மதுரவாயல்
புமாஇமு மாநில ஒருங்கிணைப்பாளர் வெளியிடும் கண்டன அறிக்கை
மதுரவாயலில் டாஸ்மாக் கடையை மூடு என்று போராடிய மக்கள் மீதும் மக்கள் அதிகாரம் தோழர்கள் மீதும் போலீசார் கொலைவெறி தாக்குதல் நடத்தியதை பு.மா.இ.மு வன்மையாக கண்டிக்கிறது.
பெறுநர்: ஆசிரியர்/நிர்வாகி அவர்கள் பத்திரிக்கை/தொலைக்காட்சி
அன்புடையீர்,
வணக்கம். சென்னை மதுரவாயல் ரேசன் கடை அருகில், உள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று மதுரவாயல் நொளம்பூர் மாதாகோயில் நகர், ஓம் சக்தி நகர் ஆகிய பகுதிகளை சார்ந்த சுமார் 2000க்கும் மேற்பட்ட மக்கள் கையெழுத்திட்டு கடந்த 2-ம் தேதி மனு கொடுத்து எச்சரித்திருந்தனர். அதன் பின்னரும் நடவடிக்கை எடுக்கப்படாததால், மேற்படி பகுதிகளை சார்ந்த மக்களை அப்பகுதி டாஸ்மாக் எதிர்ப்பு குழுவும், மக்கள் அதிகாரமும் ஒருங்கிணைத்து, இன்று காலை 11.30 மணி அளவில், ரேசன் கடை அருகில் உள்ள டாஸ்மாக் கடையை மூடுவதற்காக சென்றனர். சுமார் 500 பெண்கள், 100 சிறுவர்கள் என 1000 பேர் திரண்டு முழக்கம் எழுப்பியதும் அவர்கள் மீது போலீசார் கொலை வெறி தாக்குதலை நடத்தினர். பெண்கள் என்றும் பாராமல், ஆண் போலீசார் அவர்களைக் கீழே தள்ளி வக்கிரமாக பூட்ஸ் காலால் மிதித்தனர். பெண்களின் ஆடையை கிழித்து வக்கிரமாக நடந்து கொண்டனர். சிறுவர்கள் மீது நடத்திய தாக்குதலில் ஆகாஷ் என்ற பள்ளி மாணவர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சத்யா என்ற 50 வயது பெண்மணியின் மண்டையை உடைத்து இரத்த காயம் ஏற்படுத்தினர். அப்போராட்டதிற்கு ஆதரவாக சென்ற என் மீதும் (த.கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர், பு.மா.இ.மு) கொலை வெறித் தாக்குதலை நடத்தினர். பேசக் கூட அனுமதிக்காமல், சுமார் 20 -க்கும் மேற்பட்ட போலீசார் சூழ்ந்து கொண்டு தாக்கினர். தலையிலும், முதுகிலும், முகத்திலும் என லத்தி கொண்டு கொடூரமாக தாக்குதல் நடத்தினர். இதில் இடது கண் அருகே காயம் ஏற்பட்டுள்ளது. என்னைப் போல் சுமார் 24 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் யாருக்கும் மருத்துவம் கூட பார்க்காமல், மதுரவாயல் பாக்கியலஷ்மி மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளது போலீசு. டாஸ்மாக்கை மூடாமல் காவல் காக்கும் ஜெயா அரசின் போலீசு போராடிய மக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதையும், மண்டபத்தில் அடைத்து வைத்து மருத்துவம் பார்க்காமல் சித்திரவதை செய்வதையும், பு.மா.இ.மு வன்மையாக கண்டிக்கிறது. தமிழகத்தில் செயல்படும் அனைத்து மாணவர் அமைப்புகளும் ஜனநாயக அமைப்புகளும் ஜெயாவின் பாசிச நடவடிக்கையை கண்டிக்க வேண்டுமென பு.மா.இ.மு கோருகிறது.
இவண்
த. கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர்.
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு
41, பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை. 9445112675
கோவை
மீஞ்சூர்