privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்பிர்லா - சஹாரா ஆவணங்கள் : மோடியின் உத்தமர் வேடம் கலைந்தது !

பிர்லா – சஹாரா ஆவணங்கள் : மோடியின் உத்தமர் வேடம் கலைந்தது !

-

2013-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அப்போதைய காங்கிரஸ் ஆட்சியில் நடந்த லஞ்ச லாவண்யங்களில் முக்கியமான நிலக்கரி ஒதுக்கீட்டு ஊழலில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பிர்லா என்ற தரகு முதலாளியின் அலுவலகங்களில் ஒரு தேடுதல் வேட்டையை நடத்தியது, மத்திய புலனாய்வு துறை (சி.பி.ஐ). அந்தத் தேடுதலில் 25 கோடி ரூபாய் ரொக்கமாக கைப்பற்றப்பட்டதோடு, பிர்லா குழுமத்தின் தலைவர் (CEO) சுபேந்து அமிதாப்பின் கணினியில் இருந்து பல கோப்புகள் கைப்பற்றப்பட்டன.

அவற்றில் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது தொடர்பாக குறிப்புகள் இருந்தன. சுபேந்து அமிதாபின் கணினியில் கிடைத்த ஆவணங்கள் ஒன்றில் – “Gujarat CM – Rs 25 crores. 12 paid. 13?” (குஜராத் சி.எம்.- ரூ 25 கோடி.12 கொடுத்தாச்சு. 13?) என்ற குறிப்பு காணப்பட்டது.

அதாவது மன்மோகன் ஆட்சியின் நிலக்கரி ஊழல் பற்றி புலனாய்வு செய்யப்போன இடத்தில், வேறொரு ஊழலுக்கான ஆதாரம் சி.பி.ஐ. வசம் சிக்கியிருக்கிறது. குஜராத் முதல்வருக்கு பிர்லா நிறுவனம் எதற்காகப் பணம் கொடுத்தது என்ற கோணத்தில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் இன்னொரு விசாரணையை சி.பி.ஐ. தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் இந்த ஆவணங்களை வருமானவரித் துறையிடம் ஒப்படைத்த சி.பி.ஐ, மேற்படி 12 கோடி ரூபாய்க்கு பிர்லா வருமான வரி கட்டியிருக்கிறாரா என்று மட்டும் விசாரிக்கும்படி கோரியது.

அதன்படி வருமான வரித்துறை அமிதாபை பல முறை விசாரித்ததில் “Gujarat CM – Rs 25 crores. 12 paid. 13?” என்று எழுதியது தான்தான் என்று ஒத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், அது “Gujarat Alkalis and Chemicals” என்பதை (ஒரு இரசாயன நிறுவனம்) குறிப்பதாக விளக்கம் சொல்லியிருக்கிறார். அவர் பொய் சொல்கிறார் என்று வருமான வரித்துறை தனது 1287 பக்க விசாரணை அறிக்கையில் முடிவு செய்தது. ( http://indianexpress.com/article/india/india-others/regularly-routed-cash-through-hawala-top-birla-executive-tells-income-tax/ )

சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய் (இடது) மற்றும் ஆதித்யா பிர்லா குழுமத் தலைவர் குமாரமங்கலம் பிர்லா.

மோடிதான் அந்த அந்த காலகட்டத்தில் குஜராத் முதல்வராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆவணங்கள் பற்றிய வருமான வரித்துறையின் விரிவான விசாரணையிலிருந்து தெரிய வந்த இரண்டு முக்கிய விஷயங்கள் – ஒன்று, பிர்லா குழுமம் ஹவாலா மூலமாக பெருமளவு ரொக்கப் பணம் பெற்று வந்தது; இரண்டு, அவ்வாறு பெறப்பட்ட பணம் உயர் பதவிகளில் இருந்த பல்வேறு நபர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. கிடைத்த ஆவணங்கள் பற்றி வருமான வரித்துறை முறையான ஆய்வு நடத்தி இந்தத் தகவல்களை உறுதி செய்திருக்கிறது.

இரண்டாவது வழக்கு சகாரா குழுமம் தொடர்பிலானது. அந்தக் குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் நிதி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் திட்டங்கள் மூலமாக கருப்புப் பணத்தை புழங்க விட்டதாக உச்சநீதி மன்றத்தால் மார்ச் 2014-இல் திகார் சிறையில் வைக்கப்பட்டவர்.

2014 நவம்பர் 22-ஆம் தேதி டெல்லி நொய்டாவில் உள்ள சகாரா குழுமத்தின் அலுவலகங்களில் தேடுதல் நடைபெற்றது. ரூ.137 கோடி ரொக்கப் பணமும், பெரும் எண்ணிக்கையிலான ஆவணங்களும், சுப்ரதா ராயின் தனிப்பட்ட ஊழியர்களின் கணினிகளில் இருந்து பல கோப்புகளும் கைப்பற்றப்பட்டன. பல மூத்த அரசியல் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட ரொக்கப் பணம் பற்றிய விபரங்கள் அவற்றில் இருந்தன.

ஒரு கணினி கோப்பின் அச்சுப் பிரதியில் ‘இன்னின்ன தேதியில் இன்னின்ன நபரிடம் இருந்து இவ்வளவு தொகை பெறப்பட்டது’ என்று பணம் வரத்து பட்டியல் ஒன்று இருந்தது. தொகைகளின் கூட்டல் ரூ.115 கோடி. அதன் பிறகு பல்வேறு நபர்களுக்கு, பல்வேறு தேதிகளில் ரொக்கம் பட்டுவாடா செய்யப்பட்ட விபரங்களும், பணம் கொண்டு கொடுக்கப்பட்ட இடமும், கொண்டு போனவர் பெயரும் இருந்தன.

பிர்லா குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுபேந்து அமிதாப்.

தேடுதலின் போது கைப்பற்றப்பட்ட அந்த அச்சுப் பிரதியில் ஒரு வருமான வரித்துறை அதிகாரி, இரண்டு சாட்சியங்கள் மற்றும் ஒரு சகாரா அலுவலர் ஆகியோர் கையொப்பமிட்டு உறுதி செய்திருந்தனர்.
இதே ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள விபரங்கள் சிறு சிறு மாற்றங்களோடு இன்னொரு கோப்பிலும் இருந்தன. முதல் ஆவணத்தில் “cash given at  Ahmedabad, Modiji” (அகமதாபாதில் கொடுக்கப்பட்ட ரொக்கப் பணம், மோடிஜி) என்று குறிப்பிடப்பட்டிருந்தது, பிற ஆவணங்களில் “cash given to CM Gujarat” (குஜராத் சி.எம்-க்கு கொடுக்கப்பட்ட ரொக்கப்பணம்) என்று எழுதப்பட்டிருந்தது.

“அகமதாபாதில் மோடிஜி”க்கு கொடுத்ததாக ரூ.40 கோடி, “மத்திய பிரதேச சி.எம்”-க்கு கொடுத்ததாக ரூ.10 கோடி, “சத்தீஸ்கர்  சி.எம்.”-க்கு கொடுத்ததாக ரூ.4 கோடி, “டெல்லி சி.எம்”-க்கு கொடுத்ததாக ரூ.1 கோடி என்று குறிப்பிடப்பட்டிருந்தன. இந்தப் பணப் பட்டுவாடாக்கள் 2013-க்கும் 2014 மார்ச்சுக்கும் இடையில் நிகழ்ந்திருக்கின்றன. அப்போது குஜராத் முதலமைச்சர் பா.ஜ.க.வின் நரேந்திர மோடி, மத்திய பிரதேச முதல்வராக இருந்தவர் பா.ஜ.க.-வின் சிவ்ராஜ் சிங் சவுகான், சத்தீஸ்கர் முதலமைச்சர் பா.ஜ.க.-வின் ராமன் சிங், டெல்லி முதல்வராக இருந்தவர் காங்கிரசின் ஷீலா தீட்சித்.

சகாரா நிறுவனத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை, பிரதமர் மோடியின் ஆட்சியில்தான் நடந்திருக்கிறது. ஆனால், சகாரா ஆவணங்கள் மட்டுமின்றி முன்னர் குறிப்பிட்ட பிர்லா ஆவணங்களும் இருட்டடிப்பு செய்யப்பட்டன. பிர்லா ஆவணங்கள் மீது நடத்திய விசாரணை முடிவுகளின் அடிப்படையிலும் சகாராவில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையிலும் லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யும்படி வருமான வரித்துறை சி.பி.ஐ.-க்கு பரிந்துரைத்திருக்க வேண்டும். ஆனால் விஷயம் அப்படியே இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டது. இப்படிஊழலை இருட்டடிப்பு செய்த வருமான வரித்துறை அதிகாரி கே.வி.சவுத்ரிக்கு கிடைத்த தண்டனை என்ன தெரியுமா?
வருமான வரித் துறை புலனாய்வு பிரிவின் தலைவராக இருந்த கே.வி சவுத்ரி, 2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (CVC) தலைமை கண்காணிப்பு ஆணையராக மோடியால் நியமிக்கப்பட்டார். ராம மோகனராவை ஊழல் கண்காணிப்பு ஆணையராக ஜெயலலிதா நியமித்தாரே அதுபோலத்தான்.

ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமனத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றம் சாட்டினார் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண்.
முதலாவதாக, வருவாய்த் துறை அதிகாரி (ஆட்சிப் பணி அந்தஸ்து – I.R.S.) இல்லாத ஒருவர் கண்காணிப்பு ஆணையராக இதுவரை நியமிக்கப்பட்டதில்லை என்ற முறைகேட்டை சுட்டிக்காட்டினார் பூஷண்.

இரண்டாவதாக,  2-ஜி ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரித்துக் கொண்டிருந்தபோது, அதோடு தொடர்புடைய பலருடன் பேரம் பேசியதாக உச்சநீதிமன்றத்தால் எச்சரிக்கப்பட்ட முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் சின்ஹா-வின் வீட்டின் வருகைப் பதிவேட்டில், அப்போது வருமான வரித்துறையின் புலன் விசாரணை பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருந்த சவுத்ரியின் பெயர் 4 முறை இடம் பெற்றிருந்தது.

அந்தக் காலகட்டத்தில்தான் ஸ்டாக் குரு ஊழலில் (ஸ்டாக் குரு என்ற மோசடி நிறுவனத்தை ஆரம்பித்து 6 மாதத்தில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக நடந்த மோசடி) சவுத்ரியின் பங்கு பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்திக் கொண்டிருந்தது. இன்னொரு பக்கம், சவுத்ரியால் விசாரிக்கப்பட்டு வந்த ஹவாலா டீலர் மொயின் குரேஷியும் அதே காலகட்டத்தில் ரஞ்சித் சின்ஹாவின் வீட்டுக்கு வந்து போயிருக்கிறார்.அதாவது, ஸ்டாக் குரு ஊழலுக்காக சவுத்ரியை விசாரிக்கும் சி.பி.ஐ. அதிகாரி சின்ஹாவும், ஹவாலா வழக்கில் சவுத்ரியால் விசாரிக்கப்படும் மொயின் குரேஷியும் நெருங்கிய தொடர்பில் இருந்திருக்கின்றனர். இதுதான் ஊழலை ஒழிக்கும் பொறுப்பை ஏற்றிருக்கும் மத்திய புலனாய்வுத் துறை மற்றும் கருப்புப் பணத்தை ஒழிக்கும் வருமான வரித்துறை ஆகியவற்றின் லட்சணம்.

மூன்றாவதாக, எச்.எஸ்.பி.சி. என்ற பன்னாட்டு வங்கிக் கணக்குகளில் கருப்புப் பணத்தை பதுக்கி, சுமார் 4500 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தவர்கள் மீதான வருமான வரித்துறை விசாரணையை 3 ஆண்டுகளாக இழுத்தடித்து வருவதும் திருவாளர் சவுத்ரிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி அரசால், முறைகேடான வழியில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள கே.வி.சௌத்ரி.

இத்தகைய ‘தூய்மை’யான பின்னணி கொண்ட சவுத்ரி, ‘தூய்மை’யான பிரதமரால் ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து, பிரசாந்த் பூஷண் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
பின்னர், 2016 நவம்பர் மாதம் சகாரா – பிர்லா ஆவணங்கள் பற்றிய தகவல் கிடைத்ததை ஒட்டி, அவற்றின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று அதே வழக்கில் ஒரு மனு தாக்கல் செய்தார் பிரசாந்த் பூஷண்.

உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் எந்த அவசரத்தையும் காட்டவில்லை. இந்த வழக்கில் ஆஜரான மோடி அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்கி, “இத்தகைய ஆவணங்களையெல்லாம் ஆதாரங்களாக ஏற்றுக் கொண்டால், நாட்டில் யாருமே பாதுகாப்பாக இருக்க முடியாது” என்று வாதிட்டிருக்கிறார். உச்சநீதிமன்றமோ, “இந்த ஆவணங்கள் சில உதிரித் தாள்கள் மட்டுமே. அவற்றின் அடிப்படையில் உயர் பதவியில் இருக்கும் முக்கியமான தலைவர்களை விசாரணைக்கு உட்படுத்த முடியாது. இதை எல்லாம் வைத்துக் கொண்டு உயர் பதவியில் இருப்பவர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிட்டால் அவர்கள் எப்படி ஆட்சி புரிய முடியும். இன்னும் வலுவான ஆதாரங்கள் இருந்தால் பேசுங்கள் என்று கூறி பல முறை இழுத்தடித்து  கடைசியில் வழக்கை தள்ளுபடியே செய்து விட்டது.

முறைகேடும் ஊழலும் நடந்திருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன வலுவான ஆதாரத்தை தர முடியும்? மோடி –  25 கோடி ரூபாய் என்று ஒரு துண்டு சீட்டில் யாராவது எழுதிக் கொண்டு வந்து காண்பித்தால், உடனே ஊழல் வழக்கு போட முடியுமா என்பதுதான் உச்ச நீதிமன்றம் எழுப்பும் கேள்வி. இந்த ஆவணங்கள் பிரசாந்த் பூஷண் கொண்டு வந்து காட்டிய உதிரிக் காகிதங்கள் அல்ல. பிர்லா மற்றும் சகாரா அலுவலகங்களில் சி.பி.ஐ.யும் வருமான வரித்துறையும் கைப்பற்றியிருக்கும் ஆவணங்கள். இதற்கு மேல் வலுவான ஆதாரம் காட்ட வேண்டுமென்றால், அது லஞ்சப் பணத்துக்கு பெற்றுக்கொண்டவர் வழங்கும் ரசீதாகத்தான் இருக்க முடியும். தற்போது உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு, ஊழல் வழக்குகள் பதிவு செய்வது தொடர்பாக ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்புகளுக்கு எதிராக உள்ளது.

1990-களில் பா.ஜ.க தலைவர் அத்வானி முதற்கொண்டு பல்வேறு கட்சிகளின் முக்கியமான தலைவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது தொடர்பான ஜெயின் ஹவாலா டயரி வழக்கில் உச்சநீதி மன்றம் கொடுத்த வழிகாட்டலின்படி, ‘ஆதாரங்கள் எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் உயர்பதவியில் இருப்பவர்கள் தொடர்பாக ஊழல் குற்றச்சாட்டுகள்  தவறாமல் விசாரிக்கப்பட வேண்டும்’. 2013-இல் லலிதா குமாரி வழக்கில், “எந்த ஒரு ஆதாரம் கிடைத்தாலும், அந்த ஆதாரம் உண்மையானதா, போலியானதா என்று கவலைப்படாமல், அது உண்மையானது என்ற ஊகத்தின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும்” என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு ஒன்று தீர்ப்பளித்திருந்தது.

இந்த உச்சநீதிமன்ற வழிகாட்டல்களின்படி சகாரா- பிர்லா ஆவணங்கள் மீது விசாரணை நடத்தும்படி பிரசாந்த் பூஷண் தலைமை கண்காணிப்பு ஆணையம், நேரடி வரிகளுக்கான வாரியம், அமலாக்கத் துறை, மத்திய புலனாய்வு அலுவகம், உச்சநீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட கருப்புப் பணத்துக்கான சிறப்பு விசாரணைக் குழு ஆகியோருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
வருமான வரி  சட்டத்தின் 132(4A) பிரிவின் கீழ் கைப்பற்றப்பட்ட கோப்புகளில் உள்ள விபரங்கள், மேற்படி விசாரிக்கப்படுவது வரை உண்மை என்றே கருதப்பட வேண்டும். மேலும், ஐ.டி. துறையின் மதிப்பீட்டு அறிக்கையில் சகாரா தானாகவே முன்வந்து ரூ.1,217 கோடி பணத்தை ஒப்படைத்ததாக பதிவாகியிருக்கிறது.

