கருத்துக் கணிப்பு : முதலாளிகளை ஆதரிப்பதற்கு அஞ்சமாட்டோம் என்று மோடி பேசியதன் காரணம் ?

நாங்கள் தொழிலதிபர்களுக்கு ஆதரவாக செயல்படுவதற்கு அஞ்சி நிற்பவர்கள் அல்ல என்கிறார் மோடி. "வாங்கிய காசுக்கு மேலே வெண்பா பாடுகிறாரே மோடி" என அதானி நினைத்திருக்கலாம், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? வாக்களியுங்கள் !

டுத்த பாராளுமன்ற தேர்தலின் முக்கிய களம் உத்திரப் பிரதேசம். தேர்தல் களத்தில் களமாடுவதற்கு பா.ஜ.கவிற்கு தேவைப்படும் முதல் விசயம் மக்கள் ஆதரவு என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இதை நாங்கள் சொல்லவில்லை, மோடியே சொல்கிறார்!

ஜூலை 29, 2018 அன்று உ.பி தலைநகர் லக்னோவில் ரூ. 60 ஆயிரம் கோடி மதிப்பிலான 81 திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்வை ஒட்டி நடந்த கூட்டத்தில் சில பல விருந்தினர்கள் பங்கேற்றனர். யார் அவர்கள்?

பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, அதானி குழுமத்தின் கவுதம் அதானி, எஸ்சல் குழுமத்தின் சுபாஸ் சந்திரா, ஐடிசி குழுமத்தின் சஞ்சீவ் பூரி உள்ளிட்ட முதலாளிகள் மோடியின் தொழிலதிபர் படையாக அங்கே அணி வகுத்தனர்.

அந்த கூட்டத்தில் பேசிய மோடி, மிகப்பெரும் முதலீட்டுத் திட்டங்களை ஈர்த்த உத்திரப் பிரதேச அரசை பாராட்டியதோடு, முதல்வர் ஆதித்யநாத்திற்கு ஒரு ஸ்பெஸல் பாராட்டையும் அளித்தார். பிறகு அவருக்கு அபயமளித்து கூடவே சில பல கோடிகளைக் கொடுத்து பிரச்சாரம் செய்து பிரதமராக்கிய அதானி உள்ளிட்டோரை பார்த்ததும் மோடியின் செஞ்சோற்றுக் கடன் உணர்ச்சி பொங்கி வழிந்திருக்கிறது.

“நாங்கள் எப்போதும் தொழிலதிபர்களுக்கு ஆதரவாக செயல்படுவதில், துணை நிற்பதில் தயக்கம் காட்டுபவர்களோ, அஞ்சி நிற்பவர்களோ அல்ல. விவசாயிகள், அரசு ஊழியர்கள், தொழிலாளிகள் போல தொழிலதிபர்களும் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பு செய்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. அதனால்தான் காந்தி கூட பிர்லா குடும்பத்துடன் துணை நிற்பதில் தயக்கம் காட்டவில்லை. நாம் தொழிலதிபர்களையும், மிகப்பெரிய வர்த்தகர்களையும் திருடர்கள், கொள்ளையடிப்பவர்கள் என்று அவமானப்படுத்த வேண்டுமா?” என்று ஆவேசமாக பேசினார் மோடி.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த லலித் மோடி, நீரவ் மோடி, விஜய் மல்லையா போன்ற திருட்டு முதலாளிகள் வெளிநாடுகளில் இருந்தவாறு ஆனந்தக் கண்ணீர் வடித்திருப்பது உறுதி! ஒரு வாக்கரசியல் ஆதாயத்திற்காக, மக்களிடம் முதலாளிகளுக்காக பரிந்து பேசும் மோடி குறித்து வியந்து போயிருப்பார்கள்! அதானியோ பரவாயில்லையே வாங்கிய காசுக்கு மேலே வெண்பா பாடுகிறாரே என்று கள்ளச்சிரிப்பு சிரித்திருப்பார். ரஃபேல் விமான நிறுவனத்திற்காக ஆதாயம் பெறும் அம்பானி, அங்கு இருந்திருந்தால் மோடியை கட்டித் தழுவி உருகியிருப்பார்.

இனி இன்றைய கேள்வி:

முதலாளிகளை ஆதரிப்பதற்கு நாங்கள் அஞ்சுவதில்லை என்று மோடி பேசியிருப்பதன் காரணம்?

  • அவர் ஒரு  கார்ப்பரேட் கைக்கூலி
  • மக்கள் நலனுக்காக முதலாளிகளை ஆதரிக்கிறார்
  • தெரியவில்லை

 

வினவு யூ-டியூபில் வாக்களிக்க:

https://www.youtube.com/user/vinavu/community

வினவு ட்விட்டரில் வாக்களிக்க:

வினவு முகநூலில் வாக்களிக்க: