privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திட்ரம்போவும் நானும் - மு.வி. நந்தினி

ட்ரம்போவும் நானும் – மு.வி. நந்தினி

-

‘Turmbo’ படத்தைப் பார்த்து முடித்தேன். ட்ரம்போவுடன் என்னை பல இடங்களில் பொருத்திப் பார்க்க முடிந்தது. ஜேம்ஸ் டால்டன் ட்ரம்போ 40-களில் முன்னணியில் இருந்த ஹாலிவுட் திரைக்கதாசிரியர். அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்த பலரை, “அன் அமெரிக்கன் அக்டிவிடீஸ் கமிட்டி”, பட்டியலிட்டு, அவர்களை பொது வாழ்க்கையிலிருந்து துரத்தியடித்தது. அவர்கள் வேலை இழந்தார்கள்; கடனால் அவதிப்பட்டார்கள்; சிலர் தற்கொலை செய்துகொண்டார்கள்.

அதிக சம்பளம் வாங்கும் முன்னணி திரைக்கதாசிரியராக இருந்த ட்ரம்போ, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் (கம்யூனிஸ்டுகள் ரஷ்ய உளவாளி என்கிற பிரச்சாரத்தை அமெரிக்கா முன்னெடுத்தது) என்ற காரணத்தால், எவ்வித அரசு விரோத நடவடிக்கைகளிலும் இறங்காதபோதும் சிறை தண்டனை விதிக்கப்பட்டார். சினிமா மூலம் தங்களுடைய கருத்துக்களை பிரச்சாரம் செய்கிறார்கள் என்பதற்காக கம்யூனிஸ்டுகளுக்கு சினிமாவில் இயங்க தடை விதிக்கப்பட்டது.

சிறை தண்டனைக்குப் பிறகு, தன்னுடைய வசதியான பண்ணை வீட்டை விற்றுவிட்டு, நகரத்துக்குள் குடும்பத்துடன் குடியேறுகிறார் ட்ரம்போ. தன்னுடைய குடும்பம் எவ்விதத்திலும் துன்பங்களை அனுபவிக்க அவர் விரும்பவில்லை. முதல் நிலையில் இருந்த அவர், மூன்றாம் தரமான படங்களுக்கு திரைக்கதை எழுதுகிறார் சொற்ப சம்பளத்துக்காக. ஹாலிவுட்டில் இயங்க தடை விதிக்கப்பட்டிருந்ததால் புனைப் பெயர்களில் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் எழுதி குவிக்கிறார். அவர் புனைப் பெயரில் எழுதிய திரைக்கதைகளுக்கான 2 ஆஸ்கர் விருதுகளும் கிடைக்கின்றன.

ட்ரம்போவிடம் பேசுவதைக்கூட அவமானமாக கருதி அவரை உதாசீனப்படுத்திய பலர், அவர் புனைப்பெயரில் எழுதிய திரைக்கதைகள் வெற்றியடைவதை மோப்பம் பிடித்து தங்களுடைய படத்துக்கும் திரைக்கதை எழுதித் தரும்படி கெஞ்சுகிறார்கள், ஆனால் புனைப்பெயரில்தான் எழுத வேண்டும் என்ற நிபந்தனையுடன். காலம் மெல்லச் சுழலுகிறது. எந்தவித குற்றமும் இழைக்காத ட்ரம்போவுக்கும் அவரைப் போன்ற கம்யூனிஸ்டுகளுக்கும் தண்டனை தந்த ஹாலிவுட்டுக்கு தன்னுடைய வெற்றியின் மூலம் பதிலடி தருகிறார் ட்ரம்போ. அவருடைய திறமையை உணர்ந்த இயக்குநர்கள் நடிகர்கள் அவருடைய பெயரை திரையில் போடுகிறார்கள்.

ஆஸ்கர் விருது பெற்ற திரைக்கதைகளை எழுதியது தான் தான் என ட்ரம்போ பகிரங்கப்படுத்துகிறார். காலம் தாழ்ந்து ஆஸ்கர் விருதுகள் அவரைத் தேடி வருகின்றன. தங்களுடைய தடைக்கு எதிராக சட்டரீதியாக போராடுவதைக் காட்டிலும் தன்னுடைய திறமையால் போராடுவதை நியாயப்படுத்துகிறார் ட்ரம்போ. திட்டமிட்டு ஒதுக்கப்பட்ட ஒருவனின் போராட்டம்-வெற்றி என்பது மட்டுமல்ல இந்தப்படம்.

மு.வி.நந்தினி

ட்ரம்போவுடன் என்னை பல இடங்களில் பொருத்திப் பார்க்க முடிந்தது என தொடக்கத்தில் சொல்லியிருந்தேன். ட்ரம்போ போல நான் கம்யூனிஸ்ட் அல்ல; கம்யூனிஸ்ட் ஆதரவாளர் என்று சொல்லிக் கொள்ளலாம். எந்தவித அரசியல் நடவடிக்கைகளிலும் போராட்டங்களிலும் கலந்து கொண்டதில்லை. அவரைப் போல புகழ்பெற்ற நிலையில் எல்லாம் இருந்ததில்லை. ஆனால், ஒரு குறிப்பிட்ட காலத்தில் தமிழ் வெகுஜென இதழ்களில் எழுதிக்கொண்டிருந்த பெண்களில் எனக்கொரு தனித்த அடையாளம் இருந்தது. குங்குமத்தில் நான் எழுதிய கட்டுரைகளுக்காக என்னை பணியாற்ற அழைத்த ஆனந்தவிகடன் என்னை எட்டு மாதங்களில் வெளியே அனுப்பியது. வெளியேற்றுவதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன்புவரைகூட என்னுடைய கட்டுரை கவர் ஸ்டோரியாக வந்திருந்தது. தலைமை பதவியில் இருந்தவர்களின் ஈகோவில் நான் பலியானேன். நான் வேலையே செய்வதில்லை என என்னை ஒதுக்கினார்கள். நான் ஒதுங்கிவிட்டேன்.

அடுத்தது, சன் நியூஸில் வேலை. செய்தி பிரிவில் உதவி ஆசிரியராக என்னை பணிக்குச் சேர்த்துக் கொண்டார்கள். செய்தி பிரிவின் ஆசிரியர் என்னை சும்மாவே உட்கார வைத்திருப்பார். எனக்கு ஜுனியராக இருந்த பெண்கள், அதிக சம்பளத்துடன் அங்கே சிறப்பு நிருபர்களாக இருந்தார்கள். சும்மா இருக்கப் பிடிக்காமல் அவர்களுக்கு ஐடியாவும் கொடுத்து ஸ்கிரிப்டும் எழுதிக் கொடுப்பேன். அதை செய்தி பிரிவின் ஆசிரியர் தன்னுடைய கேபினில் அமர்ந்து பார்த்துக்கொண்டுதான் இருப்பார். சிறப்பு நிருபர் ஒப்புதலுக்காக எடுத்துச் செல்லப்படும் அந்த ஸ்கிரிப்ட் உடனே ஓகே செய்யப்படும், சிறப்பு செய்தியாகவும் வந்துவிடும்.

ஆனால், எனக்கு எந்த வேலையும் தரமாட்டார். உலகச் செய்தி எழுதும் பணிகூட கிடைக்காது. தானாக முன்வந்து எழுதினாலும் படித்து பார்த்துவிட்டு, ஓரமாக வைத்துவிடுவார். மூன்று மாதங்கள் சம்பளமே வாங்காமல் அலுவலகம் வந்து போனேன். அப்போது ஸ்கராலிங் நியூஸ் எழுதிக் கொண்டிருந்தவர் போய் விட்டதால், என்னை அங்கு போட்டார். அது ஒரு தண்டனைக்குரிய பணி, நியூஸ் ரூமில் இருப்பதிலேயே மதிப்பற்ற பணி என்றுதான் அங்கே இருப்பவர்கள் பார்ப்பார்கள்.

