privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்கோவை இந்து முன்னணி கலவரம் - விரிவான ரிப்போர்ட்

கோவை இந்து முன்னணி கலவரம் – விரிவான ரிப்போர்ட்

-

கோவையில் செப்டம்பர் 22, 2016 அன்று இந்து முன்னணியைச் சேர்ந்த சசிக்குமார் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கோவைக் காவல்துறையின் ஆசியுடன் இந்து முன்னணி நடத்திய கலவரத்தை பலரும் பொதுவில் அறிந்திருப்போம்.

kovai-hindu-munnani-riot-ndlf-kovai-poster
கோவை பு.ஜ.தொ.மு போஸ்டர்

தமது தேர்தல் உள்ளிட்ட பல்வேறு அரசியல் சமூக ஆதாயங்களுக்காக இந்து முன்னணி என்ற மதவெறி பொறுக்கி கும்பலால் திட்டமிட்டு நடத்தப்பட்டதே இந்த கலவரம். சசிக்குமார் என்பவர் ரியல் எஸ்டேட் வசூல் மற்றும் கட்டப் பஞ்சாயத்து செய்யக்கூடிய ஒரு ரவுடி. அதே போல விநாயகர் சிலைகள் வைப்பது அதற்கான மிரட்டல் வசூல்களை ஒழுங்குபடுத்துவது என்பது போன்ற ‘தொழில்களை’யும் செய்து வந்தவர். சசிக்குமார் அவருடைய வீட்டினருகே கொல்லப்பட்ட பின்பு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட உடனே அங்கே இந்துமதவெறிக் கும்பல் அணிதிரட்டப்படுகிறது.

முதலில் சசிகுமார் மரணத்தை உறுதி செய்த மருத்துவமனை மீது கல் வீசி தாக்குகிறார்கள். பின்னர் பிணம் அரசு மருத்துவமனை உடற் கூறாய்வுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்து முன்னணியின் பொதுச்செயலாளரான காடேஸ்வரா சுப்பிரமணியன் எனும் நபர் செப்டம்பர் 23 தமிழகம் தழுவிய பந்த் என அறிவிக்கிறார். கொலைகாரர்களை காவல்துறை கைது செய்யாவிட்டால் தமிழ்நாடு குஜராத்தாக மாறும் என தொலைக்காட்சி பேட்டியில் பகிரங்க மிரட்டல் விடுக்கிறார். அங்கேயே நூற்றுக்கணக்கானோர் திரள்கின்றனர். கோவை, திருப்பூர் மாவட்டங்களிலிருந்து திரட்டப்பட்டு குவிக்கப்படுகின்றனர். கொன்றது முஸ்லீம்கள் தான் என்ற தகவல் எந்த ஆதாரமுமின்றி பரப்பப்படுகிறது. அந்த வதந்தியை வைத்து கும்பல் சேர்க்கப் படுகிறது.

இதன் தொடர்ச்சியாக மதப்பதட்டம் உருவாவதற்கான அனைத்து சூழல்களும் இருக்கையில் உடற்கூறாய்வை உடனடியாக முடித்து சவத்தை உடனே அடக்கம் செய்ய வைக்க வேண்டியதுதான் காவல்துறை செய்ய வேண்டிய நடவடிக்கை. ஆனால், மறுநாள் காலை அணிதிரட்டல் முழுமையாக நடக்கும்வரை செயற்கையாக பந்த்தை அமலாக்கும் வரை உடற்கூறாய்வை தாமதப்படுத்தியிருக்கிறார்கள். காவல்துறை எப்படி துவக்கம் முதல் இறுதி வரை கலவரத்தை திட்டமிட்டபடி திறம்பட நடத்த தமது நடவடிக்கைகள் மூலம் உறுதுணையாக இருந்திருக்கிறது என்பதற்கு இது முதல் உதாரணம்.

kovai-hindutva-thugs-violence-30மறுநாள் காலை வழக்கம் போல கடைகளை திறந்தவர்களிடம் வண்டிகளில் கும்பல் கும்பலாக பகுதிகளுக்கு சென்று இன்று பந்த் திறக்கக் கூடாது என மிரட்டியிருக்கிறார்கள். மீறி பேசியவர்களின் கடைகளை உடைத்திருக்கிறார்கள். ஓடிக் கொண்டிருக்கும் பஸ்களை நடு ரோட்டில் நிறுத்தி கண்ணாடியை உடைத்து செயற்கையான பதட்டத்தை அந்த பகுதியில் உருவாக்கி கடையடைப்பை சுமத்தியிருக்கிறார்கள். இவ்வன்முறை கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மூன்று மாவட்டங்களிலும், அதிலும் குறிப்பாக கோவையிலும் திருப்பூரிலும் முழு வீச்சில் அமலாகியிருக்கிறது.

திருப்பூரில் கல் வீச்சால் பதறி இறங்கிய ஒரு பெண்மணியின் மீது பேருந்து சக்கரம் ஏறி கால் முறிந்து பின்னர் மரணமடைந்திருக்கிறார். ஏராளமான அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கியிருக்கிறார்கள். ஆக, முந்தைய நாள் முன்னிரவில் நடந்த சம்பவம் அறியாமல் தனது இயல்பு வாழ்க்கையை துவங்கிய இரு மாவட்டங்களையும் காலை 9 மணிக்குள் முடக்கி முற்பகல் திட்டத்தை முடித்துவிட்டு அனைவரும் அரசு மருத்துவமனைக்கு மீண்டும் திரும்பியிருக்கிறார்கள். இந்த முற்பகல் திட்டத்தின் மொத்தக் காட்சியிலும் போலீசு ஒரே ஒரு சீனில் கூட வராதது தற்செயல் அல்ல. ஒரு இடத்தில் கூட வந்து பந்த்தை தடுக்கும் நடவடிக்கையில் போலீசு ஈடுபடவில்லை.

kovai-hindutva-thugs-violence-36மதிய வாக்கில் உடற்கூறாய்வு முடிவடையும் போதே கிட்டத்தட்ட கோவையின் பிரதான பகுதிகள் துவங்கி மொத்த மாவட்டத்தின் இயக்கமும் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால், அப்போது வரை காவல்துறை வைத்திருக்கும் எந்த சிறப்புப் படையும் மருத்துவமனைக்கு வரவில்லை. கொடி அணிவகுப்பு போன்ற முன்னேற்பாடுகள் எதுவும் நடக்கவில்லை. “இன்னும் எதுவும் நடக்கவில்லையே” என காவல்துறை காத்திருந்தது போலவே அப்பட்டமாக தெரிந்தது. முந்தைய அனுபவங்களிலிருந்து இன்று என்ன நடத்த முனைகிறார்கள் என்பது பட்டவர்த்தனமாக தெரிந்தது.

பிணத்தை ஊர்வலமாக கொண்டு போகப் போகிறார்கள் என்று அறிவிப்பு வந்ததும், அதற்கு 18 கிலோமீட்டர் சுற்றி துடியலூர் மின் மயானம் செல்ல காவல்துறை அனுமதி கொடுத்ததும் இவர்களது எண்ணத்தை தெளிவாகவே காட்டியது. பிணம் பிணவறையை விட்டு வெளியே வரும் முன்னரே காவிக் கும்பல் அருகிலிருக்கும் இஸ்லாமியர் பகுதியான கோட்டைமேட்டுக்கு சென்று கடைகளை அடைக்க சொல்லி மிரட்ட அவர்கள் மறுக்க பதட்டம் கூடிய நிலையிலும் அங்கேயே நின்று கொண்டிருந்த காவல்துறை  இந்து முன்னணி கும்பலைத் தடுக்கக் கூட முனையவில்லை. 1997-ல், இதே கோவையில் இதே உக்கடத்தில் அருந்ததிய இந்துக்களும் முஸ்லீம்களும் மோதிக்கொண்டிருக்கும் போதும் காவல் துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது வரலாறு.

kovai-hindutva-thugs-violence-01முசுலீம் மக்கள் வாழும் பகுதியின் வழியாகவே பிணத்தை கொண்டு செல்லவும் அனுமதித்திருக்கிறார்கள். கோவை, திருப்பூர் பகுதிகளிலிருந்து திரட்டப்பட்ட சுமார் 1500 பேருடன் பிணத்தை முன்னெடுத்துக் கொண்டு பைக் பேரணியாக கிளம்பினார்கள். காவிகளுக்கு வந்த வழிகாட்டுதல், “முடிந்த வரை தாமதப்படுத்தி கொண்டு போக வேண்டும்; போகும் வழியில் எந்த கடை திறந்திருந்தாலும் அடிக்க வேண்டும்; பள்ளி வாசல் மீதும் சர்ச் மீதும் கண்டிப்பாக தாக்குதல் நடத்த வேண்டும்; அங்கு முன்னால் நிற்கும் ஆட்களை அடித்தாலும் தப்பில்லை; முசுலீம்கள் கடைகளை கண்டிப்பாக அடிக்க வேண்டும்; இறுதி இலக்கான துடியலூரை துவம்சம் செய்ய வேண்டும்” என்பதே. இது ஒரு காவியின் வாக்குமூலம். இதை காவல் துறையின் ஆதரவோடு செய்யப்போகிறோம் என்பது அவர்களுக்குள் கூடுதலாக ஒரு துளி உற்சாகம் தந்திருக்கும். அதுவும் கமிஷனர் முன்னாலேயே என்பது இன்னும் போதை ஏற்றும் விசயமல்லவா…! “போலீஸ்காரன் பக்கத்துல கெடந்த கல்லையே தூக்கி அடிச்சன்டா.. அவன் ஒண்ணுமே சொல்லல டா…..!” இதுவும் ஒரு காவி சொன்னதே.

kovai-hindutva-thugs-violence-20துடியலூர் வரும் வரை நூற்றுக்கணக்கான கடைகளை, ஏராளமான முஸ்லீம் அடையாளங்கள் தொனித்த வாகனங்களை அடித்து நொறுக்கி குப்புற கவிழ்த்துப் போட்டு, கண்ணில் பட்ட பள்ளி வாசல்கள் அனைத்தின் மீதும் கல் எறிந்தபடியே வந்த காவிக் கும்பல், துடியலூரில் கிட்டத்தட்ட 20 கடைகளை சூறையாடி 6 கடைகளுக்கு தீ வைத்தனர். ஒரு காவலரின் மண்டையை பிளந்த பின்னர் தான் காவல்துறை இங்கு தடியடிப் பிரயோகம் செய்து துரத்த, பதிலுக்கு துடியலூர் காவல்துறை ஆய்வாளரின் ஜீப்பை நடு ரோட்டில் போட்டு எரித்தனர்.

ஒரு முழு நாளையும் திட்டமிட்டு பயன்படுத்தி காவல்துறையின் சீரிய பங்களிப்போடு ஒரு கலவரத்தை நடத்தி முடித்துள்ளனர். இந்தப் பிணம் அரசு மருத்துவமனையில் இருக்கையிலேயே இந்த இந்து முன்னணி கும்பலை பற்றி ஓரளவு அறிந்த கோவை மக்கள் பலர் காலையிலேயே கலவர நெடியை உணர்ந்து விட்டார்கள். அறிவிப்பில்லாமல் கலவரங்கள் அமலுக்கு வருவதில்லை. ஆனால், காவல்துறை இதை அணுகிய விதம் என்பது மிக மிக ஆபத்தான போக்கிற்கான அறிகுறி. கொலை, கொள்ளையில் அப்பட்டமாக ஈடுபடும் இந்த காவல்துறைதான் இதே கொள்ளை கலவர கும்பலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது என்றால் இங்கு சொல்லிக் கொள்ளும்  ஜனநாயகம் நரகலை விட அசிங்கமாக நாறுகிறது என்று பொருள்.

kovai-hindu-munnani-riot-pp-poster.கலவரம் முடிந்து இந்து முன்னணி, திருப்பூரில் இரண்டு நாட்கள் செயற்குழு கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது. இங்கு போலீஸ் கைது பண்ணிக்கொண்டிருக்கிறது. கோவையில் நூறு வார்டில் கவுன்சிலர் கேண்டிடேட்டாக நிற்கவிருந்தவர்கள் எத்தனை பேர் கைதாகியிருக்கிறார்கள் என்றால் மிகக் குறைவு. மொத்தத்தில் அணிகளை தன்னுடைய வழக்கமான சூழ்ச்சியினால் சிக்க வைத்து அதில் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள், இந்துமதவெறியர்கள்.

தமிழ்நாட்டை குஜராத்தாக மாற்றுவேன் என்று பகிரங்கமா பேட்டி கொடுத்து தூண்டி விட்டு கடைகளை  பள்ளிவாசலை உடைக்க சொன்னவன் அங்கே செயற்குழு கூட்டத்தில் பகிரங்கமாக ‘எழுச்சியுரை’ ஆற்றிக் கொண்டிருந்தார்கள். இங்கே போலீசும், ஐ.பி.எஸ்சும், ஏட்டையாக்களும் மிக்சர், காபியுடன் சகஜமாக இருக்கின்றனர். இதற்கு முந்தைய கலவரங்களில் எந்த இந்து கைதானானோ அதே காலாட்படை இந்துக்கள் மட்டும்தான், செல்போன் திருடுனவன் பிரியாணி திருடுனவன  என்று கைது செய்யப்படுகிறார்கள்.  ஊடகங்களும் இதை பெரிய செய்தியா 400 பேர் கைது என்று போடுகிறார்கள். ஆனால் முக்கியமான ரவுடிப்பட்டாளங்கள், தளபதிகள் ஒருவர் கூட காவல் துறையால் கைது செய்யப்படவில்லை.தந்தி, புதிய தலைமுறை உள்ளிட்ட ஊடகங்கள் போலிசின் அணுகுமுறையை அம்பலப்படுத்தாமல் ஆதரித்தே செய்திகளை வெளியிட்டன.

அச்சு ஊடகங்களும் இந்து முன்னணி களத்தில் செய்த வன்முறையை மென்மையாக எழுத்தில் மாற்ற கடும் பிரயத்தனப்பட்டனர். துப்பாக்கிச் சூடு ஒன்று நடந்திருக்கிறது துடியலூரில் அது மறைக்கப்பட்டிருக்கிறது. பெரியநாயக்கன்பாளையம் சித்ராக்கா என்ற பெண்மணி அடுத்த கவுன்சிலர் ஆகி ஓட்டுப் பொறுக்கும் ஆசையோடு பி.ஜே.பி-யில் வலம் வரும் ஒருவர். இவர் தலைமையில் நடந்த அட்டூழியங்கள் பலவும் மறைக்கப்பட்டிருக்கின்றன. முஸ்லீம் ஒருவரின் செல்போன் கடையில் திருடிய காட்சி கண்காணிப்பு கேமராவில் சிக்கி வெளிவந்து இந்து முன்னணியின் நாற்றம் வாட்ஸ்-அப்பில் மணக்கிறது. இதை இந்து முன்னணி போர்வையில் சமூக விரோத கும்பல் என தலைப்பிட்டு நியாயப்படுத்துகிறது தமிழ் இந்து. இந்து முன்னணியே சமூக விரோத கும்பல் தானே?

மாநில அரசின்  பங்களிப்பு, கண்ணசைவு  இல்லாமல் ஒரு மாநகராட்சியை, தொழில் நகரை இப்படி முடக்க முடியாது.  காவி கொள்ளிக் கட்டைகள் திருப்பூரில் அடுத்த அடிக்கு ஆயத்தமாகிறார்கள். திட்டமிட்டு கலவரத்தை தூண்டி, முஸ்லீம்களை எதிர்நிலைக்குத் தள்ளி, அவர்களையும் அமைப்பாக – இந்து எதிர் அமைப்பாக மாற வேண்டிய சூழலை, மதப்பதட்ட சூழலை – கலவர நிலையை உருவாக்கும் இந்து முன்னணி, அதற்கு துணை நிற்கும் காவல் துறை இரண்டும் தான் முதன்மை குற்றவாளிகள்,

இக்கலவரத்தில். கைதான 378 வீர இந்துக்களில் எத்தனை பேர் பார்ப்பன இந்து? எத்தனை பேர் கவுண்ட இந்து? எத்தனை பேர் அருந்ததிய, இதர தாழ்த்தப்பட்ட இந்து? – எனக் கணக்கிட்டால்  இந்த கும்பலின் உண்மை முகம் தெரியும். 1997 கலவரத்தில் கெம்பட்டி காலனி குனியமுத்தூர் உக்கடம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த அருந்ததிய சமூகத்தை சேர்ந்த கணிசமான மக்களை காலாட்படையாக பயன்படுத்தி கலவரத்தை நடத்தினர். இம்முறை கொஞ்சம் நகர்ந்து சிவானந்தா காலனி, கவுண்டம்பாளையம், துடியலூர் என்று வந்து விட்டார்கள். ஆனால், எங்கு வந்தாலும் கேஸ் வாங்க ஒரு சாதி அதற்கு வெறியேத்த ஒரு சாதி திட்டம் போட்டு இயக்குவது ஒரு சாதி. இப்படி இது சாதியை பாதுகாக்கும் சாதி முன்னணி! பார்ப்பன – ‘மேல்’ சாதி இந்துக்கள் இயக்கங்களின் தலைமையில் வழிநடத்த, பிற்படுத்தப்பட்ட ஆதிக்கச் சாதி இந்துக்கள் வட்டார அளவில் தலைமை வகிக்க – அணிதிரட்ட, பிற்பட்டுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட இந்துக்கள் களத்தில் தாக்குதலை நடத்துகிறார்கள். ஆக பார்ப்பனியத்தின் வருண தருமம் கோவை ஆர்.எஸ்.எஸ் கலவரத்திலும் அச்சு அசலாக அப்படியே செயல்படுகிறது.

இந்த தாக்குதலில் விநாயகர் ஊர்வலத்திற்கு காசு கொடுத்த இந்து வியாபாரிகளும் கூட தாக்கப்பட்டிருக்கிறார்கள். இனி கோவை வர்த்தகர்கள் அனைவரும் இந்த சூறையாடலுக்கு பயந்து மாமுல் கொடுத்தே ஆக வேண்டிய சூழ்நிலை.

இது ஒரு துவக்கம் தான்.  வளர்ச்சி கோஷமிட்டு ஆட்சியை பிடித்த மோடி கும்பலின் சுயரூபம் இதுதான். குஜராத் மாடல் என்பது இதுதான். குஜராத்தில் இன்னும் பா.ஜ.க கும்பல் செல்வாக்கு செலுத்தும் பகுதிகளில் நடைபெறுவதும் இதுதான். இந்த அருவருத்து ஒதுக்கப்பட வேண்டிய பார்ப்பனிய கும்பல் நம் தமிழகத்தை நெருங்கி வந்துவிட்டது. கோவையின் தலைக்கு மேல் எந்நேரமும் மதவெறிக்கத்தி தொங்கி கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை.

கருத்துத் தளத்திலும் நடைமுறைக் களத்திலும் பார்ப்பனி இந்துமதவெறி பாசிசத்தை முறியடிக்க வேண்டியது நம் கடமை!

கோவையில் RSS, BJP கும்பலின் காலித்தனம்!

