மதுரை – ம.க.இ.க, மக்கள் அதிகாரம் தோழர்களை கடத்திய போலீசு !

துரை ம.க.இ.க வை சேர்ந்த சமயநல்லூர் தோழர் விஜயரங்கன் மற்றும் மக்கள் அதிகாரம் செக்கானூரணி தோழர் ஆசையன் (எ) ஆசை ஆகிய இருவரும் 08.07.2018 அன்று காலை போலீசாரால் கடத்தப்பட்டுள்ளனர்.

மக்கள் அதிகாரம் தோழர் ஆசையன்

மக்கள் அதிகாரத்தில் செயல்பட்டு வருபவர் தோழர் ஆசையன் (எ) ஆசை. சில நாட்கள் முன்பு தோழரின் வயதான தந்தையார் மற்றும் அண்ணனை அழைத்துச் சென்ற போலீசார், “தூத்துக்குடில கலவரம் பண்ணி இருக்கான். ஒழுங்கா அவன (ஆசையை) ஒப்படை. இல்ல உங்கள உள்ள தூக்கி வெச்சுருவோம்.” என மிரட்டி உள்ளனர்.

இந்நிலையில் தனது நண்பர் ஒருவரை பார்க்கச் சென்ற தோழர் ஆசையை அங்கேயே வைத்து கைது செய்துள்ளது போலீசு. தோழர் ஆசையை எங்கே கொண்டு சென்று உள்ளனர் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை.

ம.க.இ.க தோழர் விஜயரங்கன்

தோழர் விஜயரங்கன் நீண்ட காலமாக மதுரை ம.க.இ.க -வில் செயல்பட்டு வருகிறார். இதய நோய் மற்றும் கடுமையான உயர் இரத்த அழுத்த நோயும் தோழரின் உடலை கடுமையாக பாதித்து உள்ள நிலையில் நேற்று அவரை கைது செய்துள்ளது போலீசு.

08.07.2018 அன்று காலை 9 மணியளவில் தோழரின் சிறிய கடைக்கு வந்த போலீசார், சப் – இன்ஸ்பெக்டர் விசாரிக்க அழைப்பதாக கூறி உடன் வருமாறு சொல்லி உள்ளனர். தோழர் உடன் வழக்கறிஞரை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். உடன், “இந்தா இருக்குற ஸ்டேஷனுக்கு வந்து பதில் சொல்லிட்டு திரும்பி வரப் போறீங்க, சீக்கிரம் வாங்க” என அவசரப் படுத்தி உள்ளனர்.

தோழரும் உடன் சென்று உள்ளார். ஆனால், உள்ளூர் காவல் நிலையத்திற்கு செல்லாமல், வாகனம் நான்கு வழிச் சாலை நோக்கி திரும்புவதைக் கண்டு தோழர் கேட்டதற்கு, “தூத்துக்குடி போறோம்” என கூறி உள்ளனர். தோழர் உடன் தனது கைபேசி மூலம் தனது துணைவியாரை தொடர்பு கொண்டு விசயத்தை கூறி உள்ளார். அதன் பின் தோழரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

கை பேசி அணைத்து வைக்கப்பட்டது. அன்றைய நாள் முழுக்க தோழரை போலீசு எங்கே கொண்டு சென்றனர் என்ற விவரமும் தெரியவில்லை. இந்நிலையில் நேற்று இரவு 11.00 மணி அளவில் இரண்டு போலீசார் தோழரை அழைத்து வந்து விட்டுச் சென்றுள்ளனர்.

போலீஸ் விசாரணை குறித்தும், தோழரை போலீசு சட்டவிரோதமாக கடத்திச் சென்றது குறித்தும் மேலதிக விவரங்களை அறிய வழக்கறிஞர்கள் விரைந்துள்ளனர்.

-வினவு செய்தியாளர்,
மதுரை.

*****

விருதை மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது தேசத்துரோக வழக்கு!

தூத்துக்குடி மக்கள் மீதான அடக்குமுறையை கண்டித்து 07.07.2018 அன்று கள்ளக்குறிச்சியில் பேருந்தில் பிரச்சாரம் செய்த தோழர்கள் கணேஷ் மற்றும் வினாயகம் ஆகியோர் மீது தேசத் துரோக வழக்கு (124a) மற்றும் 204b,353,505/1b ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது போலீசு. அதன் அடிப்படையில் தோழர்கள் இருவரும் தற்போது கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தகவல்:
மக்கள் அதிகாரம்,
விருதை.