privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்பார்ப்பனிய ஆதிக்க சமூகத்திற்கு டி.என்.ஏ ஆதாரம் - பாகம் 1

பார்ப்பனிய ஆதிக்க சமூகத்திற்கு டி.என்.ஏ ஆதாரம் – பாகம் 1

-

பார்ப்பன ஆதிக்க சாதி வெறியின் தோற்றுவாய், அதன் ஆதிக்கம் புறமணத்தடையில் இருந்தே வந்துள்ளது – நீங்கள் மறுத்தாலும் உங்களின் இனக்கீற்று அமிலங்கள் (டி.என்.ஏ) மறுக்காது!

டி.என்.ஏ (DNA) அல்லது இனக்கீற்று அமிலங்கள் மனித இனத்தின் மரபணுத் தகவல்கள் மற்றும் மரபணு மாற்றங்களால் ஏற்படும் நோய்களைப் பற்றி மட்டுமே சொல்லும் என நினைத்தால், இல்லை, நாங்கள் சாதிகள் தோன்றி வளர்ந்து மேலாதிக்கம் பெற்ற காலத்தையும் துல்லியமாகச் சொல்வோம் என நிரூபித்துள்ளன. கல்கத்தாவில் இருந்து செயல்படும் தேசிய உயிர்-மருத்துவ மரபியல் நிறுவனம் (NIBMG) மற்றும் இந்தியப் புள்ளியியல் கழகத்தின் மனித மரபியல் பிரிவும் இணைந்து இந்த ஆராய்ச்சி முடிவை எட்டியுள்ளனர். அமெரிக்காவில் இருந்து வெளிவரும் PNAS என்ற ஆய்விதழில் வந்துள்ள இக்கட்டுரையின் ஆராய்ச்சியை, NIBMG-இன் ஆய்வுப்பிரிவுத் தலைவர் அனலபா பாசு தலைமை தாங்கி நடத்தியுள்ளார்.

கடவுள் துகள்கள் (God particle) என அழைக்கபடும் ஹிக்ஸ்போசான் துகள்களின் கண்டுபிடிப்பு எவ்வாறு கடவுளை மறுத்த துகளாக மாறி இயக்க மறுப்பியலாளர்கள், சங்கப்பரிவாரங்கள் மற்றும் இதர மதக் கோட்பாட்டுவாதிகளின் வாதங்களுக்கு ஆப்பறைந்ததோ, அதைப்போல இவ்வாராய்ச்சி, இந்திய வரலாற்றில் ஆயிரமாண்டுகளாக கடைப்பிடித்து வருகிற வருணாசிரம முறை மேலாதிக்கம் பெற்று இறுகிய நிலைக்கு புறமணத்தடையை (அல்லது அகமண முறையைக் கட்டாயமாக்கிய) அமல் படுத்திய பார்ப்பனிய சமூகக் கட்டமைப்பும் அதன் பிரதிநிதிகளான மன்னர்களும் தான் காரணம் என்பதை அறிவியல் ஆதாரத்துடன் விளக்கி, சாதிகளைப் பற்றிப் புரிந்து கொள்ளும் சமூக ஆய்வில் வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளது. புறமணங்களின்மீது அகமணமானது ஏறி ஆதிக்கம் செலுத்திய காலகட்டம்தான் சாதி மேலாண்மையின் தோற்றுவாயாக இருந்தது, எனக் கூறிய அம்பேத்கரின் வாதத்திற்கு இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் வலுசேர்த்துள்ளன.

இந்தியாவில் மக்கள் ஏற்றத்தாழ்வான சாதியக் கட்டமைப்பில் இருக்கிறார்கள் என்பதற்கான உயிரியல் ஆதாரங்களை இந்த ஆய்வு மெய்ப்பித்துள்ளது. அகமண முறையால் இந்த கூறு இன்றும் தொடருவதை இந்த ஆய்வு மெய்ப்பிக்கிறது. அதே நேரம் இந்த அகமண முறை அல்லது சாதியப் பிரிவினை பொருளாதார அலகுகளாக பிரிந்திருப்பதன் மூலம் இந்த சாதிய ஏற்றத்தாழ்வை ஆதிக்கம் செய்யும் சக்திகள் தமது அதிகாரத்தை கையில் வைத்திருந்தன.

