privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஉலகிற்கு அச்சுறுத்தல் வட கொரியாவா இல்லை அமெரிக்காவா ?

உலகிற்கு அச்சுறுத்தல் வட கொரியாவா இல்லை அமெரிக்காவா ?

-

லகின் பாதுகாப்புக்கு வட கொரியா ஒரு பெரிய அச்சுறுத்தல் என்று அதன் மீது அமெரிக்காவும் ஐ,நா பாதுகாப்பு அமைப்பும் புதிய பொருளாதார தடைகளை விதிக்க போவதாக மிரட்டுகின்றன. தேவைப்பட்டால் வட கொரியாவின் மீது இராணுவத் தாக்குதலையும் நடத்துவோம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

உலகில் கிட்டத்தட்ட 70 விழுக்காடு நாடுகளில் அமெரிக்காவின் ஆக்டோபஸ் கரங்கள் சூழ்ந்துள்ளன

“மர்ம தேசம்” என்றும் “அணு ஆயுத பேராபத்து” என்றும் மேற்கத்திய ஊடகங்களால் அழைக்கப்படும் வட கொரியா இதுவரை எந்த நாட்டின் மீதும் ஆக்கிரமிப்பு போரை நடத்தியதில்லை. 1950 – ம் ஆண்டின் கொரியப் போரும் பலவந்தமாக வட கொரியாவின் மீது திணிக்கப்பட்ட ஒன்றுதான். அன்று கொரியத் தீபகற்பத்திற்கு சென்ற அமெரிக்க படைகள் இன்றுவரை வீடு திரும்பவில்லை.

ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் சேர்ந்து அமெரிக்கா போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இராணுவத் தாக்குதல், வட கொரியாவுடனான பொருளாதார உறவை முறித்து கொள்ள சீனாவிற்கு அழுத்தம் கொடுத்தல், வட கொரியா அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்துதல், இணையத் தாக்குதல்கள் என்று வட கொரியாவிற்கு எதிராக பல்வேறு யுத்திகள் தங்கள் முன்னால் இருப்பதாக டிரம்ப் நிர்வாகம் கூறுகிறது.

ஆனால் வட கொரியாவின் மீதான சீனாவின் நிலைப்பாடு அமெரிக்காவிற்கு கடும் எரிச்சலைக் கொடுத்து வருகிறது. இதனால் வட கொரியாவுடன் பொருளாதார உறவுகள் வைத்துள்ள சீனாவின் சிறிய வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக அமெரிக்கா மிரட்டியுள்ளது. அதே நேரத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய ((37 இலட்சம் கோடி ருபாய்)) பொருளாதாரப் பங்காளி குறிப்பாக இறக்குமதியில்(28 இலட்சம் கோடி ரூபாய்) சீனாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவுடனான சீனாவின் மொத்த வர்த்தக மதிப்பு மட்டும் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர்(70 இலட்சம் ரூபாய்) ஆகும். ஆனால் மேற்படி நாடுகளை ஒப்பிடும் போது அவற்றின் எதிரி நாடான வட கொரியாவுடனான சீனாவின் வர்த்தகம் ஏறக்குறைய 32 ஆயிரம் கோடி ரூபாய் (5 பில்லியன் டாலர்) மட்டுமே. எனவே முதலாளித்துவ சீனா எப்படி பார்த்தாலும் வட கொரியாவிற்காக அமெரிக்காவை பகைத்துக் கொள்ளாது. அதே நேரத்தில் வட கொரிய – சீனா பரஸ்பர உதவி மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் வரும் 2021 ஆண்டில் தான் காலாவதியாகிறது. பொருளாதாரத்தில் முன்னேறி வரும் சீனாவிற்கு வட கொரியா இராணுவ ரீதியில் ஒரு இன்றியமையாத பகுதியாகும்.

உலகிற்கு அச்சுறுத்தல் வட கொரியாவா இல்லை அமெரிக்காவா? இன்று உலகம் முழுவதும் 138 நாடுகளில் கிட்டத்தட்ட 800 இடங்களில் அமெரிக்காவிற்கு இராணுவ தளங்கள் இருக்கின்றன. அதாவது உலகில் கிட்டத்தட்ட 70 விழுக்காடு நாடுகளில் அமெரிக்காவின் ஆக்டோபஸ் கரங்கள் சூழ்ந்துள்ளன. இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் நேரடியாக இராணுவத்தளம் இல்லையென்றாலும் இராணுவக் கூட்டுப்பயிற்சி மற்றும் பொருளாதார புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் அந்நாடுகளை தன்னுடைய கட்டுப்பாட்டில் அமெரிக்கா வைத்துள்ளது.

அமெரிக்காவிற்கு எதிரான போரில் வட கொரியாவினால் ஒரு நாள் கூட தாக்குப்பிடிக்காது என்பது மறுக்கமுடியாத உண்மை. அதனால் தான் தன்னுடைய இறையாண்மையை பாதுகாத்துக் கொள்ள அணு ஆயுதத்தைத் தவிர வட கொரியாவிற்கு வேறு வழியில்லை. வரலாற்றில் இதுகாறும் அணுகுண்டுப் பேரழிவை ஏற்படுத்தி இலட்சக்கணக்கான ஜப்பானிய மக்களை படுகொலைச் செய்தது அமெரிக்கா மட்டுமே. இன்று உலகை இரட்சிக்கும் கடவுளாகத் அமெரிக்காத் தன்னைக் காட்டிக்கொள்வது வரலாற்றின் முரண்நகை. ஒரு வேளை வடகொரியாவை சீண்டி விட்டு அணு ஆயுதத்தை வெடிக்க வைத்து தன்னுடைய ஆக்கிரமிப்புக் கொள்கையை வலுவாக்கிக் கொள்வதும் அமெரிக்காவின் தந்திரமாக இருக்கலாம்.

ஆனால் அணு ஆயுதம் என்பது வெல்பவர், தோற்பவர் எனும் பிரிவினையைத் தாண்டி இருவரையும் பாதிக்கும் நாசகார ஆயுதம் அல்லவா? தொலை தூரத்தில் இருக்கும் அமெரிக்காவிற்கு வட கொரியாவின் அணு ஆயுதத்தால் பிரச்சினை இல்லை. ஆனால் அமெரிக்காவிடம் அணு ஆயுதம் மட்டுமல்ல, அதற்கு நிகரான இதர ஆயுதங்களும் உள்ளன.  ஆகவே ஆசிய நாடுகளும், மக்களும் இந்த ஆயுதப் பேரழிவில் இருந்து தம்மை காத்துக் கொள்ள வேண்டுமென்றால் அமெரிக்காவைத்தான் துரத்த வேண்டும்!

செய்தி ஆதாரம்:

_____________

இந்தப் பதிவு உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி