privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்போராடும் உலகம்திகாருக்கே அனுப்பினாலும் போராட்டம் தொடரும் - ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் !

திகாருக்கே அனுப்பினாலும் போராட்டம் தொடரும் – ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் !

-

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்!

ஸ்டெர்லைட் ஆலையின் இரண்டாவது பிளாண்ட்டின் கட்டுமான வேலைகளை எதிர்த்து அ.குமரட்டியாபுரம் பொதுமக்களின் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் நடக்கிறது. 1996 முதல் இயங்கிவரும் இந்த ஆலையில் வெளியேறும் நச்சு வாயுக்களாலும், நிலத்திற்குள் செலுத்தப்படும் அமிலக்கழிவுகளாலும் தூத்துக்குடி மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

ஸ்டெர்லைட்டை அடுத்துள்ள அ.குமரட்டியாபுரம் கிராம மக்கள் நேரடியாக தன் ஊர் அழிவதைக்கண்டு பொறுக்கமுடியாமல் குமுறி வெடித்துள்ளனர். இங்கு 40 வயதான சண்முகத்தாய் கேன்சருக்கு பலி! கருப்பை புற்றுநோயும் பரவுகிறது! ஆலையின் சுற்றுச்சுவர் வரை சென்று ஆடுமேய்த்து வந்த மாடசாமியின் கண் குருடானது!

கருவுரும் பெண்களுக்கு 3 மாதத்திலேயே கருச்சிதைவு தொடர்கதையாகிவிட்டது; தோலில் ஒவ்வாமை; 15 ஆண்டுக்கு முன்பு வரை குடிநீர் தந்த கிணறுகளில் இன்று அமிலநீர்தான் சுரக்கின்றன! இதை குடிக்க முடியாது. குடித்தால் தலைசுற்றும், மயக்கம் வரும். தண்ணீரை விட அடர்த்தியான இந்நீரை கால்நடைகள் குடித்தால் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது, அதன் காரணமாக அவை இறக்கின்றன.

இரவில்தான் அதிக அளவு உற்பத்தியும் நடக்கிறது. சல்பர் டை ஆக்சைடும் வெளியேற்றப்படுகிறது. இவ்வளவும் வருடத்திற்கு 1 லட்சம் டன் உற்பத்தி செய்யும் பிளாண்ட்- 1 வாரி வழங்கியவை!  இந்நிலையில் 4 லட்சம் டன் உற்பத்தி செய்யும் இலக்குடன் பிளாண்ட் – 2 -ன் கட்டுமானத்தை எப்படி அனுமதிப்பது? உயிரைக்கொடுத்தேனும் தடுக்க வேண்டும் என களமிறங்கியுள்ளனர் கிராம மக்கள்.

“ஆளுக்கொரு புதுவீடு, 5 லட்சம் பணம்” என்று ஆலை நிர்வாகம் தனது ஆட்களை வைத்து பஞ்சாயத்தும் பேசியது. தலைமுறை தலைமுறையாக வாழ்ந்துவரும் ஊரா? – ஊரை அழிக்க கம்பெனி போடும் பிச்சையா? எதுமுக்கியம் என்பதில் அ.குமரட்டியாபுரம் கிராம மக்கள்  தெளிவாக சிந்தித்து சரியான முடிவெடுத்தனர்.

ஆலை விரிவாக்கப்பணிகளை தடுக்க கோரி 05.02.2018 அன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு தந்தனர். மத்திய அரசால் தேசிய அளவில் சிறந்த நிறுவனம் என்று பல துறைகளில் பரிசளிக்கப்படும் ஸ்டெர்லைட்டை மூட அரசிடமே மனு தருவது தீர்வைத் தருமா? காற்றும், நிலமும், நிலத்தடி நீரும் கெட்டு, கேன்சரும் சிறுநீரக செயலிழப்பும் ஆஸ்துமாவும் தோல் நோய்களும் பெருகியுள்ள தூத்துக்குடிக்கு தூய்மையான நகரம் என்ற விருது தந்து அழகுபார்க்கிறது அரசு! எனினும் போராட்டத்தை முறைப்படி அரசுக்கு மனுகொடுத்து தொடங்கினர் மக்கள்.

06.02.18-ல் ஸ்டெர்லைட் கட்டுமான வேலை நடக்கின்ற இரண்டாம் வாயிலில் முற்றுகை. நிலத்தடி நீரை விசமாக்கிவரும் ஸ்டெர்லைட் தரும் லாரி குடிநீரை வாங்க மறுத்தனர். 07.02.18-ல் பேச்சுவார்த்தைக்கு அழைத்து சிப்காட் காவல்நிலையத்தில் வைத்து DSP யின் மிரட்டல் “கோர்ட்டுக்கு போங்கள்.இப்படி எல்லாம் கேட்டில் நிற்கக்கூடாது. அரெஸ்ட் பண்ணி உள்ளே போட்டுருவோம்”. ஊர்மக்களோ “எங்க குடிதண்ணில பாலிடால கலந்துவுட்டுருங்க. ஊர் மொத்தமா செத்துடுறோம்.நீங்கல்லாம் கம்பெனிக்கு காவலா நின்னுக்கங்க” என்று முகத்தில் அறையும்படி சொல்லியுள்ளனர்.

08.02.18-ல் மாணவர்களும் போராட்டத்தில் இறங்கினர். “போராட்டம் முடியும்வரை ஊரிலிருந்து மாணவர்கள் பள்ளிக்கு வரமாட்டார்கள் ” ஊர்சார்பாக பள்ளிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. கல்வித்துறை கண்டுகொள்ளவில்லை.  “போராட்டம் என்று வந்து பெட்டி வாங்கிகொண்டு நம்மை ஏமாற்றியதே கட்சிகளின் வரலாறு! நாம் இனி கட்சிகளின் பின் செல்லக்கூடாது. ஊர்தான் சுயமாக போராடனும். ஊர்தான் தலைமை தாங்கனும். எந்த முடிவாக இருந்தாலும் ஊர்க்கூட்டம் மூலம்தான் எடுப்பது” என்று முடிவெடுத்தனர்.

தலைக்கு 500 ரூபாய் என்று போராட்ட நிதி திரட்டினர். உண்ணாவிரதத்திற்கு அனுமதி கேட்டனர். மறுத்தது ஸ்டெர்லைட்டின் ஏ(கா)வல்துறை! 12.02.18 அன்று 2மணி நேர ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கிடைத்தது. அதையே வாய்ப்பாக்கி மையவாடி பேருந்து நிறுத்தம் எதிரில் உண்ணாவிரதத்தை நடத்தினர் கிராம மக்கள். மாலை 5.00 மணி ஆகியும் கலையாத உறுதியை கண்டு கொதித்த அரசு பந்தல் போட்டவரை மிரட்டி பிரிக்க வைத்தது. மைக்செட்காரரை மிரட்டி எடுக்க வைத்தது.

ஓரமாக அமைதியாக உண்ணாவிரத போராட்டத்தில் இருந்தவர்களை கலைத்து சாலைக்கு விரட்டியது போலீசு. MGRபூங்கா வாயிலை ஒட்டி அமர்ந்து விட்டனர் மக்கள். பெண்கள், குழந்தைகள் உட்பட அனைவரும் கொட்டும் பனியில் சாலையோரம் போராட்டத்தை தொடர்ந்தனர். மக்கள் உரிமை பாதுகாப்பு மைய தோழர்களும் அவர்களுடன் இரவில் தங்கினர்.

 

13.02.18 அன்று காலை போராட்டம் தொடர் முழக்க ஆர்ப்பாட்ட வடிவத்தை எட்டியது. பல்வேறு அமைப்புகளின், கட்சிகளின் பிரதிநிதிகள் சமூக அக்கறை கொண்டவர்கள் வர ஆரம்பித்தனர். கல்லூரி மாணவர்களும் வந்து பார்த்தனர். எங்கே இன்னொரு ஜல்லிக்கட்டு போராட்டமாகி விடுமோ என்ற அச்சம் ஸ்டெர்லைட்டுக்கு உண்டு. ஏற்கனவே ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இக்கம்பெனி தந்த உணவை திருப்பி அனுப்பியதும், அடுத்த போராட்டம் உனக்கெதிராகத்தான் இருக்கும் என்று எச்சரித்ததும் மறந்திருக்குமா? மாணவர்கள் வந்துவிடக்கூடாது என்று கல்லூரிகளில் கண்காணித்தது மாவட்ட நிர்வாகம்.

மதியம் 11 மணியளவில் போராடியவர்களை தாக்கி கைது செய்ய ஆரம்பித்தது அரசு. இதில் ஒரு மாணவன் உட்பட மூவர் காக்கிகளால் அடிபட்டு சாலையில் சரிந்தனர். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். ஊர்மக்களை இரண்டு மண்டபத்தில் ஆண்கள், பெண்கள் என்று பிரித்து  அடைத்தனர்.

வாழ்வுரிமைக்காக அமைதியாக எதிர்ப்பை தெரிவித்து போராடிய தங்களை அடிக்கும் போலீசை வெறுப்புடன் பார்த்தனர் மக்கள். அவர்கள் தந்த உணவையும் தொடவில்லை. இத்தகவல் தெரிந்தவுடன் குழந்தைகளுக்கு மட்டும் வெளியிலிருந்து உணவு தயாரித்து தந்தனர் சமூக ஆர்வலர்கள்.