ஜெயின் ஹவாலா டயரிகளில் இருந்ததைவிட வலுவான ஆதாரங்கள் சகாரா மற்றும் பிர்லா ஆவணங்களில் இருந்தன.ஜெயின் குறிப்புகளில் “LKA”, “HN”, “AB” என்று சில முதலெழுத்துகள் குறிப்பிடப்பட்டு பல லட்சம் கொடுக்கப்பட்டதாக பதிவாகியிருந்தது.அதன் அடிப்படையிலேயே அத்வானி உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள் மீது ஊழல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தது, உச்சநீதிமன்றம்.

பிர்லா ஆவணங்களிலோ, இன்னும் தெளிவாக, விபரமாக குறிப்பிட்ட திட்டங்களுக்கு இன்ன அமைச்சகத்துக்கு, இன்ன அதிகாரிக்கு கொடுக்கப்பட்ட லஞ்சத் தொகைகள் பற்றிய குறிப்பான விபரங்கள் காணப்படுகின்றன.இவை தொடர்பான மின்னஞ்சல் பரிவர்த்தனை விவரங்களும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் உள்ளன. அந்த மின்னஞ்சல் எழுதப்பட்ட காலத்தில் ஆதித்ய பிர்லா குழுமத்தின் ஹிண்டால்கோ நிறுவனம் தனது அலுமினியம் ஆலைக்காக மத்திய பிரதேசத்தின் சிங்கரவுலி நிலக்கரி வயல்களின் மகான் பிளாக்கிலிருந்து நிலக்கரி பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தது. இந்த விபரங்கள் காட்டுவது என்னவென்றால், நவம்பர் 16, 2012 தேதியிட்ட “GC October/ November” என்ற ஆவணத்தில் “Gujarat CM”-க்கு பணம் கொடுக்கப்பட்டது தொடர்பான குறிப்பை ஏதோ கிறுக்கல் என்று ஒதுக்கித் தள்ளி விட முடியாது என்பதைத்தான்.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமனத்தில் நடந்த முறைகேட்டை அம்பலப்படுத்திய உச்சநீதி மன்ற நீதிபதி பிரசாந்த் பூஷண்.

“இது துரதிர்ஷ்டவசமானது. ஊழலுக்கு எதிராகவும், பொது வாழ்க்கையில் நேர்மைக்காகவும் நடத்தப்படும் இயக்கத்துக்கு மிகப்பெரிய பின்னடைவு. நிலக்கரி ஊழலிலும், 2ஜி ஊழலிலும் சுயேச்சையான விசாரணைக்கு உத்தரவிட்டு தன்னை சிறப்பித்துக் கொண்ட உச்சநீதி மன்றத்தின் பிம்பத்தின் மீதும் இது ஒரு கறுப்புப் புள்ளி. அதிகாரத்தில் இருக்கும் பலம் பொருந்தியவர்கள் சிறை செல்ல நேரிடும் என்றால், தீர்ப்பெழுதும் உச்சநீதி மன்றத்தின் கைகள் நடுங்குகின்றன” என்று கூறியிருக்கிறார் பிரசாந்த் பூஷண்.
ஆ.ராசாவையோ, கனிமொழியையோ, சாகித் பல்வாவையோ, அம்பானியின் ஊழியர்களையோ சிறைக்கு அனுப்புவதற்கு உச்ச நீதி மன்றத்தின் கைகள் நடுங்கவில்லை. ஆனால் அதே வழக்கில் அம்பானியையும் டாடாவையும் நீரா ராடியாவையும் சிறைக்கு அனுப்ப உச்ச நீதிமன்றத்துக்கு துணிவில்லை. இது நேரடி சாட்சியமே இல்லாமல் அப்சல் குருவுக்கு தூக்குதண்டனை விதித்த உச்ச நீதிமன்றம். பொய் சாட்சி என்று தெரிந்த பின்னரும் பேரறிவாளனை விடுவிக்க மறுக்கும் நீதிமன்றம்; நாலும் மூணும் எட்டு என்ற குமாரசாமியின் தீர்ப்பு சரியா தவறா என்று மாதக் கணக்கில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் உச்ச நீதிமன்றம்; உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மீதான ஊழல் வழக்குகளை கிடப்பில் போட்டு வைத்திருக்கும் நீதிமன்றம்.

