்துக் கொண்டு மிரட்டுவதோடு தவறான புள்ளிவிவரங்களையும் கொண்ட முதலாளித்துவ பாணி கல்வி நிறுவனங்களின் பார்வை மட்டுமே. வைகுண்டராஜனின் காசில் பேசும் நெறியாளர்களும், பச்சமுத்து தொலைக்காட்சிகளில் தந்திரமாக மழை வெள்ளத்தின் குற்றவாளிகளான அரசையும், ஆக்கிரமிப்பு முதலாளிகளையும் – பொத்தேரியை ஆக்கிரமித்த பாரிவேந்தரையும் உள்ளிட்டு – காப்பாற்றும் பொருட்டு நிகழ்ச்சிகளின் தலைப்பையும், விவாத நோக்கையும் மாற்றுகிறார்களே அவர்களின் உடல் மொழி நீங்கள் பாராட்டும் வகையில் ‘காந்தி’ போல இருப்பினும் இவர்களின் அதாவது அந்த தொலைக்காட்சிகளின் செல்வழியை உங்களது ஆய்வு கண்டுபிடிக்கும் வகையில் இல்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் கொள்கைகளை சமூக சேவகர்கள் வேடத்தில் கத்தும் இந்துமதவெறியர்களும் அவர்களின் இதயக்குரலாக பேசும் பாண்டே போன்றோரும் ஒருவகையில் பழைய வகையிலான காட்டுக்கத்தல் போடும் பிற்போக்கு வாதிகள் மட்டுமே. சொல்லப்போனால் இவர்கள் தந்திரமாக பேசுமளவு இன்னும் அப்டேட் செய்து கொள்ளவில்லை. ஆனால் நடுநிலையின் பெயரில் நல்லவிதமான உடல்மொழியில் பேசுவோர்கள்தான் நரித்தனமாக பேசி எதிரில் இருப்போரை மயக்குகிறார்கள். ஒரு முறை தமிழக முஸ்லீம் அமைப்பு ஒன்றை அனேகமாக த.மு.மு.க என்று நினைக்கிறோம், அழைத்த சென்னை அமெரிக்க தூதரகம் அவர்களது வாதத்தை கேட்டதாம். அது யூடிபில் நபிகள் படம் குறித்த பிரச்சினை. இவர்கள் பேசுவதை அமைதியாக கேட்ட துணை தூதர், “உங்கள் வாதங்களை நேர்த்தியாக வைக்கிறீர்கள், நன்றி ” என்று அனுப்பிவிட்டார்கள். அடுத்த நாளே ஆப்கனிலோ, ஈராக்கிலோ குண்டு போட்டு ஆயிரம் பேரைக் கொன்றிருப்பார்கள். எனினும் அவர்கள் பாண்டே போல கத்தியோ, கோணலாகச் சிரித்தோ இல்லாமல் வெகு நாகரீகமாகவே நடந்து கொண்டார்கள்.
பழ.கருப்பையாக அவுட்டாக காரணம் பாண்டேவின் உடல் மொழி என்ற உங்களது ஆய்வு முடிவு உண்மையில் பாண்டே போன்றோருக்கே ஆதரவாக சென்று முடியும். ஏனெனில் பழ.கருப்பையா எனும் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாத பெருச்சாளி இதற்கு முன் அ.தி.மு.கவில் சேரும் போது அம்மா என்ன புனிதத்தாயா இருந்தாரா, இல்லை அய்யாதான் மிஸ்டர் நேர்மையின் இலக்கணமாக இருந்தாரா?
பழ.கருப்பையா தனது சொந்த நலன் காரணமாக – அது புதிய பதவி கிடைக்கவில்லை, ஏதோ தனிநபர் முரண்பாடு, சசிகலா கும்பலோடு முரண்பாடு என்றே ஏதோ ஒரு எழவாக இருக்கலாம் – மட்டுமே அதிமுகவிலிருந்து விலகி அம்மாவை குற்றம் சாட்டுவது போல பேசுகிறார், நடிக்கிறார். பழ கருப்பையாவின் சந்தர்ப்பவாதத்தை உங்களது உளவியல் ஆய்வு கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் ஈசி விக்கெட்டான பாண்டே மேல் உடல் மொழி என்று ஒரே போடாக போடுகிறீர்கள். பாண்டேவின் உடல்மொழியோ வாய் மொழியோ இரண்டும் வடிவம், உள்ளடக்கம் இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பதற்கு பொருத்தமாகவே இருக்கிறது. என்ன இது கொஞ்சம் பழைய டைப் மட்டுமே. எது எப்படியோ சொல்லிலும் செயலிலும் நாம் பொருத்தமாக இருந்தால்தான் இத்தகைய அப்பட்டமான நாடகத்தை புரிந்து கொள்ள முடியும். ஃபேஸ்புக்கில் அதிகம் நிலைத்தகவல் போடுவதால் அந்த புரிதலை பெற முடியும் என்று தோன்றவில்லை.
விவாதிப்பவர்கள் ஏன் பாண்டேயிடம் சமநிலை இழக்கிறார்கள் என்று ஆய்வு செய்யும் போது நீங்கள் பாண்டேவை மட்டும் கருத்தில் கொள்கிறீர்கள். பாண்டேவிடம் விவாதிக்கும் நபர்களின் அரசியல் சமரசங்களும், சந்தர்ப்பவாதங்களும், ஓட்டுக் கட்சி கூட்டணி நிர்ப்பந்தங்களும், என்று ஏராளமான பலவீனங்களை வைத்திருக்கின்றனர். இந்த பலவீனங்களை எடுத்து கிடுக்கிப் பிடி போடுமளவு பாண்டே யோக்கியர் இல்லை மட்டுமல்ல, கடைந்தெடுத்த அயோக்கியர் என்பதால் போகிற போக்கிலோ இல்லை வெறும் மிரட்டலிலோ நாக் அவுட் செய்கிறார். சின்ன கிரிமினல் பெரிய கிரிமினலை பார்த்தோ இல்லை பெரிய கிரிமினலை சின்ன கிரிமினலை பார்த்தோ சில தருணங்களில் பயப்படலாம். இதுவே தேர்ச்சி பெற்ற கிரிமினல் என்றால் அவரைப் போன்ற உத்தமரே இந்த உலகில் இல்லை என்று பெயரெடுக்குமளவு ‘குற்றங்குறை’ இல்லாமல் செய்வார். என்.டி.டி.வி பிரனாய் ராய் கூட அமைதியாகப் பேசும் ஒரு நெறியாளர்தான். ஆனால் அந்த டீசன்சிக்கு பின்னே உள்ள சதிகள், சமரசங்கள் கடைசியாக பீகார் தேர்தலில் பா.ஜ.க வெற்றி என்று அறிவித்து பின்னர் மன்னிப்பு கேட்டது வரை ஏராளம் அம்பலத்திற்கு வந்துவிட்டன.
பாண்டேக்கள் வில்லன்கள்தான். அதே நேரம் பழ கருப்பையாக்களை நல்லவர்களாக்கித்தான் பாண்டேக்களை வில்லன்களாக நிறுவ முடியும் என்றால் இறுதியில் பாண்டே தன்னை சுலபமாக காப்பாற்றிக் கொள்வார். பாசிஸ்டுகளின் உத்தியை எதிர் கொள்ளவதற்கு வெறுமனே டெக்னிக்கல் நுட்பம் மட்டும் அதாவது உடல் மொழியோ இல்லை பன்ஞ்ச் லைன் பேசும் தருக்க மொழி மட்டும் போதாது. வாழ்க்கையை மக்கள் நலனில் இருந்து உள்ளது உள்ளபடி ஊடுறுவிப் பார்க்கும் பார்வையும், அந்த பார்வையை உருவாக்கும் களப்பணி சார்ந்த நடைமுறையும் வேண்டும். இல்லையேல் வார்த்தைகளை வைத்தே வாழ்க்கையை ஆய்வு செய்யும் சுயதிருப்தியிலும் அது தரும் டிஜிட்டல் பரவசமும் நம்மை அரித்துத் தின்றுவிடும்.
- வினவு
பான்டேயின் இந்த வளர்ச்சிக்கு நமது அரசியல் வாதிகளின் (வியாதிகலின்) தரம் கெட்ட போக்கும் , அவர்களின் தலைவர்கள் தவறு செய்தாலும் தாங்கி பிடிக்கிற மனனிலையும் தான் திரு பான்டேயிடம் அவர்கள் மன்டியிட்டு தோற்றுபோகிறார்கள். திரு பான்டே மட்டும் அல்ல தமிழ் தெரியாதவ்ரிடமும் இவர்கள் தோற்றுபோவார்கள்
சிலரின் அறிவும் பேச்சும் எழுத்தும் நம்மை அவர்களை கணவான் களாக நினைக்க வைத்து விடுகிறது.இந்த பழ கருப்பையாவும் அவர்களில் ஒருவர்தான்.’ இவருடைய தரத்திற்க்கு இவர் ஏன் அதிமுக வில் சேர்ந்தார் அங்கு எப்படி இவரால் தாக்குபிடிக்க முடிகிறது’என்று எண்ண வைத்தார்.ஆனால் இவர்களின் அறிவு பேச்சு எழுத்து அனைத்தும் ஒரு முதலீடு.அதை வைத்து நல்ல அனுபவித்து கடைசியில் ‘அறம்’ சார்ந்து விலகிவிட்டார்.போடும் வேடத்திற்க்கு ஏற்ப பேசி இருக்கும் மேடைக்கேற்ப நடித்து சாதிப்பவர் என்பதும் விளங்குகிறது. பாண்டேவோடு முறைத்துக் கொள்பவர் போல் காட்டி அதை பரபரப்பு தீனியாக்கி இன்று கேள்விக்கென்ன பதிலில் அவரோடு உட் கார்ந்து இன்னும் பெரும் லாபமும் பேரும் சேர்க்க இணைகிறார்கள். தமிழ்நாடும் நாடகம் எனபதை மறந்து அற்ச்சீற்றத்தை பார்க்க தயாராகிறது.
என்னத்தை அறம் சார்ந்து விலகி விட்டார்? போன தேர்தலில் கட்சியில் இணைந்து அதிமுக அடிமை தொண்டர்களின் உழைப்பினால் பதவியடைந்து , ஐந்து வருடங்கள் முழுமையாக பதவியை அனுபவித்து விட்டு , இப்போது குனிந்து வளைந்து கும்பிடு போட முடியவில்லை. உலங்கு வானூர்தியை பார்த்து கும்பிட முடியவில்லை என பதவி முடிகிற காலத்தில் விலகுவது அறம் சார்ந்த செயலா ? அறளை பெயர்ந்த செயல்.
“அறம்” சார்ந்து விலகிவிட்டார் என்று மேற்கோள் காட்டியிருக்கிறேனே அப்படியுமா விளங்கவில்லை.சரி அதுதான் விளங்கவில்லை, அதற்க்கு மேலும் கீழும் உள்ள கருத்தை வைத்து அது என்ன அர்த்தத்தில் சொல்ல பட்டிருக்கிறது என்பதை விளங்க முடியாதா?அறம் என்பது அங்கே வஞசபுகழ்ச்சியே
https://www.youtube.com/watch?v=ZDz2_kAenoM
Durai murugan handled Pande much better.. Infact Durai murugan’s gesture made Pande feel bad (for instance : lets go to some other question) that he could manage him..Also this is some kind of freedom from DMK to face media. They face their own consequences as it wont spoil DMK’s image..
\\ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் கொள்கைகளை சமூக சேவகர்கள் வேடத்தில் கத்தும் இந்துமதவெறியர்களும் அவர்களின் இதயக்குரலாக பேசும் பாண்டே போன்றோரும் ஒருவகையில் பழைய வகையிலான காட்டுக்கத்தல் போடும் பிற்போக்கு வாதிகள்// VINAVU has not spared even a TV anchor. ஐயொ ஐயொ.