privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்அரசு ஆசியுடன் ஜப்பான் மாருதி நடத்தும் கொத்தடிமைத் தொழில்

அரசு ஆசியுடன் ஜப்பான் மாருதி நடத்தும் கொத்தடிமைத் தொழில்

-

புது தில்லி துணை நகர தொழிலாளர்கள் நிலைமை – நேரடி செய்தியறிக்கை பாகம் 2

”இது என்னுடைய கதை மட்டுமல்ல. அனைத்து தொழிலாளிகளின் கதையும் இது தான்” என்கிறார் ராம் நிவாஸ். மாருதி சுசுகி தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ராம் நிவாஸ். 2012 ஜூலை 18-ம் தேதி சம்பவத்தைத் தொடர்ந்து மாருதி நிர்வாகத்தின் வேலைப் பறிப்பு நடவடிக்கைக்கு ஆளானவர். அன்றைய தினம் ராம் நிவாஸ் இரண்டாவது ஷிப்டில் பணிபுரிய வேண்டியிருந்ததால் ஆலையைக் கொளுத்திய ‘தீவிரவாதிகள்’ பட்டியலில் இடம் பெறவில்லை.

”மானேசர் ஆலைக்கு வருவது எங்களுக்கு ஒரு இன்பக் கனவாக இருந்தது. நான் ஐ.டி.ஐ படித்து விட்டு மாருதியின் குர்காவ்ன் ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்தேன். அங்கே இருந்த உற்பத்தி லைனில் 72 நொடிகளுக்கு ஒரு கார் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பது இலக்கு. உங்களுக்கு மாருதியின் வேலை நிலைமைகள் குறித்து தெரியும் தானே?” என்றார் ராம் நிவாஸ்.

ராம் நிவாஸ்

இழிபுகழ் பெற்ற மாருதியின் சுரண்டல் முறை மாருதி தொழிலாளிகளின் பல்லாண்டு காலப் போராட்டங்களுக்குப் பின்னரே அம்பலமானது. தொழிலாளிகளுக்கு விடுமுறை கிடையாது – அவசரகால விடுமுறை எடுப்பதாக இருந்தால் ஒரு நாள் விடுப்புக்கு இரண்டு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும். தேனீர் குடிக்க ஏழு நிமிடங்கள், உணவுக்கு 20 நிமிடங்கள், கழிவறை செல்ல ஐந்து நிமிடங்கள் என வரையறுக்கப்பட்டிருக்கும் நேரத்துக்குள் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.

காரின் பல்வேறு உதிரி பாகங்கள் நீண்ட கன்வேயர் பெல்டில் நகர்ந்து கொண்டிருக்கும். நகரும் கன்வேயர் பெல்டில் உள்ள பாகங்களை சம்பந்தப்பட்ட தொழிலாளி இணைப்பதற்கு சில வினாடிகள் ஒதுக்கப்பட்டிருக்கும். அதற்குள் அந்த வேலையை அவர் செய்யவில்லை என்றால், அடுத்ததாக உள்ள தொழிலாளியால் அந்த குறிப்பிட்ட உதிரி பாகத்தில் அவருக்கென ஒதுக்கப்பட்ட வேலையைச் செய்ய முடியாது.

சார்லி சாப்ளினின் மாடர்ன் டைம்ஸ் திரைப்படத்தின் காட்சியை நினைவூட்டிக் கொள்ளுங்கள்.  மானேசர் ஆலையின் உற்பத்தி அவ்வாறே நடந்தது. கன்வேயர் பெல்டின் அருகே தண்ணீர் வைக்கப்பட்டிருக்கும். தாகமெடுக்கும் தொழிலாளிகளுக்கு தண்ணீரைப் பார்ப்பதற்கு மட்டுமே நேரமிருக்கும் – குடிப்பதற்கு நகர்ந்தால் கன்வேயர் பெல்டில் அவர் இணைக்க வேண்டிய உதிரிபாகம் நகர்ந்து சென்றிருக்கும். தொழிலாளிகள் தங்களுக்குள் பேசிக் கொள்வதற்கு கூட ஆலை நிர்வாகம் தடை போட்டிருந்தது.

