privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்நீட் தேர்வு - ஒரு சொந்த அனுபவம்

நீட் தேர்வு – ஒரு சொந்த அனுபவம்

-

ந்த வருடம் முதல் மருத்துவப் படிப்பிற்கு இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடைபெறும் என்று சட்டம் பிறப்பிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. அதனடிப்படையில் தேர்வுக்கான விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. பிப்ரவரி 1-ம் தேதி முதல் மார்ச் 1 வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் அவசியம். ஆதார் இல்லாதவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது.

இதுவரை ஆதார் அட்டை பெறாதவர்கள் புதிய அட்டைக்கு முதலில் விண்ணப்பிக்க வேண்டும், அதற்க்காகச் சிறப்பு மையங்கள் அரசாங்கத்தால் பல இடங்களில் உருவாக்கப்பட்டுள்ளன என்று நீட் தேர்வுக்கான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே ஆதார் அட்டை வைத்து இருந்தாலும் அதில் உள்ள விவரங்கள் மற்ற சான்றிதழ்களில் உள்ள விவரங்களோடு ஒன்றிப் போக வேண்டும் இல்லையென்றால் ஆதார் அல்லது மற்ற சான்றிதழ்களில் உள்ள விவரங்களை மாற்றி அமைத்த பின்னரே நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.

மேற்கூறியவை அனைத்தும் நீட் இணையதளத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள். இது குறித்து ஏற்கனவே ஒரு சிறு பதிவினை முகநூலில் எழுதியிருந்தேன். அந்தப் பதிவில் எழுதி இருந்தவை எனக்கு நேரிடையாக நிகழும் என்று அப்பொழுது எண்ணவில்லை.

இந்த வருடம் எனது தங்கை 12 ம் வகுப்புத் தேர்வினை எதிர்கொள்ள உள்ளார். அதன் பிறகு மருத்துவம் பயில வேண்டும் என்று அவருக்கு விருப்பம். நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால் அதற்க்கான விண்ணப்பிக்கும் வேலைகளைத் தந்தை தொடங்கினர். இந்தத் தேர்வுக்கு இணையம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதால் முதலில் ஒரு இணையச் சேவை மையத்தை அணுகினார். விண்ணப்பத்தின் முதல் பக்கத்திலேயே தேர்வரின் பெயர், பிறந்த தேதி போன்ற விபரங்களுடன் ஆதார் எண்ணும் நிரப்பப்படவேண்டும். விண்ணப்பத்தின் இரண்டாம் பக்கத்திற்குச் செல்வதற்கு முன்பு கொடுக்கப்பட்ட விபரங்கள் ஆதார் விபரங்களுடன் ஒப்பிடப்பட்டு எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அடுத்தப் பக்கத்திற்குச் செல்ல அனுமதிக்கும். எனது தங்கையின் ஆதார் அட்டையில் அவர் பெயருக்குப் பின் தந்தையின் பெயர் இணைக்கப்பட்டு உள்ளது. மற்ற சான்றிதழ்களில் தந்தை பெயரின் முதல் எழுத்து மட்டுமே இருக்கும்.

தமிழகத்தில் பெரும்பான்மையாக இந்த முறையில் மட்டுமே பெயர்கள் எழுதப்படும். ஆனால் கொடுக்கப்பட்ட ஆதார் அட்டைகளில் தந்தையின் முழுப்பெயர் விண்ணப்பதாரரின் பெயருக்குப் பின்னால் இணைக்கப்பட்டுள்ளது. தமிழகம் தவிர மற்ற பெரும்பான்மையான மாநிலங்களில் தனது பெயருக்குப் பின்னால் தான் சார்ந்திருக்கும் ஜாதியின் பெயரை இணைத்து எழுதும் பழக்கம் இன்றும் உள்ளது. தமிழகத்தில் பெரியார் போன்றோரால் முன்னெடுக்கப்பட்ட சாதி எதிர்ப்பு போராட்டத்தின் விளைவாகச் சாதி பெயரை இணைத்து எழுதும் வழக்கம் மறைந்தது. ஆனால் சமீப காலமாக மீண்டும் அந்த வழக்கம் தலை தூக்கத் தொடங்கியுள்ளது. இந்த ஆளும் காவி அரசு நேரிடையாக மதவாத சாதிய பிரிவினைகளை ஊக்குவித்து வருகிறது. இந்த ஆதார் அட்டைகளில் தமிழத்தில் வழக்கத்தில் இல்லாத கடைசிப் பெயர் இணைக்கும் முயற்சியும் அதன் ஒருவகையே. இந்தப் பிரச்சனையின் காரணமாக விண்ணப்பம் முழுமை பெறாத நிலையில் எனது தந்தை ஆதார் விபரங்களைத் திருத்தும் முயற்சிகளைத் தொடங்கினார்.

எங்கள் ஊரிலிருந்து 15 கி.மீ தொலைவில் அரசு ஆதார் மையம் ஒன்று உள்ளது. காலை 9 மணிக்கு முகாமை அடைந்தவர் மதியம் 3 மணிக்கு தான் வெளியே வருகிறார். இதே போல் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் விபரங்கள் மாற்ற, புதிய அட்டை பெற என அங்கே கூடியிருந்த கூட்டம் மிக அதிகம். ஒரு வழியாக விபரங்கள் மாற்ற விண்ணப்பித்தாயிற்று, இரண்டு நாள் கழித்து அதே மையத்திற்குத் தொலைபேசி மூலமாக அட்டை பெற எப்பொழுது வர வேண்டும் என்று கேட்ட பொழுது, குறுஞ்செய்தி ஒன்று வந்திருக்குமே என்று அவர்கள் பதில் சொல்லி இருக்கிறார்கள். அப்பொழுதான் அந்தக் குறுஞ்செய்தியைத் தேடி படிக்கிறார்கள். விண்ணப்பித்த அன்றே ஆதார் விபர மாற்றத்திற்கான தங்களது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்று ஆங்கிலத்தில் ஒரு செய்தி வந்து இருந்தது.

இந்த மாதிரி செய்தி வரும் என்று சொல்ல வேண்டியக் கடமை யாருக்கானது என்று தெரியவில்லை. அலைபேசிகளை வெறுமனே பேசுவதற்க்காக மட்டும் பயன்படுத்துபவர்கள், ஆங்கிலம் படிக்கத் தெரியாதவர்கள், அலைபேசி இல்லாதவர்களின் நிலை என்ன என்று தெரியவில்லை. சரி இந்த விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டு விட்டது, மீண்டும் அதே முகாமிற்கு மீண்டும் விண்ணப்பிக்கச் செல்கிறார். விண்ணப்பித்துவிட்டு வீடு வந்து சேர்கிறார். இந்த முறை அலைபேசி குறுஞ்செய்திக்காகக் காத்திருக்கிறார். அன்று மாலைக்குள் மீண்டும் நிராகரிக்கப்பட்டதாகச் செய்தி வருகிறது. அடுத்த நாள் அந்த முகாமிற்கு அழைத்துக் கேட்கிறார், எதனால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்று? அந்த முகாமில் இருப்பவர்களுக்கும் தெரியவில்லை.

இப்போது என்ன செய்வது, யாரைப் போய்க் கேட்பது? இணையம் மூலமாகவும் இந்த விபரங்களை மாற்ற விண்ணப்பிக்கலாம் என்று நான் சொன்னேன். அங்கிருந்து சான்றிதழ்களை எனக்கு அனுப்பி நான் இங்கே விண்ணப்பிப்பதற்குப் பதில் அங்கேயே ஏதெனும் ஒரு தனியார் இணையச் சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று முடிவு செய்து, ஒரு இணையச் சேவை மையத்தை அணுகினார். காலை விண்ணப்பம் பூர்த்திச் செய்யப்பட்டு அந்தச் சேவை மையத்திற்கு 50 செலுத்திவிட்டு வீடு வந்து சேர்கிறார். வந்து சேரும் முன்னரே விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகச் செய்தி வந்து சேர்கிறது. மீண்டும் அந்த இணையச் சேவை மையத்தை அணுகி விசாரிக்கும் போது கொடுக்கப்பட்ட சான்றிதழ் தவறு என்று வந்துள்ளது. அதாவது வங்கி கணக்குப் புத்தகம் சான்றாக இணைக்கப்பட்டு இருந்தது. அதுவும் பாரத வங்கி கணக்குப் புத்தகம். அரசங்கத்தால் நடத்தப்படும் ஒரு தேசிய வங்கி கணக்குப் புத்தகம் ஆதார் அட்டை பெற ஏற்றுக் கொள்ளப்படவில்லை. மீண்டும் ரேஷன் அட்டையைச் சான்றாக வைத்து விண்ணப்பிக்கப்பட்டது. இந்த முறை விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று அலைபேசிக்கு செய்தி வரவில்லை. அதே வேளையில் நிராகரிக்கப்பட்டது என்றும் செய்தி வரவில்லை. ஒருவழியாக ஆதார் பெயர் மாற்று விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அனுமானித்துக் கொண்டு நீட் தேர்வுக்கும் விண்ணப்பிக்க இணையச் சேவை மையத்திற்குச் செல்கிறார்.

படித்தவர்களும் பாமரர்களே
ஆதார் குறித்த மயக்கம் : படித்தவர்களும் பாமரர்களே

முதலில் ஆதார் பெயர் மாற்ற விண்ணப்பத்தினைப் பார்க்கிறார்கள், ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது. புதிய ஆதார் மின்னணு அட்டையும் கிடைத்து விட்டது. நீட் தேர்வுக்கான விண்ணப்பம் தொடங்குகிறது. முதல் பக்கம் முடிவில் பெயர் விபரங்கள் ஆதார் விபரங்களோடு ஒப்பீடு நடக்கிறது. ஒப்பீட்டின் முடிவில் கொடுக்கப்பட்ட பெயரும் ஆதார் விபரமும் ஒத்து போகவில்லை என்று வருகிறது. அப்படி என்றால் ஏற்கனவே கொடுக்கப்பட்ட விபரங்கள் அதாவது பழைய அட்டையில் உள்ள விபரங்கள் மட்டுமே இந்த இணையத்தில் உள்ளீடு செய்யப்ட்டுள்ளது. புதிய விபரங்கள் இணைக்கப்படவில்லை. புதிய விபரங்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படும் வகையிலான வசதி செய்யப்படவில்லை. இப்போது என்ன செய்வது?? இதற்கிடையே நீட் அலுவலகத்தை அலைபேசி மூலமும், மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ள நடந்த கூத்துகள் வேறு உள்ளது. அதைப் பின்னர்ப் பார்ப்போம். இப்போது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதா இல்லையா என்பதை முதலில் முடித்து விடுவோம்.

இந்த முறையும் தோல்வி என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் அங்கேயே அமர்ந்து இருக்கத் தெரிந்த நபர் ஒருவர் அவருடைய பெண்ணுக்கு நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிறார். அவருக்கும் ஆதார் பெயரில் மாற்றம் செய்யப்படவேண்டி இருந்ததால் அந்தப் பணிகளை எல்லாம் ஏற்கனவே முடித்து வைத்து இருந்தார். அந்தப் பெண்ணுக்கான விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது. சரி, அவர்கள் என்ன முறையைப் பின்பற்றிப் பெயர் மாற்றம் செய்தார்கள் என்று விசாரித்தார். அவர்கள் பெயர் மாற்றம் செய்யவில்லை, புதிதாக ஒரு ஆதார் அட்டை விண்ணப்பித்துப் பெற்று இருக்கிறார்கள். அதாவது பழைய அட்டையில் உள்ள விபரங்களை மாற்ற முயற்சிக்கும் பொது அவர்களுக்கு இதே போல் பிரச்சனைகள் வந்து உள்ளது. ஆகையால் பெயர் மாற்றம் செய்ய மீண்டும் முயற்சிக்காமல் புதிய அட்டை விண்ணப்பித்துப் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் புதிய யோசனை ஒன்று வந்தது. அதாவது விண்ணப்பிக்கும் போது ஆதார் எண்ணை கொடுக்காமல், ஆதார் பெயர் மாற்றத்திற்குக் கொடுக்கப்பட்ட விண்ணப்ப எண்ணை கொடுத்து முயற்சிக்கலாம் என்று. விபரங்களைச் சரி பார்க்கும் போது இந்த விண்ணப்ப எண்ணை வைத்து தேடும் போது புதிய விபரங்கள் கொடுக்கப்படும் அப்பொழுது எந்தப் பிரச்சினையும் வராது. ஒரு வழியாக இந்த யோசனை மூலம் முதல் பக்கத்தைத் தாண்டி அடுத்தடுத்த பக்கங்கள் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்யப்பட்டு ஒரு வழியாக விண்ணப்பம் பணம் செலுத்தப்பட்டு முடித்து வைக்கப்பட்டது. தேர்வு கட்டணம் ரூ.1400 ஆனால் இணையச் சேவை மையம் பெற்றுக் கொண்டது ,ரூ.1600 . நல்லது… ஒருவழியாக விண்ணப்பம் முடிந்தது. இன்று இரவு அவருடன் அலைபேசியில் உரையாடும் போது அவர் சொன்னதுதான் முக்கியம். இரண்டு வாரத்திற்குப் பிறகு இன்று நிம்மதியாகத் தூங்கப் போகிறேன் என்று. அதன் பிறகும் ஒன்றைச் சொன்னார் இதுக்கு மேல விண்ணப்பத்தை நிராகரிக்க மாட்டார்கள் என்று ஆறுதல் சொல்லிக் கொண்டார், நானும் அதையே நம்புகிறேன்.

இதற்கிடையே நீட் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ள நான் முயன்றேன். அவர்களது இணையதளத்தில் 5 தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டு இருந்தன. கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி இன்று மாலை வரை 1000 முறைக்கு மேல் முயற்சி செய்து விட்டேன் ஒரு முறை கூட என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. எந்நேரமும் பிஸி என்று தான் வந்தது. சனி ஞாயிறு விடுமுறை வேறு, வேலை நாட்களிலும் காலை 9 30 மணி முதல் மாலை 5 மணி வரைதான் சேவை. 5 மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டது, ஒன்றுக்கு கூட இது வரை பதில் இல்லை.

இணையம், அலைபேசி போன்ற மேல்மட்ட சேவைகளுடன் பெருமளவு பழக்கப்படாத, தினக்கூலி வேலைகளில் உள்ள ஒருவர் தனது மகனுக்கோ, மகளுக்கோ நீட் தேர்வுக்கான விண்ணப்பத்தைக் கண்டிப்பாக இந்தப் பிரச்சனைகளுக்கு இடையே முடிக்க இயலாது. அவர்களால் முடியாத பட்சத்தில் தேர்வு நெருங்கும் இந்த நேரத்தில் மாணவன் நேரடியாக இந்த வேலைகளைச் செய்ய இயலுமா என்பது கேள்விக்குறிதான். நீட் தேர்வு இல்லாமல் இருந்தால் மட்டும் இவர்களுக்கு இடம் கிடைக்குமா என்றால் அதுவும் இந்தக் கல்வி சந்தையில் கேள்விக்குறியே? ஆனால் நீட் தேர்வு இல்லாத சமயத்தில் கிடைக்கும் ஒன்று இரண்டு இடங்கள் கூட இப்போது கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது.

நன்றி: பேஸ்புக்கில் Sakthi Vel