privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஜெயா சசி மட்டுமல்ல அதிமுகவே ஒரு குற்றக் கும்பல்தான் !

ஜெயா சசி மட்டுமல்ல அதிமுகவே ஒரு குற்றக் கும்பல்தான் !

-

ஓவியம்: முகிலன் (2014-ம் ஆண்டு)

ஜெயலலிதா குற்றவாளி – ஆனால் தண்டனையிலிருந்து தப்பிவிட்டார்.

சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் உயிரோடு இருப்பதால் சிறை செல்கிறார்கள்.

குன்ஹாவின் தீர்ப்பை அப்படியே இரு நீதிபதிகளும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். முழு தீர்ப்பையும் படிக்கும்போது மேலும் விவரங்கள் தெரியவரும்.

அன்று குன்ஹாவுக்கு எதிராக அதிமுக காலிகள் நடத்திய வெறியாட்டங்களை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அந்தக் காலிகள் எல்லாம் இப்போது பன்னீர் பக்கம் இருக்கிறார்கள். அல்லது வந்து விடுவார்கள். அல்லது இன்னொரு கும்பல் சசி சார்பில் உருவாகும்.

பரப்பன அக்ரகாரா சிறையில் இருந்தபோது, தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா என்ற குற்றவாளியின் படத்தை மாட்டி வைத்துக் கொண்டுதான் பன்னீர் ஆட்சி செய்தார். எல்லா அரசு அதிகாரிகளின் தலைமீதும் அந்த குற்றவாளியின் படம்.

ஜெயலலிதா இப்போது உயிருடன் இருந்து சிறை சென்றிருந்தால், மீண்டும் படத்தை வைத்து ஆட்சி நடத்தியிருப்பார்கள். இதில் சந்தேகமே இல்லை.  ஜெயலலிதா படத்தை சட்டைப் பையில் வைத்திருக்கும் அதிமுகவினர் அந்தப் படத்தை எடுத்து கொளுத்தவா போகிறார்கள்?

இப்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் நீதி நிலைநாட்டப்பட்டு விட்டது போல கொண்டாடுகிறது பாரதிய ஜனதா கும்பல். பாரதிய ஜனதாவும் சோ, குருமூர்த்தி உள்ளிட்ட பார்ப்பனக் கும்பலும் இதுநாள் வரை குன்ஹா தீர்ப்பைப் பற்றி சொல்லி வந்தது என்ன? இந்த பார்ப்பன வெறி பிடித்த கிரிமினல்கள்தான் இன்று சசிகலாவை மட்டும் வில்லியாக்கி, ஜெயாவை தேவதையாக்க முயற்சிக்கிறார்கள்.

ஜெயலலிதா ஆரம்பத்தில் ஊழலின் கறை படியாமல்தான் இருந்தாராம். இவர்களுடைய சகவாசத்தின் காரணமாகத்தான் அவர் ஊழலுக்கு பலியாகிவிட்டாராம். இப்போது யாருக்கு தண்டனை கிடைக்க வேண்டுமோ அவர்களுக்கு கிடைத்திருக்கிறதாம். இது நியூஸ் 18 தமிழ் தொலைக்காட்சியில் தீர்ப்பு பற்றி தமிழிசை சவுந்தரராசனின் தொலைபேசி பேட்டி.

நாம் எதிர்த்துப் போராடவேண்டிய மிக முக்கியமான பித்தலாட்டம் இதுதான்.

இந்த தீர்ப்பு நமக்கு தெரியாத புதிய உண்மை எதையும் புதிதாக சொல்லி விடவில்லை. உண்மையிலேயே இதில் பெருமை ஏதேனும் உண்டென்றால், அது குன்ஹாவை மட்டுமே சாரும். ஜெயலலிதாவின் கிரிமினல்தனங்களையும் அவரால் கூலிக்கு அமர்த்தப்பட்ட மாபெரும் சட்ட வல்லுநர்களின் தகிடுதத்தங்களையும் மீறி, சட்டத்தின் எந்த சந்திலிருந்தும் தப்பிக்க முடியாத வண்ணம் மடக்கி, ஒரு தீர்ப்பை வழங்கினாரே, அது மாபெரும் சாதனைதான்.

அதாவது இந்த சட்டங்களின் வரம்புக்கு உட்பட்டு ஜெயலலிதா சசிகலா என்ற கிரிமினல் இரட்டையர்களை தண்டித்தது என்பது, கல்லில் நார் உரித்ததற்கு சமமானது. அதை குன்ஹா செய்தார்.

இந்த தீர்ப்பை மட்டுமே வைத்துக் கொண்டு தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட்டுவிட்டது என்றோ, இனி ஊழல் பேர்வழிகள் அஞ்சி நடுங்குவார்கள் என்றோ யாரும் கருதிவிட வேண்டாம். அப்படி ஒரு வெங்காயமும் நடக்காது.

66 கோடி சொத்து குவித்ததாக வழக்கு. கடந்த 5 ஆண்டுகளிலேயே அந்த தொகையைப் போன்று ஆயிரம் மடங்குக்கும் மேல் சொத்து குவித்து விட்டது ஜெ சசி கும்பல்.

பன்னீர், நத்தம், வைத்திலிங்கம் உள்ளிட்டவர்கள் வீடுகளில் ரெய்டு நடந்தது. அதற்குப் பிறகு என்ன? அன்புநாதன் மீது என்ன நடவடிக்கை? சேகர் ரெட்டி, ராம் மோகன ராவ் மீது என்ன நடவடிக்கை? தேர்தல் நேரத்தில் மூன்று கன்டெயினர் பிடித்த விவகாரத்தில் நடந்தது என்ன?

இது வெறும் சசிகலா விவகாரமல்ல, ஜெயா விவகாரம் மட்டுமல்ல. அ.தி.மு.க என்பதை ஒரு கிரிமினல் மாஃபியா கும்பல். அது தேன் எடுத்தவன் புறங்கை நக்குவது என்பதைப் போல ஊழல் செய்யும் கும்பல் அல்ல. கொள்ளையடிப்பதற்காகவே திட்டங்கள் தீட்டுகின்ற, கொள்ளையடிப்பது ஒன்றையே நோக்கமாக கொண்ட கிரிமினல் கும்பல். இந்த கும்பலை ஒரு கட்சி என்று அங்கீகரிப்பதும், அதற்கு வேறு தலைவர் தேர்ந்தெடுத்துக் கொண்டால் நல்லாட்சி நடத்துவார்கள் என்று கூறுவதும் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.

இப்போது அப்படிப்பட்ட அயோக்கியத்தனம்தான் நடக்கிறது. பன்னீர், எடப்பாடி, செங்கோட்டையன், தம்பிதுரை என்ற எந்த கிரிமினல் தலைமை தாங்கப் போகிறார்கள் என்பதா நமது கவலை? இந்தக் கிரிமினல் கும்பல் தலையெடுக்கவே கூடாது. அதிமுக என்ற கிரிமினல் கும்பலுக்கு மக்கள் தருகின்ற ஒரு தண்டனை எல்லா கட்சிகளின் கிரிமினல்களுக்கும் பாடமாக இருப்பது மட்டுமல்ல, கிரிமினல்களை மக்கள் நேரடியாக தண்டிப்பது என்பதற்கும் ஒரு முன்னோடியாக அமைய வேண்டும்.

மன்னார்குடி மாஃபியாவை வழக்கு போட்டு தண்டிப்பதென்றால் ஒரு காலத்திலும் முடியாது. சரியாக சொல்வதென்றால், சட்டபூர்வமான முறைகளின் மூலம் ஊழல் குற்றவாளிகளை தண்டிக்க முயல்வது என்பது முட்டாள்தனமானது  என்பதற்கு ஜெயலலிதா மீதான இந்த சொத்துக் குவிப்பு வழக்கு ஒரு நிரூபணம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

இந்த வழக்கில் கடந்த காலத்தில் நடந்திருக்கும் விசயங்களை ஒவ்வொன்றாக நினைவு படுத்திப் பார்ப்பீர்களேயானால், இந்த உண்மை புரியும்.

இந்த வழக்கை ஊத்தி மூடுவதற்கு பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் முதல் தத்து, குமாரசாமி உள்ளிட்ட பல நீதிபதிகள் வரை உடந்தையாக இருந்திருக்கிறார்கள். பலர் பயந்து ஓடியிருக்கிறார்கள். உச்ச நீதிமன்ற தீர்ப்பு இத்தனை காலம் இழுத்தடிக்கப்பட்டதே ஒரு நாடகம். இது முன்னரே வந்திருந்தால் ஜெயா உள்ளே போக வேண்டியிருந்திருக்கும்.

இந்த மொத்த வழக்கிலும், குன்ஹா அளித்த தீர்ப்பு என்பது ஒரு விதிவிலக்கு. பரப்பன அக்கிரகாரா சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் ஜெயாவும் சசியும் திருந்தி விட்டார்களா? முன்னை விட வெறியுடன் கொள்ளையடித்தார்கள். 2001 முதல் இன்று வரை இவர்கள் சேர்த்திருக்கும் சொத்துகள் எத்தனை? ஜாஸ் சினிமாஸ் போல எத்தனை சொத்துகள்? அவையெல்லாம் யார் மீது வழக்கு போட்டு எப்போது பறிப்பது?

வழக்கு போட்டு நீதிபெறும் வழி முறையை, ஜல்லிக்கட்டு போராட்டத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.

மோடி சட்டத்தை திருத்தினால்தான் ஜல்லிக்கட்டு நடத்த முடியும், மாநில அரசு எதுவும் செய்ய முடியாது என்றார்கள். பிறகு பன்னீர் கேட்டதற்கு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் நான் திருத்த முடியாது, நீங்கள் மாநிலத்தில் சட்டம் கொண்டு வந்தால் அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வாங்கித்தருகிறோம் என்றார் மோடி. இதற்கிடையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொல்லிவிடக் கூடாது என்பதால், தீர்ப்பு சொல்லாதே என்றார்கள். உச்ச நீதிமன்றமும் தீர்ப்பை நிறுத்தி வைத்தது. அப்புறம் தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. அதற்கு விலங்கு நல வாரியம் உள்ளிட்டோர் இடைக்கால தடை வாங்காமல் கவனித்துக் கொண்டார்கள்.

