மறுப்புச் செய்தி 

காளியப்பன்,
பொருளாளர், மக்கள் அதிகாரம்
1.அண்ணா நகர்,சிவாஜி நகர் வழி
தஞ்சாவூர் – 613001

ஆசிரியர் அவர்கள்,
தினமலர்,
திருச்சி பதிப்பு.

09.07.2018 அன்றைய திருச்சி பதிப்பில், “மக்கள் அதிகாரத்திற்கு தடை வருது“ என்ற தலைப்பில் நமது நிருபர் என்ற பெயரில் பல தவறான, உண்மைக்கு மாறான  செய்திகளை உள்ளடக்கி கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரை முழுவதும் எமது அமைப்பைக் களங்கப்படுத்தும் தீய உள்நோக்கம் கொண்டே எழுதப்பட்டுள்ளது.

மக்கள் அதிகாரம் ஜனநாயக வழியில் வெளிப்படையாக, முறையான மாநில பொதுக்குழு, செயற்குழு, கொள்கை திட்டம் என செயல்படும் அமைப்பு. இதன் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ராஜு. மாநிலப் பொருளாளர் தோழர் காளியப்பன்.

சாதி, மத இனவாத அமைப்புகளில் இல்லாதவர்கள் மட்டுமே மக்கள் அதிகாரத்தில் உறுப்பினராக சேர்ந்து செயல்படமுடியும். மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து, அத்தகைய கோரிக்கையில் ஒன்றுபடக் கூடிய அமைப்புகள், கட்சிகளோடு இணைந்து செயல்பட்டுவருகிறோம். டாஸ்மாக் ஒழிப்பு, விவசாயிகள் தற்கொலை, காவிரி உரிமை, ஒக்கிப்புயல், போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினை, பேருந்து கட்டண உயர்வு, வெள்ள பாதிப்பு, பணமதிப்பு நீக்கம், மாட்டுக்கறி தடை, இந்து மதவெறி பாசிசம், மீத்தேன், ஹைட்ரோ கார்பன், மணல் கொள்ளை ஆகிய மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளில் மாநாடு, பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டம் என போராடி வருகிறோம். இதனால் மக்களின் நன்மதிப்பையும் நம்பிக்கையையும் பெற்று வருகிறோம்.

மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் “மூளைச்சலவை, செய்து தூத்துக்குடி மக்களைப் போராடத் தூண்டினர்” என  மீனவப் பிரதிநிதிகள் சிலர் எம்மீது கொடுத்த  குற்றச்சாட்டுகள் முற்றிலும் போலீசின் அச்சுறுத்தலால் கொடுக்கப் பட்டவை  என்பதை தக்க ஆதாரங்களோடு பத்திரிகையாளர் சந்திப்பில் விரிவாக விளக்கி உள்ளோம்.

வழக்கறிஞர்கள் வாஞ்சிநாதன், அரிராகவன் இருவரும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் நிர்வாகிகள். ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர்கள் என்பதை பலமுறை பத்திரிகை வாயிலாக தெளிவுபடுத்தி உள்ளனர். ஆனால் தூத்துக்குடி போலீசு திட்டமிட்டே அவர்களை மக்கள் அதிகாரத்தின் நிர்வாகிகளாக வழக்குகளில் பதிவு செய்துள்ளது. எவ்வித விசாரணையுமின்றி போலீசின் பொய்யை பிரசுரித்திருக்கிறீகள்.

மேலும் வெளிநாடுகளில் இருந்து பணம் வருகிறது என எந்தவித ஆதாரமும் இல்லாமல் எழுதி உள்ளீர்கள். மக்கள் அதிகாரம் அமைப்பு சாதாரண மக்கள் மத்தியில் நன்கொடை பெற்று செயல்படும் அமைப்பு என்பது அனைவரும் அறிந்த ஒன்று. வெளிநாட்டு நிதி பெறும் நிறுவனங்களோடு உறவு வைப்பதை முற்றாக எதிர்க்கும் அமைப்பு என்பதையும் அனைவரும் அறிவர். மக்கள் அதிகாரம் தனக்கான செயல்திட்டத்துடன் சுயேச்சையாக செயல்படும் அமைப்பு.

ஆனால் மக்களுக்காகப் பாடுபடும் வேறு பல அமைப்புகளையும் எமது அமைப்போடு இணைத்து அவதூறு பரப்புகிறீர்கள். மக்களுக்காகப் பாடுபடும் அமைப்புகளை ஒடுக்கும் போலீசின் செய்திகளை இட்டுக்கட்டி எழுதுவது ஊடக அறத்திற்கு செய்யும் துரோகம். ஆர்.எஸ்.ஏஸ், பா.ஜ.க, கார்ப்பரேட்டுகள் ஆகியோருக்கு ஆதரவாக எழுதுவது உங்களது உரிமையாக இருக்கலாம். எம்மை அவதூறு செய்யவும், களங்கப்படுத்தவும் தவறான செய்திகளை வெளியிடவும் எந்த உரிமையும் இல்லை.

எனவே மேற்கண்ட எமது மறுப்புச் செய்தியை உடனே வெளியிடுமாறும், நிபந்தனையற்ற மன்னிப்பு கோருமாறும் கேட்டுக் கொள்கிறோம். இல்லையேல் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

காளியப்பன்
மக்கள் அதிகாரம்