”குறிப்பாக குர்காவ்ன் ஆலையில் இருந்து மானேசர் ஆலைக்கு மாறுதல் பெற்று வரவேண்டும் என தொழிலாளிகள்  ஏன் விரும்பினார்கள்?”  ராம் நிவாசிடம் கேட்டோம்.

”எல்லோரும் அல்ல. ஒப்பந்த தொழிலாளிகளே அப்படி விரும்பினார்கள். மானேசர் ஆலை 2007-ம் ஆண்டு தான் உற்பத்தியைத் துவங்கியது. குர்காவ்ன் ஆலையில் பணிபுரிந்து வந்த ஒப்பந்த தொழிலாளிகளிடம் மானேசருக்குச் சென்றால் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என சொல்லப்பட்டு வந்தது. அதை நம்பினோம். எனவே மானேசருக்கு பணிமாற்றம் விரும்பிக் கேட்டு வந்தோம்”

தாகமெடுக்கும் தொழிலாளிகளுக்கு தண்ணீரைப் பார்ப்பதற்கு மட்டுமே நேரமிருக்கும்
தாகமெடுக்கும் தொழிலாளிகளுக்கு தண்ணீரைப் பார்ப்பதற்கு மட்டுமே நேரமிருக்கும்

”மானேசரில் பணி நிரந்தரம் செய்யப்பட்டீர்களா?

“சிலருக்குக் கிடைத்தது; பலருக்கு கிடைக்கவில்லை. மொத்தம் 3000 தொழிலாளர்களில் 1100 பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டார்கள். ஆனால், பிரச்சினை அதுவல்ல. இங்கே குர்காவ்னை விட ஒடுக்குமுறை அதிகமானது. குர்காவ்னில் 72 நொடிகளுக்கு ஒரு கார் என இலக்கு வைத்து கன்வேயர் பெல்ட் நகர்ந்தது என்றால் இங்கே முதலில் 60 நொடிகளுக்கு ஒரு கார் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இது 44 நொடிகள் என குறைக்கப்பட்டது”

கன்வேயர் பெல்ட்டின் வேகம் கூட்டப்பட்டதுடன் வேறு கொடூரமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. தொழிலாளிகள் செல்பேசிகள் வைத்துக் கொள்ளக் கூடாது, வேலைக்கு இடையே தண்ணீர் குடிக்க கூடாது, வேலை நேரத்துக்கு இடையே வரும் ஓய்வு நேரமும் உணவு நேரமும் சுருக்கப்படுவது, முந்தைய நாளின் வேலை அறிக்கையை மறுநாளின் தேனீர் இடைவெளியின் (7 நிமிடங்கள்) போது நிரப்பிக் கொடுப்பது என நினைத்துப் பார்க்கவே முடியாத வடிவங்களில் எல்லாம் தொழிலாளிகளின் மேல் அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டது மாருதி நிர்வாகம்.

”சரி.. இந்த மாதிரியான ஒடுக்குமுறைக்கு எதிராக தொழிலாளர்களின் எதிர்வினை எந்தமாதிரியாக இருந்தது?”

”முதலில் எங்களுக்கான சங்கம் துவங்க வேண்டுமென திட்டமிட்டோம்”

“உங்களுக்கான சங்கம் என்றால்…”

“ஆம், ஏற்கனவே நிர்வாகத்தின் கைக்கூலி சங்கம் ஒன்று இருந்தது. நாங்கள் அதை மஞ்சள் சங்கம் என்று அழைப்போம். இதற்கு மேல் மஞ்சள் சங்கத்தை நம்பத் தேவையில்லை என்றும் ‘சிவப்பு’ சங்கம் ஒன்றைக் கட்டுவதென்றும் 2011-ம் ஆண்டு ஜூன் 4-ம் தேதி தீர்மானித்தோம். இதனை அறிந்த நிர்வாகம், மஞ்சள் சங்கத்தின் செயல்பாடுகளில் தொழிலாளர்களுக்கும் ஒப்புதல் உள்ளதெனக் காட்ட கையெழுத்து வாங்க முற்பட்டார்கள். எனவே நாங்கள் அன்றைய தினமே வேலை நிறுத்தத்தில் இறங்கினோம்.”

2011-ம் ஆண்டு ஜூன் 4-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெற்ற தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் சுமார் 13 நாட்களுக்கு நீடித்தது. மூவாயிரம் தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட நிலையில், இறுதியில் நிர்வாகம் இறங்கி வந்துள்ளது. தொழிலாளர்கள் தாங்கள் விரும்பியபடி சங்கம் கட்டிக் கொள்வதை அனுமதித்த நிர்வாகம், 13 நாள் வேலை நிறுத்தத்திற்காக 29 நாளுக்கான சம்பளத்தைப் பிடித்தம் செய்து கொண்டது. ஆலை திறக்கப்பட்டு உற்பத்தி துவங்கிய நிலையில், மீண்டும் ஆகஸ்ட் 29-ம் தேதி கதவடைப்பு செய்தது நிர்வாகம்.

சங்கம் கேட்டுப் போராடிய தொழிலாளர்களில் 94 பேரை பணி நீக்கம் செய்த மாருதி, எஞ்சியவர்கள் நன்னடத்தை பத்திரம் ஒன்றைத் தொழிலாளர்கள் மேல் திணித்தது. ‘நன்னடத்தை’ எனச் சொல்லப்பட்டாலும், சாராம்சத்தில் அது ஒரு கொத்தடிமைப் பத்திரமாகவே இருந்துள்ளது. பணியின் போது ஏற்படும் சிறிய தவறுகளுக்கு 15 நாட்கள் பணியிடை நீக்கம், புகையிலை போடக்கூடாது, பேசக்கூடாது, கழிவறையில் அதிக நேரம் எடுத்துக் கொள்ளக் கூடாது என அடிப்படை மனித உரிமைகளுக்கே எதிரான விதிகளை மேற்படி ‘நன்னடத்தை’ பத்திரம் கொண்டிருந்தது. மைய அரசும் அரியானா மாநில அரசும் ஒரு ஜப்பானிய கார்ப்பரேட் கம்பெனி தமது சொந்தக் குடிமக்களைக் கொத்தடிமைகளாக்க ஒப்பந்தம் செய்யத் துடிப்பதை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்த நிலையில், மாருதி நிர்வாகத்தின் பின் போலீசு உள்ளிட்ட சகல அரசு எந்திரங்களும் துணையாக நின்றன.

சுமார் முப்பத்து மூன்று நாட்களுக்குப் பின் மீண்டும் ஆலையைத் திறந்த மாருதி நிர்வாகம் உடனடியாக 1200 ஒப்பந்தத் தொழிலாளிகளை வேலை நீக்கம் செய்தது. எஞ்சிய தொழிலாளர்களையும் வேறு வேறு தொழிற் பிரிவுகளுக்கு பணியிட மாற்றம் செய்தது – அதாவது பெயிண்டருக்கு வெல்டர் வேலையும், வெல்டருக்கு டர்னர் வேலையும், டர்னருக்கு பெயிண்டிங் வேலையும், எலக்ட்ரீசியனுக்கு மிசின் மேல் வேலையும் என வேலைகளை மாற்றிப் போட்டனர். இதன் மூலம் வேலையில் ஏற்படும் தவறுகளைக் காட்டி மீண்டும் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வதே நிர்வாகத்தின் தந்திரமாக இருந்துள்ளது.

2011ம் ஆண்டு அக்டோபர் 7ம் தொடங்கிய தொழிலாளர்கள் போராட்டம்
பணிநீக்கம் செய்யப்பட்ட சக தொழிலாளிக்காக 2011-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

இந்தக் கொடுமைகளை எதிர்த்தும், பணிநீக்கம் செய்யப்பட்ட சக தொழிலாளிகளை சேர்க்கக் கோரியும் மீண்டும் 2011-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் நாள் முதல் வேலை நிறுத்தத்தை துவங்கினர் தொழிலாளார்கள். 14 நாட்கள் நீடித்த போராட்டத்தை சீர்குலைக்க வேறு தந்திரங்களைக் கையாண்டது மாருதி நிர்வாகம். தொழிற்சங்கத்தின் முன்னணியில் நின்ற சில தொழிலாளிகளுக்கு விருப்ப ஓய்வுத் திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் 16 லட்சத்தில் இருந்து 30 லட்சம் வரை கொடுத்துள்ளது. இதை அப்படியே பத்திரிகைகளுக்கும் தெரிவித்து, “தொழிற்சங்க முன்னோடிகள் தங்களையே விற்றுக் கொண்டார்கள்” என தலைப்புச் செய்தியையும் வரவழைத்தது.

நிர்வாகத்தின் நரித்தந்திரங்கள் ஒருபக்கமும், சங்க முன்னோடிகளின் துரோகத்தனம் ஒருபக்கமும் சூழ்ந்து கொண்ட நிலையிலும் சோர்ந்து போகாத தொழிலாளர்கள், மீண்டும் 12 பேர் கொண்ட தொழிற்சங்க செயற்குழு ஒன்றை 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் அமைத்தனர். 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தப் புதிய சங்கம் பதிவு செய்யப்பட்டது.

“எங்களுடைய கோரிக்கையான ’சமமான வேலைக்கு சம ஊதியமும் வசதிகளும்’ என்பதை மீண்டும் கையிலெடுத்துப் போராடத் துவங்கினோம்” என்றார் ராம் நிவாஸ்.

”ஜூலை 18 சம்பவத்தின் பின்னணி குறித்து சொல்லுங்கள்..” என்றோம்.

”2012-ம் ஆண்டின் துவக்கத்தில் இருந்தே தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையே முறுகலான நிலை இருந்து வந்தது. எங்களுக்குள் எப்படியாவது பிரிவினையைத் தூண்டி விடவேண்டும் என்பதில் நிர்வாகம் குறியாக இருந்தது. அதற்கு நாங்கள் இடம் கொடுக்காமல் எங்களுடைய நியாயமான  கோரிக்கைகளுக்காக விடாப்பிடியாக போராடி வந்தோம். இந்நிலையில் தான் ஜூலை 18-ம் தேதி வந்தது…” என்றவர் சற்றே இடைவெளி விட்டுத் தொடர்ந்தார்.

இறந்து போன அவினேஷ் குமாரின் சடலம்
இறந்து போன அவினேஷ் குமாரின் சடலம்

“அன்றைக்குக் காலை ஒன்பது மணிக்கு ஜியாலால் என்கிற தொழிலாளியிடம் முந்தைய நாளின் வேலை அறிக்கையை தேனீர் இடைவெளியின் போது நிரப்பிக் கொடுக்குமாறு மேலாளர் வற்புறுத்தியுள்ளார். ஜியாலால் அதற்கு மறுக்கவே தலித்தான அவரை சாதிப் பெயர் சொல்லித் திட்டியும் அடித்தும் உள்ளார் மேலாளர். ஜியாலால் உடனடியாக இதை தொழிற்சங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வருகிறார். சுமார் 10 மணி அளவில் 12 தொழிற்சங்க நிர்வாகிகளும் நிர்வாகத்திடம் முறையிட்டனர். இதற்கிடையே 11 மணி அளவில் நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று போலீசாரும், தனியார் ரவுடிப் படை ஒன்றும் வந்து சேர்ந்தது”

“தனியார் ரவுடிப் படையா?”

”ஆம். பௌன்சர்கள் கேள்விப் பட்டிருப்பீர்களே, அவர்கள் தான். தொழிலாளிகளைப் போல் உடையணிந்து வந்த அவர்களை நாங்கள் முன்பின் பார்த்ததில்லை என்பதால் விசாரித்தோம்… அவர்கள், தாங்கள் புதிதாக சேர்ந்திருப்பதாகவும், அடையாள அட்டை இன்னமும் தரப்படவில்லை எனவும் தெரிவித்தனர். ஜியாலாலுக்கு நியாயம் கேட்டு நாங்கள் முழக்கங்கள் எழுப்பிக் கொண்டிருக்கும் போது போலீசாரும் இந்தப் புதியவர்களும் உள்ளே தான் இருந்தனர். முதல் ஷிப்டில் பணிபுரிந்த தொழிலாளர்கள் அனைவரும் நிர்வாக அலுவலகம் முன்பாக நின்று கொண்டிருந்த நேரத்தில் தான் அதற்கு சற்று தள்ளியிருந்த கட்டிடம் ஒன்று தீப்பிடித்து எரிவதைப் பார்த்தோம்”

“நீங்கள் தீ வைக்கவில்லை என்கிறீர்களா?”

