தஞ்சையில் ஆகஸ்டு 5, 2017 அன்று மக்கள் அதிகாரம் நடத்தும் “விவசாயியை வாழவிடு” மாநாட்டின் மாலை அமர்வில் தோழர் காளியப்பன் ( பொருளாளர், மக்கள் அதிகாரம் ) அவர்கள் ஆற்றிய தலைமை உரை.
இம்மாநாட்டிற்காக பல ஊர்களிலிருந்தும் சொந்தச் செலவில் வந்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கும், பல்வேறு கல்லூரிகளிலிருந்தும் திரளாக வந்து கலந்து கொண்ட மாணவர்களுக்கும் நன்றி!
பொதுவாக, மற்றவர்களின் பொதுக்கூட்டங்களில், போலீசு படைகளைக் குவிக்க வேண்டியிருக்கும். ஆனால் மக்கள் அதிகாரத்தின் மாநாட்டிற்கு அது தேவை இல்லை. போலீசு இங்கு குவிக்கப்படவில்லை. ஆனால் போலீசு நீதிமன்றத்தில் என்ன சொல்லியிருக்கிறது தெரியுமா ?
மக்கள் அதிகாரம் மாநாடு நடத்தினால், தஞ்சைக்குப் பாதிப்பு ஏற்படுமாம். ஆனால் அதனை பொய்யெனக் காட்டி சீராக இந்த கூட்டத்தை நடத்த ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி!
“உழவன் கணக்கு பார்த்தால் உழக்கு மிஞ்சாது” என்பார்கள். அதுதான் உண்மை. விவசாயி , விவசாயத்தில் இலாபத்தைப் பார்க்க முடியாது. ஆனாலும் இதுவரை விவசாயி விவசாயத்தை விட்டு வெளியேறவில்லை. ”விவசாயி யாருடா? .. சோறு போடும் அப்பன்டா” என்பது விவசாய சங்கங்களின் போராட்டங்களில் அன்றைய காலகட்டங்களில் ஒலித்த முழக்கம்.
அது உண்மை தான்! உலகுக்கே சோறு போடும் அப்பன் விவசாயி தான். கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் இலட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். கடந்த இரண்டாண்டுகளில் தமிழகத்தில் மட்டும் சுமார் 400 விவசாயிகள் விவசாயம் பொய்த்துப் போன காரணத்தினால் மரணமடைந்திருக்கின்றனர். என்ன காரணம் ?
விளைச்சல் இருந்தால், விளை பொருளுக்கு விலை கிடைப்பதில்லை. விளைச்சல் இல்லையென்றால், கடன் தொல்லை. ஆர்.எஸ்.எஸ். – மோடி கும்பல் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் விவசாயிகளுக்குப் பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. ஆட்சியில் அமர்ந்த நாள் முதல் இன்று வரை விவசாய விரோத நடவடிக்கைகளில் தான் ஈடுபட்டிருக்கிறது இக்கும்பல்.
சமீபத்தில் பாஜக ஆளும் மாநிலமான மத்தியப்பிரதேசத்தில் விவசாயிகளின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இங்கு விவசாயிகளுக்கு எதிராக இருப்பது அரசு தான்; அரசின் கொள்கைகளே விவசாயிகளின் முதல் எதிரி!
தமிழகத்தைப் பொறுத்தவரையிலே, அலிபாபாவும் 40 திருடர்களும் தான் ஆட்சி புரிந்து கொண்டிருக்கின்றனர். அலிபாபாவின் மரணத்திற்குப் பின்னர், 40 திருடர்களும் 4 பிரிவாகப் பிரிந்து கொள்ளையடிக்கின்றனர். ஒரு மந்திரி பேசுகிறான், விவசாயிகள் கந்து வட்டிக்கு விட்டு சம்பாதிக்கிறார்கள் என்று, விவசாயம் பொய்த்துப் போய், விளைச்சல் இன்றி நெஞ்சு வெடித்துச் சாகும் விவசாயியை, கந்து வட்டிக்கு விட்டு சாப்பிடுகிறான் எனச் சொல்லும் அந்த மந்திரியை செருப்பால் அடிக்க வேண்டாமா ?
விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்தால் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று அரசு கூறுகிறது. ஆனால் இவர்கள் அம்பானிக்கும் , அதானிக்கும் மல்லையாவுக்கும், இதர கார்ப்பரேட்டுகளுக்கும் கடன் தள்ளுபடி செய்கிறார்கள். இந்தியாவின் தேசிய நிதி ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் கூறுகிறார்.
“கார்ப்பரேட்டுகளுக்கு அவ்வப்போது கடன் தள்ளுபடி செய்யத் தான் வேண்டும், அது தான் தேசத்தின் பொருளாதாரத்திற்கு நல்லது” என்கிறார். உலகுக்கே சோறு போடும் விவசாயிக்கு கடன் தள்ளுபடி கிடையாது. ஆனால் கார்ப்பரேட்டுக்கு கடன் தள்ளுபடி உண்டு. விவசாயிகள் கையைக் கட்டிக் கொண்டு வீட்டில் படுத்துக் கொண்டால், இங்கு யாருக்கும் உணவு கிடையாது.
மன்மோகன் தொடங்கி, மோடி வரை இந்தியாவில் 5% பேர் மட்டுமே விவசாயத்தில் இருந்தால் போதுமானது என்கிறார்கள். மீதம் பேரை விவசாயத்தில் இருந்து வெளியேறச் சொல்லுகிறார்கள். அதையே இவர்களது கொள்கையாக வைத்திருக்கிறார்கள். இவர்களது அதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வராமல் நமக்கு விடிவு கிடையாது. நாம் ஒன்றிணைந்தால் தான் அது சாத்தியமாகும்.
ஒரு பழமொழி சொல்வார்கள் “சிறு பொறி காட்டுத்தீயையே உருவாக்கும்” என்று. கடந்த 2015ம் ஆண்டு நாம் பற்ற வைத்த சிறு பொறி தான் “மூடு டாஸ்மக்கை” என்பது. அதை இன்று தமிழக மக்கள் அனைவரும் இறுகப் பற்றிக் கொண்டுள்ளனர்.
இதோ இன்று, விவசாயியை வாழவிடு என்ற முழக்ககத்தை முன்னெடுத்திருக்கிறோம்., இது தமிழகமெங்கும் பற்றிப் பரவட்டும்.
– வினவு செய்தியாளர்கள்
விவசாயிகளின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி
முன்பு இல்லாததை விட தற்பாேது நாடு ஏதேச்சதிகார சர்வாதிகாரப் பாேக்கை ஆட்சியாளர்கள் கைக் காெண்டு அனைத்து துறைகளையும் தனியார் மயமாக்கவும் …. மானியங்கள் அனைத்தையும் நீக்கி …ரேஷன் கடைகளையும் ஊற்றி மூடி ஜீவாதார உரிமைகளை பறித்து விடவும் துடியாய் துடிக்கும் அவல பாேக்கு ஒரு பக்கம் .. விவசாயத்தை ஒழித்துக்கட்டி கார்பரேட்டுகளுக்கு தானம் செய்ய முயலுவது ஒரு பக்கமும் நடக்கின்ற பாேது ” இந்த எழுச்சி மாநாடு ” மற்றத் துறையினரையும் தட்டி எழுப்பும் என்பதில் மாற்று கருத்து இருக்காது .. வெல்க … வாழ்த்துக்கள் ….!!!