இத்தனையும் எப்படி நடந்தது. ஏன் நடந்தது? மெரினா போராட்டம் தொடங்கும் வரையில் எதுவுமே முடியாது என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள், போராட்டத்தின் தீவிரத்தை கண்டார்கள். “நீ சட்டம் போடுவியோ, தீர்ப்பு எழுதுவியோ அது உன் வேலை. ஜல்லிக் கட்டு நடக்கும் என்று உறுதியாகும் வரை நாங்கள் விடுவதில்லை” என்று மக்கள் நின்றார்கள். சட்டத்தை மக்கள் மதிக்கவில்லை. தடையை மீறி நடத்தினார்கள்.

இனிமேல் இதனை அங்கீகரிக்காவிட்டால், சட்டத்துக்கு கட்டுப்பட மாட்டார்கள் என்பது மத்திய மாநில அரசுகளுக்கு மட்டுமல்ல, நீதிமன்றத்துக்கும் புரிந்து விட்டது.

அதனால்தான் ஏதாவது ஒரு வழியில் இதனை சட்டரீதியாக தீர்த்து வைக்கவில்லை என்றால், மக்கள் படிப்படியாக அரசாங்கத்தின் அதிகாரத்தையே எல்லா விவகாரங்களிலும் கேள்விக்குள்ளாக்க ஆரம்பித்து விடுவார்கள் என்ற அச்சம் ஆளும் வர்க்கத்துக்கு வந்தது.

அதன் விளைவுதான் மாநில அரசின் சட்டம்.

அதாவது மக்களின் விருப்பத்துக்கு அரசும் நீதிமன்றமும் பணிந்தன.

அதே வழிமுறையை ஊழல் பெருச்சாளிகளுக்கு எதிராகவும் நாம் கையாள முடியும். கையாள வேண்டும்.

அதிமுக என்ற கிரிமினல் மாஃபியாவை அரசியலிலிருந்தே ஒழித்துக் கட்ட வேண்டும். அந்தக் கும்பலைச் சேர்ந்த அனைவரின் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட வேண்டும். அம்மா என்றழைக்கப் படும் கிரிமினலின் படங்களும் பெயர்களும் தமிழகத்தின் முகத்திலிருந்து துடைத்தெறியப்படவேண்டும்.

இதை நோக்கி நமது கோரிக்கைகளை அமைத்துக் கொள்வோம். போராடுவோம்.

 

  1. “மன்னார்குடியை துடைத்து எறிவதோடு அதிமுகவையும் சேர்த்து துடைத்து எறிவதே ஊழலை வேரோடு பிடுங்கி எறிவது” என்று கட்டுரை முடிகிறது.இதை நான் எப்படி எடுத்துக்கொள்கிறேன் என்றால்,ஊழலை ஒழிப்பதன் துவக்கமாக, இறுதியாக ஆட்சியில் இருந்த கட்சியை துடைத்து எறிந்து ஆரம்பிப்போம் என்று சொல்வதாகவே எடுத்துக்கொள்கிறேன்.ஊழலை ஒழிப்போம் ஊழலை ஒழிப்போம் என்று வெறுத்துபோய் கத்தி திரிவதைவிட அதை ஒழிப்பதற்க்கான குவி மையமாக அதிமுக வைத்து தொடங்குவது நமக்கு ஒரு ஆரம்பத்தையும் தொடர்ச்சியையும் கொடுப்பதாக எடுத்துக்கொள்கிறேன்.இந்த அதிமுக வின் பெரிய ஊழலுக்கு வித்தாக விதை ஊன்றி மிக சாதுர்யமாய் சுருட்டி வழியேற்ப்படுத்தி கொடுத்த அதிமுகவின் இணையான திமுக கமுக்கமாக யோக்கியனாக த்ன்னை நினைத்துக்கொண்டு ,”அதோதிருடன் அதோதிருடன்” என்று கூடே ஓடி வருகிறது என்பதையும்,அவர்கள் ஆட்சியிலும் சர்வதேச வானியல்(ஸ்பெக்ர்டம்)ஊழலிலிருந்து அப்பாவிகளின் நிலங்களை அடித்து பிடுங்குவதுவரை கணஜோராய் நடந்தது என்பதையும், பின்னவைக்கு முன்னவை கொஞ்சமும் சளைத்ததில்லை என்பதையும் கட்டுரையாளர் மனதில் கொண்டே இந்த கட்டுரையை வரைதிருப்பார் என்றே நம்புகிறேன்.ஒரே நேரத்தில் இரண்டையும் விரட்டி கவனம் சிதறிட வேண்டாம் என்ற எண்ணத்திலேயே இப்போது அதிமுகவை முதலில் குறி வைத்திருக்கிறார் என்றும் நம்புகிறேன்.

  2. பொரட்சி தலைவியோட குட்டிங்க எல்லாமே…கேணப் பயலுவ போல…
    செயா டீ வியில இனிப்பு போளி செய்யறது எப்படின்னு ஒரு ஆத்தா
    சமைச்சி காட்டுது…
    ஆப் பாயில் முட்டை செய்வது எப்படீண்ணு காட்டலாம்….
    ஒங்க ஆத்தாவும் முதல் குற்றவாளின்னு சங்கு ஊதிட்டான்..
    பன்னீரு+ வகையறா வெடி வெடிச்சி கொண்டாடுது…எப்பவுமே லூசா இருக்காதீங்கடா…
    தெயிவ குத்தமாயிடும்

  3. காவி பயங்கரவாத மோடியின் கைப்பிடியில் இருக்கும் உச்சிக்குடுமி நீதிமன்றம் அளித்த இத்தீர்ப்பு மோசமானது!எங்கள் அம்மாவின் வழிகாட்டியாய் விளங்கிய சின்னம்மாவின் சிறைவாசம் துன்பியல் நிகழ்வு!ஆனாலும் எவனாலும் அதிமுகவை அழிக்க முடியாது!பாஜகா தமிழகத்தில் ஒரு கவுன்சிலர் சீட்டு கூட ஜெயிக்க முடியாது!ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள்!

  4. இந்த தீர்ப்பை வைத்து எழுதப்பட்ட இந்த கட்டுரை ஓர வஞ்சனையுடன் தான் உள்ளது. ஏதோ அஇஅதிமுக மட்டுமே ஊழல் கட்சி என்ற தோரனையை ஏற்படுத்தி திமுக வின் ஊழல் பெருசாளிகளான மாறன் சகோ மற்றும் கனிமொழி-ராஜா குழு ஆகியவற்றை பற்றி ஏதும் கூறாமல் மொவுனம் சாதிக்கும் இந்த கட்டுரை திமுகவிற்கு ஆதரவான ஒன்றாகத்தான் உள்ளது. மன்னிக்கவும்…. வினவு திமுகவிடம் விலை போகின்றதா?

    • மாறன் சகோ மற்றும் கனிமொழி-ராஜா தான் ஊழல் பெருச்சாளிகளா?அதன் தலைமைக்கும் தலைமையின் நேரடி ரத்த வாரிசுகளின் ஊழல், “மதுரையை “குத்தகைக்கு எடுத்தவரின் தனி சாம்ராஜ்யம் என்று ஒரு பெரும்படையே அமைப்பு ரீதியாக ஊழலையே ஒரு கலையாக செய்து காட்டினார்களே!சொல்லும்பொழுது சரியாக சொல்ல வேண்டுமில்லையா செந்தில்குமரன்.எதற்க்கு சொல்கிறேன் என்றால் அதிமுகவின் ஊழல் மன்னார்குடி கூட்டத்தால்தான் நடந்தது.ஜெயா பரிதாபம் என்று சிலதுகள் நிறுவ பார்க்கிறது அதற்க்காக சொன்னேன்.இன்னொன்றும் நாம் கவனிக்க வேண்டும்.மன்னார்குடியின் மேல் உள்ள வெறுப்பு பன்னீரின் நாடகம் மக்களை பெரிய அளவில் கொண்டாட வைத்தது.இன்று பன்னீர் சாயமும் மக்கள் மத்தியில் வெளுத்துக் கொண்டு வருகிறது.இப்படியாக இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்து இன்று குரங்கு கை பூமாலையாய் மாறி கட்சிகாரர்கள் அனைவரும் நாறி போன பின்பும் திமுக மேல் மக்களுக்கு ஈர்ப்பு வரவில்லை பார்த்தீர்களா?திமுக மிகத் தீவிரமாய் சிந்திக்க வேண்டிய தருணமில்லையா இது?

      • மீரான்…, நீங்கள் உங்களுக்கு தெரிந்த திமுக ஊழல்வியாதிகளை பற்றிய முழுமையான பட்டியலை இட யாரும் தடை வாங்க வில்லை என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்…

        • செந்தில், ஊழலைப் பற்றிய தீவிரமானதொரு விழிப்புணர்வை கட்டுரை ஆணித்தரமாய் வரைந்திருக்கிறது.தமிழ்நாட்டிற்க்கேயுரிய, செத்தவனை எதுவும் சொல்லிவிடக்கூடாது என்ற கூறுகெட்ட செண்டிமெண்டுகளையெல்லாம் தாண்டி உண்மையை கறாராய் புரிந்து கொள்ள வேண்டிய விழிப்புணர்வை கட்டுரை ஊட்டுகிறது.இதை எல்லா தரப்பிற்க்கும் பொதுவாக்கி பார்ப்பணன் பார்ப்பணன் அல்லாதான்,தமிழன் தமிழன் அல்லாதான் என்ற ஒரு சிறு சார்புமின்றி இந்த ஜெயலலிதாவுக்கு சமமாய் அல்லது அதற்க்கு முன்னோடியாய் இருப்பவர்களையும் துவைத்து காயப்போட வேண்டிய ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன். பட்டியல் போட வேண்டியது என் வேலையல்ல.வினவு வின் கடமை.

          • மீரான் சார் , முதலில் நாம் ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும்…. வினவு எழுதிய இந்த கட்டுரை ஊழலுக்கு எதிரான முழுமையான கட்டுரை அல்ல….. இந்த கட்டுரை மேல் மட்ட ஊழலை மட்டுமே அதுவும் ஒரு குறிப்பிட்ட ஆளும் கட்சியின்(அதிமுக) ஊழலை மட்டுமே கணக்கில் எடுத்துகொண்டு பேசுகின்றது…. பிற கட்சிகளை அதுவும் குறிப்பாக திமுக காங்கிரஸ், பிஜபி அரசுகளின் ஊழல் செயல்பாடுகளை திட்டமிட்டு தவிர்க்கின்றது இந்த கட்டுரை….

            மேலும் ஊழலுக்கு அடிதளமாக இருக்கும் அதிகாரவர்க்கம் (அதிகாரிகள் வர்க்கம்) பற்றிய பார்வை இந்த கட்டுரையில் சிறிதும் பிரதிபலிக்கவில்லை…. தமிழ் நாட்டில் அதிகாரவர்க்கம் துறை வாரியாக மாதம் மாதம் கப்பம் பெரும் லஞ்ச பணம் பற்றிய கணக்குகள் மட்டுமே சில நுறு கோடிகளை தாண்டும்…. ஒரு காவல் நிலையம் அதன் கீழ் வரும் எல்லைக்குள் வாங்கும் பணம் மட்டுமே குறைந்தது மாதம் 5 லச்சம் முதல் 28 லச்சம் வரையில் வருகின்றது. (லாட்டரி சீட்டு விற்பனை செய்யும் ஒரு சிறு கடையே மாதம் 45 ஆயிரம் பணத்தை காவல் நிலையத்துக்கு கட்டுகின்றார்கள்…. இன்னும் பழைய காயிலான் கடை , டாஸ்மாக் பார்…., என்று நிறைய இடங்கள் வசூலுக்காக இருகின்றன).

            கல்வி துறையில் நடைபெறும் ஊழல் குறிப்பாக சென்னை பல்கலை கழகத்தில் நடைபெறும் ஊழலில் சில நுறு கோடிகளை – மக்கள் பணம் கொள்ளையடிக்கபடுகின்றது… அங்கு 5 கோடி பணம் கொடுத்து துணைவேந்தர் பதவி வாங்குவனும் அவனிடம் இருந்து அங்கு பத்து லச்சம் ரூபாய் காசு கொடுத்து பேராசிரியர்வேலையை வாங்கியவன் மாணவர்களிடம் இருந்து ஆய்வு வழிகாட்டி போன்ற வேலைகளுக்கு காசுவாங்காமலா இருப்பான்/ள்.?

            பிற துறைகளையும் கணக்கில் எடுத்துகொள்ளுங்கள் ……விற்பனை வரி துறை , விவசாய துறை, தோட்டக்கலை துறை என்று அனைத்து அரசு துறைகளையும் கணக்கில் எடுத்துகொள்ளுங்கள் மீறான்….

            • புரிகிறது புரிகிறது செந்தில்குமரன்… ஊழலை அத்தியாவசிய செலாவாகவே மக்களை உணரச்செய்துவிட்ட அவலம் நடைமுறைக்கு வந்துதான் காலம் பல ஆனதே.அதிகார வர்கம் ஊழலில் திளைக்க ஆளும் வர்க்கத்திடமிருந்துதானே ஆக்கமும் ஊக்கமும் பெறுகிறது.ஊடகங்கள், லஞ்ச லாவண்யத்தில் திளைக்கும் அரசியலாளர்களை கொஞ்சமும் தயவு தாட்சண்யமின்றி ,மக்கள் அருவருக்கும் வகையில் உண்மையை உரிக்க வேண்டும்.செத்தபிறகும் உச்சநீதிமன்றத்தால் காரி உமிழப்பட்டிருக்கும் ஜெயலலிதா பிணமாய் கிடக்கும் பொழுது எல்லா ஊடககாரன் களும் என்ன வரத்து வந்தான் கள்?அநியாய அக்கிரமத்தில் ஊறிய ஒருவன் அப்பாவி மக்களை ஏமாற்றி பதவிக்கும் அதிகாரத்திற்க்கும் வந்து செத்தால் “மக்கள் தலைவன் மக்களால் கொண்டாடப்பட்ட தலைவன்”என்று தலையில் தூக்கி வைத்து ஆடத்தான் வேண்டுமா?இதுதான் ஒவ்வொருவனின் உள்ளத்தையும் மரத்துப் போக செய்து உறுத்தலே இல்லாமல் தொடர்ந்து கொள்ளையடிக்க வைக்கிறது.அது கீழ் நோக்கி பரவி எல்லா அதிகார மட்டத்திலும் கலந்து செழிப்பாய் வளர்ந்து வளர்ந்து இன்று அடர்ந்த காடாய் நிலைத்து விட்டது.