”நிச்சயமாக. நாங்கள் தீ வைக்கவில்லை. சொல்லப் போனால் இப்போது நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருக்கும் 12 பேரும் அன்றைக்கு நிர்வாக கட்டிடத்தின் முன் அனைத்து தொழிலாளர்களும், நிர்வாகத்தின் மேலாளர்களும் பார்க்க அவர்கள் கண் முன் நின்றனர். சுற்றிலும் போலீசாரும், நிர்வாகத்தின் குண்டர் படையும் நிற்க தொழிலாளிகளால் செய்திருக்கவே முடியாது. ஆனால், தீ பிடித்துக் கொண்டது. அதை நிர்வாகத்தினர் தான் வைத்திருக்க வேண்டும். தீயில் எரிந்தவைகளுக்கு அவர்கள் இன்சுரன்ஸ் இழப்பீடு பெற்றுள்ளனர். அவர்களுக்கு அனைத்தும் கிடைத்து விட்டது. ஆனால், எங்களுக்கு? எங்கள் வாழ்க்கையையே இழந்திருக்கிறோமே?” என்றவர் மேலும் தொடர்ந்தார்…

ஜூலை 19-ம் தேதி தீ விபத்துக்கு பின் மாருதி ஆலை

”இறந்து போன அவினேஷ் குமாரை தொழிலாளிகள் தாக்கியிருக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில், அவர் எங்களிடம் கொஞ்சம் நிதானமாகவே நடந்து கொள்வார். மேலும் அப்போது அவருக்குமே கூட நிர்வாகத்துடன் முரண்பாடுகள் இருந்து வந்தது. அவர் வேலையை இராஜினாமா செய்யவிருந்ததாக பரவலாக தொழிலாளர்கள் பேசிக் கொண்டனர். நிர்வாகத்தினர் தான் அவரைத் தாக்கி நெருப்பில் எரியும்படி விட்டுச் சென்றதாக தொழிலாளிகள் பலரும் கருதுகின்றனர். உண்மை வேறு விதமாக இருக்க வாய்ப்பே இல்லை”

”சரி, தீ விபத்துக்குப் பின் என்ன நடந்தது?”

“அடுத்து அங்கே ஒரு கலவரம் நடந்தது. குண்டர்களும், போலீசாரும் எங்களைத் தாக்கினர். எங்களில் சிலர் திருப்பித் தாக்கினோம். ஆனால், அவர்கள் ஆயுதங்கள் வைத்திருந்தனர். நாங்களோ நிராயுதபாணிகளாக நின்றோம். எனவே அனைவரும் சிதறி ஓடிப் போனோம். மறுநாள் சுமார் 91 பேரைக் கைது செய்தார்கள். சில நாட்களுக்குள் மேலும் 56 பேரைக் கைது செய்தனர்.” என்றார் ராம் நிவாஸ்.

கலவரத்தைக் காரணம் காட்டி மொத்தம் 2346 தொழிலாளர்களை நிரந்தரப் பணிநீக்கம் செய்தது மாருதி நிர்வாகம். அதில் 546 பேர் நிரந்தர தொழிலாளிகள், 1800 பேர் ஒப்பந்த தொழிலாளிகள்.

போலீசாரின் துணையுடன் தொழிலாளர்களின் மேல் கொலைப் பழி சுமத்திய நிர்வாகம், கைதுகள் மற்றும் பணிநீக்க நடவடிக்கைகளால் தொழிற்சங்க கோரிக்கைகளையும், தொழிலாளர்களின் உரிமைக் கோரிக்கைகளையும் துடைத்தழித்து விட்டதாக நம்பியது. அரசு, காவல்துறை மற்றும் நீதித்துறை மாருதி நிர்வாகத்திற்கு சேவகம் செய்யத் தயாராக இருந்தன. இதனால் தொழிலாளர்கள் தமக்கு அஞ்சிப் பணிந்து விடுவார்கள் என்றும், அவர்களைச் சுரண்டிக் கொழுப்பதற்கு எல்லையே இல்லை என்றும் மகிழ்ந்தது அந்தப் பன்னாட்டுக் கம்பெனி.

அந்த முதலாளிகளின் கனவு பலித்ததா?

வழக்கின் கதி என்னவானது?

(தொடரும்)
வினவு செய்தியாளர் குழு.