வரலாற்று நோக்கில், தற்போதைய இந்திய மக்கள் தொகையின் மரபுத்தொகுதி புனரமைப்பு                  ஐந்துவகைப்பட்ட தனித்தனி
genes-study-5மூதாதையர்களையும், சிக்கலான அமைப்பையும் கொண்டது, (Genomic reconstruction of the history of extant populations of India reveals five distinct ancestral components and a complex structure) எனத் தலைப்பிடப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரையில்தான் இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாரய்ச்சியின் முதல்படியாக, இந்தியாவின் பல்வேறு சமூகக் கலாச்சாரம், மற்றும் மொழியில் வேறுபட்ட சுமார் இருபது சாதிகளின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டது. இந்திய நிலப்பகுதிகளில் வாழும் 18 சாதிகளிடம் இருந்தும் அந்தமான் தீவில் வாழும் இரண்டு பழங்குடியினரின் ரத்த மாதிரிகளும் எடுக்கப்பட்டன. ஒவ்வொரு சாதியில் இருந்தும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத ஏறக்குறைய 20 நபர்கள் என சுமார் 367 நபர்களின் ரத்த மாதிரிகளில் இருந்து மரபணுக்கள் பிரித்தெடுக்கப்பட்டு அவற்றின் மரபணுத் தொடர்வரிசை கணக்கிடப்பட்டது (Genome sequence).

இதன்படி பல்வேறு முடிவுகளை கண்டடைந்துள்ளனர். குறிப்பாக 2009-களில் இந்திய மக்களின் மரபணுக்களைப் பரிசோதித்த ரீச் (ஹார்வர்ட் மருத்துவப் பல்கலைக் கழகம், அமெரிக்கா) மற்றும் குமாரசாமி தங்கராஜ் (மத்திய செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் நிறுவனம், இந்தியா) குழுவினரின் ஆய்வுப்படி இரண்டு தனி மூதாதையர்கள் மட்டுமே இருக்கின்றனர் என முடிவு செய்யப்பட்டது. அதாவது பெரும்பாலான தென்னிந்தியப் பகுதிகளில் இருக்கும், திராவிட வழியிலான மூதாதையர்கள் (ASI – Ancestral South Indian) மற்றும் வட இந்தியப் பகுதிகளில் இந்திய – ஐரோப்பிய மொழிகளைப் பேசும் மூதாதையர்கள் (ஆரியர்கள் எனவும் எடுத்துக்கொள்ளலாம், ANI – Ancestral north Indian) என இருப்பிரிவினர். அனால் தற்போது, இந்தியா முழுதும் உள்ள பரந்துபட்ட மக்களின் மரபணுக்களை ஆராய்ச்சியில் எடுத்துக்கொள்ளப்பட்டதால் மேற்கூறிய இரண்டு பிரிவினரையும் சேர்த்து மொத்தம் 5 தனித்தனி மூதாதையர் இருந்ததைக் கண்டறிந்துள்ளனர்.

கிழக்கு மற்றும் மத்திய இந்தியாவில் காணப்படும் பழங்குடிகளான ஆஸ்திரிய-ஆசிய மக்கள் (AAA – Ancestral Austro -Asiatic), வடகிழக்கு இந்தியாவில் காணப்படும் திபத்திய-பர்மிய மக்கள் (ATB – Ancestral Tibeto -Burman) மற்றும் அந்தமான்-நிக்கோபர் தீவுகளில் மட்டுமே வாழ்ந்துவரும் ஜரவா, ஓங்கே உள்ளிட்ட பழங்குடிகள் உள்ளிட்ட மூன்று மூதாதையர்களை உள்ளடக்கியதுதான் இந்தியாவின் இன்றைய குடிமக்கள்.genes-study

