privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திலெனின் சிலை இடிப்பு : ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கரை எரிக்கும் ம.க.இ.க போராட்டம் !

லெனின் சிலை இடிப்பு : ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கரை எரிக்கும் ம.க.இ.க போராட்டம் !

-

திரிபுராவில் வெற்றி பெற்ற 48 மணி நேரத்துக்குள் பெலோனியா என்ற நகரில் நிறுவப்பட்டிருந்த லெனின் சிலையை புல்டோசர் வைத்து இடித்துத் தள்ளி, “பாரத்மாதா கி ஜெய்” என்று முழக்கமிட்டு கூத்தாடியிருக்கின்றனர் சங்க பரிவாரக் காலிகள். வீழ்த்தப்பட்ட சிலையின் தலையை மட்டும் தனியே துண்டித்து கால்பந்து விளையாடினர் என்றும் கூறுகிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டின் செய்தி. “இன்று திரிபுராவில் லெனின் சிலை நாளை தமிழகத்தில் சாதிவெறியர் ஈவெராவின் சிலை” – இது முகநூலில் எச். ராசாவின் பதிவு.

திரிபுராவில் மார்க்சிஸ்டு கட்சித் தொண்டர்கள் தாக்கப்படுகின்றனர். அவர்களது அலுவலகங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. வீடுகள் கொளுத்தப்படுகின்றன. இதுவரை 514 தொண்டர்கள் தாக்கப்பட்டிருப்பதாகவும், 1539 வீடுகள் சூறையாடப்பட்டிருப்பதாகவும், 196 வீடுகள் எரிக்கப்பட்டிருப்பதாகவும், 208 கட்சி அலுவலகங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும், 64 அலுவலகங்கள் எரிக்கப்பட்டிருப்பதாகவும் திரிபுரா மாநில மார்க்சிஸ்டு கட்சித் தலைமை குற்றம் சாட்டியிருக்கிறது.

இருப்பினும், பாஜக வின் ஆட்சியை “பாசிசம்” என்றே கூறவியலாது என்பது மார்க்சிஸ்டு கட்சியில் பிரகாஷ் காரத்தின் நிலை. மோடி ஆட்சியின் மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தியின் காரணமாக, பஞ்சாபில் காங்கிரசு வென்றதைப் போல மற்ற மாநிலங்களில் ஒருவேளை எதிர்க்கட்சிகள் வென்றாலும், இந்துத்துவ பாசிச அபாயத்திலிருந்து தப்பிவிட முடியாது என்று எச்சரிக்கிறார் பிரபாத் பட்நாயக். அது மட்டுமல்ல, தனது ஆட்சியின் தோல்விகளுக்கு இடையிலும் தேர்தல் வெற்றியை ஈட்டுவது எப்படி என்பது மோடிக்கும் சங்க பரிவாரத்துக்கும் தெரியும் என்றும், மாநில அரசு அதிகாரத்தை வைத்துக் கொண்டு சங்க பரிவாரத்தை எதிர்கொள்ள முடியாதென்றும், எச்சரிக்கிறார் பட்நாயக்.


பட்நாயக்கின் எச்சரிக்கையை இங்கே நாம் குறிப்பிடுவதற்கு காரணம், அவர் தேர்தல் அரசியலில் நம்பிக்கை கொண்டவர், மார்க்சிஸ்டு கட்சியின் ஆதரவாளர் என்பதுதான்.

அக்லக் முதல் கவுரி லங்கேஷ் வரையில் எத்தனை கொலைகள் நடந்த போதிலும், நீதித்துறை உள்ளிட்ட எல்லா நிறுவனங்களும் அப்பட்டமாக மோடி அரசின் அடிமைகளாக மாறிவிட்ட போதிலும், எல்லா நிறுவனங்களும் பாசிசக் கும்பலின் கட்டுப்பாட்டுக்கு வந்து விட்ட போதிலும், பார்ப்பனக் கும்பல் பூணூலை உருவிக்கொண்டு வெளிப்படையாக திமிரெடுத்து ஆடிய போதிலும், பார்ப்பன பாசிசம் என்ற சொல்லை உச்சரித்தாலே வாய் வெந்து விடும் எனப்பதறும் நாடாளுமன்ற இடதுசாரிகள் பலர் இன்னமும் இருக்கிறார்கள்.

உருண்டிருப்பது உயிரற்ற சிலையின் தலைதான். லெனினின் “தலை” கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் தலைக்குள் இருப்பதால் லெனின் மீண்டும் மீண்டும் உயிர் பெறுவார்.
ஆனால், தம் சொந்தத் தலையை இழந்த பின்னர்தான் பார்ப்பன பாசிசம் குறித்து சிந்திப்போமென்று இருப்பவர்களை உயிர்ப்பிக்க முடியாது. அவர்களுக்கு மார்ட்டின் நீமோலரின் கவிதையை இலட்சத்து ஒன்றாவது முறையாக சமர்ப்பிக்கிறோம்.

“முதலில் அவர்கள் யூதர்களைத் தேடி வந்தார்கள்.
நான் யூதன் அல்ல, அதனால் நான் பேசவில்லை.
பின்பு அவர்கள் கம்யூனிஸ்டுகளைத் தேடி வந்தார்கள்.
நான் கம்யூனிஸ்டு அல்ல, அதனால் நான் பேசவில்லை.
பின்பு அவர்கள் தொழிற்சங்கவாதிகளைத் தேடி வந்தார்கள்,
நான் தொழிற்சங்கவாதியல்ல, அதனால் நான் பேசவில்லை.
இறுதியாக அவர்கள் என்னைத் தேடி வந்தார்கள்.
இப்பொழுது எனக்காகப் பேச எவரும் இல்லை”

– மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு