தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி மறைந்து விட்டார். இன்றைய அரசியல் சூழலில் இம்மரணம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? மோடி அரசு பதவியேற்ற பிறகு கடந்த நான்கு ஆண்டுகளில் நாடே பார்ப்பனியமயமாக்கப்பட்டு வருகிறது. இந்தி – சமஸ்கிருதத் திணிப்பு, சங்கபரிவார தலைவர்களின் பெயர்சூட்டல்,  கல்வி காவிமயம், பசுக்களின் பெயரில் மனிதவதை, நீட் திணிப்பு…………… இவை போக பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி என பொருளாதாரத் தாக்குதல்!

தமிழகத்தில் 20-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்து திராவிட இயக்கம் பார்ப்பனிய எதிர்ப்பையும், சமூகநீதியையும் முதன்மைப்படுத்தி செயல்பட்டு வந்தது. சுயமரியாதை இயக்கம், பெரியார், தி.க, அண்ணா, தி.மு.க, கருணாநிதி எனும் திராவிட இயக்கத்தின் தாக்கத்தில் தமிழகம் பார்ப்பனிய எதிர்ப்பிற்கு இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக விளங்கியது.

பின்னர் திராவிட இயக்கம், தி.மு.க-வின் சமரசங்களால் பின்னடைவு நேர்ந்தாலும், அவர்களால் கற்றுக் கொடுக்கப்பட்ட பார்ப்பனிய எதிர்ப்பு என்ற ஆதிக்க எதிர்ப்பு அரசியலை தமிழக மக்கள் மறந்து விடவில்லை. இன்றைக்கும் இந்தியாவில் எங்கும் சாத்தியமில்லாத அளவில் மோடியே திரும்பிப் போ, அமித்ஷாவே திரும்பிப் போ எனும் முழக்கம் இங்கே மட்டுமே சாத்தியமாகிறது. வள்ளுவர் கோட்டமும், குமரிக்கடலில் வள்ளுவர் சிலையும், அனைத்து சாதி அர்ச்சகர் சட்டமும் இந்துத்துவத்தின் கண்ணை உறுத்துவதால்தான் அடிமைகள் மூலம் மெரினாவில் தடை போடுகிறார்கள்.

ஜெயலிலிதா – சசிகலா கும்பல் தமிழகத்தை மொட்டை போட்ட காட்டாட்சியின் காலம் 1991 – 1996. 96-ம் ஆண்டில் வந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றது. தேர்தலுக்கு முந்தைய பிரச்சாரக் காலத்தில் ஜெயா-சசி கும்பலின் அமைச்சர்கள் தமிழக மக்களால் பல இடங்களில் விளக்குமாற்றுடன் விரட்டப்பட்டனர். அதற்கு முன்பேயே இக்கொள்ளை கூட்டத்தை எதிர்த்து ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகள் பல இயக்கங்களை தொடர்ச்சியாக நடத்தின. இதே காலத்தில் பாபர் மசூதி இடிப்பின் மூலம் இந்திய அரசியலில் சங்க பரிவாரத்தின் இந்துமதவெறி அரசியலும் ஆரம்பித்தது.

இந்துத்துவத்தை வேரறுக்கும் அரசியலை முன்வைத்து ம.க.இ.க அமைப்புக்கள் திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டத்தை நடத்தியது. அந்தப் போராட்டத்தை வரவேற்று தி.மு.க-வின் முரசொலி தலையங்கம் எழுதியது.

1996-ம் ஆண்டில் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகள் இந்த அரசமைப்பில் ஜெயா எனும்  குற்றக் கும்பலை, கொள்ளைக் கூட்டத்தை தண்டிக்க முடியாது என போராட்டம் நடத்தியது. அதன் முத்தாய்ப்பாக ஜெயா-சசிகலாவின் தஞ்சை வினோதகன் மருத்துவமனையை கைப்பற்றும் போராட்டம் நடைபெற்றது. அன்று தி.மு.கவின் ஆட்சியின் துவக்க ஆண்டு.

மருத்துவமனையின் முன்பு குவிந்த தோழர்கள் போலீசால் தடியடி நடத்தப்பட்டு மண்டை உடைக்கப்பட்டனர். அப்போது ஓரிரு மணிநேரங்கள் வினோதகன் மருத்துவமனையின் பிரம்மாண்டமான கேட்டில் “மக்கள் மருத்துவமனை” எனும் பதாகையை தோழர்கள் கட்டியிருந்தனர்.

ஆம். பிறகு ஜெயா-சசி கும்பல் குற்றவாளி எனும் தீர்ப்பு வந்தது 2017-ம் ஆண்டு. அப்போது ஜெயா இல்லை. ஆனால் அவரது கூட்டமோ தனது சொத்துக்களை முன்னிலும் அதிகமாய் பெருக்கியிருந்தது. ஜெயாவின் உடலும் மெரினாவில் புதைக்கப்பட்டது. சொத்துக் குவிப்பு வழக்கின் ஏ 1 சகல அரசு மரியாதைகளுடன் கடற்கரையில் புதைக்கப்பட்டார்.

இன்று தமிழகத்தை அடிமைப்படுத்த சங்கபரிவாரம் முழு வீச்சுடன் செயல்படுகிறது. கருணாநிதி காலத்து திராவிட இயக்கத்து இளைஞர்கள் கனவு கண்ட அந்த முற்போக்கான அரசியல் இன்று தமிழக இளைஞர்களின் கையில் இருக்கிறது – அது தி.மு.க-வின் கையில் இல்லை என்றாலும்.

கலைஞர் கருணாநிதி அந்த கனவின் அடையாளமாய் நம் முன் உறங்குகிறார். மக்கள் என்ன கருதுகிறார்கள்? சென்னை நகரில் இருந்து வினவு செய்தியாளர்களின் நேரடி செய்தி – புகைப்படங்களுடன் இன்றைய நேரலையைத் துவங்குகிறோம்.