உழைக்கும் மக்களே!

கட்டப்பஞ்சாயத்து ரவுடி, ரியல் எஸ்டேட்
புரோக்கர் சசிக்குமார் கொலைக்காக
முசுலீம் கடைகள் சூறையாடல்!
அரசு வாகனங்கள் உடைப்பு – எரிப்பு!

குஜராத் மாடலில் வன்முறையைத் தூண்டி
உள்ளாட்சி பதவிகளை தமிழகத்தில் கைப்பற்றவே
காவி படைகளின் வெறியாட்டம்!

வானரப்படையின் வன்முறைக்கு துணைபுரிந்த
கோவை போலீசு கமிசனர் அமல்ராஜை கைது செய்து,
சிறையில் அடைக்க போராடுவோம்!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நட்டஈட்டை வழங்க
அரசை நிர்ப்பந்திப்போம்!

இந்து முன்னணி, RSS, PJP ஆகிய இந்து மதவெறி கும்பலை
தமிழகத்தில் இருந்து விரட்டியடிப்போம்!

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கோவை

  1. பிரியாணி கடையில புகுந்து பிரியாணிய திருடி திண்ணுட்டு…
    பிரியாணி சட்டியையும் களவாண்ட திருட்டு முண்டங்கள்தான்

    • அப்படியெல்லாம் முற்று முழுதாக அவநம்பிக்கை கொள்ள வேண்டியதில்லை சகோதரரே.இதை படித்துப்பாருங்கள்.

      https://www.facebook.com/kanaka.raj.142/posts/1522090237817687

      மேலும் செய்திக்கு அப்பால் என்ற நியூஸ் 7-தொலைக்காட்ச்சி நிகழ்ச்சியில் பேசிய தோழர் தியாகுவிடம் ”தமிழ்நாட்டை குஜராத்தாக மாற்றுவோம்” என்று காவி வெறியர்களின் ஊளை குறித்து நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு தோழர் அளித்த விரிவான பதிலிலிருந்து ஒரு பகுதி.

      ”தமிழ்நாட்டை குஜராத்தாக மாற்ற தமிழ்நாட்டின் முற்போக்கு ஆற்றல்கள்,தமிழ் தேசிய ஆற்றல்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.இசுலாமிய மக்களை இந்துத்துவ வெறியர்கள் தாக்க முற்படுவார்களேயானால் அந்த மக்களுக்கும் இந்துத்துவ வெறியர்களுக்கும் இடையில் நாங்கள் மனித மதில் சுவராக நின்று அந்த மக்களை பாதுகாப்போம்”.

    • ஒருவர் கொலை செய்யப்பட்டார் என்றால் , காவல் துறை குற்றவாளியை பிடிக்கும் .
      கொலை செய்த ரவுடி ஒரு இசுலாமியராகவே இருந்தாலும் , மற்ற அப்பாவி பொது ஜன இசுலாமியர்களின் கடைக்கும் உடைமைக்கும் எப்படி சேதம் விளைவிக்கலாம் ?

      அதற்கான உரிமையை யார் தந்தது ?

      வேலைக்கு போகாத இளைஞர்களுக்கு ஒரு சிறு வணிகர்களின் கஷ்ட நஷ்டங்களை உணரும் பக்குவம் கொஞ்சமும் இல்லை

      சென்னையில் கோவையை சேர்ந்த ஒருவர் கொலை செய்துவிட்டால் , எல்லா கோவை மக்களின் கடைக்கும் சேதம் செய்யலாமா ?

      கோவையில் இருக்கும் உங்களுக்கு இசுலாமிய நண்பர் கிடைக்கவில்லையா ? பழகியதே இல்லையா ?

      • ராமன் நியாயமா பேசுறாரு.ஆனா அவாளுக்கு நியாயம் ”செலெக்ட்டிவா ”த்தான் நினைவுக்கு வரும்.இதே அட்டூழியத்தையும் அக்கிரமத்தையும் மோடி தூண்டி விட்டு செய்தது பற்றி பேசியபோதெல்லாம் அந்த அயோக்கியத்தனத்துக்கு மாஞ்சு மாஞ்சு சப்பைக்கட்டு கட்டினாரே,அப்போ எங்கய்யா போயிருந்துச்சு இந்த நியாய உணர்வு.கோத்ராவில் தொடர்வண்டி பெட்டி ஒன்றை முசுலிம்கள் சிலர் கொளுத்தினார்கள் என்றே ஒரு வாதத்திற்க்காக வைச்சுக்கலாம்.குற்றவாளிகளை பிடித்து தண்டனை வழங்குமுன்பே குற்றத்துடன் எந்த தொடர்பும் இல்லாத மூவாயிரம் முசுலிம்களை கொன்ற மாபாதகத்துக்கு எந்த கண்டனமும் தெரிவிக்காத யோக்கியர்கள் நியாயவான் வேடம் போடுவது சகிக்கவில்லை.

        • திப்பு என்பவர் என்னுடைய சார்பாக , நான் குஜராத் படுகொலையை ஆதரித்ததாக கருத்து தெரிவித்துள்ளார் . அது என்னுடைய கருத்து அல்ல அவருடைய விருப்பம்.

          காரணம் அற்ற, மனித நேயம் அற்ற கொலைகளை என்றைக்கும் ஆதரிக்க வில்லை .

          அது போன்ற படுகொலைகளை மத கும்பல்கள் தன்னிச்சையாக செய்தன , அது போன்ற கலவரங்களை கட்டுப்படுத்த இந்திய அரசு இயந்திரம் என்றைக்கும் தயாராக இருந்தது இல்லை .

          மோடி என்கின்ற தனி ஒருவர் , தனது விருப்பத்தின் படி பதவியை கொண்டு , கொலைகளை செய்துவிட முடியாது . அம்பேத்காரின் செக் அண்ட் பேலன்ஸ் அரசு இயந்திரத்தை அப்படி பயன்படுத்துவதை தடுத்து , அதிகார குவியதை தடுத்து பரவலாக்குகிறது என்பதே எனது கருத்து .
          மும்பை தாஜ் தீவிரவாதிகளை பிடிக்க ராணுவம் வர எவ்வளவு நேரம் ஆனது ?

          குஜராத் பிற மாநிலங்களின் காவல் துறை உதவியை நாடிய பொழுது கொடுத்து உதவாத காங்கிஸிர மாநிலங்கள் இருக்கும் பொழுது , உதவியை நாடிய அரசாங்கத்தை குறை கூறுவது மேலும் அவர்களே முன்னின்று செய்தார்கள் என்கின்ற கான்சிபிரசி தியரிகளை விரும்புவதால் பலன் என்ன ? என்பது தான் எனது கருத்தின் சாராம்சம் .

          மதவாத திப்பு நல்லவனாக அடுத்தவரை குறை கூறித்தான் நல்லவராக வேண்டுமா ?

          • //// குஜராத் பிற மாநிலங்களின் காவல் துறை உதவியை நாடிய பொழுது கொடுத்து உதவாத காங்கிஸிர மாநிலங்கள் இருக்கும் பொழுது , உதவியை நாடிய அரசாங்கத்தை குறை கூறுவது மேலும் அவர்களே முன்னின்று செய்தார்கள் என்கின்ற கான்சிபிரசி தியரிகளை விரும்புவதால் பலன் என்ன ? என்பது தான் எனது கருத்தின் சாராம்சம் ////

            அதாவது, மோடி கலவரத்தை நடத்தலை .. முஸ்லீம்கள் எல்லாம் தானா தன் மேல பெட்ரோல் ஊத்தி கொழுத்திக்கிட்டு செத்துட்டாங்க .. அப்படி அரை குறையா எரிஞ்சு உசிருக்குப் போராடிக்கிட்டு இருக்கும் போது பக்கத்துல இருக்கவன் ஆசுபத்திரிக்கு கூட்டிட்டுப் போனாலும் , அந்த நிலமையிலயும், ஆசுபத்திரிக்கு என்னை கூட்டிட்டு போனா உன்னை எரிச்சுருவேன்னு காப்பாத்த வந்த ஆட்களையும் அவங்களே தொரத்தியடிச்சிட்டாங்க. குல்பர்க் சொசைட்டில இருக்கவங்க மொத்தமா முடிவு பண்ணி தங்களுக்கு தாங்களே ஒட்டு மொத்த குடியிருப்புகளுக்குள்ளயும் வெட்டி சாச்சு, எரிச்சு மாத்தி மாத்தி கொல பண்ணிக்கிட்டாங்க..

            மோடி பாவம், இதெல்லாம் தடுக்குறதுக்கு பக்கத்து ஊருல இருந்து ஆள வரவைக்க ஆளனுப்புனா, காங்கிரசுகாரன் முசுலீம் விரோதி, முசுலீம் தற்கொலை தான பண்ணிக்கிறாங்க , பரவாயில்லான்னு விட்டுட்டான் ..
            – கெரெக்டா சொன்னேனா ராமன் ..
            குஜராத் கான்சிபிரசி தியரியப் பத்தின ராமன்ஸ் தியரிய கேட்டா மோடிக்கும் அமித்ஷாவுக்கும் கூட உடம்பெல்லாம் கூசிடப் போகுது .. பாத்து ..

          • குஜராத் இனக்கொலையை தூண்டிய மோடிக்கு வக்காலத்து வாங்க மாய்ந்து மாய்ந்து சப்பைக்கட்டு கட்டியவர் இவர் என்பதுதான் குற்றச்சாட்டு.

            கோத்ராவில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை குடும்பத்தினரிடம் ஒப்படைக்காமல் VHP யிடம் ஒப்படைத்து ஊர்வலமாக எடுத்து செல்ல அனுமதித்தார் மோடி.அதன் மூலம் கலவரத்துக்கு வித்திட்டார்.

            கோவையிலும் சசிகுமார் சடலத்தை பத்து கி.மீ.க்கு மேல் ஊர்வலமாக எடுத்து செல்ல காவல்துறை அனுமதித்தது.கலவரம் நடத்த வழி வகுத்து தரப்பட்டது.

            சசிகுமார் சாவை தொடர்ந்து தமிழ்நாட்டை குஜராத்தாக மாற்றுவோம் என ஊளையிட்டது ஒரு காவி நரி. கலவரம்,கொலை,கொள்ளை நடத்துங்கள் என தனது வானரப்படைகளுக்கு கொடுக்கப்படும் சமிக்ஞ அது.இதே அயோக்கியத்தனத்தை மோடியும் செய்தார்.

            கோத்ரா நிகழ்வை அடுத்து அவர் இட்ட ஊளை.

            ”இதற்க்கான விலையை அவர்கள் கொடுத்தாக வேண்டும்.”

            நியாயமாக இந்த மாதிரி குற்ற நிகழ்வை அடுத்து பொறுப்பான இடத்தில் இருப்பவர்கள் சொல்வது ”குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்”என்பதாகத்தான் இருக்கும்.ஆனால் மோடி சொன்னதிலிருந்தே அவரது கெட்ட நோக்கம் தெளிவாகிறது.

            பக்கத்து மாநில காவல்துறை உதவி கேட்டாராம்.அய்யா அறிவாளியே,மாநிலத்துக்குள்ளயே பல ராணுவ முகாம்களில் இருக்கும் ராணுவத்தை கேட்டு பெற்றிருக்கலாமே .கலவரத்தை தடுக்கும் எண்ணம் இருந்தால்தானே ,கேட்பார்.பக்கத்து மாநில காவல்துறை உதவி என்பதெல்லாம் காலம் கடத்தும் உத்தி அவ்வளவுதான்.

            இவ்வளவு இருந்தும் வெட்கமின்றி மோடிக்கு வக்காலத்து வாங்குபவர்கள் கோவை தாக்குதல்களை கண்டிப்பது யாரை ஏய்க்கும் நாடகம்.

            • உங்கள் வாதப்படி காங்கிரசை ஆதரிக்கும் நீங்கள் சீக்கியர் படுகொலையை அங்கீகரித்ததாக எடுத்துக்கொண்டு , கோவை கலவரத்தை பற்றி பேச அருகதை இல்லை என்று கூறலாமா ?

              இதை பற்றி நிறைய விவாதிதாயிற்று மீண்டும் விவாதிக்க, அதுவும் சேற்றை இறைக்கும் விவாதத்தில் பங்கு பெற எனக்கு நேரம் இல்லை . முற்றும்

              • காங்கிரசை எங்கே ஆதரித்திருக்கிறேன்.இது மீசையில் மண் ஒட்டாமல் விவாதத்திலிருந்து தப்பிக்கும் மலிவான உத்தி.ஏற்க்கனவே இந்த குற்றச்சாட்டை இவரு எடுத்து உட்டபோது அளித்த பதில் இது.

                https://www.vinavu.com/2015/11/13/london-protests-against-fascist-modi/#comment-457627

                காங்கிரசே ஒரு பார்ப்பனிய இந்துத்துவ இந்து மதவெறி கட்சிதான்.1949-ல் பாபர் மசூதியில் கள்ளத்தனமாக இந்து தெய்வ சிலைகளை வைத்தது முதல் அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்த அன்றைய உ,பி.முதல்வர் பந்த் மீது நடவடிக்கை எடுக்காமல் துணை போன நேரு,1986-ல் அந்த சிலைகளை வழிபட பூட்டிக்கிடந்த மசூதியை திறந்து விட்டது ,1989 நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையை அயோத்தியிலிருந்து துவக்கிய ராஜீவ் என காங்கிரசின் இந்துத்துவ சார்பு நாடறிந்தது.மண்டல் ஆணைய அறிக்கையை அமுல்படுத்தாமல் பத்தாண்டுகளுக்கும் மேலாக குப்பைக்கூடையில் போட்டு வைத்திருந்த அதன் பார்ப்பனிய சார்பையும் நாங்கள் அறிவோம்.இடையில் தேசிய முன்னணி.ஐக்கிய முன்னணி ஆட்சிகள் ஒரு சில ஆண்டுகள் வராமல் போயிருந்தால் மண்டல் அறிக்கை இன்று வரை அந்த கூடையிலேயே கிடந்திருக்கும்.

                அதனால் காங்கிரசுக்கு நற்சான்றிதழ் வழங்கும் அளவுக்கு நான் முட்டாளாக இருப்பேன் என எதிர்பார்க்க வேண்டாம்.அதே சமயம் பா,ச,க மாதிரி கலவரம் நடத்தி காங்கிரசு செல்வாக்கு வளர்ப்பதில்லை.ஏனெனில் மத,சமூக நல்லிணக்கத்தை விரும்பும் பெரும்பாலான மக்களின் ஆதரவை பெறுவதற்காக காங்கிரசு இந்துத்துவத்தை நேரடியாக அல்லாமல் மறைமுகமாக அமுல்படுத்துகிறது.அதாவது பா.ச.க.வின் பார்ப்பனியத்தை எதிர்க்கும் இடத்திலும் காங்கிரசின் வடிவில் பார்ப்பனியமே உட்கார்ந்திருக்கிறது.

          • இவர் எந்த ராமன்? கல்யாணராமனுக்கு சொந்தமாக இருந்துவிடவே கூடாது.இருக்கமாட்டார் என்றே நம்புகிறேன்.”மோடி என்ற தனிநபர் தன் விருப்பத்தின் படி பத்வியை கொண்டு” பதவியை கொண்டு என்று குறிப்பிடுகிறீர்கள் பிறகு எப்படி தனி ஒருவர் ஆவார்.ஒரு மாநிலத்தின் முதல்வர் என்பவர் தனிஒருவரா?அவர் ஒரு அரசாங்கமல்லவா?நீங்கள் சொல்வது மோடிக்கே எரிச்சல் வருமே…”என்னை காப்பாற்றுவதாக நினைத்துக்கொண்டு இப்படி நம்மை காமடியாக்குகிறாரே ராமன்” என்று மோடி நினைக்க மாட்டார்? நினைவில்லையா..அந்த கொடூரம் நிகழும்பொழுது கேஆர் நாராயணன் ஜனாதிபதியாக இருந்தார்.அந்த மனிதர் பிறகு குறிப்பிட்டார் “நான் பிரதமர் வாஜ்பேயிடம் மன்றாடினேன் குஜராத்தில் நடப்பது அரச பயங்கரவாதம். அரசாங்கமே தன் மக்களின் ஒரு பகுதியினரை குறிவைத்து கொன்று குவிக்கிறது.உடனடியாய் ஏதாவது செய்யுங்கள் கெஞசினேன் பிரதமர் கல்லாய் இருந்துவிட்டார்” என்று அன்றைய குடியரசு தலைவர் தன் பதவிகால அனுபவத்தை குறிப்பிட்டு எழுதியது பல பத்திரிகைக்ளில் ஆவனமாய் இருக்கிறது.நாராயணனை விடுங்கள் வாஜ்பாய் கூட அந்த நேரத்தில் மோடிக்கு எதிராக நடித்து நீலிகண்ணீர் விட்டது உண்டே மறந்து போனதா?தன் மிதவாத முகமூடியை காப்பாற்றிகொள்ள குஜராத் அராஜகத்தை மறைக்க முடியாமல் முனுமுனுப்போடு ஒப்புக்கொண்ட அவரின் செயலும் வரலாறு.கண்ணுக்கு முன்னால் உண்மை பயங்கரமாய் பல்லிலித்து கிடக்கிறது.இவர் என்னடாவென்றால் “அம்பேத்கரின் செக் அண்ட் பேலன்ஸ்”என் கிறார் மும்பை தாஜ் தீவரவாதிகள் ராணுவம் என் கிறார்….ரொம்ப படித்தவராக இருப்பார் போல.அன்றைய குடியரசு தலைவருக்கும் அன்றைய பிரதமருக்கும் தெரியாததெல்லாம் இவருக்கு தெரிந்திருக்கிறது.

          • Has Ambedkar’s check and balance removes concentration of power?If it is so,how come PM’s secretariat and advisers to CM in some states become so powerful?Raman tries to hide big bumpkin fruit inside the rice in the plate.KAIPPUNNUKKU KANNAADI THEVAYILLAI.

          • //அது போன்ற கலவரங்களை கட்டுப்படுத்த இந்திய அரசு இயந்திரம் என்றைக்கும் தயாராக இருந்தது இல்லை//
            //மோடி என்கின்ற தனி ஒருவர்//
            //குஜராத் பிற மாநிலங்களின் காவல் துறை உதவியை நாடிய பொழுது//

            மோடி என்பவர் ஒரு தனி நபர். அவரால் ஒரு ஆணியும் புடுங்க முடியாது. அரசு எந்திரம் என்றைக்கும் மக்களுக்காக இயங்காது. ஆனால் இரண்டையும் நாம் குறை சொல்லக் கூடாது. அதற்கு நாம் ராமன் தியரியைக் கற்றுக்கொண்டாக வேண்டும்.

            குஜராத்தின் ஒவ்வொரு சாதனையையும் தான் தனி ஒருவனாக நின்று செய்ததாக ஊர் ஊராக சென்று ஓட்டு கேட்டவன் மோடி. நான் பிரதமராக வந்தால் பாகிஸ்தான் தீவிரவாதத்தை தன் பெரிய மார்பு கொண்டு ஒடுக்கிவிடுவேன் என்று சவால்விட்டவன்.

            அப்படியெல்லாம் அல்ல, அவரால் ஒரு ஆணியும் புடுங்க முடியாது, அவர் ஒரு தனி நபர் என்று மோடியின் இன்னொரு வாயாக அவதரித்து பேசுகிறார் திருவாளர்.ராமன்.

            அம்பானி அதானியெல்லாம் கொடி கட்டிப் பறந்தால் அது மோடியின் சாதனை. விவசாயிகள், முஸ்லீம்கள் செத்தால் மோடி ஒரு தனி நபர். பாவம் அவரால் ஒன்றும் செய்ய முடியாது. இல்லையா ராமன் அவர்களே?

  2. குஜராத் கலவரத்தில் முதலமைச்சர் தன விருப்பப்படி , காவல் அதிகாரிகளை இசுலாமிய மக்களை காக்க வேண்டாம் என்று கூறினார்,அதற்கு அரசு இயந்திரம் துணை நின்றது என்பது குற்றச்சாட்டு .

    அவர் வாய்மொழி உத்தரவு அளித்ததை ,செய்யின் ஆப் கம்மெண்ட்ஸ் கடைக்கோடி காவல் அதிகாரி வரைக்கும் செல்ல வேண்டும் . இசுலாமிய கிருத்துவ , நாத்திக இந்து காவல் அதிகாரி பலர் இல்லையா ? இந்த மாதிரி உத்தரவு வந்தது என்பதை நிரூபிக்க ? ஒரே ஒரு உயர் அதிகாரி , ரகசிய கூட்டத்தில் மோடி கூறினார் என்று முன் வந்து கூறினார். அவர் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டதை சட்டத்தின் முன் நிரூபித்து இருந்தால் , இந்த விவாதமே அர்த்தம் அற்றதாகி விடும் . மோடியும் கம்பி எண்ணி கொண்டு இருந்து இருக்க வாய்ப்பு உண்டு .

    கே ஆர் நாராயணன் கிசு கிசு பகுதியில் எழுதுவது போல எழுதுவதால் பலன் இல்லை . கோர்ட்டில் படி ஏறி சாட்சி சொல்லி நிரூபிக்க முனைந்து இருக்க வேண்டும் . ஆயிரம் பேருக்கு மேல் கோரக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் , மனசாட்சி உள்ள யாரும் அதை தான் செய்வார்கள் . புத்தகத்தில் எழுதி நல்லவன் என்று காட்டி கொள்வதால் பலன் இல்லை . அவர் செயல் கோர்ட்டில் ரகசிய கூட்டத்தை பற்றி கூறிய அதிகாரியின் பங்கில் ஒரு சதம் அளவிற்கு கூட ஈடாகாது .

    குஜராத்த கலவரம் சார்ந்த ப்ரோடோகால்களை பயன்படுத்தியதா ? உதாசீனப்படுத்தியதா ? கால தாமதப்படுத்தியதா ?
    கண்டதும் சுடும் உத்தரவு எப்போது பிறப்பிக்கப்பட்டது . அதி சுடுப்பட்டவர்கள் எத்துனை பேர் ?
    கலவரம் செய்யத்தவர்கள் எத்துனை பேர் கைது செய்யப்பட்டார்கள் ?
    எத்துனை பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது ?

    போன்ற கேள்விகளுக்கு இதற்கு முன்னாள் நடந்த கலவரத்தை ஒப்பிட்டு , இதோ இதில் குஜராத் அரசாங்கம்
    தவறி விட்டது என்று கூறலாம் . ஒரு பென்ச்மார்க் புள்ளயில் ஒப்பிடலாம் .

    அடுத்து நடைமுறையில் உள்ள ப்ரோடோகால்களை அமல்படுத்தியும் குடிமக்களை காக்க முடியவில்லை என்னும் போது , என்ன என்ன திருத்தங்கள் செய்ய வேண்டும் எப்படி இந்த ப்ராஸசை மாற்றி அமைக்கலாம் என்று கட்டுரை எழுதலாம் .

    பிற நாடுகளின் செயல் முறையை ஆய்வு செய்யலாம் .

    அமெரிக்காவில் இருப்பது போன்ற ஆய்தம் ஏந்தும் உரிமை போன்றவை, இங்கே கொண்டு வர முடியுமா என்று ஆய்வு செய்யலாம். வீட்டில் துப்பாக்கி இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று தெரிந்தால் பக்த கேடிகள் கலவரம் செய்ய வருவார்களா ?

    இது போன்ற எதுவும் இல்லாமல் , குஜராத் அரசாங்கம் தன குடிகளை கொன்றது என்று சட்டத்தில் நீர்ரோபிக்க முடியாததை பேசி, அடுத்தவர் ஏற்று கொள்ள வேண்டும் , ஏற்று கொள்ளாவிட்டால் நீ கெட்டவன் என்பது ,
    பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு கை தட்டியவனை தேச துரோகி என்று கூறுவதற்கும் என்ன வித்தியாசம் ?
    கருத்து மாறுபாடு கொண்டவர்கள் எல்லாம் கெட்டவர்கள் என்கின்ற வன்முறை .

    இல்லை குமாரசாமி தீர்ப்பு போல முற்றிலும் போங்கு தீர்ப்பாக இருந்தது என்றால் அது எப்படி என்று கூறலாம் .அந்த கணித பிழை தீர்ப்பில் கூட ஜெ ஜே 8 சத அளவிற்கு தான் , சட்டத்திற்கு புறம்பான பணம் வைத்திருந்தார் என்று பதிவாகி இருக்கிறது . முற்றிலும் நிரபராதி என்று இல்லை

    நான் அவர் சொல்ல கேட்டேன் , இந்த சமூக சேவகி கூறினார், திப்புவின் உள்மனத்திற்கு தோன்றியது என்று சட்டத்திற்கு முன் நிரூபிக்க முடியாததை வைத்து முடிவுக்கு சென்றால் , நாடு அழிந்துவிடும் . பிலிப்பைன்ஸில் செய்வது போல , இவன் கஞ்சா விக்கிறவன் மாதிரி தெரியுது என்று ஒருத்தர் சொல்ல , இன்னொருத்தர் ஆமாம் என்று கூறினால் மூன்றாமவர் கொலை செய்துவிடலாம் . அது போன்ற காட்டுமிராண்டி அரசியல் அமைப்பா நாம் கொண்டு இருக்கிறோம் .

