மோடி அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஜல்லிக்கட்டு மூலமாக கிளர்ந்தெழுந்திருக்கிறது தமிழகம். நான்கு நாட்களாக கடற்கரையில், ரயில் நிலையங்களில், அலுவலக வாயில்களில் உறுதியுடன் தொடர்கிறது போராட்டம். ஒவ்வொரு கணமும் போராட்டக்களத்தில் இருந்து ஆயிரக்கணக்கான முழக்கங்கள், கவிதைகள், கோபங்கள், காட்சிகள் உதித்துக் கொண்டே இருக்கின்றன.
மாணவர்களும், இளைஞர்களும் வீதியில் இறங்கி விட்டனர். தமிழ் மக்களை எல்லா வகையிலும் இழிவுபடுத்திய பார்ப்பனியம், ஒடுக்கிய மோடி அரசு இங்கே எண்ணிறந்த முறையில் செருப்படி பட்டு வருகிறது. மெரினா கடற்கரையில் ஆட்டம், பாட்டம், முழக்கம், ஒழுங்கு, கட்டுப்பாடு, தன்னார்வத் தொண்டர்கள், உணவையும் – நீரையும் கேட்காமலேயே பகிரந்து கொள்ளும் காட்சியைப் பார்த்து வட இந்திய ஊடகங்களே கண்களை விலக்க முடியாமல் திகைத்து நிற்கின்றன.
கடற்கரையில் காளை மாட்டு கொம்பு விளக்கை சூடிய தலைகள் ஆயிரக்கணக்கில் திரண்டு விட்டன. இது தேவ அசுரர் யுத்தம். நூற்றாண்டுகளாக தொடரும் கோபம்.
ஒரு காளை மாட்டை கூட அடக்க முடியவில்லையா என்ற அந்த கோபம், பணமதிப்பிழப்பு, காவிரி நீர் உரிமை, கல்வியில் தனியார்மயம், வேலையின்மை என்று பல்வேறு பிரச்சினைகளில் ஏமாற்றப்பட்ட அவலங்களை புதைத்து விட்டு ஆவேசமாய் எழுந்திருக்கிறது.
- ஆம். இந்த் ஜல்லிக்கட்டின் பெயர் டெல்லிக்கட்டு.
- தமிழகம் புதிய போராட்ட வரலாற்றில் நுழைந்துவிட்டது.
- முடிந்த வரை இந்த போராட்ட பெருங்கடலின் முத்துக்களை வினவு தேடி எடுத்து தர முயல்கிறது.