இதற்கு முன்பு வந்த ஆய்வுகள் பல இதுபோன்ற தகவல்களைக் கூறினாலும் இச்செய்தி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அவை பலவெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் கூட்டு முயற்சியில் நடந்தாலும் ஆய்விற்கு சில சாதிகளின் ரத்த மாதிரிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. மேலும் அவர்கள் ஒரு முன்முடிவில் இருந்து அவ்வராய்ச்சியை நடத்தியுள்ளனர். ஆனால் இக்குறிப்ப்ட்ட ஆய்வு முழுக்க முழுக்க இந்தியாவில், இந்திய மரபணு ஆராய்ச்சியாளர்களால் பல வகைப்பட்ட பிரிவினரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து, கடந்தகால சமூகப் பழக்கவழக்கங்களில் இருந்து நிறுவியுள்ளனர். பல சமூக ஆய்வாளர்கள் இவர்களின் அறிவியல்-சமூகப் பூர்வ தர்க்கத்தை ஏற்றுள்ளனர். நல்லவேளையாக இவ்வாராய்ச்சியின் முடிவுகள் ஏற்படுத்தப்போகும் விவாதங்கள் அல்லது எதிர்கால சமூக ஆய்வில் ஏற்படப்போகும் திருப்பங்கள் குறித்து இந்துத்துவப் பார்ப்பனப் பரிவாரங்கள் அறிந்திருக்கவில்லை. அதுமட்டும் தெரிந்திருந்தால் கண்டிப்பாக மோடி இவாராய்ச்சியை நடத்த விட்டிருக்கமாட்டார்கள்.  இல்லையென்றால் எடுக்கப்பட்ட ரத்தத்தின் மாதிரிகளை (samples) மாற்றியிருப்பார் எனக் கருத நிறைய வாய்ப்புகள் உள்ளன. அந்த அளவிற்கு சங்க பரிவாரங்களை எரிச்சல்படுத்துவதோடு அறிவியல் நோக்கில் முக்கியத்துவம் வாய்ந்த அறிவியல் கண்டுபிடிப்பு இது.

சமீபத்திய ஆய்வின் மூலம் இந்தியா முழுவதும் 1575 ஆண்டுகளுக்கு முன்பு வரை அதாவது 4200 ஆண்டுகளுக்கு முன்பிருந்து 1575 ஆண்டுகள் முன்பு வரையிலான இடைப்பட்ட காலங்களில் நமது அனைத்து மூதாதையர்களும் தங்கள் இனத்திற்கு வெளியே இருப்பவர்களுடன் சேர்ந்து வாழ்ந்துள்ளனர், கலந்துள்ளனர். அதாவது புறமணமுறையானது (Exogamy) இருந்துள்ளது. ஆனால் அதற்குப் பிறகு தங்கள் கணம் அல்லது சாதி/குழுக்களைத் தாண்டி திருமணம் செய்வது தடைசெய்யப்பட்டது. இதற்கான காரணத்தை அவர்கள் ஆராய்ந்த பொழுதுதான் அக்கால மக்களின் சமூக வாழ்நிலை அப்போதைய ஆட்சியாளர்களால் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டதைக் கண்டனர். இந்தியாவின் பொற்காலம் என்றும் வேதங்களின் காலம் என்றும் புகழாரம் சூட்டப்படும் குப்தர்கள் பேரரசில்தான் அகமணமுறை கட்டாயமாக்கப்படுகிறது. அதாவது தர்மசாஸ்திரம்/மனுதர்மத்தின் பெயரில் சாதிக்கொடுங்கோன்மைகளும் ஒரு சாதியினர் மற்ற சாதியினருடன் மணமுடிப்பது தடுக்கப்பட்டு புறமணமுறை தடைசெய்யப்பட்டது. இச்செய்திகள் நமக்கு முன்கூட்டியே தெரியும் என்றாலும், உயிரித் தொழில்நுட்பம் மூலமாக உறுதியாகியுள்ளது எனலாம்.