உச்சநீதி மன்றத்தின் கைகள் நடுங்குவது அதிகாரத்தில் இருக்கும் மோடி பற்றிய பயத்தால் மட்டுமில்லை, இந்த வழக்கில் இதற்கு மேல் அக்கறை காட்டினால், ஒட்டு மொத்த நீதிபதிகளின் மாண்பும் தெருவுக்கு வந்து விடும் என்ற கவலையினாலும் கூடத்தான். மோடி மீதான ஊழல் குற்றச்சாட்டும் பிர்லா முதலான தரகு முதலாளிகளின் பணப் பட்டுவாடாவும் விசாரணைக்கு அப்பாற்பட்டவை. அதை விசாரிக்க உச்சநீதிமன்றம் முயற்சித்தால் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஊழல்கள் எதிர்த்தரப்பால் தண்டவாளத்தில் ஏற்றப்பட்டு விடும் என்பது நீதிபதிகளுக்குத் தெரியும்.

சஹாரா−பிர்லா ஆவணங்கள் குறித்த வழக்கைப் புலன் விசாரணை செய்யவும் மறுத்து, அதனைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட உச்சநீதி மன்ற நீதிபதிகள் அமிதவராய் (இடது) மற்றும் அருண் மிஸ்ரா.

பிர்லா, சகாரா போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் பல 100 கோடி கணக்கில் ஹவாலா பணத்தை ரொக்கமாக கையாள்கின்றன என்ற உண்மை, பண மதிப்பு நீக்கத்தை கொண்டாடிய ஊடகங்களின் 24 மணி நேர கவரேஜில் வரவில்லை. இதே காலகட்டத்தில் எஸ்ஸார் நிறுவனத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட மின்னஞ்சல்களில் சகாராவைப் போலவே பல்வேறு தரப்பு மூத்த அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட விபரங்களும் இருள் உலகுக்கு அனுப்பப்பட்டு விட்டது. நிலக்கரி இறக்குமதி மதிப்பை அதிகமாக காட்டி பணத்தை வெளிநாட்டில் பதுக்கிய அதானி, அம்பானி குழுமங்கள் பற்றிய செய்தியும் புதைக்கப்பட்டு விட்டிருக்கிறது.

500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்து தன்னிடம் உள்ள பணம் கருப்புப் பணம் அல்ல என்று ஒவ்வொரு குடிமகனும் நிரூபிக்க வேண்டும் (நிரூபிக்கப்படுவது வரை எல்லோரும் குற்றவாளிகளே) என்று கூறிய உத்தம சீலர்தான் பிரதமர் மோடி. அவரது பெயர் குறிப்பிட்டு பணப் பட்டுவாடா நடந்திருப்பது பற்றிய ஆதாரங்கள் கையில் இருந்தும் சி.பி.ஐ.யும் வருவாய் புலனாய்வுத்துறையும் விசாரிக்க மறுக்கின்றன.இவை போதுமான சாட்சியங்கள் அல்ல என்கிறது நீதிமன்றம்.

சஹாரா குழுமத்திடமிருந்து முறைகேடாகப் பணம் பெற்றுள்ள சத்தீஸ்கர் மாநில பா.ஜ.க. முதல்வர் ராமன் சிங் (இடது), ம.பி. மாநில பா.ஜ.க. முதல்வர் ‘‘வியாபம் ஊழல் புகழ்’’ சிவராஜ் சிங் சௌஹான் (நடுவில்) மற்றும் முன்னாள் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்.

லஞ்சம் வாங்குபவர் பிரதமர், அதை மூடி மறைத்தவர், லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் தலைவர்; அதை விசாரிக்க மறுப்பவர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்; மொத்த விவகாரத்தையும் இருட்டடிப்பு செய்பவை ஊடகங்கள்.
இத்தகைய ஆதாரங்களின் அடிப்படையில் எல்லாம் புலன் விசாரணைக்கு உத்தரவிடுவோமானால், அரசமைப்பைக் காக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் இயங்கவே முடியாது. ஜனநாயகமும் பாதுகாப்பாக இருக்காது என்று நீதிபதிகள் அருண் மிஸ்ராவும் அமிதவா ராயும் தமது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கின்றனர். உண்மைதான், ஜனங்களின் நலனைக் காட்டிலும், ஜனநாயகத்தின் நலன் அல்லவோ முக்கியம்!

-அறிவு

புதிய ஜனநாயகம், மார்ச் 2017