privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்டெல்லியை முடக்குவோம்! காவிரி போராட்டச் செய்திகள் !

டெல்லியை முடக்குவோம்! காவிரி போராட்டச் செய்திகள் !

-

“காவிரியை மறுக்கும் டெல்லியின் அதிகாரத்தை முடக்கு!”  என்ற முழக்கத்தின் கீழ் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பாக காவிரியை மறுக்கும் பா.ஜ.க வை கண்டித்து கும்மிடிப்பூண்டி தபால் நிலைய முற்றுகைப் போராட்டம் கடந்த 03-04-2018 அன்று நடத்தப்பட்டது.

மாவட்ட செயலாளர் தோழர் விகந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தில் தோழர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். முற்றுகையில் ஈடுபட்ட தோழர்களைக் கைது செய்தது போலீசு.

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்
தொடர்புக்கு: 94444 61480

*****************

“டெல்லி அதிகாரத்தை முடக்கு” என்ற முழக்கத்தின் கீழ் கடந்த 04-04-2018 அன்று கடலூர் மக்கள் அதிகாரம் தோழர்கள் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் போராட்டம் மற்றும் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

காலை 6.00 மணிக்கு விழுப்புரம் பேசஞ்சர் ரயிலில் கடலூர் மக்கள் அதிகாரம் தோழர்கள், உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்தும், காவிரி விவகாரத்தில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். “டெல்லி அதிகாரத்தை முடக்கு”, “டோல்கேட் கட்டணம் கட்டாதே”, “ரயிலில் கட்டணம் கட்டாதே” என்று பிரச்சாரத்தையும், டிக்கெட் எடுக்காமல் பயணிக்கும் போராட்டத்தையும் மேற்கொண்டனர்.

நூற்றுக்கணக்கான இரயில்  பயணிகளிடையே இந்த போராட்ட வழிமுறை பெருத்த வரவேற்பை பெற்றது.  மாணவர்கள் சிலரும் தோழர்களுடன் இணைந்து கொண்டு பேசினார்கள்.  பொதுமக்களிடையே காவேரியில் உச்சநீதிமன்றத்தின் கேடுகேட்ட தீர்ப்பு என்பது தமிழகத்தின் டெல்டாவை பாலைவனமாக்கும் சதி.  மத்தியில் ஆளும் பா.ஜ.க. மோடி கும்பல் திட்டமிட்டு தமிழகத்தை கொலைவெறியோடு தாக்கி வருகிறது.

எதிர்கட்சிகள் உள்ளிட்ட அனைவரும் போராடி வருகின்ற சூழ்நிலையில் கர்நாடக தேர்தலை முன்வைத்து தான் இப்படி தீர்ப்பளித்துள்ளதாக சொல்வது தவறு.  ஹைட்ரோ கார்பன், ஷேல் கேஸ், மீத்தேன், நிலக்கரிக்காக, அம்பானி, அதானி கொள்ளையடிக்க நாம் தண்ணீர் இல்லாமல் சாக வேண்டுமா? இது விவசாயிகள் பிரச்சனை அல்ல.  தமிழினத்தின் மீதான தாக்குதல்.

நீட் திணிப்பு, இந்தி சமஸ்கிருத திணிப்பு, நியுட்ரினோ, ஸ்டெர்லைட், நெடுவாசல், காவேரி தடுப்பு என்று தமிழகத்தையே மரண பூமியாக மாற்றுகிறது மத்திய அரசு. டெல்லியோடு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று பிரச்சாரம் செய்யப்பட்டது.  தமிழக மக்களே களம் இறங்கி போராடுங்கள்! மக்கள் அதிகாரத்தோடு வாருங்கள் என அறைகூவல் விடுக்கப்பட்டது.

விழுப்புரம் முதல் மயிலாடுதுறை வரை மற்றும் மயிலாடுதுறை முதல் விழுப்புரம் வரை ரயிலில் பிரச்சாரம் செய்யப்பட்டது.  கடலூர் திருப்பாதிரிப்பூலியூர் ரயில் நிலையத்தில் இடைமறித்த ரயில்வே அதிகாரிகள் டிக்கெட் எடுக்காதது தவறு என எழுதிக் கொடுக்குமாறு கேட்டனர். ” நாங்கள் எழுதி கொடுக்க மாட்டோம், உங்களுக்கு ஒத்துழைக்க மாட்டோம் இது எங்கள் போராட்ட முறை.  நீங்கள் வழக்கு போடுங்கள், காவல் நிலையமானாலும், ரயில் நிலையமானாலும், நீதிமன்றமானலும், சிறையானாலும் நாங்கள் இந்த அரசியலைதான் பேசுவோம்” என்று தொடர்ச்சியாக முழக்கமிட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது.  கூட்டம் கூடியது.  ரயில்வே போலிசார் வந்தார்கள். பின்னர் தமிழ்நாடு போலிசுகாரர்கள் வந்தார்கள்.

ஒரு கட்டத்தில் போன் அலைபேசியில் யாரிடமோ பேசிவிட்டு, தோழர்களைக்கைது செய்யாமல் விட்டுவிட்டுச் சென்றது போலீசு. தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் மத்திய அரசுக்கு எந்த ஒத்துழைப்பும் கொடுக்க கூடாது என்று பேருந்துகள், ரயில்கள், பொது இடங்களில் மக்கள் அதிகாரம் தொண்டர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

தகவல்:

மக்கள் அதிகாரம்
கடலூர்.

*******

சென்னை ஆவடியில் மக்கள் அதிகாரத்தின் சார்பில் இரயில் மறியல் போராட்டம் இன்று (05-04-2018) நடத்தப்பட்டது. மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர்களும் அப்பகுதி மக்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்களும் இந்த முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

தகவல்:

மக்கள் அதிகாரம்,
சென்னை.