          • ஜெயா மட்டுமா? இல்லையே! காவல் துறை உயர் அதிகாரி….., துணை வேந்தர் பொறுப்பில் உள்ளவர், நீதி துறை அரசர்கள், என்று ஏனைய அதிகார வர்கத்தையும் கணக்கில் எடுத்துகொண்டால் அவர்கள் அனைவருமே வருமானத்துக்கு அதிகமாக சொத்து உடையவர்கள் என்று நிருபிக்க இயலும்….

            இந்த தீர்ப்பு கூட இன்று மக்களிடம் சசிக்கு உள்ள வெறுப்பின் அடித்தளத்தின் மேல்தான் இன்று அளிக்கப்பட்டதே தவிர உண்மையில் இது கடந்த ஆண்டு ஜூன்.ஜூலை மாதமே தீர்ப்பை ஒத்தி வைக்காமல் அளிக்கபட்டு இருக்கவேண்டும் அல்லவா? இப்போது ஒரு நாள் விடுப்பு பெற்று தீர்ப்பை தயாரித்த அதே உச்ச நீதி அரசர்களுக்கு அன்று என்ன அழுத்தம் ஏற்பட்டது என்பதனை அவர்கள் தீர்ப்பை வாசித்த முதல் வாக்கியத்திலேயே நேற்று ஒப்புதல் வாக்கு முலமாக அளித்து உள்ளார்கள் என்பதனையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்..

            அவர்களது வார்த்தைகலிலேயே கூறுவது என்றால் “இவ்வளவு அழுத்தம் கொடுகின்ற வழக்கில் நாங்கள் எவ்வளவு ……” என்று தொடங்கும் அவர்கள் ஒப்புதல் வாக்குமூல தீர்ப்பில் இருந்து நாம் தீர்ப்பை இவ்வளவு நாட்கள் அவர்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக தள்ளி போட்டதற்கான எல்லா விதமான அரசியல் அழுத்தங்களையும் புரிந்து கொள்ள முடியும் அல்லவா?

  5. அரசாங்க அபிப்ராயம் என்ன என்று கேட்கும் நடைமுறை நீதிமன்றங்களில் உண்டு என்பது கூட தெரியாமல் பேசி கொண்டு இருக்கிறீர்கள்…. ஜல்லிக்கட்டால் மாடுகள் கொடுமைப்படுத்தப்படுவதும், இளைஞர்கள் காயம் அடைவதும் (சிலர் மரணம் அடைவதும்) எல்லோருக்கும் தெரிந்த விஷயம், அதை விலங்கு நல ஆர்வலர்கள் நீதிமன்றம் சென்று தடை வாங்கினார்கள். ஆனால் வினவு போன்ற ஆட்கள் அதில் உள்நோக்கம் கற்பித்து என்னமோ மோடியே தடை வாங்கின மாதிரி பொய்களை பரப்பி கொண்டு இருக்கிறார்கள்.

    • “ஜல்லிக்கட்டால் மாடுகள் கொடுமைப்படுத்தப்படுவதும், இளைஞர்கள் காயம் அடைவதும் (சிலர் மரணம் அடைவதும்) எல்லோருக்கும் தெரிந்த விஷயம், அதை விலங்கு நல ஆர்வலர்கள் நீதிமன்றம் சென்று தடை வாங்கினார்கள். ஆனால் வினவு போன்ற ஆட்கள் அதில் உள்நோக்கம் கற்பித்து என்னமோ மோடியே தடை வாங்கின மாதிரி பொய்களை பரப்பி கொண்டு இருக்கிறார்கள்.”

      OFFFFFFFFF Topic Mr. Manikandan

      • அப்படிங்களா சார் மீண்டும் கட்டுரையை ‘முழுதாக’ படித்து விட்டு வந்து பேசவும்.

        • what is the summary of this article Mr. Mannikandan ? AH. Vaasippathaal Manithan Pooranamadaikiraan. But your reading ………… I do not know what to say. May be your reading only comes from BJP’s publication.

          Always the same question and and the same answer- from you. TOOOOOOOOOO BOOOORING.

  6. ஜெயா-சசி கும்பலை தண்டித்திருக்கும் தீர்ப்பை ஒட்டி நல்ல கட்டுரை தந்தமைக்கு நன்றி. சுருக்கமாக நிகழ்வுகளை சொல்லி இருந்தாலும் ஒவ்வொரு கருத்தும் சிந்திக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

    உடனே நம்மில் சிலர் திமுக மட்டும் ஒழுங்கா, மற்ற கட்சிகளெல்லாம் ஒழுங்கா என்று வினா எழுப்புவது இயல்பு. திமுக உட்பட பல கட்சிகள் குற்றவாளிகளே என்று நமக்கு தெரிந்ததே. கட்டுரையாளர் அதை மறுக்கவோ மறைக்கவோ முயலவில்லை.

    மாறாக, இன்று (2017-02-14) உச்சநீதிமன்றம் வெளியிட்டிருக்கும் தீர்ப்பினையும் அதனையொட்டிய நிகழ்வுகளையும் சுட்டிக்காட்டுவதே கட்டுரையின் நோக்கம் என்று கருதுகிறேன். இதுபோல திமுக உட்பட மற்ற கட்சிகளின் ஊழல்/அராஜக வழக்குகளையும்/நிகழ்வுகளையும் எப்பொழுதும் போல அந்ததந்த கால கட்டத்தில் தொடர்ந்து வினவு தரும் என்று நினைக்கிறேன்.

    • மாறன் சகோ…. வழக்கில் தற்போது தான் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்து உள்ளது…. அதனை பற்றி வினவு ஒன்றும் பேசவில்லை….நீதி அந்த சகோ…களிடம் விலை போனதனை பற்றி வினவு ஒன்றுமே பேசவில்லை…. என்பதனை நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்…

    • This article is not meant to discuss about the credibility of one party or the corruption of one party. This article is related to a particular event. That is on the verdict of DA case. Here the entire team is involved in corruption.

  7. மலரும் மணமும் போல கட்டுரையும் பாடல்காட்சிகளும் மிளிர்கின்றன.படித்து, பார்த்துவிட்டு வயிறு எரிகிறவர்கள் கிஷ்னாயில் குடிக்கலாம்.சசி-ஜெயா போன்ற கேவலமான ஜென்மங்களைத் தமிழகம் இதற்கு முன் பார்த்திருக்கவே முடியாது.ஆஹா… நேற்று வரை என்ன ஜம்பம்.இன்று ஒரு நாதிகூட இல்லை இந்த கிரிமினல் கும்பலுக்காக நகத்தைக் கிள்ளிப்போட!மக்களின் இந்த எதிர்வினையும் தீர்ப்புக்குக் காரணமாயிருக்கக்கூடும்.ஜல்லிக்கட்டுப் போராட்டம் ஆளும் கும்பலை பயமுறுத்தி இருக்கிறது.மக்கள் அதிகாரத்தைத் தொடர்ந்து சுவைக்க வேண்டும்.கிரிமினல் மபியா கும்பல் உடனே கைது செய்து சிறையில் அடைக்கப்பட வேண்டும்.தாமதப்படுத்தினால் மக்கள் கிளர்ந்து போராடவேண்டும்.ஒவ்வொரு தமிழனின் முகத்திலும் புன்சிரிப்பு!ஜெயா குற்றவளிதான் என்பதையும் மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

    • செங்கதிர்செல்வன்…, இந்த கட்டுரை ஜெயா-சசி கொள்ளை கும்பலின் ஊழல் குற்றங்களை எந்த பாணியில் வெளியிட்டு செல்கின்றதோ அதே பாணியின் திமுக வின் மீதான ஊழல் குற்றங்களையும் பட்டியல் இட்டு மாற்று கட்டுரை எழுத வினவால் முடியாத ஒன்று அல்ல… ஆனால் வினவுக்கு அப்படி பட்ட கட்டுரை எழுத தடையாக யார் உள்ளார்கள் என்பது தான் தெரியவில்லை…

  8. ஒரே கேள்வி!
    சசி+ பரிவாரத்தை தண்டித்து உள்ள நீதி, மற்ற மாநிலங்களில்
    கை நீட்டுவதில்லை?
    தேசத்தின் பாதுகாப்பே கேள்விக் குறியாகும் நிலயில் ராசிவ் கோந்தி+சோனியா கும்ம்பல் ஆயுத பேரம் செய்யவில்லையா? இதுவே வேறு நாடாக இருந்தால், சோனியா கும்பல் தூக்கில் தொங்கியிருக்கும்…
    அப்போது நீதி மெடிசல் லீவில் சென்று விட்டதா?

  9. This is nothing but ‘constitutional prostitution’. The supreme court take action against sasikala with in a week when she was about to be a chief minister. Otherwise the verdict was pending almost 8 months. This delay is not only doing favour to jeyalalitha but also keep herself under bjp custody. Earlier congress government controls mulayam and mayavathy with the help of judiciary and now bjp government controls ADMK. In this constitutional prostitution,the pimps are wearing red dot in their forehead and we tamils should mind it.

  10. உங்களுடைய ” ஒரு கட்சி தாக்குதல் ” நன்கு வெளிப்பட்டு இருக்கிறது – நீங்கள் யாருக்கு விசுவாசமா வேலை செய்கிறீர்கள் என்பது இதன் மூலம் விளங்குகிறது — இவ்வாறான ” சுரண்டல்களுக்கு ” வித்திட்டு ஆரம்பித்து வைத்தவர்களை பற்றியும் குறிப்பிட்டு இருந்தால் யோக்கியமான செயல் — இந்திய திருநாட்டில் மற்ற கட்சிகள் — அரசியல்வாதிகள் — வாரிசுகள் எல்லோரும் ” அதி உத்தம சிகாமணிகளை ” போலவும் – ஜெயா & கோ மட்டும் ஊழலில் திளைத்தவர்கள் போலவும் காட்ட நினைப்பது எதனால் … ?

    // அது தேன் எடுத்தவன் புறங்கை நக்குவது என்பதைப் போல ஊழல் செய்யும் கும்பல் அல்ல. // என்று நீங்கள் சுட்டிக்காட்டுவதே — எப்பேர்ப்பட்ட ஊழல்வாதிகளை நியாயப்படுத்த முனைகிறீர்கள் என்பது எல்லோருக்கும் புரியும் — புறங்கையை நக்கும் செயல் ஊழல் இல்லை என்று புது விளக்கம் கூறும் உங்களின் நடு நிலை சூப்பர் …

    சர்க்காரியா — ஜெயின் போன்றவர்களின் கமிஷன்களின் நினைவுகள் — பஞ்ச பூத ஊழல்கள் என்று ” காப்பி ரைட் ” பெற்றவைகள் என்றுமே மறக்க முடியாதவை என்பதும் — அடுத்த உலக மகா ஊழல் என்று மக்களால் கூறப்படுகிற அலைக்கற்றை — நிலக்கரி போன்றவற்றின் தீர்ப்புகளும் ” நியாயமான ” தீர்ப்பாக வந்தால் — இதைவிட அருமையான ஒரு பதிவை போட்டு அனைவரையும் — ஆச்சர்யத்திலாவது ஆழ்த்துவீர்கள் என்கிற நம்பிக்கையை — கானல் நீராக்கி விடாதீர்கள் …

    சுரண்டலின் புரையோடிய இந்த காலத்தில் ” ஒருதலைப்பட்சமாக ” ஒரு கும்பலை மட்டும் தவறானவர்கள் என்று முத்திரை குத்த முயல்வது — வேடிக்கையா … இல்லை வேதனையா … ? // கிரிமினலின் படங்களும் பெயர்களும் தமிழகத்தின் முகத்திலிருந்து துடைத்தெறியப்படவேண்டும். // அருமையான யோசனை … ! என்ன பெரும்பாலானவர்களின் படங்களும் காணாமல் போய் — டிஜிட்டல் பேனர் — போஸ்டர் போன்ற தொழில்கள் பாதிக்கப்பட்டு விடும் — எந்த ஒரு தலைவனின் — கட்சியினரின் படங்களும் இல்லாமல் — பாவம் மீடியாக்களும் அல்லாட வேண்டி வரும் ….

    // இதை நோக்கி நமது கோரிக்கைகளை அமைத்துக் கொள்வோம். போராடுவோம். // கண்டிப்பாக … !!!

  11. செந்தில்குமரன்,ஊழல்வாதிகள் பலர் சட்டத்தின் பின்னேதான் ஒளிந்துகொண்டுள்ளனர்.சட்டம், நீதி பல வேளைகளில் அவர்களைத் தண்டிப்பதில்லை.இப்படி தண்டிக்கப்படும் போது மக்கள் முன் அவர்களின் ஊழல்,முறைகேடு,கொள்ளை,கிரிமினல் நடவடிக்கைகள் மேலும் துல்லியமாக அம்பலமாகின்றன.அந்தத் தருணத்தைப் பயன்படுத்திக்கொண்டு மக்களை விழிபடையச் செய்ய வேண்டியுள்ளது.இந்தச் சூழலில் எல்லோரும் ஊழல்வாதிகள்தானே என்று போனால் மக்களைக் குழப்புகிற வேலையாகத்தான் முடியும்.அவரவர் காலம்வரும்வரை காத்திருப்பது தான் சரியான அணுகுமுறை.தான் சார்ந்திருக்கிறவர்கள் பிடிபடும்போது எதிரியை ஏன் பிடிக்கவில்லை என்றோ எல்லாமே சாக்கடைதான் என்று ஒதுக்கித் தள்ளும்படியோ சிலர் கோரலாம்.அது சரியான கருத்துப் போராட்ட அணுகுமுறை அல்ல.கட்டுரையாளர் இந்த அணுகுமுறையைத்தான் கையாண்டுள்ளார்.

  12. சட்ட வாதம் பேசியெல்லாம் ஊழலை ஒழிக்க முடியாது என்ற உண்மையை அறிந்த நீங்களுமா இந்த வாதத்தை முனவைத்து பேசுகின்றீர்கள்?

    //இப்படி தண்டிக்கப்படும் போது மக்கள் முன் அவர்களின் ஊழல்,முறைகேடு,கொள்ளை,கிரிமினல் நடவடிக்கைகள் மேலும் துல்லியமாக அம்பலமாகின்றன.//

  13. வினவு பீற்றிக்கொள்ளும் தீர்ப்பில் சசி தண்டனை பெரும் இலச்சனம்!

    தனக்கு சர்க்கரை நோய் இருப்பதால் வீட்டு சாப்பாடு வேண்டும்; வெஸ்டன் டைப் டாய்லட், 24 மணி நேரமும் வெந்நீர், மினரல் வாட்டர் உள்ளிட்ட வசதிகள் செய்து தர வேண்டும் என சிறை அதிகாரிகளிடம் சசிகலா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனி அறையில் கட்டில் மற்றும் டிவி வசதி வேண்டும் என சசிகலா கேட்டுள்ளார். இதனை செய்து தர சிறை அதிகாரிகளும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் சசிகலாவிற்கு சிறையில் உணவு தயாரித்து கொடுத்தல் உள்ளிட்ட உதவிகளுக்கு தனி உதவியாளர் ஒருவரும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    -நன்றி தினமலர்

Leave a Reply to R பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க