privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஇதரபுகைப்படக் கட்டுரைபாலக்கோடு : அந்த கிணறும் வத்திருச்சுன்னா போய்ச் சேர வேண்டியதுதான் !

பாலக்கோடு : அந்த கிணறும் வத்திருச்சுன்னா போய்ச் சேர வேண்டியதுதான் !

-

ருமபுரி மாவட்டத்தில் உள்ள 9 அணைகளில் ஒன்று பாலக்கோடு கெசர்குளி அணைக்கட்டு . 25.20 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் 134 மில்லியன் கன அடி தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும். 2014-க்குப் பிறகு மழை பொய்த்துப் போனதால் இந்த அணையில் சொற்ப நீரே இருந்தது. இந்த வருடம் இந்த அணைக்கட்டு முற்றிலும் வறண்டு போய் ஒன்றிரண்டு அடிகள் அளவுள்ள தண்ணீரே தேங்கியுள்ளது.

பல கிராமங்களுக்கு வாழ்வாதாரமாக உள்ள இந்த அணையில் நீர் நிரம்பினால் ஏறக்குறைய 4000 ஏக்கர் நிலங்களுக்குப் பாசன உதவியளிக்கிறது. இதையன்றி கோட்டூர் ஏரி உள்ளிட்ட சில ஏரிகளுக்கும் தண்ணீர் வழங்கும் ஆதாரமாக இருக்கிறது.

செல்லமுத்து – பெல்ராம்பட்டி

டேம் பகுதிய ஒட்டி இருக்குறதுனால இங்க கொஞ்சம் நிலத்தடி நீர் இருக்குங்க! தக்காளி தான் அறுவடை பண்ணிட்டிருக்கோம். பெட்டி ஒன்னு(23 கிலோ கொள்ளளவு) 1000 ரூவா வித்த காலம் போயி இப்ப வெறும் 120 ரூபாய்க்கு தான் விக்கிறோம். இலாபமேயில்ல, வர்ற காசெல்லாம் கூலிக்குத்தான் சரியா இருக்கும்.

கிருஷ்ணப்பா(75) – சீரியம்பட்டி

நமக்கு பொறந்ததுல இருந்தே இந்தூர்தா கண்ணு. நெல்லு,எள்ளு, சோளம், வாழை வேர்கடலைன்னு என் நிலத்துல வெளையாத பயிரே இல்லப்பா. இப்ப பூரா காஞ்சு போயி கிடக்கு குடிக்கவே தண்ணியில்ல இதுல எங்குட்டு போயி நா விவசாயம் பாக்க. எனக்கு விவரம் தெருஞ்ச நாள்ல இருந்து இப்புடி ஒரு வறட்சிய பாத்ததேயில்ல. நமக்கு 3 மாடு ஒரு கண்ணு நிக்குதுப்பா. மாட்டுக்கு தீவனம் போடனும், தண்ணி வைக்கனும் ரொம்ப சிரமமா இருக்கு. இந்த கஷ்டத்துல மாட்டுக்கு எப்புடி தனியா பயிர் பண்ண முடியும். அந்தா தெரியுதுல புல்கட்டு  அத வச்சுதா இப்போதைக்கு ஒப்பேத்திட்டு இருக்கோம். கறக்குர பாலு வீட்டுக்கே சரியாப் போயிடும் சோத்துக்கு ரொம்ப சிரமமாயிருச்சுப்பா.

இந்த புல்லுகட்டு ஒரு மாசங்கூட தாங்காது. அடுத்த மாசத்துக்கு என்ன பண்ணப் போறேனோ, ஆண்டவனுக்குத்தான் வெளுச்சம். மாட்ட சந்தைல விக்கவும் முடியலை, அதுக்கேத்த வெலை கெடைக்க மாட்டேங்கிது. ஏதோ ரேசன் இருக்கறதுனால கிடைக்கறத தின்னுபுட்டு இருக்கோம். ஊர்ல யாரு கேணிலையும் தண்ணியில்லப்பா, ஒரே ஒருத்தர் கிணத்துலதான் கிடக்கு ஊரே அங்க வந்துதான் புடிக்குது. 3 கி.மீ தொலவுல இருந்தெல்லாம் ஆள் வருது. அந்த கிணறு வத்திருச்சுன்னா போய்சேர வேன்டியதுதான்.

நூறு நாள் வேலைல 6 மாசம் மண் வெட்டுனோம், செடி புடுங்குனோம் அல்லா வேலையும் பாத்தோம். ஆனா ஒரு மாசத்துக்குக் கூட சம்பளமே வரலைப்பா. 6 மாசமா விவசாயிக்கு பணத்த குடுக்காம ஒளிச்சு வச்சுருக்கானுவலே, இதுவே ஒரு விவசாயி, அரசாங்க பணத்தை 3 நாள் வச்சுருந்தா சும்மா உடுவியா நீ.  நம்ம வூடு பக்கத்து வூட்டுக்காரங்க கரும்பு போட்ட கதய சொல்லிமாளாது. விளைஞ்சவனுக்கு வெலையில்லைன்னு பொலம்புரான், எங்க கரும்போ கருகிப்போயி கிடக்கு. இனி எத்தனை மழை பேஞ்சாலும் மீளாது. நம்ம கோட்டூர் ஏரி  நெரஞ்சிருந்த காலத்தை நினைச்சா ம்ம்ம், ஏரி நொம்புணாலே வீட்டுல தங்கம் வெள்ளி வந்ததா நெனச்சுக்குவோம்.

நமக்கு களிதான் புடிச்ச சாப்பாடு. அந்த களிய கண்ணுல பாத்து நாள் கணக்காயிடுச்சு இப்ப ஏதோ இருக்க உயிரை கட்டிவைக்க கிடைக்கிறத தின்னுக்குட்டு இருக்கோம். நாங்க இங்க வறட்சியில செத்துக்குட்டு இருக்கோம், நம்ம பிரதமர் ஊர் ஊரா சுத்திக்கிட்டிருக்காரு, அவருக்கு விவசாயிங்க கஷ்டம் எங்க தெரியப்போவுது, ஜெயா செத்த மாதிரி இந்த மோடியும் செத்திருந்தா நல்லாயிருந்துருக்கும்பா. அவருக்கு விவசாயிங்கன்னா ஏனோ கசக்குது.

எவ எவனோ மண்ண அள்ளி ஆட்டையப் போட்டு பணம் பாக்குறான், நாங்க அந்த ஏரி மண்ணை தொட்டா அடிக்க வர்றானுவ. அதனாலயே ஏரி ஆழமான பாடில்ல. கொத்தனார் வேலை, கூலி வேலைக்குன்னு ஒவ்வொருத்தரா போயிக்கிட்டிருக்காங்கப்பா.

யானை தொல்லை அதிகம்தாம்பா, அந்தாண்ட ஈச்சம்பள்ளத்துல கூட ஒரு பொண்ணை அடிச்சு புடுச்சு. நாம மனுச பயலுக, ஒரு 5000 லிட்டர் பிடிக்குற டிரம்ம,  700 ரூபா குடுத்து வாங்கி குடுச்சுக்குவோம். நிலமை மோசமானா, அதுங்க என்னா பன்னும் பாவம், மாட்டுக்கு வாய தொறந்து கேட்கவா தெரியும். சொக்கங்கொட்டாய், கருவூர்க்கு மேலலா ரொம்ப பஞ்சம்பா, பாவம் என்னா பண்ணுதோ அந்த ஊர் சனங்க. முன்னைலா வாரம் ரெண்டு நாள் தலைக்கு ஊத்திக் குளிப்போம். இப்ப குளிக்கவே மனசு வரமாட்டிங்கிதுப்பா. 10 வருஷமா சரியான மழையேயில்லை. ஏதோ புயல் கியல்னு வந்து மழை கொட்டுனாதான் உண்டு.

E.V.ரெங்கசாமி – கோட்டூர்

நாங்க வெளிகை வேளாளக் கவுண்டருப்பா..எனக்கு 3 மகனுவ, ஒரு பொம்பளப்புள்ள. எல்லாருக்கும் திருமணமாகி பேரப்புள்ளைகள் வரைக்கும் திருமணம் முடிஞ்சிகிட்டிருக்கு. 87 வயசுக்கும் மேல ஆயிடுச்சு. தண்ணிக்கி தாம்பா ரொம்ப செரமப்படுறோம்.  நான் அந்தக்காலத்து எம்.ஜி.ஆர் ரசிகன். புள்ளங்க எல்லாம் ஒரு திக்குப் போயிடுச்சுங்க.

தென்னை எல்லாம் பட்டுப்போச்சு, எல்லாத்தயும் அறுத்துர வேண்டியதுதான், வீட்டு வேலைக்கும் ஒதவாது. 3 சீம மாடு, 30 பட்டி மாடுங்க இருக்கு. சீம மாடு மட்டும் வீட்ல இருக்குது, பட்டி மாடுங்கள்லாம் அதோ பாரு அந்த காட்டுக்குள்ள போச்சு, தை மாசத்துல தான் திரும்பி வரும்; இப்ப இருக்குற வறட்சியில எத்தன செத்துச்சோ தெரியல.

ஒரு காலத்துல 80 மாடுகள வெச்சு மேச்சுகிட்டிருந்தேன், இப்ப பாரு செருப்புக்குக் கூட வழியில்ல. 2 ஏக்கரா நிலமிருக்குது ரெண்டு மூனு வருசமா ஒரு வெளச்சலுமில்ல.

நமக்குச் சொந்தமான கெணத்துல தண்ணி வத்திப்போச்சு. குடிக்கிற தண்ணிக்கி பொது கெணறு ஒன்னு இருக்கு அதுல இருந்து எடுத்துக்குறோம்; செல நேரத்துல ரோட்டுக்கு அந்தாண்ட போர் போட்ருக்காங்க; அதுல இருந்தும் எடுத்துக்குவோம். என்ன பண்ணுறது கடவுளுக்குத் தான் வெளிச்சம்.

தாதம்மாள் – கரகூர்

50 வயதைக் கடந்த தாதம்மாளுக்கு 2 மகன்கள் 4 பேரப்பிள்ளைகள். கணவர் உடல்நலக்குறைவால் இறந்து 4 வருடங்கள் ஆகின்றன. குரும்பக் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த இவர் காட்டுவேலைக்குச் சென்றுகொண்டிருந்த நிலையில் வெயிலில் தொடர்ந்து வேலை செய்ய முடியாததால் தன்னுடைய முதல் மகன் மற்றும் இரு மருமகள்களுடன் இணைந்து டாஸ்மாக் பாட்டில்களைக் கழுவும் வேலை செய்து வருகிறார். அத்தனை பொறுமையாகவும், தான் பட்ட இன்னல்களை நினைவு கூறுகையில் கண்கலங்காமல் உயிரிருக்கும் வரை உழைத்து தன் பிள்ளைகளுக்குத் தொந்தரவாக அமைந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.

“4 வருசத்துக்கு முன்னாடி என் வூட்டுக்காரர் செத்துப்போயிட்டாரு, 2 மவங்கள்ல சின்னவன் பெங்களூருல வாட்ச்-க்கு பாலிஷ் போடுற வேலை செய்யுறான். மூத்தவன் இங்கேயே இருந்து இந்த பாட்டில் கழுவுற வேலைய பாக்குறான். ரெண்டு மருமவளும் எங்கூடத்தான் இங்கயே வேல பாக்குறாங்க. ரெண்டு பேத்துக்கும் ரெண்டு மவனுங்க இருக்காங்க. இந்த வேல  கஷ்டந்தான். வவுறு இருக்குல்ல, அது இருக்குற வரைக்கும் வேல செஞ்சுத்தான ஆகனும். 5, 10 சம்பாதிக்கனும்னா சும்மா யாராவது கொடுப்பாங்களா?

ஈரத்துலயே நிக்கிறதுனால கை காலெல்லாம் வலியாத் துடிக்கும். சின்ன அடிபட்டாக்கூட இப்பல்லாம் தாங்கிக்க முடியல. இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. புள்ளங்கல்லாம் ஏதாச்சும் சமைச்சு சாப்பிட்டுட்டு கொண்டாருங்க, நான் சும்மா தானே இருக்கேன்னு வேலைக்கு வந்துட்டேன்.

தண்ணீர் பற்றாக்குறையால உங்க தொழிலுக்கு பாதிப்பு இருக்கா?

ஆமாம்பா! பக்கத்து வூட்டாண்ட இருக்க கெணத்துலேருந்து தான் தண்ணி மொண்டு எடுத்துக்குவோம், எல்லாம் நம்ம ஆளுங்கதான். இப்போ அவுங்க கெணத்துலயும் தண்ணி வத்திப்போச்சு, வாரத்துக்கு ஒரு வாட்டி 700 ரூபா கொடுத்து தண்ணிய வாங்கி தொட்டில ஊத்திக்கிறோம்.

நாலஞ்சு நாளைக்கு மேல தொட்டித்தண்ணிய பயன்படுத்தமுடியல, சோப்புத்தண்ணியும் சாராயத் தண்ணியும் கலக்குறதுனால ஒரே நாத்தமா இருக்கு, வேணுன்னா போயிப்பாரேன்…

இப்ப இதுல என்னான்னா மிடாசு காரன் வேற பாட்டிலெல்லாம் ஒடனேயே எடுக்க மாட்டேங்குறான், கம்பெனில ஏற்கனவே சரக்கு பூரா தேங்கிக் கெடக்காம். ரெண்டு லோடு அனுப்பியும் இன்னும் காசு வரல…இதுல பாட்டிலுக்கு 10 காசுன்னு கொடுத்துட்டிருந்தத மாத்தி 5 காச்சுன்னு கொறக்கப் போறானாம். எல்லா கஷ்டந்தாப்பா!

ஒரு லாரிக்கு 500 மூட்டை வரைக்கும் ஏத்துவோம், இதுல ஒடஞ்சது போக மீதியுள்ள எல்லாத்தயும் ஸ்டிக்கர கிழிச்சி, பாட்டில்ல இருக்குற வளயத்த கோணியால ஒடச்சு, கழுவி காயவெச்சு புது பாட்டில் மாதிரி பேக் பண்ணி அனுப்பி வெக்கனும்.

இந்த வேலயும் போச்சுன்னா என்ன பண்ணுவீங்க?

ஈரத்துல நின்னு நின்னு வேல பாக்குறதுனால, கையெல்லாம் ரொம்ப இலகுவாயிருச்சு, அழுத்தமான பொருளெல்லாம் புடிச்சா வலி தாங்கமுடியல; ஆனா என்ன பண்ணுறது, காட்டு வேல தான் வழின்னா அதயும் செஞ்சு தான ஆகனும்.

சரோஜா – பூமரத்துப்பள்ளம்

வறட்சினால ரொம்ப பாதிக்கப்பட்டுருக்கோம்பா! டிவி-ல எதும் போட்டு கொஞ்ச ஒதவி பண்ணா ஒனக்கு புண்ணியமா போவும்பா? பாத்தியா இந்த மாமரத்தயும், தென்ன மரத்தயும். அத வுடு அங்க இருக்குற பன மரமே பட்டுப்போச்சு பாத்தியா? எங்க கஷ்டமெல்லாம் ஒங்களுக்கு எப்புடி புரியும்?

மனுசனுக்கும் குடிக்கத் தண்ணியில்ல, அதுகளுக்கும் குடிக்கத் தண்ணியில்ல….வீட்ல அஞ்சாறு ஆடுங்களும், 3 சீமப் பசுவும் இருக்குதுப்பா. சோளமெல்லாம் காஞ்சு போச்சு! கெணறு வத்திப் போச்சு! பட்டி மாடெல்லாம் வெச்சுருந்தோம், போன வருசமே எல்லாத்தயும் வித்துப்புட்டோம், 3 வேளையும் வயிறார தண்ணி குடுச்சுட்டு இருந்த ஆடு மாடுகளுக்கெல்லாம் ரெண்டு வேளக்கி தான் தண்ணி தர முடியுது.

ஆறு, ஏரி, குட்டை, கெணறு எல்லாமே வத்திப்போச்சு, அந்த ஆண்டவனா பாத்து மழய கொடுத்தா தான் நாங்க இங்க இருக்க முடியும், இல்லாட்டி ஊரக் காலிபண்ணிட்டு கெளம்பவேண்டியது தான். ரேசன் அரிசிய வெச்சுத்தான் பொழப்ப ஓட்டிக்கிட்டிருக்கோம்; கேவூர், சோளம்-னு வீட்டுல வெளயறத வெச்சே சாப்புட்டுக்குவோம்; இப்பல்லாம் வெறும் ரேசன் அரிசி மட்டுந்தான் திங்கிறோம்.

செங்கோடப்பட்டி ஏரி – பாலக்கோடு

ஒரு காலத்தில் கடல் போலக் காட்சியளித்த இந்த ஏரி இன்று நீரின்றி பாலம் பாலமாகப் பிளந்து வறண்டு விட்டது. அருகில் உள்ள கிணறுகளும் நீரின்றி வறண்டு விட்டன. பாலக்கோடு இரயில் நிலையத்திற்கு மிக அருகில் உள்ள இந்த ஏரி குறித்து ஒரு தோழர் கூறுகையில்…

நான் வீட்ல ஏழாவது பையனாப் பொறந்தேனாம். ஏழாவதும் பையனாகிப் போச்சேன்னு எங்கப்பா கடுப்பாயி இவன அந்த ஏரிக்குள்ள தூக்கிப்போடு என்று அம்மாகிட்ட சொல்ல அவுங்க அத கடுமையா எதுத்திருக்காங்க..இத ஏன் சொல்றேன்னா இப்ப பாத்தா அந்த ஏரியில ஒரு சொட்டு தண்ணி கூட இல்ல..சின்னப்புள்ளயா இருக்கும் போது தண்ணியில குளிச்சி வெளையாடிட்டே இருப்போம்..

மகேஸ்வரி அக்கா – ஆடு மேய்ப்பவர்,

கூலிக்கு ஆடு மேக்கிறேங்க. காட்டு வேல எதுவுமில்ல அதனால இந்த வேல செஞ்சுட்டிருக்கேன். ஆடுங்கள வீட்டிலேருந்து ஓட்டிட்டு வர்றப்பவே தண்ணி காட்டி தான் ஓட்டிட்டு வருவோம். இங்க வந்து கொஞ்ச மேவு கெடைக்கும், சாயந்தரமா  ஓட்டிட்டு போயி பட்டில அடச்சுருவோம். மறுபடியும் வீடு போய்ச் சேர வரைக்கும் அதுகளுக்குத் தண்ணி கெடைக்காது.

4 மணி நேரம் வரைக்கும் ஆடு மேய்க்கவேண்டும்; ஆனால் அரை லிட்டர் தண்ணீரை மட்டும் இடுப்பில் கட்டி வைத்திருக்கிறார்.

நேர்காணல்,படங்கள் : வினவு செய்தியாளர்கள்