genes-study-4இந்தியாவில் இருக்கும் குஜராத், மணிப்பூர் மற்றும் மேற்கு வங்க பார்ப்பனர், தமிழகத்தின் ஐயர், மற்றும் கத்ரி போன்ற ஆதிக்கச்சாதி பிரிவினர்கள் கிட்டத்தட்ட 70 தலைமுறைகளுக்கு முன்பாகவே புறமணமுறையை கைவிட்டார்கள் என இவ்வாய்வு தெரிவிக்கிறது. 1100 வருடங்களுக்கு முன்பு ஆண்ட சாளுக்கியர்கள் காலகட்டத்தில் மராத்தா பிரிவினரின் புறமணமுறை நிறுத்தப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில்தான் ராஷ்டிரகுட மன்னர்கள் விவசாயிகளிடமிருந்து ஒரு படைப்பிரிவினரைத் தோற்றுவித்து அவர்கள் மற்ற சமூகத்தினரிடையே கலப்பதைத் தடுத்துள்ளனர், இவர்களே பிற்காலத்தில் அப்பகுதியின் சத்திரிய வம்சமாகத் தோன்றினர். இச்சாதிப் பிரிவால்தான் ஒரு கட்டத்தில் அதிக அளவில் நடந்த, திராவிட- பழங்குடியின கலப்பும், வேறுபட்ட பழங்குடியினரிடையேயான கலப்பும் தடைசெய்யப்பட்டது எனலாம்.

சாதிப்பாகுபாட்டினால் பல்வேறு பிரிவினையிடையே இருந்து வந்த கலப்பு முற்றுப் பெற்றாலும் அது முழுமையாக முடியவில்லை. ஆதிக்கசாதி ஆண்களின் மரபணுக்கள் மற்றசாதி குழந்தைகளிடையே காணப்பட்டுவதாக இவ்வாய்வு தெரிவிக்கிறது. அதாவது பார்ப்பன, ஆதிக்க சாதிகளின் ஆணாதிக்கம் திராவிட, பழங்குடிப் பெண்களின் வாழ்க்கையில், அவர்களின் குடும்பங்களில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அதே சமயம் இது மற்றசாதி ஆண்கள் பார்ப்பன, ஆதிக்க சாதி பெண்களுடனான கலப்பைத் தடுத்திருக்கிறது. இதன் மிச்ச சொச்சம்தான் பொட்டுக்கட்டுதல், தேவதாசி மற்றும் தேவரடியார் முறைகளில் பெண்களை போகப் பொருளாகப் பார்ப்பனர்கள் மற்றும் இதர ஆதிக்க சாதியினர் பயன்படுத்தியுள்ளனர். இதுமட்டுமல்லாது, தாழ்த்தப்பட்ட ஏழை விவசாயிகளின் மனைவிமார்களை ஜமீந்தார்களுக்குப் பிடித்துவிட்டால் அவ்வளவுதான், அவ்விவசாயி தன் மனைவியை அவர்களின் இச்சைக்குப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும், இது அம்மக்களின் விருப்பத்திற்கு அப்பாற்பட்டு கட்டாயமாக இருந்துள்ளது. அதை மீறி செயல்பட முடியாத அளவிற்கு தண்டனைகள் கடுமையாக இருந்துள்ளது. வீரம்செறிந்த தெலுங்கானாப் போராட்டத்தைப் பற்றி விளக்கும் மாபூமி படத்தில் கூட இது போன்ற காட்சிகளைப் படமாகப் பார்த்திருப்பீர்கள்.

எப்படி இதைக் கண்டுபிடித்தார்கள் என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் ஆராய்ச்சியில் கூறப்பட்டவை அனைத்தும் அறியியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டவை. இதைக் கண்டுபிடிக்க மனித உடலில் காணப்படும் Y குரோமோசோம்கள் (மரபணுச்சரம், மரபணுக்கோல் அல்லது நிறமூர்த்தம் என பல கலைச்சொற்கள் உள்ளன) மற்றும் மைட்டோகான்ட்ரீயா (மணியிழை) டீ.என்.ஏக்கள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் Y மரபணுச்சரங்களின் மூலம் ஆண்களின் பரம்பரைத் தகவல்களையும், மணியிழை டி.என்.ஏக்கள் மூலம் பெண்களின் பரம்பரைத் தகவல்களையும் அறிந்துகொள்ளலாம். Y மரபணுச்சரமானது ஆண்களிடம் மட்டுமே காணப்படுகிறது, ஆக ஆண்களிடமிருந்தே இத்தகவல்கள் மற்றவர்களுக்குப் பரப்பப்படுகிறது. மரபணுக்களை மொத்தமாகப் படிக்கும்போது, இத்ததகவல்கள் குறிப்பிட்ட நபரின் தந்தை எந்த சமூகத்தைச் சார்ந்தவராக, சாதியைச் சார்ந்தவராக இருந்தார் என்பதைச் சொல்கின்றன. மணியிழை டி.என்.ஏ பெண்களிடமிருந்துதான் ஒருவருக்குக் கிடைக்கிறது. மணியிழை டி.என்.ஏவானது விந்துவில் மிகக் குறைவாகவும், கருமுட்டையில் அதிக அளவும் காணப்படுகிறது. கருவுறுதலின் பொழுது விந்துக்களில் உள்ள மணியிழை டி.என்.ஏக்கள் அனைத்தும் பயன்படுத்தப்படுகின்றன,(மைட்டோகாண்ட்ரீயா அல்லது மணியிழைகள், இவை செல்களுக்கான ஆற்றலின் பிறப்பிடமாகும்) அதனால் ஒருவரின் உடலில் உள்ள மணியிழை டி.என்.ஏ தனது தாயிடமிருந்து பெறப்பட்டவையாக மட்டுமே இருக்கும்.

இதன்படி, இந்தியாவில் காணப்படும் திராவிட, பழங்குடியின மக்களின் மரபணுக்களில் Y மரபணுச்சரத்தின் பல்வகைப்பட்ட பிரிவுகள் காணப்படுகின்றன, அதே சமயத்தில் மணியிழை டி.என்.ஏக்கள் அனைத்தும் இப்பிரிவினரிடையே ஒன்றுபோல இருக்கின்றன. அதாவது மேல்சாதி ஆண்கள் திராவிட, பழங்குடி பெண்களை தங்கள் இச்சைக்குப் பயன்படுத்திக்கொண்டதன் மூலம் அவர்களின் வழியே பிறந்த குழந்தைகளிடம் Y மரபணுச்சரங்கள் வேறுபட்டு இருந்தன, ஆனால் தாய்க்கூறைக் கண்டுபிடிக்கும் மணியிழை டி.என்.ஏக்களில் எவ்வித வேறுபாடும் இல்லை. இத்தகைய பண்புகள் மேல்சாதியினரின் மரபணுக்களில் இல்லை, இதன் மூலம் திராவிட, பழங்குடியின ஆண்கள் மேல்சாதி பெண்களிடம் கலப்பது தடுக்கப்பட்டுள்ளது. இதுவே பார்ப்பனிய மேலான்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இது போன்ற தனிச்சிறப்பான ஆராய்ச்சிகள் மூலம் நமது ஆப்பிரிக்க மூதாதையர்கள் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு இந்தியப் பகுதிகளுக்கு வந்தனர், திராவிடப் பாரம்பரியம், ஆரியப் படையெடுப்பு பற்றிய தகவல்களைத் துல்லியமாகக் கணக்கிட முடியும்.மேலும், பல்வேறு இனங்களுக்கிடையில் கலப்பு இருந்த நமது சமூகம் மிகுந்த ஆரோக்கியத்துடன்தான் இருந்துள்ளது. ஆனால் இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகள், பல நோய்களின் கூடாரமாக மாறியது சிலப் பல நூறாண்டுகளுக்கு முன்பு இவர்கள் கொண்டு வந்த அகமணமுறையின் மூலம்தான் என்பதை உங்களால் நம்பமுடிகிறதா. நம்பமுடியாவிட்டாலும் அதுதான் உண்மை. இதை அவர்களே மறுத்தாலும் அவர்களின் டி.என்.ஏக்கள் மறுக்காது. அதுபற்றி அடுத்த கட்டுரையில் காண்போம்.

– நிகரன்

மேலும் படிக்க