    இதோ இவர் உணவுகளை பதுக்கவே காலை நான்கு மணிக்கு ரேஷன் கடை முன்னாள் நிற்கிறார் , இவரை பிடித்து சிறையில் போடுங்கள் என்று வெனிசூலாவில் நடப்பதுபோலவா அரசியல் அமைப்பை கொண்டு இருக்கிறோம் .

    இங்கே விவாதம் செய்பவர்கல் நோக்கம் , ஆக்க பூர்வமாக ஒன்றும் இல்லை . வெறும் தனி மனித தாக்குதல் தான் .

    • காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதாக முதலில் ஒப்புக்கொண்டு விட்டு பிறகு பின்வாங்கியது காவி கும்பல்.இது தமிழக மக்களுக்கு செய்த அப்பட்டமான துரோகம்,அயோக்கியத்தனம் என்பதை ஒரு உயர்நிலை பள்ளி மாணவன் கூட சொல்லி விடுவான்.அவ்வளவு பச்சையான துரோகம்.அந்த அயோக்கியத்தனத்தையும் நியாயப்படுத்தி நேற்று தொலைக்காடசி விவாதங்களில் பேசினார்கள் காவிகள்.

      அதேபோன்றுதான் மோடியை இனப்படுகொலை குற்றத்திலிருந்து விடுதலை செய்கிறார் ராமன்.

      அமைப்பிலேயே கோளாறு இருக்கிறது,அதை சரி செய்ய வேண்டுமேயல்லாது மோடியை இனப்படுகொலைக்கு பொறுப்பாக்கி பயனில்லை என்கிறார்.

      நல்லது. அப்படியே வச்சுக்குவோம்.ஒரே ஒரு கேள்வி.இதுக்கு ராமன் யோக்கியமா பதில் சொல்லட்டும்.

      ஒரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வீடு பாதுகாப்பானதாக இருக்கும் என நம்பி நூற்றுக்கணக்கான முசுலிம்கள் அங்கு தஞ்சமடைந்திருந்தார்கள். அதை அறிந்த காவி வெறியர்கள் அவர்களை கொல்லும் நோக்கத்துடன் அந்த வீட்டை சூழ்ந்து கொண்டனர்.நூற்றுக்கணக்கான மனிதர்களின் உயிர்களை காப்பாற்ற உடனே வருமாறு காவல்துறையிடம் மீண்டும் மீண்டும் மன்றாடினார் ஈசான் ஜாபரி. ஆனால் காவிகள் அந்த வீட்டில் இருந்தோரை கொன்று தீர்க்கும் வரை காவலர்கள் வரவே இல்லை.இத்தனைக்கும் காவல் கட்டுப்பாட்டு அறை ,காவல் நிலையம் எல்லாமே அந்த வீட்டிலிருந்து கல்லெறி தொலைவில்தான் இருந்திருக்கின்றன.

      இது போன்ற கலவர சூழலில் மக்களை காப்பாற்ற அழைத்தால் காவலர்கள் போக வேண்டும் என்று இப்போதைய அமைப்பு சொல்கிறதா.போக வேண்டாம் என சொல்கிறதா.

      காவலர்களை கடமையை செய்ய விடாமல் தடுத்தது அமைப்பா,மோடியா.

  3. பெரிய லாஜிக்கல் கேள்வி என்று ஒன்றை கேட் கிறார்.முதல்வரின் வாய்மொழி உத்தரவு கடைகோடி காவல்ர் வரைக்கும் செல்லவேண்டுமாம்.அவர்களில் யாராவது ஒருத்தர் உண்மையை அன்பலப்படுத்தி இருப்பாராம்.மோடி கம்பி எண்ணியிருப்பாராம்.ரயில் எரிப்பு என்ற கோரமான மர்மமான ஒன்றை பயன்படுத்தி மிகக்கச்சிதமாய் திட்டமிட்டு நடத்திய இனப்படுகொலையை இவ்வளவு கேனத்தனமாகவா ஒரு முதல்வராக இருப்பவர் செய்வார்.எந்த ஒரு மாநில ஆட்சியிலும் தனக்கு விசுவாசமானவரையே காவல்துறை உயரதிகாரியாய் நியமிக்கிறார்கள்.அதனால்தானே ஆட்சி மாறும்பொழுது காவல் துறை அதிகாரிகளும் மாறுகிறார்கள்.ஒரு பெரிய இன அறுப்பு ஆப்பரேஷனை செய்யும்பொழுது எப்படிப்பட்ட அதிகாரிகளை நியமிக்க வேண்டும் அவர்களுக்கு கீழ் எப்படிப்பட்டவர்கள் இருக்கவேண்டும் என்ன முறையில் செயல்படவேண்டும் என்பதையெல்லாம் திட்டமிடமாட்டார்களா? கேஆர் நாராயணன் சொன்னதை மட்டும் சொல்லி விளக்கியவர் வாஜ்பாயும் ஒப்புக்கு கண்டித்தாரே அதை ஏன் தவிர்க்கிறார்.அன்றைய ப்ரண்ட்லைன் பத்திரிகை மிக விரிவாக ஒவ்வொன்றையும் அப்பட்டமாய் வெளியிட்டதே தெரியாதா? தெகல்காவில் கொலைகார கூட்டம் கொக்கரித்து உண்மையை கொட்டியதே பார்க்கவில்லையா? அவ்வளவு ஏன் இதோ கோயம்புத்தூர் சம்பவத்திற்க்கு பின் நரேந்திரமோடியின் பரிவாரத்தின் ஒரு பிரிவின் தலைவன் இன்னொரு குஜராத்தாக தமிழ்நாடு மாறும் என்ற திமிரெடுத்த பேச்சு யூடியுபில் இருக்கிறதே.ந்ரேந்திரமோடி கம்பி எண்ணுவாரா?.. எங்கே இருக்கிறீர் ராமன்.கனகச்சிதமாய் அவர் செய்த அந்த அற்ப்புத அரங்கேற்றத்திற்க்குத்தான் இரும்புமனிதன் அத்வானி பின்னுக்கு தள்ளப்பட்டு இவர் பிரதம மந்திரியாக ஆனார்.கொலை செய்தால் தூக்குமேடைக்கு போவதும் கொள்ளை அடித்தால் சிறைக்கு போவதும் யாருக்கு உரியது…இவர் அறியாத பிள்ளையா எல்லாம் நிறைய அறிந்த பிள்ளையா ..என்னவோ போங்கய்யா

Leave a Reply to meeran sahib பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க