ந்தியாவில் பெயரளவிற்காவது இருந்துவரும் தொழிலாளர் சட்டங்களில் உடனடியாக மாற்றங்களைக் கோருகின்றனர் சர்வதேச பொருளாதார நிறுவனங்களும், முதலீட்டாளர்களும்.

இந்தியாவிற்கு ‘வளர்ச்சியை’ அளிப்பதற்காக என்று சொல்லிக்கொண்டு தாராளமயத்தோடு ஒட்டிப் பிறந்த குழந்தைதான் தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள்.

முதலாளித்துவத்தைப் பொறுத்தமட்டில், தாராளமயத்தின் ‘பலனை’ அறுவடை செய்ய வேண்டுமாயின், முதலில் தொழிலாளர் சட்டத் திருத்தங்கள் அவசியமானவை.

தற்போது இந்தியாவில் இருக்கின்ற பல்லில்லாத தொழிலாளர் சட்டங்களையே மிகவும் கடுமையானவை என்று கருதுகின்றனர் பன்னாட்டு முதலாளிகள். தொழிற்சாலைகளை மூடுதல், இடமாற்றுதல், தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தல் போன்றவற்றை எளிமையாகச் செய்யமுடியாதவாறு இச்சட்டங்கள் இடையூறாக இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர்.

எனவே தற்போதைய ‘சந்தைத் தேவைகளுக்கு’ உகந்தனவாக இச்சட்டங்களை மாற்றக் கோருகின்றனர். தொழிலாளர் நலத்துறையின் சோதனைகள் மற்றும் மேற்பார்வை போன்றவை அவர்களுக்கு எரிச்சலூட்டுகின்றன.

கூடுதலாக தொழிலாளர்கள் தொடர்பான ஆவணங்களை வைத்துக் கொள்வது, பதிவுகளை வைத்துக் கொள்வது, அதற்குரிய உரிமங்களை வைத்துக் கொள்வது போன்ற ‘தொல்லை’ பிடித்த வேலைகளை அவர்கள் விரும்புவதில்லை.

தனியார்மய, தாராளமயக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட காலகட்டமான 1991-இலிருந்தே, எந்தக் கட்சி மத்தியில் ஆட்சி அமைத்தாலும், தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களைக் கொண்டுவர பெரு முயற்சி எடுத்துவந்துள்ளன.

காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இரண்டு முறை பதவியிலிருந்த போதும், தொழிலாளர் நலச்சட்டங்களைத் திருத்த முயன்றது. ஆனால், அது வெற்றி  பெறவில்லை.

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், தொழிலாளர் மருத்துவக் காப்பீடு, வைப்பு நிதி ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்தது.

இருப்பினும் அரசு முன்னெடுக்கும் தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள் கடும் எதிர்ப்பைச் சந்திக்கின்றன.

மத்திய அரசும், அவர்களது சிந்தனைக் குழாம்களும் தொழிலாளர் “சட்ட சீர்திருத்தங்களை” நியாயப்படுத்துவதற்கு முறைசாராத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை முன்வைக்கின்றன. அமைப்பு ரீதியாகத் திரட்டப்பட்ட தொழிலாளர்களுக்கு எதிராக முறைசாரா தொழிலாளர்களை நிறுத்துகின்றன.

தொழிலாளர் சட்டங்கள்தான் வேலையில்லாத் திண்டாட்டங்களுக்குக் காரணம் எனக் கூறும் ஆய்வுகளின் துணையோடு, முதலீட்டாளர்களுக்கு இசைவான கருத்து சூழல் உருவாக்கப்படுகிறது. இந்தப் பின்புலத்தில் தொழிலாளர் சட்டங்களை வளைத்துவிடவேண்டும் என்பதில் மத்திய அரசு முனைப்பாக உள்ளது.

முறைசாரா தொழிலாளர்களின் நலனுக்காகவே தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள் என மத்திய அரசு கூறும் காரணங்கள், முறைசாரா தொழிலாளர்களின் மீதான மத்திய அரசின் அணுகுமுறையே பொய்யென நிரூபிக்கிறது.

முந்தைய காங்கிரசு அரசாங்கம் கொண்டு வந்த முறைசாரா தொழிலாளர்கள் சமூக பாதுகாப்புச் சட்டம் (2008) ஏற்கனவே இருக்கக்கூடிய முறைசாரா தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்களை தொகுத்து தந்திருக்கிறதே தவிர புதியதாக எதையும் செய்யவில்லை.

தற்போது மோடி அரசாங்கம் முன்வைத்திருக்கும் முறைசாரா தொழிலாளர்களுக்கான, “சமூக பாதுகாப்பு விதிகளிலும்” ஈ.எஸ்.ஐ., பி.எஃப்., போன்ற எவ்வித நலத்திட்டங்களும் இல்லை.

கூடுதலாக தமிழகம் போன்ற மாநிலங்களில் ஏற்கனவே இருக்கும் முறைசாரா தொழிலாளர் நலத்திட்டங்களையும் ரத்து செய்யும் விதமாகவே அமைந்திருக்கின்றன இவ்விதிகள்.

தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளின் கெடுபிடி அதிகமாக இருப்பதாகவும், அவர்கள் லஞ்சப் பேர்வழிகளாக இருப்பதாகவும் அது தங்களைக் கடுமையாக துன்புறுத்துவதாகவும் கூறிவந்த முதலாளிகளை அத்துன்பத்திலிருந்து மீட்க, தொழிலாளர் நலத்துறையின் அதிகாரத்தை முழுமையாக பறிக்கவுள்ளது மோடி அரசு.

ஏற்கனவே நிறுவனங்களின் இலாபவெறிக்கு தொழிலாளர்களைக் காவு கொடுத்துவரும் தொழிலாளர் நலத்துறையின் மிச்ச சொச்சங்களையும் இழுத்து மூடும் வேலைகளிலேயே முனைப்பாக செயல்படுகிறது மத்திய அரசு.

கடந்த ஏப்ரல் 2015-இல், மோடி அரசு கொண்டுவந்த “தொழிற்சாலை உறவுகளுக்கான தொழிலாளர் சட்டவிதிகளில்” தொழிலாளர்களின் கூட்டுபேரம் மற்றும் தொழிற்சங்கத்தில் வெளிநபர்களின் பங்கேற்பு ஆகியவை ஒழித்துக்கட்டப்பட்டிருந்தன. பின்னர், தொழிற்சங்கங்களின் தொடர்ச்சியான போராட்டத்தால் அவை மாற்றப்பட்டன.

தொழிற் தகராறு சட்டம் (1947)-இல் திருத்தங்கள் கொண்டுவருவதன் மூலம் தொழிற்சாலைகள் எப்போது வேண்டுமானாலும் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யவும், தொழிற்சாலை வேலைவாய்ப்பு (நிலை உத்தரவுகள்) சட்டம், (1946)-இல் திருத்தங்கள் கொண்டுவருவதன் மூலம் அனைத்தையும் ஒப்பந்தமயமாக்கவும், தொழிற்சாலைகள் சட்டம் (1948)-இல் திருத்தம் செய்வதன் மூலம் தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களின் வரம்புகளில் இருந்து தொழிலாளர்களைத் தள்ளி வைக்கவுமான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது மோடி அரசு.

பெண்களுக்கான குழந்தைப் பேறு விடுமுறை நீட்டிப்பு போன்ற நடவடிக்கைகளைக் காட்டி தன்னை தொழிலாளர்களின் நண்பன் எனக் கூறிக்கொண்டே பின்பக்கமாக தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் வேலையிலும் ஈடுபட்டுவருகின்றது.

இது ஒருபுறமிருக்க, பா.ஜ.க., ஆளும் இராஜஸ்தான், அரியானா ஆகிய மாநிலங்கள் அரசாணைகள் மூலமும், தங்களது அதிகாரத்தின் மூலமும் தொழிலாளர் நலச்சட்டங்களை அடியோடு மாற்றி வருகின்றன.

தொழிலாளர்களின் உரிமைகளை படிப்படியாக பறிக்கத் திட்டமிட்டு செயல்பட்டுவரும் மோடிக்கு பிடரியில் அடிகொடுத்து பாட்டாளிவர்க்கத்துக்கே ஒரு முன்னுதாரணத்தைக் காட்டினர் பெங்களூரு ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள்.

காங்கிரசாகட்டும் அல்லது காவிகளாகட்டும், ஆட்சியில் யார் அமர்ந்தாலும் சர்வதேச மூலதனத்தின் நலன்களுக்காகவே செயல்படுகின்றனர். தொழிலாளிகளுக்கு யார் ஒப்பீட்டளவில் குறைவாகத் தீங்கிழைக்கின்றனர் என்று வேண்டுமானால் நாம் எடை போட்டுப்பார்க்கலாம்.

மேலும் படிக்க :