மண்டபத்தில் அடைக்கப்பட்டவர்களை பார்க்கவிடாதது மட்டுமல்ல, வெளியேயும் நிற்கக்கூடாது என்று கலைத்தனர். அருகிலுள்ள தெருவில் சற்று தள்ளியிருந்த ஒரு கட்டிடத்தின் படியில் அமர்ந்தவர்களிடம் மீடியாவினர் பேட்டி எடுக்க ஆரம்பிக்கவே ASP தலைமையிலான கடமை தவறா காவலர்கள் அங்கும் ஓடிவந்து தடுத்தனர்.

“இங்கே உட்காரக்கூடாது. ரோட்டில் பேட்டி தர காவல்துறையிடம் அனுமதி வாங்கனும். இல்லை பத்திரிக்கை ஆபீஸ்ல போய் கொடுங்க” என்று தன்  ‘கடமையை’ செய்தார் ASP.   “போராட்டத்தை ஆதரிப்பதும், கூடி நிற்பதும், பேட்டி கொடுப்பதும் எங்கள் உரிமை. நீங்கள் தடுக்க முடியாது” என்று  மக்கள் உரிமை பாதுகாப்பு மைய தோழர்கள் எதிர்த்து பேசவே  போலீசார் பின்வாங்கினர். எனினும் ஊடக நண்பர்கள் தமது உரிமை பற்றி வாய் திறக்கவில்லை. எதற்கு வம்பு என்பதைபோல் PRPC தோழர் அரிராகவனை அங்கிருந்து மேலும் தள்ளி அழைத்துச்சென்று பேட்டி எடுத்தனர்.

அதே நேரம் பெண்கள் அடைக்கப்பட்ட மண்டபத்தில் ஆய்வாளர் ஹரிகரனோ  “உங்களை கோவை, சேலம், வேலூர்னு கொண்டுபோய் ஜெயில்ல போடப்போறோம்.  ஒழுங்கா நாங்க சொல்றத கேளுங்க” என்றிருக்கிறார்.  தாளமுத்துநகர் காவல்நிலைய ஆய்வாளரான இவரின் மனைவியோ “இவளுங்க பேசுனதையே திரும்பதிரும்ப சொல்றாளுங்க. நம்ம பேச்ச கேக்கறமாதிரி தெரியல்ல” என்று ஆத்திரமடைந்துள்ளார். “டெல்லி திகாருக்கே அனுப்பினாலும் சரி, போராட்டம் தொடரும்” என்று பெண்கள் பதிலடி தந்துள்ளனர்.

இரவு 8 மணியளவில் பேச்சுவார்த்தைக்கு என்று 10 பேரை தனியாக அழைத்துச்சென்று அவர்களை தெற்கு காவல் நிலையத்தில் வைத்தனர். நள்ளிரவில் 9 பேரை ரிமாண்ட் செய்தனர். மறுபுறம் மண்டபத்தில் இருந்தவர்களை போகும்படி அறிவித்தனர். எங்களையும் ரிமாண்ட் செய் அல்லது அவர்களையும் வெளியே விடு என்று அறிவித்தனர் ஊர்மக்கள்.

ஆண்கள் வீட்டிற்கு போய்விட்டனர் என்று பெண்களிடமும்,பெண்கள் போய் விட்டனர் என்று ஆண்களிடமும் கூறி சதி செய்தனர். முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உட்பட தனிநபர்களாக உடன் கைதான சிலர்  வெளியே வந்துவிடவே, கிராம மக்களும் குழப்பத்திற்குள்ளாகி வெளிவந்தனர். வெளிப்படையாக அரசு எந்திரம் ஸ்டெர்லைட் பக்கம் நிற்கும் சூழலில், கம்பெனி வேண்டும் என்று சுய உதவிக்குழு மூலம் முத்தையாபுரம் பெண்களை கலெக்டரிடம் மனுகொடுக்க வைத்துள்ள நிலையில், கம்பெனி கையாட்கள் போராட்டத்தில் ஊடுருவி சீர்குலைக்கவும் கூடும். இந்த முதல்சுற்று அனுபவத்தை கணக்கிலெடுத்து அடுத்தகட்ட போராட்டத்தை தொடரவேண்டிய நிலையில் உள்ளனர் அ.குமரட்டியாபுரம் கிராம மக்கள்.

அரசிடம் கெஞ்சியோ மனுகொடுத்தோ கார்ப்பரேட்டுகளைக் விரட்ட முடியாது! அனைத்து கிராமங்களும் ஒன்றிணைந்து மக்களே அதிகாரத்தை கையில் எடுத்து விரட்டியாக வேண்டும்! இணைந்து போராட தயாராக வேண்டும் தூத்துக்குடியின் இளைஞர் படை!

தகவல்:
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தூத்துக்குடி.