சிறு தவறுகளுக்காகக்கூட எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படுத்துவார் அந்த ஆசிரியர். ஆ.வியிலிருந்து வந்த பிறகு, நீண்ட நாட்கள் கழித்து நான் எழுதிய கட்டுரை பெயர் இல்லாமல் கவர் ஸ்டோரியாக வந்திருந்தது. அதே நேரத்தில் நியூஸ் ரூமில் இருந்தவர்கள் , செய்தி ஆசிரியர் என்னை எழுதத் தெரியவில்லை என கேலி பேசியபோது சிரித்தார்கள். வாழ்க்கையில் மறக்க முடியாத, மறக்கக் கூடாத தருணம் அது. செய்தி ஆசிரியர் ஏன் என்னிடம் அப்படி நடந்து கொண்டார்? என்னிடம் மட்டுமல்ல, என்னைப் போன்ற பல பெண்களின் கனவுகளை சிதறடிப்பதுதான் அவருக்கு முழு நேர வேலையே!

என்னுடைய திறமையை வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. நிஜம் நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் எழுதும் பணி, நீண்ட போராட்டத்துக்குப் பிறகு. எழுதத் தெரியாது என்று சொன்ன ஆசிரியர் சிறப்பாக எழுதியிருப்பதாக எல்லோர் முன்னிலையிலும் சொன்னார். என்னைப் பார்த்து சிரித்தவர்களும் ஒப்புக் கொண்டார்கள். சிறப்பாக எழுதினாலும் 5 எபிசோட் மட்டுமே வாய்ப்பு தரப்பட்டது. அதன் பிறகு வழக்கம்போல ஸ்க்ராலிங். திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை முழுமையாக சிதைந்தது.

வாழ்க்கைச் சூழலில் மீண்டும் உதவி ஆசிரியராக குமுதம் சிநேகிதியில் பணி. அரசியல்-சமூகம்-இலக்கியம் எழுதத் தெரிந்திருக்கலாம்; ஆனால் சமையல் குறிப்பு எழுதுவதே உங்களுக்கு வாய்க்கும். சமையல் குறிப்பு எழுதுவதை நான் கீழ்மையாகப் பார்க்கவில்லை. தமிழ் பத்திரிகை உலகம் அப்படித்தான் பார்க்கிறது. சமூகம் ஒன்றை எப்படி பார்க்கிறது என்பதைப் பொறுத்ததான், ஒன்றுக்கு பெருமையும் சிறுமையும் சேர்கிறது.

மூன்று வருடங்கள் அந்த பணியில் கடுமையாக உழைத்த பின்னும், ஊழியராகக்கூட அங்கீகரிக்கவில்லை அந்நிறுவனம். என்னிலும் மூன்று வருடங்கள் சீனியராக பணியாற்றிய ஊழியருக்கும் அதே நிலைதான். 10 நிமிடங்கள் தாமதமாக பணிக்கு வந்தாலும் முழுநாள் சம்பளம் பிடித்தம் செய்வார்கள். அலுவலக நேரம் முடிந்த பிறகு பணியாற்றுவதெல்லாம் அவர்களுடைய கணக்கில் வராது. இரண்டு மூன்று முறை ஊழியராக்குவது குறித்து பேசியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்ற நிலையில் வெளியேறினேன்.

வெளியேறிய நேரத்தில் மிகப்பெரும் கடன்சுமை இருந்தது. அம்மாவின் உழைப்பில் உருவான வீடு கடனில் மூழ்கிவிடும் அபாயத்தில் இருந்தது. தி இந்து தமிழ் ஆரம்பிக்க இருந்த நேரம், நானும் விண்ணப்பித்திருந்தேன். இரண்டு கட்ட தேர்வுக்குப் பிறகும் எனக்கு பணி கிடைக்கவில்லை. விசாரித்தபோது காரணம் என்ன என்பது நடுப்பக்க ஆசிரியருக்குத்தான் தெரியும் என்றார்கள்.

எனக்குத் தெரிந்தவரையில் அவர் வழியாக விண்ணப்பிக்காமல், வேறொருவர் மூலமாக விண்ணபித்ததுதான் நான் நிராகரிக்கப்பட்டதற்கு காரணமாக இருக்கும். என்னுடைய எழுத்தும் காரணமாக இருக்கலாம். கடன் பிரச்னை தீர்ந்துவிடும் என்று காத்திருந்த நேரத்தில் உங்களுக்கு அந்த வேலை கிடைக்காது, வேற பாருங்க என்ற பதில் வந்தால் இடிந்துபோய் உட்காருவோம். தலையில் கை வைத்து அமர்ந்தேன். நான் செய்த தவறுதான் என்ன?

அந்த நேரத்தில் அவள் விகடனுக்கு ஆட்கள் தேவை என்றார்கள். ஆசிரியரிடம் பேசினேன். நீங்கள் ஏற்கனவே பிரச்னை செய்துவிட்டு போனீர்கள் இல்லையா? (நான் எந்த பிரச்னையும் செய்யவில்லை. என்னை நீக்க முடிவு செய்திருந்தார்கள். அதை அறிந்து நானே விலகிவிட்டேன்) அந்த ஆசிரியரிடம் பேசுங்கள் என்றார். அந்த ஆசிரியரிடம் பேச முயற்சி செய்தேன். அவர் பேச விரும்பவில்லை போலும். அங்கே இருந்த நண்பர்களும்கூட உங்களுக்கு பணி கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறி விட்டார்கள். எப்படி கடனை அடைப்பேன்? இனி, நான் என்ன செய்வேன்? இரண்டு நாட்கள்தான் என்னுடைய துக்கம். மூன்றாவது நாள் நான் வாழத் தயாராகி விட்டேன்.

எனக்கு எழுதத் தெரியவில்லையா? யாரிடமாவது காசு வாங்கி எழுதி மாட்டிக்கொண்டேனா? தனிப்பட்ட ‘ஒழுக்க’ பிரச்னைகளில் மாட்டிக்கொண்டேனா? எதுவுமே இல்லை. பிறகு ஏன் என்னை பிளாக்லிஸ்ட் செய்தார்கள்; செய்கிறார்கள்? நிச்சயம் இந்த நிறுவனங்களில் மீண்டும் நான் பணியாற்றப் போவதில்லை. இருந்த போதும், அவர்கள் ஏன் என்னை ஒதுக்குகிறார்கள்?

இவர்களைப் பொறுத்த வரையில் நான் ஒரு தோற்றுப்போன பத்திரிகையாளர். பெண்கள் இதழ்களில் பணியாற்றிய அனுபவம் இருந்தாலும் என்னை அந்தப் பணிக்கு அழைக்க மாட்டார்கள். அப்படியே அழைத்தாலும் இரண்டாம் பட்சமான நிலையிலோ, ஆகக்குறைந்த சம்பளத்துக்கோ அழைப்பார்கள். எனக்கு நன்றாக எழுதத் தெரியும் என்று தெரிந்திருந்தும் கட்டுரை எழுதவோ, பத்தி எழுதவோ அழைக்க மாட்டார்கள்… அப்படியே வாய்ப்பு தந்தாலும் பெயர் போடுவதில் சீனியாரிட்டியை பின்பற்ற மாற்றார்கள், ஐந்து பக்கம் எழுதியிருந்தாலும் ஒரு பக்கம் எழுதியவரின் பெயருக்கும் பின்னால் போடுவார்கள். ஆமாம், இதெல்லாமும் ‘”இக்னோர்” செய்வதுதான்.

“கோஸ்ட் ரைட்டிங்” போல, பிழைப்புக்காக நான் இப்போதும் எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். என்னுடைய தேவைகளை சுருக்கிக் கொள்கிறேன். என்னை ஏளனமாகப் பார்க்கிறவர்களை, பார்க்காத மாதிரி கடந்து போகிறேன். என்னுடைய மாத வருமானம் அதிகபட்சம் ரூ.10 ஆயிரம். இரக்கமுள்ளவர்கள் எனக்குப் பணி தருகிறார்கள். எழுதுவதன் மீதான காதலில் ஒரு இணைய தளத்தை நடத்துகிறேன். ஒரு இதழ் முயற்சியிலும் இறங்கியிருக்கிறேன். ஆஸ்கர் விருது கிடைக்குமா? புக்கர் கிடைக்குமா? என்பதெல்லாம் இருக்கட்டும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பதே இங்கே மிகப்பெரிய எதிர் போராட்டம்தான். ட்ரம்போவைப் பார்த்தபிறகு, நான் உணர்ந்தது இது.

நன்றி: மு.வி. நந்தினி

_______________________

ஊடகங்களின் முறைகேடுகளை தட்டிக் கேட்கும் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி